Blog

  • வளர்ப்புத் தாயின் பார்வையில் திருப்பதி லட்டு

    வளர்ப்புத் தாயின் பார்வையில் திருப்பதி லட்டு

    விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ணரிடம் அவரது வளர்ப்பு தாயான யசோதா, "கிருஷ்ணா, உனது திருமண கோலங்கள் எதையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே?" என இயக்கத்துடன் கேட்டால், அதற்கு கிருஷ்ணன் கலியுகத்தில் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

    விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக உலகில் அவதரித்தபோது, யசோதை அம்மையார் வெங்கடேஸ்வரரின் வளர்ப்பு தாயாக வகுலா தேவி என்ற திருநாமத்துடன் மீண்டும் பிறந்தார்.

    அப்போது, வெங்கடேச பெருமாளுக்கும் பத்மாவதி தாயார்க்கும் பின்னாளில் நடைபெற்ற திருமணத்தை வகுலா தேவி கண்டு ஆனந்தம் அடைந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. வெங்கடேச பெருமாளின் திருமண விழாவிற்கு வந்த முக்கோடி தேவர்களுக்கு தலைவாழை இலை போட்டு அருஞ்சுவை உணவு பரிமாறப்பட்டதாகவும், அதில் இடம் பிடித்த லட்டு வகுலா தேவியின் திருகரங்களால் செய்யப்பட்டது என்றும் தெய்வீக மனத்துடன் அதன் சுவை இருந்ததால் தேவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு லட்டுவை விரும்பி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

    இன்றளவும், திருப்பதி லட்டு ஆகம விதிகளை கடைப்பிடித்து பக்தியுடன் செய்யப்படுவதோடு, லட்டு தயாரிக்கும் பணியை இப்போதும் லகுலா தேவி கண்காணித்து வருவதாகவும் பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீ வகுல மாதா கோவில், திருமலை மலையிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பேரூர் கிராமத்தில், ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.

    பொன்.கோ.முத்து, திருவள்ளூர்.

  • இறைவன் எங்கே இருக்கிறார் ? ஞானி சொன்னது என்ன ! 

     

    இறைவன் எங்கே இருக்கிறார்? ஞானி சொன்னது என்ன?

    ஒருமுறை ஞானி ஒருவர் இமயமலையில் இருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் ஆன்மீக யாத்திரை சென்று மக்களிடம் இறை பக்தி குறித்து எடுத்துரைத்து வந்தார். அப்படி வருகையில், கிராமம் ஒன்றில் செல்வாக்குடன் இருக்கும் செல்வந்தர் ஒருவர் ஞானியை சந்தித்து, தனது வீட்டிற்கு வந்து பசியாறும்படி அழைப்பு விடுத்தார். ஞானியும் தனது ஆன்மீக உபதேசங்களை முடித்துவிட்டு அவருடன் சென்றார்.

    அப்போது இறை பக்தி இல்லாத செல்வந்தரின் மகன் ஞானியை பார்த்து, "இறைவன் எங்கேயிருக்கின்றார்?" என்று கேட்டான். அதற்கு ஞானி, "இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார்" என்றார். அப்படியானால், தனியாக கோவில்கள் எதற்கு? வழிபாடு எதற்கு? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அவனிடம், ஞானி கேட்டார், "உன் வீட்டில் பூஜை அறை இருக்கிறதா?" அவன், "ஆம்," என்றான். "அப்படியானால், பள்ளி அறை இருக்குமே?" "ஆம்," என்றான். "உணவு கூடம்?" "ஆம்," "கழிவறை?" "ஆம்."

    "அப்படியானால், நீ உணவை உணவறையில் சாப்பிடுகிறாயா? கழிவறையில் அமர்ந்து சாப்பிடுகிறாயா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அதில் என்ன சந்தேகம்? எல்லோரும் உணவை உணவு கூடத்தில் தானே சாப்பிடுவார்கள்." ஞானி சிரித்தார். "உன் வீட்டில் பல அறைகள் இருந்தும், உணவை நீ உணவகத்தில் தான் சாப்பிடுகிறாய். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், மனதை ஒருமைப்படுத்தி ஆத்ம ஞானம் பெற ஒரு இடம் வேண்டும். அதற்காகதான் இறைவன் கோவில்களில் குடிகொண்டுள்ளான்," என்றார்.

    அப்போது, வெளியில் இருந்து வீட்டிற்குள் ஓடி வந்த செல்லப்பிராணியான நாய் அவன் மீது தாவிய போது, அதன் காலில் இருந்த சேரானது அவனது புத்தாடையில் படிந்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவன், நாயை காலால் எட்டி உதைக்க வழி தாங்காமல் குறைத்து கொண்டு அது ஓடியது. இதைப் பார்த்து வேதனை அடைந்த ஞானி, "வாயில்லா பிராணி அதனை கால்களால் எட்டி உதைக்கலாமா? நம்மைப் போன்று அதுவும் உயிரல்லவா?" என்றார். அதற்கு, அவன், "நம் உயிரும் நாயின் உயிரும் ஒன்றாகுமா?" என்றான். மீண்டும் அவனது அறியாமையை கண்டு சிரித்த ஞானி, அவனிடம் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறியை பார்த்து, "இது எதனால் இயங்குகிறது?" என்றார். அதற்கு, அவன், "மின்சாரத்தால்," என்றான். "அப்படியானால், அந்த தொலைக்காட்சி பெட்டி எப்படி இயங்குகிறது?" "அதுவும் மின்சாரத்தால்," "அப்படியா? குளிர்சாதன பெட்டி?" "அதுவும் மின்சாரத்தால்." "அப்படியானால், மின்விசிறி சுயல்கிறதே. குளிர்சாதன பெட்டி ஏன் சுயலவில்லை?" என வினாவினார். அதற்கு அவன், "இது கூட தெரியாத உங்களை எப்படி எல்லோரும் முற்றும் உணர்ந்த ஞானி என்கின்ற நேரே?" என்றான்.

    சற்று நேரம் மௌனமாக இருந்த ஞானி சொன்னார், "மகனே, உன் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் ஒரே மின்சாரத்தால் இயங்குகிறது. அப்படி இருக்க அவை ஏன் வெவ்வேறு விதமாக செயல்படுகிறது தெரியுமா?" மீண்டும் உரைத்தார், "மின்சாரம் ஒன்றாக இருந்தாலும், அது சென்று சேரும் பொருளின் தன்மைக்கேற்றே இயங்கும். அது போன்று தான் உயிர் எனும் ஜோதியானது ஒன்றுதான். அது மாடுகளிடம் சென்றடையும் போது அதன் தன்மையுடனும், நாய் உள்ளிட்ட பிற ஜீவராசிகளிடம் சென்றடையும் போது அவைகளில் தன்மையுடனும் செயல்படுவது போல் நாமும் செயல்படுகிறோம். எனவே, நமக்குள் இருக்கும் உயிர் வேறு, மற்ற பிராணிகளுக்கு இருப்பது வேறு. உயிர் அல்ல, எல்லாம் பரம்பொருளான ஈசனின் ஜோதி வடிவமே," என விளக்கமாக கூறியதை கேட்டு, மனம் தெளிந்த செல்வந்தரின் மகன், அவரது காலில் விழுந்து வணங்கினான்.

    பொன்.கோ.முத்து, திருவள்ளூர்.

  • தை அமாவாசை: புனித நதிகளில் நீராடிய பக்தர்கள்!

    ல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை மாதம் வரக்கூடிய அமாவாசை, ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை, புரட்டாசி மாதம் வரக்கூடிய மகாளய அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. முன்னோர்களின் சாபங்கள், தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய தலைமுறை துன்பம் இல்லாத வாழக்கையை பெறுவதற்கும், முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கும் ஏற்ற நாளாக தை அமாவாசை கருதப்படுகிறது. இந்த நாளன்று புனித நதிகளில் நீராடுவதும், தானங்கள் அளிப்பதும், வழிபாடு செய்வதும் மிக சிறந்த பலன்களை தரும் என்பது மக்களின் நம்பிக்கை.

    அதன்படி தை அமாவாசையான இன்று கடல் மற்றும் நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சூரிய உதயம் தொடங்கியதும் புனித நீராடினர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதையடுத்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள மகாலட்சுமி தீர்த்தம் முதல் கோடி தீர்த்தம் வரை புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். முன்னதாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை சிறப்பாக நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கால பூஜைகள் நடைபெற்றன. இதேபோல கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து வடக்கு நந்தவனத்தில் பக்தர்களுக்கு பால், பிஸ்கட், குடிநீர் வழங்கினர். ராமநாதசுவாமி கோயில் தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்கள், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களிலும் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

    கன்னியாகுமரியில் புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கடலில் புனித நீராடி, கடற்கரையில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.  

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களின் பெயர்களை கூறி புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு வைத்து வழிபட்டனர். நாகை மாவட்டத்தில் புதிய கடற்கரை, வேளாங்கண்ணி காமேஸ்வரம் கடற்கரை, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் கமலாலய குளக்கரை, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் திரளான மக்கள் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கல்லணை, பாபநாசம், கும்பகோணத்தில் உள்ள காவிரி படித்துறை, கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி காவிரி மற்றும் அமராவதி ஆறுகள், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு மக்கள் சென்று நீராடினர். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

  • மருதமலையில் அமையப்போகும் ஆசியாவின் மிகப்பெரிய முருகன் சிலை!

    மிழ்க் கடவுளான முருகனுக்கு அறுபடை வீடுகள் இருந்தாலும் ஆங்காங்கே முருகனுக்கு பல உயரமான சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், மலேசியாவில்தான் முதல் முறையாக மிகப்பெரிய முருகர் சிலை அமைக்கப்பட்டது. இதனைக் காண பக்தர்கள் பலரும் அங்கே சென்று வருவார்கள். மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காகவே இந்த முருகர் சிலை இருந்தது.

    தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் ஆலயத்தில் உள்ள முருகன் சிலை தான் உயரமான சிலையாக கருதப்படுகிறது. 146 அடி உயரம் கொண்ட இந்த முருகன் சிலை 2022 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது.
    மலேசியாவில் இருக்கும் முருகன் 140 அடி உயரம் கொண்டது. தற்போது முத்துமலையில் இருக்கும் முருகன் சிலை தான், இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை முருகன் கோவிலில், மேற்கூறிய சிலையை விட அதிக உயரத்தில், அதாவது 160 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
     
    இது தொடர்பாக அவர் கூறுகையில், "மருதமலை முருகன் கோவிலில் ஆசியாவிலேயே மிக உயரமான 160 அடி உயரத்திற்கு முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முழுவதும் கல்லால் ஆன இந்த சிலை அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. மேலும், கோவை வெள்ளியங்கிரி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் அமைக்கப்பட உள்ளனர். இங்கு மலை ஏறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கூடுதல் ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார். 

  • காஞ்சி காமாட்சியின் மகிமைகள்!

    காஞ்சி காமாட்சியை தரிசித்தால் முப்பெரும் தேவியரையும் தரிசித்த பலன் கிடைக்கும். ஆம் காஞ்சியில் அம்பிகை, ஒரே திருவுருவில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும்தேவியரின் அம்சமாகத் திகழ்கிறாள்.

     வேறெங்கும் இல்லாத வகையில் மூன்று ஸ்வரூபமாக… காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (ஶ்ரீகாமாட்சி) சூட்சுமம் (ஶ்ரீசக்கரம்) ஆகிய நிலைகளில் அருள்கிறாள். ஶ்ரீகாமாட்சி வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம். அம்பாளின் திருமுன் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஶ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.

    இதை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள் ளார். இதனால் ஶ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு ஶ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.இந்த ஶ்ரீசக்கரத்தைச் சுற்றி 64 கோடி தேவதைகள் இருக்கிறார்கள். இந்த ஶ்ரீசக்கரம் 9 ஆவரணங்களை அதாவது 9 சுற்றுக்களைக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், சக்தி தேவதைகள் மற்றும் நவ ஸித்தி தேவதைகள் இருப்பதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன.

    பெளர்ணமி தினங்களில் இந்த 9 ஆவரணச் சுற்றுக்கும் தனித்தனியே சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் நிறைவுற்றதும் பிந்து ஸ்தானத்தில் அருளும் அன்னை காமாட்சிக்கு ஆராதனைகள் நடை பெறும். இதுவே நவாவரண பூஜை.

    இந்தப் பூஜையில் கலந்து கொண்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம்; ஶ்ரீசக்கரத்தை வணங்கினால் நம் தேசத்தில் உள்ள சகல சக்தி வடிவங்களையும் தரிசித்த புண்ணியத்தை அடையலாம் என்பது ஐதிகம்.

  • குறையில்லா வாழ்வு தரும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வர்!

    திருப்பாச்சிலாச்சிராமம் என்று ஞானநூல்கள் போற்றும் தேவாரத் திருத்தலம் திருவாசி. திருச்சியிலிருந்து முசிறி, நாமக்கல், சேலம் செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ளது.  

    'வாசி' என்றால் குற்றம். குற்றமில்லாத பெருவாழ்வு பெற, திருவாசியில் எழுந்தருளி இருக்கும் பாலாம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வர் ஒருவரே துணை என்று திருமுறைகள் புகழ்கின்றன. தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் 62 ஆவது காவிரி வடகரைத் தலம் இது. திருஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல்பெற்ற புண்ணிய க்ஷேத்திரம். சிவனடியார்கள் மகிழ்ந்து பாடிப் பரவும் 'துணி வளர் திங்கள் துலங்கி விளங்க' என்ற பதிகம் பிறந்தது இந்தத் தலத்தில்தான்.

    திருவாசி ஆலயம் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. ஹொய்சாள சோழ நாயக்கர்களால் பெரும் கற்றளியாக கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டடக் கலை சிறப்புகள் கொண்டது. நான்கு தூண்களுக்கு நடுவில், வெளியே எடுக்க முடியாதபடி திகழும் உருளைக் கல் சிற்ப வேலைப்பாடு, அதற்குச் சான்று.

    சோம வாரமாகிய திங்கட்கிழமையில் மாற்றுரைவரதீஸ்வரருக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நிரந்தர வேலை, வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவி, பூர்வீகச் சொத்து பிரச்னை நீங்குதல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு.

    சண்டிகேஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்துள்ள திருத்தலம் இது. தம்பதி ஒற்றுமை வேண்டவும், படித்துக்கொண்டிருக்கும் பெண்கள் மனம் தடுமாறாமல் படிப்பில் கவனம் செலுத்தவும் வேண்டி, இந்த அம்மனை வழிபடுகிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இந்தச் சண்டிகேஸ்வரிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு; செல்வகடாட்சம் அருளும் அன்னை இவர்.

    இத்தலத்தில் உள்ள தலவிருட்சமான வன்னிமரம் ஆயிரம் வருடங்கள் பழைமையானது. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் முன்மண்டபத்தில் அதிகார நந்தி தன் மனைவியுடன் அருள் பாலிப்பது சிறப்பு. 

    இத்தலத்தில் அருளும் சண்முகப் பெருமான் சிறந்த வரப்பிரசாதி. இவரின் மயில் வாகனம் வழக்கத்துக்கு மாறாக இடம் மாறித் திகழ்கிறது. இவரை வழிபடுவதால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்

    கோயிலின் கமல மண்டபம் அருகில், ஞானசம்பந்தப் பெருமான் மன்னன் மகளின்நோய் தீர்த்த அற்புதம், சுந்தரர்க்கு இறைவன் பொற்கிளி கொடுத்த அற்புதத்தை விவரிக்கும் சிற்பக் காட்சிகளும், அர்த்தமண்டபத்தின் அருகில் கிளி கொடுத்தருளிய திருவாசலும் அவசியம் தரிசிக்கவேண்டியவை.

    அம்பாள் சந்நிதியின் கோஷ்டத்தில் இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, கெளரி சக்தி, உமா சக்தி ஆகிய 5 அம்பிகைகள் அருள்வது, இக்கோயிலின் சிறப்பம்சம்.

    இங்கே அருள்புரியும் பாலாம்பிகை மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். பாலாம்பிகை சந்நிதிக்கு நேர் எதிரே செல்வ விநாயகர் அருள்கிறார். இவர் கன்னிமூல கணபதி என அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால் திருமண தோஷம், குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அம்பாள் சந்நிதியின் முகப்பில் இரண்டு துவாரபாலகிகளைக் காண முடிகிறது. இவர்கள் குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்காக அம்பாளிடம் பரிந்துரைப்பதாக ஐதீகம்.திருமணமாகாத பெண்கள் இந்த துவார பாலகியருக்கு மஞ்சள் கயிறு கட்டியும் பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்கள் இவர்களின் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக, இவர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    அம்பாள் சந்நிதிக்கு எதிரே உள்ள அன்னமாம் பொய்கை என்ற தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு… இவற்றுள் ஏதேனும் ஒரு கிழமையில் காலை 7 மணிக்கு அன்னமாம் பொய்கையின் நீரைத் தலையில் தெளித்துக்கொண்டு, அம்பாளுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். இது போல ஐந்து வாரங்கள் தொடர்ந்து செய்து வழிபட்டால், நல்ல வரன் அமைந்து திருமணம் வெகு சீக்கிரம் நடைபெறும். அம்பாளை 9 முறை வலம் வந்து வழிபட்டால், குழந்தைப் பேறு வாய்க்கும்.

  • அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் அரசர்கோயில் மகாலட்சுமி!

    செங்கல்பட்டு –  மதுராந்தகம் பாதையில் படாளம் கூட்  ரோட்டிலிருந்து இடது பக்கம் செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது அரசர்கோயில். இந்த ஆலயத்தில் குடிகொண்டுள்ள சுந்தரமகாலட்சுமியின் வலது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பது குறிப்பிடத்தக்க அதிசயம். ஒரு முறை ஜனக மகாராஜாவும், பெருமாளும் இத்தலத்தில் சேர்ந்திருக்க நேரிட்டதால் இத்தலம் அரசர்கோயில் என்றானதாம். கற்பூர ஆரத்தி காட்டி, தாயாரின் வலது பாதத்தை தரிசிக்கும் வாய்ப்பை வழங்குகிறார் பட்டர். இடது கரத்துக்குக் கீழே பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது வலது பாதம். அதில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளித் தருகிறாள் மகாலட்சுமி என்பது ஐதீகம். அன்னைக்குப் பலாச் சுளைகளால் அபிஷேகம் செய்து பின் அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக தருகிறார்கள்.  

    யோக வாழ்வளிக்கும் மகாலட்சுமீஸ்வரர்

    மைசூருக்கு அருகேயுள்ள ஹாஸன் பகுதிக்கு 23 கி.மீ தொலைவில் உள்ள ஊர் தொட்ட கட்டவல்லி. இங்கு இருக்கும் மகாலட்சுமியின் ஆலயத்தில் சரஸ்வதிக்கும் ஒரு சந்நதி யுள்ளது. சிவனும், விஷ்ணுவும் எதிர்எதிராக கோயில்கொண்டுள்ளனர். மிகவும் அழகான உருவம். நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை வைத்திருக்கிறாள். இம்மாதிரி கோலத்தில் வேறு எங்கேயுமே மகாலட்சுமி கிடையாது.

    திருமாலின் திருமார்பினில் நீங்காதிருக்கும் வரம் வேண்டி அலைமகளாம் லட்சுமிதேவி இங்கு ஈசனைப் பூஜித்து பேறு பெற்றதாக தல புராணம் கூறுகிறது. கருவறைக்குள் கருணையோடு மகாலட்சுமீஸ்வரர் என்கிற திருப்பெயரோடு, ருத்ராட்சப் பந்தலின் கீழ் அருள்பாலிக்கிறார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலம் இது. ஏனெனில், அனுஷத்திற்கு அதிதேவதையே மகாலட்சுமிதான். செல்வச் செழிப்பு உண்டாக லட்சுமி ஹோமம் நடத்தப்படுகின்றது. தாமரை இதழில் தேனூற்றி ஹோம அக்னியில் இட்டு யாகங்கள் செய்யப்படுகின்றன. மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

    மாசற்ற வாழ்வு தரும் மாமாகுடி ஸ்ரீ மகாலட்சுமி

    ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடுகின்றனர். திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும், ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் இத்தலத்தை லட்சுமிபுரம், திருமால்மாகுடி என்றெல்லாம் அழைத்தனர். மிகவும் அரிய ஆலயமாக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.

    அழகான ரூபம் தரும் அரூப லட்சுமி

    காஞ்சி காமாட்சி கோயிலில் அரூப லட்சுமியை தரிசிக்கலாம். மகாலட்சுமிக்கு தான் மிகவும் அழகுடையவள் என்ற கர்வம் ஏற்பட்டதாம். ஒருநாள் தன் கணவர் மகாவிஷ்ணு அழகையே பரிகசிக்க, அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்க காமகோட்டத்தை அடைந்து தேவியை நோக்கித் தவம் புரிகிறாள். 

  • ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே திறக்கப்படும் கோவில்!

    த்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது  பத்ரிநாத் கோவில். இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். 

    இக்கோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கே மகாவிஷ்ணு வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

    இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாக போற்றப்படுகிறது. `சார் தாம்' என்று அழைக்கப்படும் இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் இந்த பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று. பத்ரிநாத் கோவிலின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று. அங்குள்ள வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள்.

    இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது. பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன்பாக, இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம்.

    இமயமலையில் நிலவும் அதீத குளிர் காரணமாக இந்த ஆலயம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (மட்டுமே திறந்து வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க வணங்க வேண்டிய கடவுள்!

    ருவர் நல்ல படிப்பு படித்து, நல்ல சம்பளமும் கிடைக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும்போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும்.

    சிலருக்குக் கிரக நிலைகள் காரணமாக படிப்புக்கேற்றபடி நல்ல வேலை அமையாமல் சிரமப்படுவார்கள். அவர்கள், மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித்தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம்.

    தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பணவசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.

    நல்ல மதிப்பெண் எடுத்தும், நல்ல காலேஜில் சீட் கிடைத்தும், பணப்பற்றாக்குறை காரணமாக மேற்படிப்பு படிக்கமுடியாமல் சிரமப்படும் நாத்தனாரின் மகனையோ, கொழுந்தனாரின் மகளையோ நம்மால் முடிந்த பண உதவி செய்து படிக்கவைக்கலாம்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திரபுரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.
     

  • நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

    திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் வழியில், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பது நம்பிக்கை. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி.  இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவ வழிபாடு செய்த பெருமைக்கு உரியது. மங்களாம்பிகையுடன் மாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.

    இத்தலத்தில் முருகநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம். இடப்புறத்தில் ஞானதீர்த்தம். வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை.

    அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக ஐதீகம்.முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.

    துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவிமரத்தை இங்கு கொண்டு வந்ததாகவும், அவ்வழியே சுந்தரர் செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன.

    கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நதி சிறப்பானது. ேகாயிலின் ஸ்தலமரம் வில்வம். இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாட்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரம்மதாண்டவ நடராஜர் சந்நதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட பைரவர் சந்நதி அமைந்துள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, கோயிலின் மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சூரிய-சந்திரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

    கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.