Blog

  • துலாம்

     

    எண்ணியதை செயல்படுத்த எதையும் செய்யத் தயங்காத துலா ராசி அன்பர்களே உங்களுக்காக உங்கள் குடும்பமும் தியாகங்களை செய்யும். மனதில் கலக்கம் ஏற்பட்டாலும் அதை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டீர்கள். தன்மானத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் ராசிப்படி எப்போதும் ஏதாவது சிந்தனையிலேயே இருப்பீர்கள்.

     

    உங்களின் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால்  செய்தொழிலில் சிறிது பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் அவற்றை சமாளிப்பீர்கள். உங்களின் குறிக்கோளை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்.

     

    பொருளாதாரம் சீராக இருந்தாலும் பெரிய முதலீடுகளைச் செய்ய வழி ஏற்படாது. குடும்பத்தினர் ஓரளவுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள். அதோடு கூட்டாளிகளும் பக்கபலமாக இருக்க மாட்டார்கள். எந்த முக்கிய முடிவையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும்.

     

    மற்றபடி பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.  அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதற்கேற்றபடி தேவையான மாறுதல்களைச் செய்வீர்கள். அதனால் அனாவசிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் மனதிலிருந்து அகற்றவும். பழைய தாக்கங்களை மறக்க முயற்சி செய்யுங்கள்.

     

    மனோ பலத்தை அதிகரிக்க அமைதியாகவும் டென்ஷன் இல்லாமலும் இறைவனின் திருநாமங்களை ஜபித்து வாருங்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

     

    முன் கூட்டியே யோசித்து உங்கள் செயல்களை சிறப்பாக முடித்துவிடுவீர்கள்.

    உங்கள் மனதில் உள்ளதை சுருங்கச் சொல்லி சரியாக விளக்கும் ஆற்றல் உண்டாகும். கிணற்றுத் தவளையாக இருந்தவர்கள் வெளியூர், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்.

     

    சமுதாயத்திற்கு ஏதாவதொரு வகையில் சேவை செய்து பெயரும், புகழும் பெறும் யோகம் உண்டாகும். குறைவான உடல் உழைப்புக்குக்கூட நிறைவான வருமானம் கிடைக்கும். இல்லத்தில் குதூகலம் நிறையும். ஆன்மிகம், தத்துவம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும்.

     

    குடும்பத்திலும் வெளியிலும் உங்களின் செல்வாக்கு உயரும். இல்லத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளுடனான உங்கள் தொடர்பு அனுகூலமான திருப்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும். அதேநேரம் மனதில் கற்பனை பயங்களும் உண்டாகலாம். அவ்வப்போது எதையோ இழந்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கு ஆளாவீர்கள். இதனால் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும்.

     

    மேலும் ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். கடினமான உழைப்புக்கு இடையே சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

     

    உத்யோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் நடந்துகொள்வார்கள். மேலும் அலுவலக வேலைகளில் பளு இருக்காது. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

     

    வியாபாரிகளுக்கு இது லாபகரமான பெயர்ச்சியாக அமைகிறது. பொருட்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். என்றாலும் கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம்.

     

    அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். சிலர் புதிய பதவிகளில் அமர்வீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

     

    கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.

     

    பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய சுற்றுலா சென்று வருவீர்கள்.

     

    மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

     

     

    சித்திரை:

    இந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம்   ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து  செல்வது நல்லது.

     

    ஸ்வாதி:

    இந்த குருப் பெயர்ச்சியால் தொழில் நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.

     

    விசாகம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை பொறுத்த வரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.

     

    பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். தினமும் முன்னோர்களை வணங்கவும். வெள்ளிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்: 9, 3

  • கன்னி

    உழைப்பயே தாரக மந்திரமாக கொண்ட கன்னி ராசி அன்பர்களே உங்களிடம் சேமிக்கும் வழக்கம் நிறைந்து இருக்கும். குடும்பத்தை விட உங்களது கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நயமான வார்த்தைகள் பேசி அனைவரையும் கவர்வீர்கள். எந்த விஷயத்தை செய்தாலும் ஆராய்ந்து செல்வதன் மூலம் வெற்றிகளை அடைவீர்கள்.

     

    உங்களின் அயன போக ஸ்தானத்திலிருந்து சுய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இதனால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம்.  அதே வேலையில் இந்த குருப் பெயர்ச்சியால் தெளிவாக திட்டமிட்டு உடனுக்குடன் செயல்படுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணி புரிபவர்களுக்கு மன உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுப்பீர்கள்.

     

    இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வசீகரமான பேச்சும் மிடுக்கான நடையும் உங்களின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றும். கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும்.

     

    வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தைகள் பிறந்து வம்சம் விருத்தியாகும். குடும்பத்தில் உற்றார், உறவினர்கள் முழுமையான ஆதரவைத் தந்து உங்களின் கைகளை பலப்படுத்துவார்கள். அதேநேரம் எதிலும் அவசரமும் பரபரப்பும் வேண்டாம். தவறு செய்பவர்களிடம் கூட்டு சேர வேண்டாம். அவர்களிடமிருந்து சுமுகமாக விலகிவிடவும். கடினமான உழைப்புக்கு நடுவே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளவும். மற்றபடி முன் அறிமுகம் இல்லாதவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

     

    பண வசதிக்கு எந்தக் குறைவும்  ஏற்படாது. என்றாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும். சிலருக்கு அனாவசியச் செலவுகள் செய்ய நேரிடலாம். அதனால் மனச் சோர்வுக்கு ஆளாகாமால் உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

     

    உற்றார், உறவினர்கள் ஒன்றுமில்லாத விஷயத்தைக் கூடப் பெரிதுபடுத்தி விடுவார்கள். எனவே அவர்களிடம்  எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுக்கு சிறிது பின்னடைவு ஏற்படும்.

     

    செய்தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். மற்றபடி கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் ஏற்பட்ட பிணக்குகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு உறவுகளைப் புதுப்பித்துக்கொள்வீர்கள்.

     

    உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று காலதாமதத்துடனே பரிசீலிப்பார்கள். எனவே பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ளவும்.  மற்றபடி முடிவு சாதகமாகவே அமையும். வேலையில் திருப்தி காண்பீர்கள். வெளியூர் பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இதனால் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

     

    வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த   லாபம்   கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். சிறிய சிரமங்களுக்குப் பிறகே புதிய குத்தகைகள் கிடைக்கும். சிலருக்கு கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும். பால் வியாபாரம் நன்றாக நடக்கும்.

     

    அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

     

    கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். என்றாலும் கடினமாக உழைப்பீர்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அனைத்து விஷயங்களையும் நன்றாக முடித்துவிடுவீர்கள். அதேநேரம் கடினமாக உழைக்க வேண்டி வரும். உங்களின் விடா முயற்சியை சக கலைஞர்கள் பாராட்டுவார்கள்.  அவர்களால் சில வாய்ப்புகளும் கிடைக்கும்.

     

    பெண்மணிகள் கணவரால் பாராட்டப்படுவார்கள். இதனால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.

     

    மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் உங்களின் தேவைகள்  அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

     

    உத்திரம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக  நடந்து கொள்வது  நன்மை தரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது  நன்மைதரும்.  

     

    ஹஸ்தம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம்  ஏற்படும்.  விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை  காணப்படும்.

     

    சித்திரை:

    இந்த குருப் பெயர்ச்சியால் திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல்  பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக  நேரிடலாம்.

     

     

     

    பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.  “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம்

    அதிர்ஷ்ட எண்: 2, 9  

  • சிம்மம்

    அனைவரையும் அரவணைத்து செல்லும் எண்ணமுடைய சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் மேலிடத்திற்கு எப்போதுமே அனுசரனையாக இருப்பவர்கள். அவசரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நிதானத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம். உங்கள் தகப்பானாருடைய அம்சங்கள் உங்களிடம் நிறைந்திருக்கும்.

     

    உங்கள் ஜன்ம ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களின் தேகத்தை பொலிவடையச் செய்வார். இந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் விலகி தெளிவு பிறக்கும். குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். பணக் கஷ்டம் நீங்கும். பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்.

     

    தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். போட்டியாளர்களின் சதிகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள்.

     

    அதேநேரம் அவ்வப்போது உடல் உபாதைகள் தோன்றி மறையும். குறிப்பாக வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். அதனால் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும்.

     

    மற்றபடி உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்டப் பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வம்பு, வழக்குகளை விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு முடித்துக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி வீண் புரளி சொல்பவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள். உங்களின் நுண்ணிய அறிவால் புதிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

     

    பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். தனிப்பட்ட முறையிலும், கூட்டுத் தொழிலிலும் நல்ல நிலை ஏற்படும்.

     

    உங்களின் தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச் சார்ந்து செய்து வந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உற்றார், உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும்.

     

    இந்தக் காலகட்டத்தில் வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். அதோடு முக்கிய முடிவுகளை உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். உடல் ஆரோக்யம், மன நலம் சீராக யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.

     

    உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். மற்றபடி முயற்சி மேற்கொண்டால்தான் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

     

    வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர்வீர்கள்.

     

    அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அதேநேரம் தொண்டர்கள் உங்களை சிறிது அலட்சியப்படுத்துவார்கள். எனவே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்.

     

    கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் எடுத்துச் செல்ல வேண்டாம். மற்றபடி பொறுப்புடனும், பொறுமையாகவும் நடந்துகொண்டு செயல்படவும்.

     

    பெண்மணிகள் இந்த குருப் பெயர்ச்சியால் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவரின் அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த வாய்ப்பு உண்டாகும்.

     

    மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

     

    மகம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். முதலீடு தொடர்பான சந்தேகங்களை மற்றவர் களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.   பணவரத்து  அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும். 

     

    பூரம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி  விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம்  உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு   கீழ்நிலையில்  உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை   பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. 

     

    உத்திரம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம்  காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள்  கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள்   வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது. 

     

     

     

    பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு அமவாசை தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

  • கடகம்

    உணர்ச்சி மிகுதியால் அனைத்து காரியங்களிலும் முடிவெடுக்கும் கடக ராசி அன்பர்களே நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். உங்களை சார்ந்தவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். வட்ட முக வடிவு கொண்ட உங்களுக்கு எந்த சூழ்நிலையிலும் யாராவது ஒருவர் உதவுவார்கள்.

     

    உங்களின் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு குரு பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் வேலைகளை தன்னடக்கத்துடன் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் நிலையை உயர்த்திக்கொள்வதற்கு ஏதுவான நல்ல காரியங்களைச் செய்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியால் வருமானம் சீராக இருக்கும்.

     

    வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக்கொள்வீர்கள். இல்லத்தில் தடைபட்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும்.

     

    தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். அதேநேரம் சகோதர,சகோதரி வழியில் சிறிது மனத்தாங்கல் ஏற்படலாம். எனவே விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். அதோடு அனாவசிய வம்பு, வழக்குகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். மற்றபடி உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் தாமாகவே தேடி வந்து நட்புகொள்வார்கள். உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டவர்கள்கூட உங்களுக்கு உதவி செய்யும் காலகட்டமாக இது அமைகிறது.

     

    புத்துணர்ச்சியுடன் செயல்பவீர்கள். கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலைமை சீரடையும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாக இருப்பீர்கள்.

     

    புதிய சொத்துக்களை வாங்கும்போது வில்லங்கம் ஏற்படாத வகையில் கவனமாக வாங்கவும். தொழில் ரீதியாக தேவையான பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். சிலருக்கு அரசு விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கும். சிலருக்கு புதிய வீட்டுக்கு பெயர்ச்சியாகும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்கள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். பழைய சொத்துக்களும் விற்பனையாகும். இதனால் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.

     

    உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தார் உங்களுடன் விட்டுக்கொடுத்துப் பழகுவார்கள். உங்கள் தோற்றத்தில் வசீகரம் உண்டாகும்.

     

    நீண்ட காலமாக தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம்.

     

    உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் கௌரவத்திர்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.

     

    வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிக்கல்களை சந்திப்பீர்கள். அதனால் சிலருக்கு நஷ்டங்கள் உண்டாகலாம். அதேநேரம் கூட்டாளிகள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நடந்துகொள்வார்கள். இதனால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும். மற்றபடி புதிய முதலீடுகளை நன்கு யோசித்த பிறகே செய்யவும்.

     

    அரசியல்வாதிகளுக்கு தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

     

    கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். ரசிகர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

     

    பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த குருப் பெயர்ச்சி. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். அவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சரளமாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

     

    மாணவமணிகளுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். சீரிய முயற்சி செய்தால் மேலும் மதிப்பெண்களை அள்ளலாம். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

     

    புனர்பூசம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது  கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம்  அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள். 

     

    பூசம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் வியாபாரம்  தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை    கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு   அதிகப்படியான வருமானமும் கிடைக்கும்.

     

    ஆயில்யம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் கணவன், மனைவிக்கிடையே   சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர்களுடனான சூழல் சுமூகமாக இருக்கும். யாரிடம் பேசும்  போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும்.

     

     

    பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். “அல்லி மலரை”  அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்: 5, 6

  • மிதுனம்

    எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை தவறவிடாத மிதுன ராசி அன்பர்களே நீங்கள் பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பவர்கள். ஆடம்பரமாக வாழ வேண்டும் என மனதிற்குள் எண்ணினாலும் வெளியில் எளிமையாக இருப்பவர்கள். பணத்தை கையாளுவதில் வல்லவரான நீங்கள் சேமிக்கும் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்.

     

    உங்களின் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி மீண்டும் நட்புடன் பழகத் தொடங்குவார்கள். கடினமான காரியங்களையும சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள். வசதி படைத்தவர்கள் உங்களின் நண்பர்கள் ஆவார்கள்.

     

    உங்களின் எளிமையான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார்படுத்திக்கொள்வீர்கள்.

     

    தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் உபரி வருமானம் உண்டாகும். இதனால் சேமிப்புகள் உயரும்.

     

    வேலைகளில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதனால் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். பெற்றோர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். உங்களின் முக்கியமான வேலைகளை ரகசியமாக வைத்துக்கொள்வீர்கள்.

     

    ஆனாலும் நண்பர்கள் உங்கள் மீதுள்ள பொறாமையினால் பகைமை பாராட்டுவார்கள். அதைப் பெரிது படுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்வீர்கள். பழைய வழக்குகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். மற்றபடி உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். உங்களின் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். தற்போது வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

     

    புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். புதிய இடங்களில் உங்களுக்கு சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். ஆடம்பர கேளிக்கைகளில் குடும்பத்தாருடன் பங்கேற்று மகிழ்வீர்கள். உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் காலகட்டம் இது.

     

    உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் உங்களின் வேலைகளை தாமாகவே முன் வந்து பகிர்ந்துகொள்வார்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

     

    வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.

     

    அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

     

    கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும், பணமும் ஒருங்கே கிடைக்கும். சக கலைஞர்களின் மூலம் உங்களைப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

     

    பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மற்றபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் குடும்பம் நல்ல நிலையை அடையும்.

     

    மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி விளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு முன்னேறவும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

     

    மிருகசீரிஷம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.  வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய   பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர   பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும்.

     

    திருவாதிரை:

    இந்த குருப் பெயர்ச்சியால் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.   கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை  காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை  சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.

     

     

    புனர்பூசம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வியில் உயர்வு  உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். சொத்து சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

     

     

    பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ – என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்: 1, 5

  • ஆடி பெளர்ணமி: கிரிவலத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    ஆடி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலத்திற்காக இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், ஆடி மாத பெளர்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.31 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 5.30 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக நேற்று காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர். பகல் 12 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் கிரிவல பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, அருணாசலேஸ்வரர் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • இனி ஆதார் இருந்தால் அங்கப்பிரதட்சணம்….

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியம் என்ற முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    திருப்பதி ஏழுமலையானை கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இதுவரை எந்த அடையாள அட்டையும் சமர்பிக்க தேவியில்லை. ஆனால், இனி அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இம்முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
    அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இன்று முதல் தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், பக்தர்கள் ஒருமுறைக்கு மேல் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கியம் நிறைந்த மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்காக குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஆன்லைன் டிக்கெட்டுகள் போக மீதமுள்ள டிக்கெட்டுகள் திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
    வேண்டுதலின்பேரில் வழங்கப்படும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அங்கபிரதட்சணம் செய்வதற்கு முந்தைய நாள் மதியம் 1. 30 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 1. 30 மணியளவில் வைகுண்டம் வழியாக சென்று 3. 30 மணியளவில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படும். வெள்ளிக்கிழமை சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதால் வியாழக்கிழமை மட்டும் அங்கபிரதட்சணம் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ கூறியுள்ளார்.

  • அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியமில்லை….

    பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியம் இல்லை என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையானை கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இதுவரை எந்த அடையாள அட்டையும் சமர்பிக்க தேவியில்லை. ஆனால், இனி அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்  தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், பக்தர்கள் ஒருமுறைக்கு மேல் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

    இந்த நிலையில் தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அங்கப்பிரதட்சணத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற முடிவை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தானம், ஆதார் அட்டை நடைமுறையில் சில விதியை தளர்த்தி உள்ளது. 

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து தினமும் 750 பேருக்கு அங்கப்பிரதட்சண அனுமதிசீட்டு வழங்கப்படும். அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பிக்கலாம். ஆனால், அங்கப்பிரதட்சண அனுமதி சீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை” என்று கூறியுள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கியம் நிறைந்த மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்காக குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஆன்லைன் டிக்கெட்டுகள் போக மீதமுள்ள டிக்கெட்டுகள் திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வேண்டுதலின்பேரில் வழங்கப்படும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு முந்தைய நாள் மதியம் 1. 30 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 1. 30 மணியளவில் வைகுண்டம் வழியாக சென்று 3. 30 மணியளவில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படும். 

  • கவிஞர் வாலி ஸ்ரீ மஹா பெரியவா மீது பாடிய கவிதை…

    ஆயிரத்து இருநூறு

    ஆண்டுகள் முன்னம்
    ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
    அழகு மதலை; அவள் –
    அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
    ஆதிமுதலை; அதைத்தான்
    ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர் ஆற்று முதலை!

    காலடி பிறந்தவன்
    காலடி பதிந்திடாத
    நாலடி — இந்த
    நாட்டினில் இல்லை; திரு –
    மாலடி போற்றி — அவன்

    மொழிந்த பஜகோவிந்தம் போல்
    நூலடியொன்று — பிற
    நூலோர் ஏட்டினில் இல்லை !

    ‘அவன்தான் –
    இவன்;
    இவன்தான்
    அவன்!’

    எனும்படி — இங்கு
    எழுந்தருளினான்….

    காஞ்சி –
    காமகோடி — ஸ்ரீ
    சந்திர சேகரேந்திர –
    சரஸ்வதி; அந்த
    இமயநதிக்கு இணையான — ஒரு
    சமய நதி!

    துவராடை தரித்த
    திருவாசகத்தை; இரு
    கால்கொண்டு — ஒற்றைக்
    கோல்கொண்டு — இப்
    படிமிசை உலவிய — அத்வைதப்
    பெருவாசகத்தை;

    கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
    வெயிலை; மன்பதையின் –
    அவத்தைப் போக்க
    பவத்தைப் போக்க –
    தவத்தைப் புரிந்த சிவத்தை;

    அரிசிப் பொறி
    அருந்தி –

    அஞ்சு பொறி
    அவித்த….

    நுழைபுலம் மிக்க — ஒரு
    நூற்றாண்டுக் கிழவனை; நம்
    நெஞ்சை — ஒரு
    நஞ்சை நிலமாக்க — விழி
    நாஞ்சில் கொண்டு
    நாளும் உழுத உழவனை;

    அரசுமுதல் ஆண்டிவரை –
    அறியும் ‘பெரியவாள்’ என்று;
    அழுக்கு மனங்களில்
    அப்பிக் கிடக்கும் –
    அவலப் புதர்களை
    அரியும் பெரிய வாள் என்று!

    – கவிஞர் வாலி

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 6

    அதுவரை அருவியென்றால் எனக்குள் இருந்த அனுபவத்தையும் கற்பனையையும் புரட்டிப் போட்டுக் கொட்டிக் கவிழ்த்ததுபோல் பாய்ந்து கொண்டிருந்தது அருவி. குற்றலாத்திலும் ஹொகனேக்கலிலும் உயரமான அருவிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல் அகலமான அருவியைப் பார்த்ததில்லை. உயரமும் அதிகம்தான். வழியில் மடிந்தெல்லாம் இறங்கவில்லை. நேரே கீழே குபீரென வாளியில் இருந்து கவிழ்த்துவிட்டதுபோல் கொட்டிக் கொண்டிருந்தது அருவி. ஏதோ சாகசப் படத்தில் வரும் நிலக்காட்சியை நேரில் பார்க்கும் அனுபவம்.

    எங்கள் ஊரில் கொஞ்சம் மழை அடித்துப் பெய்தாலே, மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் அருவிகள் புறப்பட்டுவிடும். நீல மலைகளுக்கு நடுவே வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல் அருவிகளைக் காணக் கண்கோடி வேண்டும். எல்லாவற்றுக்கும் பிரதமானமாக இருக்கும் அருவியின் பெயர் பல்லிளிச்சான் கணவாய் அருவி. மற்ற அருவிகளெல்லாம் இரண்டு மூன்று நாளில் காணாமற் போய்விடும். இதுமட்டும் நின்று பொழியும்.

    மழையற்ற வறண்ட நாட்களிலும்கூட அந்த அருவியின் தடத்தைத் தெளிவாக எங்கள் பாட்டி வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்க முடியும். என் பால்யத்திலெல்லாம் மழை அடித்துப் பெய்யும் நாட்கள் குறைவு. முணுமுணுவெனப் பெய்து கொண்டே இருக்கும். குற்றாலத்துச் சாரல் எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கும். நல்ல பெருமழை பெய்தால், என் பள்ளிக்கு எதிரிலிருக்கும் சஞ்சீவி மலையிலும் ஓர் அருவி புறப்படும்.

    ஒரே ஒரு முறை எங்களையெல்லாம் அப்பா அழைத்துப் போயிருக்கிறார் அந்த அருவிக்கு. அதற்குக் கழுதைக் கடவு அருவி என்று பெயர். சுற்றிலும் பெரிய பெரிய மரங்களெல்லாம் இருக்க மாட்டா. சப்பாத்திக் கள்ளியும் குட்டை முள் மரங்களும்தான் இருக்கும். சீனிக் கல் மலைதான் சுற்றியிருக்கும். ஆனால் அதற்குள் ஓடிவந்து விழும் அந்தக் குட்டி அருவி. அதில் குளிப்பது ஒரு சுகம்.

    கூட்டம் அதிகம் இருக்காது. பெண்கள் கிட்டத்தட்ட அறவே இருக்க மாட்டார்கள். பெரிய அருவிகளில் குளிக்கப் பெருங்கூட்டம் கூடிவிடும். குற்றாலத்தில் வரிசையில் நின்று குளிக்க எனக்குப் பிடிக்காது. அது எவ்வளவு பெரிய ஒசத்தியான அருவியாக இருந்தாலும் போனோமா குளிச்சோமா வந்தோமா என்று இருக்கணும். இந்த வரிசையில் நிண்ணு குளிக்கறதெல்லாம் நமக்கு ஒத்துவராது சாமியோவ் !

    நல்லவேளை கம்போடிய அருவியில் கூட்டம் அதிகமில்லை. சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது, நாம் வசிக்கும் தெரு வரையிலும் நடந்து வருவோம். வீடு கண்ணுக்குத் தென்பட்டதும் தெருவுக்குள் ஓடத் தொடங்குவோம். அதுமாதிரி, அருவியைப் பார்த்ததும் எங்களுடைய நடையின் வேகம் கூடியது. ஓட்டமும் நடையுமாய் அருவிக்கு அருகில் செல்லும்போது எங்கள் பேச்சொலியை அருவி அடக்கிவிட்டது. கூச்சல் போட்டுக் கத்தினால்தான் எதிராளிக்குக் கேட்கும். அப்படியொரு பேரோசையில் அருவி கொட்டிக் கொண்டிருந்தது.

     

    கரையில் துண்டு, கேமரா போன்றவற்றை ஓட்டுநர் ராவிடம் ஒப்படைத்துவிட்டு உள்ளே இறங்கினோம். அம்மாடியோவ்! அப்படியொரு குளிர்ச்சி அருவித் தண்ணீர். உடலே ஒரு கணம் நடுங்கி ஓய்ந்தது. நடந்து வந்ததில் உடம்பு வியர்த்துப் போயிருந்தது. அதில் குளிர்நீர் பட்டதும் முதலில் சுரீர் என்று இருந்தாலும் அதன் பிறகு அருவித் தண்ணீரை விட்டு வெளியே வரவே மனமில்லை. ஈராயிரமாம் ஆண்டில் ஹரித்வார் போனபோதும் அப்படித்தான் இருந்தது.

    அதிகாலையில் கங்கையில் குளிக்க வேண்டுமென்று அம்மா, அப்பா, சித்திகளோடு 5 மணிக்கு கங்கைக் கரையை அடைந்து விட்டோம். நாங்கள் தங்கியிருந்த சத்திரத்துக்கு மிக அருகில்தான் கங்கை ஓடிக் கொண்டிருந்தாள். எழுந்திருக்கும்போதே கடுங்குளிர். பல்லெல்லாம் கிட்டித்துப் போய்விடும்போலிருந்தது. ஒருவழியாக எழுந்து நடந்து கங்கைக் கரையை அடைந்தால் கூட்டம் ஜே ஜே என்றிருந்தது அந்த அதிகாலை வேளையில்.

    கங்கை நல்ல வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கரையிலிருந்து படிக்கட்டு இறங்கிச் சென்றது. சற்றுத் தொலைவில் ஆட்களை நதி அடித்துக் கொண்டு போய்விடக் கூடாது என்பதற்காக கம்பிக் குழாய்களை நீளமாகப் பொருத்தி இருந்தார்கள். கால் நதியில் பட்டதுமே குளிர் எலும்பை ஊடுருவியது. எங்களோடு அந்தத் தீர்த்தயாத்திரையில் வந்திருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் முதியவர்கள். அத்தனை பேரும் கங்கையைத் தொட்டதும் ஒவ்வொரு விதமாகக் கூச்சல் போட்டனர்.

    பாதம் பட்டதற்கே இப்படிக் குளிருதுண்ணா உள்ள முங்கினா உயிரே போயிரும்போல இருக்கேடா என்றார் என் சித்தி. பரவாயில்லை. உள்ளே இறங்கினா குளிர்விட்டுப் போயிடும் வாங்க சித்தி என்று மெதுவாக அவரை இழுத்துக் கொண்டு இறங்கி ஒரே முங்கு ! அவ்வளவுதான். அதை வார்த்தையில் வருணிப்பது கடினம். செத்தேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியில்லை. சில விநாடிகளுக்குள் உடம்பு அந்தக் குளிரை ஏற்றுக் கொண்டு நதியை அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.

    என் அப்பா எந்தக் கூச்சலும் போடாமல் சிவனே என்று முங்கி முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார். அங்க பாரு ஒரு ஆளை.. ஏதாவது ரியாக்‌ஷன் காட்டுதான்னு! என்று கேலி செய்து கொண்டே என் அம்மாவும் கங்கா ஸ்நானத்தை ரசித்தார்.

    அதே தண்மை அதே குளிர் கம்போடிய அருவித் தண்ணீரிலும். காலால் தடவித் தடவி உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கினோம். இடுப்பளவுக்கு மேல் ஆழம் வந்ததும் குபுக்கென்று முங்கினோம். ஆஹா.. ஆஹா. ஆஹஹஹா.. என்னே ஒரு சுகம். சிறுவயதிலிருந்து எல்லாவிதக் குளியலும் எனக்கு வாய்த்திருக்கிறது. கிணற்றுக் குளியல், குழாய்க் குளியல், ஆற்றுக் குளியல், ஏரிக் குளியல், தொட்டிக் குளியல், வாளியில் இருந்து மொண்டு குளிக்கும் சிக்கனக் குளியல் என்று ஒவ்வொன்றும் ஒருரகம்.

    அவற்றுள் இது ஆகச் சிறந்தது. தண்ணீருக்குள் முங்கியதும் அருவித் தண்ணீருக்கே உரிய வாசனையை என்னால் உணர முடிந்தது. அது உயிர்வாயு அதிகம் கலப்பதால் அருவித் தண்ணீருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய வாசம் என்று நினைக்கிறேன். கடல், ஆறு தவிர மற்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேமே என்று அசையாமல் கிடக்கும். ஆனால், அருவித் தண்ணீர் ஓடும், அலையும், உருளும், குபீரெனக் குதிக்கும், கும்மாளமிட்டுத் ததும்பும், பாறைகளை அறையும், குத்திக் குடையும், மூலிகைகளை அலசும். அப்போது அதில் ஏராளமான உயிர்வாயு கலப்பதாகக் கூறுவார்கள்.

    அதனால்தான் வேறெந்தத் தண்ணீருக்கும் இல்லாத ருசி அருவித் தண்ணீரில் இருக்கும். அதற்கெனப் பிரத்யேகமான ஒரு வாசனையும் இருக்கும். அதை அறிந்தவர்கள் இப்போது இதைப் படிக்கும்போதுகூடக் கண்டிப்பாக அதை உணர முடியும்.

    தப்பித் தவறித் தண்ணீருக்குள் மூழ்கிக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டால் புரையேறித் தண்ணீரை வெளித்தள்ளும்போதும் இலேசாக அந்த வாசனை வரும். அருவி நீருக்குள் விழுந்த கணத்திலிருந்து ஒவ்வொருவரும் சிறுபிள்ளைகளாக மாறிப் போனோம். அடடா.. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா ! இறைவா ! இறைவா ! என்று உரக்கக் கத்த வேண்டும் போலிருந்தது.

    மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் இருக்கும்போது நம்முடைய உடல்மொழி முற்றிலுமாக மாறிவிடுவதை அன்று உணர்ந்தேன். ராஜூ விதவிதமான யோக நிலைகளில் நடனமாடினார். பாறை பாறையாகத் தாவி ரா-வுக்கு பலவிதமாகப் போஸ் கொடுத்தார். சூரிய நமஸ்காரம் செய்வதுபோல ஒற்றைக் காலைத் தூக்கி உச்சியைப் பார்த்தார்.

    நவீன் கொஞ்சம் இறுக்கமான ஆள். அவருடைய முகமும் அருவிக்குள் சிரித்துக் கொண்டே இருந்தது. மகாதேவனோ உடல் முழுவதும் மகிழ்ச்சியை வாரிச் சூடியிருந்தார். பரணியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏண்ணா என்னண்ணா இது இப்படி இருக்கு இந்த இடம் ? நாம இருக்கிறது நெசமாவே பூமிதானா இல்ல வேறே ஏதாவது லோகத்துக்கு வந்துட்டோமா ? என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    அருவி விழுந்து ஓடும் தடாகத்தில்தான் இன்னமும் நாங்கள் இருந்தோம். சற்றுத் தொலைவில் சடேர் புடேர் எனத் துள்ளி விழுந்து கொண்டிருந்தது அருவி. தடாகத்தில் பெரும்பாலும் பயணிகள்தான். கம்போடிய முகங்கள் சற்றுக் குறைவுதான். ஒரு வெள்ளைக்காரத் தம்பதி கைக்குழந்தையோடு எங்களுக்கு அருகே நீரில் இறங்கியிருந்தது. அந்தக் குழந்தை தளக் புளக் என்று தண்ணீரைத் தப்பளம் கொட்டி மகிழ்ந்து கொண்டிருந்தது பொக்கை வாயைத் திறந்து சிரித்தபடி.

    மிதமிஞ்சிய கூட்டம் இல்லை. அளவான கூட்டம்தான். மெல்ல மெல்ல நானும் ராஜூவும் அருவி விழும் இடத்துக்கு நேர்கீழே செல்லத் தொடங்கினோம். நடுவே பெரிய பள்ளமிருந்தது. கால்களால் துழாவிப் பார்த்தேன். தரை தட்டுப்படவில்லை. ஒரு ஆள் ஆழத்துக்கும் கூடுதலாக இருக்க வேண்டும். மெதுவாக நீந்தி அகலமான அருவியின் நடுப்பகுதிக்கு முன்னேறினோம். ஏற்கனவே அங்கே இளந்தாரிகள் பலர் நின்று அருவியைத் தலையில் தாங்கிக் கொண்டிருந்தனர்.

    அருவிக்கு அருகிலுள்ள எல்லாப் பாறைகளுமே வழுக்கின. எதையும் பற்றி மேலே ஏற முடியவில்லை. ஓரிடத்தில் உறுதியான திண்ணை மாதிரிப் பாறை கிடந்தது. அதில் ஏற அங்கிருந்தவர்கள் கைபற்றித் தூக்கி உதவினர். அவ்வளவுதான். இது வேறு உலகம். கண்ணெதிரே விழும் அருவிக்கும் பின்னாலுள்ள ஈரப் பாறைக்கும் நடுவே நாங்கள். ஓவென ஓசையிட்டுப் பொங்கும் அருவிக்குப் பின்னால் அந்தத் தண்ணீர்த் திரையைப் பார்த்தபடி பாறையோரத்தில் ஒண்டியவாறு நின்று ரசித்தோம்.

    தைரியம் வரும்போது தலையை முன்னால் நீட்டினால் அருவி மடேர் மடேர் என்று தலையில் அறைந்தது. ஏழெட்டுப் பேர்தான் அந்த இடத்திலிருந்தோம். நீச்சல் தெரியாவிட்டால் அந்தப் பகுதிக்கு வர முடியாது. அந்த இடத்திலிருந்து மேல்நோக்கி அருவியைப் பார்க்க விரும்பினேன். ஆனால் கண்களில் தண்ணீர் விழுந்து கண்ணை மறைத்தது. தண்ணீர் நல்ல உயரத்திலிருந்து விழுவதால் எழும் துமி சுற்றியிருந்த இடத்தைப் புகைபோல் மூடியிருந்தது.

    வானம் தெளிவாக இருந்தபோதும்கூட மழை வரப் போவதுபோன்ற ஒரு மயங்கிய வெளிச்சம். அருவிக்குள் நிற்கும்போது சூரிய வெளிச்சம் உறைக்கவில்லை. நல்ல உணக்கையாக இருந்தது.

    சுற்றிவர மழைக்காடுகளுக்கே உரிய பசுமை. தமிழர்களுக்கு அறிமுகமில்லாத மரங்கள். விதவிதமான இலைகள், கொடிகள். அந்தப் பின்னணியோடு அருவி மேலும் அழகாகத் தெரிந்தது. அருவிக்கு நடந்து வரும் வழியிலேயே ஒரு குட்டி அருவியைப் பார்த்தோம். அதுவும் நல்ல அகலமான அருவிதான். அங்குதான் கூட்டம் அதிகமிருந்தது. ஆனால், உயரம் இரண்டு ஆள் அளவுகூட இல்லை. பெண்களும் சிறுவர்களுமே அங்கு அதிகமாகக் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்தப் பேரருவியில் இருந்து வெளியே வர எங்களுக்கு மனமே இல்லை. இப்படியே இந்த நாள் உறைந்துவிடாதா என்றுதான் எல்லாருமே ஏங்கினோம். நின்றும் அமர்ந்தும் கிடந்தும் அணுஅணுவாக அருவியை அனுபவித்தோம். ஒருவழியாக மீண்டும் நீந்தி தடாகத்தின் முன்பகுதியை அடைந்து இடுப்பளவுத் தண்ணீரில் நின்று கொண்டு ஒருவர்மீது ஒருவர் தண்ணீரை வாரியிறைத்துப் பிள்ளைகள் போல் விளையாண்டோம். ஆச்சு ஒரு மணி நேரத்துக்கு மேலேயே ஆகியிருக்கும் நாங்கள் உள்ளே இறங்கி.

    ஓட்டுநர் ரா கூப்பிடத் தொடங்கினார். எங்களுக்கும் குளித்ததில் வயிறு காலியாகிப் பசி கிள்ளத் தொடங்கியது. சரி போதுமென்று எழுந்து உடம்பைத் துடைத்து மேலே ஏறத் தொடங்கினோம். பரணி அருவியைத் திரும்பிப் பார்த்தார். சில விநாடிகள் நின்றார். “போயிட்டு இன்னோரு நாள் வரேன்டா செல்லம் !” என்றார்.

    – பொன். மகாலிங்கம்

     

    சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com