Tag: viradham

  • Mahalakshmi Viradham

    திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என பெயர் பெற்றாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை, நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் இன்று.

    துறவியான ஆதிசங்கரர் கூட தனக்கு நெல்லிக்கனியை பிட்சை அளித்த பெண்மணிக்காக 'கனகதாரா ஸ்தோத்திரம்' பாடி லட்சுமியருளால் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழியச் செய்தார்.கிருஷ்ணரைக் காண ஏழை குசேலர் வந்த போது, மகாலட்சுமி தன் கடைக்கண் பார்வையை அவர் வசித்த ஊரை இருந்த திசை நோக்கி திரும்பினாள். அந்த ஊரே செல்வத்தால் நிறைந்தது.

    பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாகப் பிறந்த போது தன் கணவருடன் காட்டிற்குச் சென்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என ராமரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்திற்கு லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்தில் குடியிருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி தாயார் திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்.

    வரலட்சுமி விரத ஸ்லோகம்

    பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
    கல்ய விவர்த்தினி
    பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
    மாம்ச்ச தேஹிமே
    வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
    வக்ஷஸ்தலஸ்த்திதே
    வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
    சதேஹிமே
     

  • varalakshmi viradham poojai murai

    மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.

    வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

    பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

    இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

    எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

    கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

    பூஜைக்குத் தேவையானவை :
    மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

    நிவேதனப் பொருள்கள்:
    பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

    பழ வகைகள்:
    ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

    பூஜைக்கான முன்னேற்பாடுகள்:
    வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். 

    அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

    (சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

    பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

    விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

    பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

    மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

  • Varalakshmi viradham thondriya kadhai

    செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம்.

    பெயர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தரும் விரதம் இல்லை இது. நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு என்று எல்லாவகையான நலன்களையும் தரக்கூடியது; வரமாக வாரி வழங்கக்கூடியது.
     
    இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லி முதன் முதலாக சொன்னவர் மகாலட்சுமியேதான்! ஆமாம், சாருமதி என்ற பெண்ணின் கனவில் வந்து இந்த விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்று சொன்னாள். அந்த சாருமதி, வடஇந்தியாவில், மகத நாட்டில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பெண். தன் மாமனார், மாமியாருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்து, கணவனை தெய்வமாக மதித்து, கற்புநெறி தவறாமல், பயபக்தியோடு வாழ்க்கை நடத்தியவள்.

    அவளுடைய இந்தப் பண்புகளைப் பார்த்து சந்தோஷப்பட்ட மகாலட்சுமி, அவள் மேலும் எல்லா சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக அவள் கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றியும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றியும் விவரமாகச் சொன்னாள், மஹாலட்சுமி.

    இதில் ஒரு விஷயத்தை கவனித்தல் வேண்டும். அதாவது, மகாலட்சுமி சாருமதியின் குணத்தைப் பாராட்டி உடனே செல்வத்தை வாரி வழங்கிவிடவில்லை. விரதம் இருக்கச் சொல்லி, அதன் பலனாகத்தான் அவள் எந்த வளத்தையும் அனுபவிக்கவேண்டும் என்றும் உணர்த்தியிருக்கிறாள். ’இந்த விரதத்தைப் பெண்கள்தான் அனுசரிக்கவேண்டும் என்பதில்லை, ஆண்களும் மேற்கொள்ளலாம்.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் மற்றும் விக்கிரமாதித்த மகாராஜா போன்றவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆடி மாதம் பவுர்ணமிக்கு முந்தின வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். சில வருடங்களில் ஆவணி மாதத்திலும் இந்த விரதநாள் வரும். அதேபோல இந்த ஆண்டும் ஆவனி 8 ஆம் தேதி வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

  • varalakshmi viradham 108 pottri

    வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

    சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி
    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி
    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி
    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி 
    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி
    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி
    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி
    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
    ஓம்  கமலக்கன்னி  போற்றி
    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
     பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே 
    போற்றி போற்றி போற்றி
     

  • Kandha sasti viradham magimaigal

    அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம்.

    முருகனுக்குரிய முக்கிய விரதங்களாக கருதப்படுவது, வெள்ளிக்கிழமை வார விரதம், கார்த்திகை நட்சத்திரம் விரதம் மற்றும் கந்த சஷ்டி விரதம்.

    அதில் வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

    சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது?
    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் ஒப்பரும் விரதம் என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சூரன்போரில் முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் செய்யும் காட்சியை தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அதாவது ஆணவம், கன்மம், மாயை என்ற அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
     

  • Saibaba viradham

    விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயிநாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயிபாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். 

    இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம். இந்த விரதம் அற்புதப் பலன்கள் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

    காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயிவிரத கதையைப் படிக்கவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாதத்தை விநியோகிக்கவும்.

    இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள்உட்கொண்டு செய்யவும், அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.

    விரத நிறைவு விதிமுறைகள்

    9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப்பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரதத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களுக்கு, சாய்பாபாவின் விரதம் மற்றும் மகிமை அடங்கிய புத்தகங்களை விநியோகம் செய்யலாம்.

     9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதம், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயிபக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 

  • Thiruvona viradham

    திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள்  குழந்தை வரம் பெறுவார்கள். 

    இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், முதல் நாள் இரவே உணவு உட்கொள்ளக்கூடாது. அதிகாலை நீராடி, பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை சாத்த வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக்கொண்டு, பெருமாளைக்குறித்த பாடல்களைப் பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பே சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

    மாலையில், சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால், சந்திரதோஷம் இருந்தால் விலகிவிடும். ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். திருப்பங்களை நல்கும் திருவோண விரதத்தை மேற்கொண்டு வளங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்

  • Tuesday Viradham

    வாழ்க்கையில் வளம் பெற வேண்டும் என்றால் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு. 

    வாரத்தின் மூன்றாவது நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிழமைக்கு உகந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். 

     கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். 

    வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகற வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும்.

    முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்கிழமை பிறந்தவர்களும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், நிலைமை சீராகும். வாழ்வு சிறக்கும்.
     

  • Murugan Viradham

    இழந்த பதவி மீண்டும் கிடைக்க ஆறுமுக கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களும், கிருத்திகை, சஷ்டி திதி ஆகிய நாட்களில் விரதம் இருப்பத உகந்ததது. அதுமட்டுமன்று கந்தசஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் முருகனுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யலாம். 

    வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம். வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்றை தினம் எந்த கெட்ட வார்த்தைகளையும் உச்சரிக்க கூடாது. 

    கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 

    இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். விரைவில் நல்ல பலன் தருவதைக் காணலாம்.
     

  • Thiruvona viradham

    திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
      
    திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகா விஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.

    இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!

    திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகி  ஐஸ்வர்யம் பெருகும். திருவோண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்!

    திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே எனும் நிலை முற்றிலுமாக மாறும். அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.