Blog

  • மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்

    சித்திரைத்திருவிழாவில் மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள். நேற்று சுந்தரேசுவரர் நந்திகேசுவரர் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக தங்க பல்லக்கில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி கீழ சித்திரைவீதி, தெற்குஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக வலம் வந்தனர்.

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. சோட்டானிக்கரை பகவதி அம்மன்

    அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

  • திருப்பதியில் காணிக்கை முடி ரூ. 11 கோடிக்கு ஏலம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 14 ஆயிரம் கிலோ முடி ரூ. 11.24 கோடிக்கு ஏலம் போனது. திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்கதர்கள் சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் தங்களது முடியை காணிக்கை செலுத்துகிறார்கள். அப்படி காணிக்கை செலுத்திய முடி, இணைய தளம் மூலமாக ஏலம் விடப்பட்டது. அதில் 13 ஆயிரத்து 90 கிலோ எடையுள்ள முடி 11 கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

  • காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

     

    ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வந்தார். சிறுவயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார். அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக்கொடுப்பவர் யாருமில்லை.

    அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக்கொடுத்தார்களே அன்றி அள்ளிக்கொடுக்கவில்லை. அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை. அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப்பேசி வந்தாள்.

    அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்ற செல்வவளம் மிக்கவராகத்திகழ்ந்தார். அவரது நிலையைச் சொல்லிக்காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச்சேர்க்கும் வழியை பின்பற்றும்படி கூறிவந்தாள்.

    அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச்சென்று பணம் சம்பாதித்து வருவதாக கூறி புறப்பட்டார்.

    அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாக தன்வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப்புறப்பட்டார். இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர். தனபாலனின் வில்வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்க விறுவிறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.

    இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின், அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப்பார்த்தாள்.

    கண்களை மூடிப்படுத்திருந்த அந்த மாயக்கண்ணன் புன்னகை புரிந்தார். அவரது புன்னகையைக் கண்டு பொறுக்காத லக்ஷ்மி “சுவாமி, இது என்ன அநீதி..?; சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக்கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை? அவருக்கு செல்வ வளத்தை தரக்கூடாதா?” என்றாள் சற்றே கோபத்துடன்.

    அதே புன்னகையுடன் நாராயணர் “என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி? செல்வத்தை அள்ளிக்கொடுக்க வேண்டியதுதானே?” என  புன்சிரிப்போடு  “நானே கொடுக்கிறேன் சுவாமி” என்றவளைத் தடுத்தார் நாராயணர். “லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜென்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை. நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்.” என்றார் .

    “கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி. அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்” என்றவளைப் பார்த்து புன்னகைத்த நாராயணர், “சரி. உன் விருப்பப்படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால் இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்” என்று அனுமதியளித்தார்.

    மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன்மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க் கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. “நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம்” என்ற எண்ணத்துடன் தன் இருகண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.

    அதே சமயம் தன் கையிலிருந்த பொன்மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி. கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையை தாண்டிச்சென்று தன் கண்களைத் திறந்தான். “அப்பாடா, கண்ணில்லாமல் நடப்பது ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானுகோடி நன்றி” என்று இருகை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.

    வைகுண்ட நாராயணன் சிரித்தார். “என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே?” எனக்கேட்டார் . “சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப்பார்க்கிறேன்” என லட்சுமி கோரிக்கை வைத்தாள். “சரி உன் விருப்பம்.”என்று அனுமதி அளித்தார் இறைவன். இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவிய மூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.

    தன் முன் கிடக்கும் அந்த மூட்டையை கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன். மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள். நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள். இப்போதும் இறைவன் புன்னகைத்தார். “லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார். உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே. என்ன செய்வது அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்” என்றார் பெருமூச்சுடன்.

    அதே சமயம் கையில் எடுத்த செல்வத்தை பிரித்துப்பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாத அந்தப் பாதையில் யார் இந்த மூட்டையைப்போட்டிருப்பார்? யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான். அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று அடைந்த தனபாலன் தன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டு இருந்தான். அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப் பார்த்து ஏன் இங்கேயே தங்கி விட்டாய்? என்று விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச்சொன்னான். தான் தவற விட்ட திரவியத்தைப் பற்றி கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக்கொடுத்து “ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா? நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்” என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான்.

    தனபாலனும் அதை பெற்றுக்கொண்டு விரைந்து ஊர் வந்து சேர்ந்தான். மிகுந்த நல்லகாரியம் செய்து விட்டதுபோல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத்தொடர்ந்தான்.

    நாராயணன் “பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்த செல்வம் அவனைச் சேரவில்லை பார். இது அவனது பூர்வ ஜன்ம வினை” என்றார் அதே புன்னகையோடு. இப்போது மகாலட்சுமி நாராயணனைப் பார்த்து “நானே நினைத்தாலும் ஒருவனை செல்வந்தனாக ஆக்கமுடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன் சுவாமி” என்று கூறி தலைவணங்கி நின்றாள்.

     

     இன்றைய காலத்தில் நாம் அனைவரும்  பணமே பிரதானம் என்று பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறோம் . ஆனால் கடைசியில் நம்முடன் கூட வரப் போவது ,  நாம் வாழும் காலத்தில்  செய்த பாவ புண்ணியங்கள் தான் .

    காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”  என்றார் பட்டினத்தார் உடைந்து போன ஊசியைக்கூட செத்த பின்னால் மனிதனால் கொண்டு செல்ல முடியாது  . இந்த உண்மையை நாம் உணரும் தருணம் இவ்வுலகத்தில் மேலும் அழியும் உடலின் மீதும் நாம் வைக்கும் பந்தம் அறுந்துப் போகும் . அழியாத செல்வமாகிய நற் சிந்தனையை விதைக்க தொடங்குவோம் .

  • திருமலை உண்டியல் காணிக்கை….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும், பக்தர்கள் ரூ.79.25 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விட்டதையொட்டி வெளிமாநில பக்தர்கள் உட்பட தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் பக்தர்கள் ரூ.79.25 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். இது கடந்தாண்டை விட ரூ.1.35 கோடி ரூபாய் அதிகம். இந்த மாதம் கோடைவிடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா….

    பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா மே 8-ந் தேதி தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது. முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில், ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படுகிறது. இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மூலவரான ஞான தண்டாயுதபாணி நவபாசான திருமேனியில் காட்சியளிக்கிறார். கடும் கோடை காலங்களில் மூலவரை குளிர்விக்க பக்தர்கள் கொடுமுடி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இதில் கடும் கோடை காலமான அக்னி நட்சத்திர கழு நாட்கள், சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் ஆகும். இதையே பழனி கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் பூமியின் மீது சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக விழுவதால் பூமியில் வெப்பம் பன்மடங்கு அதிகமாகிறது. இந்த கடும் கோடை வெப்பம் அனைத்து உயிரினங்களையும் பாதிக்காமல் தடுக்கவும், உயிரினங்கள் நோய் நொடியின்றி வாழவும் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதகும்பம் வைத்து குளிர வைக்கும் நிகழ்ச்சி தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

  • தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்…

    சித்திரை திருவிழாவையொட்டி உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந்தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரர், தியாகராஜர்- கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேரில் மண்டபத்தை வந்தடைகிறார்கள்.

  • பக்தர்களின் பிறவிப் பிணியை தீர்க்க வந்த கலியுக கடவுள்

     

    குழந்தையின் துயரம்  கண்டு துடிப்பது தாயின்  இயல்பு.  தாயினும் சிறந்ததல்லவா சாயிநாதனின் கருணை உள்ளம்!

    தன் குழந்தைகள் ஊழ்வினைப் பொருட்டு  உடல் வேதனையால் துடிக்கும் பொழுது , அதைக் கண்டு தவிக்கும்  கருணாமூர்த்தி, தன்னை சரணடைந்தவர்களின்  வேதனையை தான் ஏற்றுக்கொண்டு அவர்களை  அந்த வேதனையின்  பிடியில் இருந்து நீக்கும்  தயாபரர் .

    அடியவர்களுக்காக  தானே முன்வந்து அவர்களின்  வேதனையைத்  தாங்கும் கருணையும், தவ வலிமையும் கொண்டவர்  பாபா . தன் மீது அளவில்லா பக்தி கொண்ட ஒரு கொல்லனின் மனைவிக்கு உதவ பாபா செய்த கருணையை இந்த பதிவில் பார்க்கலாம் .

     

     நெருப்பில் கையை விட்ட பாபா

     

    பாபா மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். அந்த நெருப்பை பக்தர்  , துனி என்று சொல்வர். துவாரகாமயியில்   பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்த நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. அன்றும் பிரகாசமாக கொழுந்து விட்டுக்கொண்டிருந்த நெருப்பில் பாபா குளிர் காய்ந்து கொண்டிருந்தார் . எரிந்துகொண்டிருந்த துனி நெருப்பில் விறகுகளை ஒவ்வொன்றாக போட்டு தீயை வளர்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் சரியாக தான் போய்க் கொண்டிருந்தது .

     

     மசூதியின் ஒரு பக்கத்தில் தங்கள் வேலைகளை  பார்த்துக்கொண்டு இருந்த மாதவ், மற்றும் மாதவ்ராவ் தேஷ்பாண்டே ஆகியோரும்  தொலைவில் இருந்தபடியே தங்கள் பணிகளைச் செய்துக் கொண்டு , பாபாவையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர்.

     

    யாரும் எதிர்பாராத விதமாக, பாபா  திடீரென விறகை எடுத்துத் துனியில் வைப்பதற்கு பதிலாகத் தம் கரத்தையே துனியின் உள்ளே வைத்தார். பார்த்துக் கொண்டிருந்த மாதவ் மற்றும் மாதவ்ராவ் தேஷ் பாண்டே இருவரும்  பாபாவின் செயலைப் பார்த்துப் பதறினார்கள். அவர் அருகே ஓடோடிச் சென்றார்கள். அதற்குள்  பக்தர்களுக்கு நல்லாசி வழங்கும் பாபாவின் திருக்கரம் முழுவதுமாகக் கருகிவிட்டது .

    நெருப்பில் இருந்த அவரது கரத்தை வெளியே இழுத்து பாபாவைத் தரையில் படுக்க வைத்தார்கள். பாபா அப்போது உணர்வோடு இருக்கவில்லை. மெல்ல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் உணர்வு நிலையை அடைந்து கண்களை திருந்து பார்த்தார் .  பாபா! ஏன் இப்படி செய்து விட்டீர்கள் .  உங்கள் கையையே  ஏன் துனிநெருப்பில் நுழைத்தீர்கள்? என்று அங்கு கூடிய பக்தர்கள் கண் கலங்கினார்கள் .

    எல்லோரையும் புன்முறுவலோடு  பார்த்த பாபா, “நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என்  தீவிர பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள்.  அந்த நேரத்திலும் கண்மூடி என்னையே நினைத்துக் கொண்டு ,  தன் குழந்தை நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை.  என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால்  என்ன பாதகமில்லை!” என்றார்  .

     

     பாபாவின் செயலுக்கு காரணத்தை தெரிந்து கொண்ட அடியவர்கள் உள்ளம் உருகியது . இங்கிருக்கும் பாபாவிற்கு  எங்கோ இருக்கும் தன் பக்தையின் குழந்தையை பற்றி எப்படித் தெரிந்தது ? இது தான்  பாபாவின் எங்கும் நிறை பேரறிவு . “என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.” என்றவர் நம் சாயி . மாதவராஜ் தேஷ்பாண்டேயிடமிருந்து இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர், “  என் தெய்வமே! ஏன் இப்படி உன்கரத்தையே நீ சுட்டுக் கொண்டாய் ? “ என்று  அவர் உள்மனம் அழுது  அரற்றியது.

    பரமானந்த் என்ற மும்பையைச் சேர்ந்த மருத்துவரை  பாபாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக உடனே அழைத்து வந்தார் சாந்தோர்கர். நெருப்புச் சுட்ட கையின் மேல் தடவுவதற்கான களிம்பு, கையைச் சுற்றிக் கட்டுவதற்கான துணி போன்ற மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர் பரமானந்த், சீரடி  வந்து சேர்ந்தார். பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார்.  ஆனால், பாபாவிடமிருந்து ஒரு சிரிப்புத்தான் பதிலாக வந்தது.

    அவர் மருத்துவரிடம் கையைக் காட்டவில்லை. பக்தர்களின் பிறவிப் பிணியையே தீர்க்க வந்த கலியுக கடவுளான  பாபாவுக்குத் தன் உடல் ஏற்பட்டுள்ள  பிணி ஒரு பொருட்டாகப் படவில்லை .  “அன்பர்களே! மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது! ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது? நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே.. ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன? நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் , கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்!” பாபாவின்  இந்த  அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.

     

     குஷ்டரோகி  பாகோஜி ஷிண்டேக்கு கருணை காட்டிய  பாபா

     

     குஷ்டரோகியான  பாகோஜி ஷிண்டே பாபாவின் அடியவர்களில் ஒருவர். தன்னுடைய  முன்வினை  காரணமாக குஷ்டரோகத்தினால் அவதியுற்றார் . ஆயினும்  பாபாவின் சந்நிதியில்  அவருடைய தரிசனத்தால் தன் வேதனைகளை மறந்து வாழ்ந்து வந்தார். பாபாவை அடிக்கடி தரிசிக்கவும், பாபாவின் அருள் மொழிகளைக் கேட்கவும், அவர் பாக்கியம் பெற்றிருந்தார்.  ஒரு முறை அவர் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு பாபாவின் திருக்கரத்தை அணுகினார்.

    வெந்திருந்த பாபாவின் கையில் நெய் பூசி நன்றாகத் துடைத்துவிட்டார். பாபா  எந்தவித  மறுப்பும் சொல்லாமல் மலர்ந்த முகத்துடன் அவர் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு வாழை இலையை அந்தக் கரத்தின் மீது வைத்துக் கட்டி  அவருக்குத் தெரிந்த எளிய சிகிச்சை முறையை செய்தார் பாகோஜி .  மருத்துவர் பரமானந்திடம் கையைக் காட்ட மறுத்த  சாயி ,  தம் தீவிர அன்பரான ஷிண்டேயின் எளிய சிகிச்சையை ஏற்றுக் கொண்டது , பாபா தன் அடியவர்கள் மீது கொண்ட பேரன்பின் அடையாளம்.

    பக்தர்களின் உள்ளங்களில் நிறைந்து நின்று வழிகாட்டும் சாயி நாதனின் வரலாற்றை நாமும் தொடர்வோம்…

  • அக்னி நட்சத்திர தாராபிஷேகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மே மாதம் 4 ஆம் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை சுவாமிக்கு தாராபிஷேகம் நடக்கிறது. அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் மே மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. கத்திரி வெயிலின்போது வெயில் அளவு 110 டிகிரியை கூட தாண்டலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோடை மழை பெய்து பூமியின் வெப்பத்தை தணிக்க வேண்டும் என பொதுமக்கள் இறைவனை வேண்டி வருகிறார்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடக்கம் முதல் முடிவு வரை ஆண்டுதோறும் சுவாமிக்கு தாராபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான தாராபிஷேகம் மே 4 ஆம் தேதி முதல் முதல் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.

  • திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் புஷ்ப யாகம்

    கோதண்டராமர் பிறந்த திருநட்சத்திரத்தையொட்டி திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் நேற்று 18 வகையான மலர்களால் புஷ்ப யாகம் நடந்தது.
    திருப்பதியில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் நேற்று மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை புஷ்ப யாகம் நடந்தது. இந்தப் புஷ்ப யாகம் கோதண்டராமர் பிறந்த திருநட்சத்திரத்தையொட்டி நடந்தது. முன்னதாக, மதியம் சீதா, லட்சுமணர் சமேத ராமச்சந்திரசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    அதைத்தொடர்ந்து மல்லிகை, ரோஜா, சம்பங்கி, கனகாம்பரம், சாமந்தி உள்பட 18 வகையான மலர்களை கூடைகளில் நிரப்பி கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் 18 வகையான மலர்களால் உற்சவ மூர்த்திகளான சீதா, லட்சுமணர், ராமச்சந்திரசாமிக்கு புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது.