Category: கோவில்கள்

கோவில்கள்

  • குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

    குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்,மூல நட்சத்திரத்தின் மூலவரான அனுமனுக்கு மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம். 

    ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்னை, கிண்டி பூந்தமல்லி சாலையில் போரூர் காரம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 21 ஆம் தேதியிலிருந்து 27 நட்சத்திரங்களுக்கும் சகசர நாமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்ற 17 ஆம் தேதியிலிருந்து அனுமனுக்கான லட்சார்ச்சனை ஆராதனையும் அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று அனுமன் பஞ்சமுக தொற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சைவ, வைணவ சங்கமமாய் விளங்கும் இத்தலத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கோயிலின் வரலாற்றுக்கு செல்வோம்….
    மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரால் சென்னையில் போரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர் இருக்கிறார் என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும்?

    ராகவேந்திரர் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். வியாசராஜர் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தவர். தலைக்கோட்டை யுத்தத்தில் விஜய நகர சாம்ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஹம்பி ஷேத்ரத்திலிருந்து ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் கால்நடையாகவே பாரதமெங்கும் புனிதப்பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் பயணம் செய்த பொது 600 க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் சிலைகளை நாடு முழுவதும் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. அடுத்தடுத்து நிகழ்ந்த படை எடுப்புக்களினால் அவர் பிரதிஷ்டை செய்த பல விக்ரகங்கள் காணாமல் போய்விட்டன. நூற்றுக்கும் குறைவான விக்ரகங்களே தப்பித்துள்ளன.

    வியாசராஜ தீர்த்தர் அப்படி ஒவ்வொரு ஊராக வந்தபோது, போரூர் என்ற இடத்திற்கு வந்தார்.
    தனது ஞான திருஷ்டியால் அவ்வூரில் ராமர் சிவனை வழிபட்டதை உணர்ந்த வியாசராஜ தீர்த்தர் தான் நினைத்திருந்த ஆஞ்சநேய சுவாமியை பிரதிஷ்டை செய்ய போரூரை இட பொருத்தமான இடம் இருக்க முடியாது என்று கருதி, இங்கு ஒரு குளக்கரையில் அனுமனை பிரதிஷ்டை செய்தார். அப்படி ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அழகான அளவற்ற சக்தி வாய்ந்த மூர்த்தம்தான் இந்த ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்.

    வலது கரம் பக்தர்களுக்கு “அஞ்சவேண்டாம்…. நான் இருக்கிறேன் காப்பதற்கு” எனும்படி அபய ஹஸ்தம்.
    இடது கரத்தில் சௌகந்திகா மலர், வாலில் மணி. பகைவர்கள் தீண்ட முடியாத படி அதர்வண வேத மதிரப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இவை மூன்றும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயரிடம் மட்டுமே பார்க்கமுடியும். 

    அந்நியர்களின் படையெடுப்பினாலனுமர் விக்ரகம் காணாமல் போயிற்று. விக்ரகத்தை காணாது திகைத்த ஊர்மக்கள், படையெடுப்பினால் சேதப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால் அனுமன் இருந்ததோ குளத்தினுள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குளத்தை தூர் வார முற்பட்டபோது, இந்த விக்ரகம் வெளியே வர ஊர் மக்களுக்கு எல்லையில்லா ஆனந்தம். இதை மண்டக்குளம் என்று அழைக்கிறார்கள். இதிலிருந்து நீர் எடுத்து தான் ராமர் சிவா பூஜை செய்தார் என்று கூறப்படுகிறது. கண்டெடுத்த அனுமன் சிலையை அருகிலிருந்த ஆல மரத்தடியில் வைத்து வழிபட்டார்கள். 

    அண்டியோர் துயரை அந்தக் கணமே தீர்த்துவைத்ததால் அனுமனின் புகழ் பரவ தொடங்கியது. எவரைக் கொண்டு எதனைப் பூர்த்தி செய்வது என்று அவனுக்கு தெரியாதா?
    இந்த சிவவீர ஆஞ்சநேய சுவாமிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஆஞ்சநேயரைத் தவிர மேலும் பல விக்ரகங்கள் இங்கு உண்டு. செல்வ விநாயகரை வணங்கி ஆலயத்தை வலம்  வரும் நமக்கு உற்சவ மூர்த்திகளான சீதா, லக்ஷ்மண சமேத இராமரும், அருகில் அனுமனும், காட்சி தந்து பரவசப்படுத்துகிறார்கள். பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே வெண்ணெய் சாற்றி வழிபடுவதற்கு ஸ்ரீ திவ்ய நாம சங்கீர்த்தன அனுமாரை நிர்மாணித்துள்ளனர். 

    கோயில் அமைந்துள்ள இடம் சிறியது தான் என்றாலும், சுற்றுப்புற பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்க்ரீவர், தன்வந்திரி பகவான், பள்ளி கொண்ட சிவன், பைரவர் ஆகியோர் தனித் தனியாக அருள் புரிகிறார்கள். மேலும் நிருத்ய விநாயகர், தம்பதி சமேத தக்ஷிணாமூர்த்தி, பள்ளி கொண்ட ரங்கநாதர், காயத்ரி தேவி, அஷ்ட பூஜை துர்க்கை, முருகன் ஆகியோரும் இங்கே உண்டு.
    இத்தலத்தில்  மட்டைத் தேங்காய் பிரார்த்தனை மிகவும் பிரசித்தம். நமது கோரிக்கையை வேண்டுகோளாக்கி மட்டைத் தேங்காயை வாங்கி வந்து கோயிலில் கொடுத்தால் சுவாமியிடம் வைத்து அதற்கு எண்கள் அமைத்து தருவார்கள்  அதை கோயிலிலேயே வைத்துவிடவேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் மட்டையை உரித்து தேங்காயை உடைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். நியாயமான வேண்டுதல்கள் ஒரு மண்டலத்திற்குள் நிறைவேரிவிடுவதாக ஆலயத்தில் சொல்கிறார்கள்.
    பரிகார சக்தி
    திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கடன் தொல்லை, செய்வினை தோஷங்கள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, உத்தியோகப் பிரச்னை ஆகியவற்றை தன்னின் தரிசிப்பவர்களுக்கு இந்த  சிவவீர ஆஞ்சநேயர் தீர்த்துவைக்கிறார்.

  • அண்ணாமலையின் குண்டுக்கண்ணன்!

     

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் பூதநாராயணப்பெருமாள் என்னும் பெயரில் ‘குண்டு கிருஷ்ணர்’ அருள்பாலிக்கிறார்.

    தல வரலாறு: குழந்தை கிருஷ்ணனால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவனைக் கொல்ல பூதனை என்ற அரக்கியை அனுப்பி வைத்தான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, கிருஷ்ணரை வாரி அணைத்து பாலூட்டினாள். கிருஷ்ணனும் பால் குடிப்பது போல நடித்து அவளது உயிரையே குடித்து விட்டார். ஆனாலும் தனக்கு அவள் பாலூட்டியதால், அந்த தாய்மை உணர்வுக்கு மதிப்பு அளித்து அவளது பெயரை தன்னுடன் இணைத்து ‘பூத நாராயணர்’ என்று பெயர் பெற்றார். பெயருக்கேற்ப இவர் குண்டாக இருப்பார். மன்னர் ஒருவர், இந்த கிருஷ்ணருக்கு கோயில் கட்டினார். அது மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய கிருஷ்ணர், பூமியில் புதைந்த இடத்தை உணர்த்தினார். சிலை கண்டெடுக்கப்பட்டு மீண்டும் கோயில் கட்டப்பட்டது. பெரிய கிருஷ்ணர் குழந்தை கிருஷ்ணர் இடது காலை மடித்து வலது காலை தரையில் குத்திட்டு அமர்ந்து இருக்கிறார். வலது கையில் சங்கு உள்ளது. இடதுகை அருள் புரியும் விதத்தில் அபய முத்திரை காட்டுகிறது. குழந்தை வரம் கிடைக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து துளசி மாலை அணிவிக்கின்றனர். நல்லறிவு தருபவர் கோபம், பொறாமை, காமம் போன்ற தீய குணங்களையே அரக்கர், அரக்கிகளாக புராணங்களில் உருவகம் செய்துள்ளனர். இறை வழிபாட்டின் மூலம் இந்த தீய எண்ணங்களை போக்க முடியும். கிருஷ்ணர் அரக்கியை வதம் செய்தவராக இங்கு இருப்பதால், தீய குணங்கள் மறைந்து பக்தர்களுக்கு நல்லறிவு உண்டாகும்.

     

     கிரிவலம்: கிரிவலம் செல்வோர், இவரது சன்னதியில் தொடங்கி பின் இவரது சன்னதியிலேயே நிறைவு செய்வது சகல நன்மையையும் தரும். இங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி, கோயில் வாசலில் கொட்டுவர். கிரிவலம் சென்ற பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    சிறப்பம்சம்: கருடாழ்வார், தும்பிக்கைஆழ்வார், ஆஞ்சநேயர், சுதை ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. பயம் நீங்க, வெற்றி கிடைக்க சக்கரத்தாழ்வாருக்கு புதன்கிழமையில் துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர். கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருவோணம், பவுர்ணமி நாட்களில் அபிஷேகம் நடக்கும்.திருவண்ணாமலையிலுள்ள பழமையான பெருமாள் கோயில் இது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். புரட்டாசி கடைசி சனியன்று அன்னதானம் உண்டு. எப்படி செல்வது: அண்ணாமலையார் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ளது.

  • அஷ்ட லட்சுமிகள் கோவில்

    அஷ்ட லட்சுமிகள்

    நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டுவித செல்வங்களுக்கு அதிபதியாக, எட்டு தெய்வீக வடிவங்களில், அஷ்டலட்சுமியாக வழிபடுவது நம் மரபாக இருக்கிறது.

    ஆதிலட்சுமி
    பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. ஆதி என்பதற்கு ‘முதல்’ என்று பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் என வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லட்சுமியே ஆதி லட்சுமி. ஒவ்வொரு லட்சுமிக்கும், பெயரைப் பொறுத்து ஒவ்வொரு குணம் உண்டு.
    ஆனால் ஆதிலட்சுமிக்கு அப்படியில்லை. ஏனென்றால், அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள். ஆதிலட்சுமியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றிருக்கும். அவள் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும் என்பதனால் அவளை வழிபட்டுப் பேறுபெற வேண்டியது முக்கியம்.
    ‘தேவர்களால் வணங்கப்படுபவளே, அழகானவளே, மாதவனின் மனைவியே, சந்திரனின் சகோதரியே, பொன்மயமானவளே, முனிவர்களால் போற்றப்படுபவளே, மோட்சத்தை அளிப்பவளே, இனிமையை அருள்பவளே, வேதங்களால் துதிக்கப்படுபவளே, தாமரை மலரில் வசிப்பவளே, தேவர்களால் பூஜிக்கப்படுபவளே, சாந்தியோடு கூடியவளே, மதுசூதனனின் மனைவியே, மகாலட்சுமியின் முதல் உருக்கொண்ட ஆதிலட்சுமியே, என்னை எப்போதும் காப்பாற்ற வேண்டும். எப்பொழுதும் நலன் அருள்வாய்!’ – எனத் துதிக்க எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் நடக்க ஸ்ரீஆதிலட்சுமி நமக்கு அருள்புரிவாள்.
    2. சந்தானலட்சுமி
    சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. மற்ற செல்வங்களைவிட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலட்சுமி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கும் தோற்றம் கொண்டவள். சடையுடன் கிரீடத்தை சூடியவளாக, வரத-அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து காட்சி தருகிறாள்.
    இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பிள்ளை பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை. ‘கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே, சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே, அறிவுமயமானவளே, உயர் நலமுடையவளே, உலகனைத்தும் நலம்பெற அருள்பவளே, ஏழிசைக் கானத்தினால் துதிக்கப்படுபவளே, சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே, இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே, மதுசூதனன் மனைவியே, சந்தான லட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ என வேண்டிட, செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.
    3. கஜலட்சுமி
    இவளே ராஜலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதுபோல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்று பெயர். கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி எனவும் அழைப்பர். கஜலட்சுமியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் காணலாம்.
    நிலத்திற்கு செழுமையான நீர் தேவை என்பதால் நீர் கொண்ட மேகங்கள் யானைகளாகி, நிலமகளாகிய இலக்குமியின்மீது அபிஷேகிப்பதை இவ்வுருவம் குறிக்கிறது என்பார்கள். ‘தீவினைகள் அழிக்கும் அழகியே, எல்லாப் பயன்களையும் அருள்பவளே, சாத்திரமயமானவளே, தேர், யானை, புரவி, காலாள் சூழப் பணியாட்களும், மக்களும் துதிக்க விளங்குபவளே, அரியும், அரனும், பிரம்மனும் வணங்க நிற்பவளே, மழைபொழிய அருள்பவளே, தாபங்களைத் தீர்க்கும் திருவடியினையுடையவளே, மதுசூதனன் மனைவியே, கஜலட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ – என வேண்டி கஜலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெறலாம். வாழ்க்கை என்றும் ஆனந்தமாயிருக்கும்.
    4. தனலட்சுமி
    தனம் என்பது பணம் அல்லது தங்கத்தைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம். இத்தேவியே வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். தனலட்சுமியின் அருளால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறியுள்ளார். தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பச்சிலை, கெண்டி, வில், அம்பு போன்றவற்றை ஏந்தி பத்மபீடத்தில் பொலிபவள்.
    ‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள்.

    5. தான்யலட்சுமி
    தானிய வளங்களை அருள்பவள் தான்யலட்சுமி. தானிய வகைகள், உணவுப் பொருட்கள், பழம்-கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்யலட்சுமி. இவளுக்கு அன்னலட்சுமி என்ற பெயரும் உண்டு. திருமாலைப் பச்சைமால் என்பர். அவர் நிறத்திற்குக் காரணம் தான்ய லட்சுமியேயாகும். அவள் உலகப் பசுமைக்குத் தலைவி.
    ஆறு திருக்கரங்களைக் கொண்டவள். வலப்புறம் தானிய நெற்கதிர், அபய முத்திரை, அம்பு முதலியவற்றைக் கொண்டும், இடப்புறம் வில், கரும்பு, வரத முத்திரை முதலியவற்றைக் கொண்டும் விளங்குபவள். யானையைப்பீடமாகக் கொண்டவள். லட்சுமி தந்திரம் என்னும் நூலில் தான்யலட்சுமி சதாக்க்ஷி, சாகம்பரி எனப்போற்றப்படுகிறாள். உலகம் மழைநீர் இல்லாமல் வாடும் என்பதினால் நூறு கண்களால் நீர்வளத்தைப் பெருக்குகிறாள் என்ற பொருள்பட சதாக்ஷி எனவும், உணவுப் பொருட்களை உருவாக்குகிறாள் என்பதனால் சாகம்பரி எனவும் அழைக்கப்படுகிறாள்.
    ‘பாவங்களை அழிப்பவளே, அழகியே, வேத உருவானவளே, வேதமயமானவளே, பாற்கடலில் தோன்றிய மங்கல வடிவே, மந்திரங்களில் வாழ்பவளே, மந்திரங்களினால் வழிபடப்பெறுகிறவளே, நலமனைத்தும் அளிப்பவளே, தாமரையில் வாசம் செய்பவளே, தேவர்கள் புகலாகக் கொண்ட திருவடிகள் வாய்த்தவளே, மதுசூதனின் மனைவியே, தான்யங்களில் உறைந்து உலக உயிர்களை நிலைபெறச் செய்பவளே, தான்ய லட்சுமியே, எனக்கு எப்பொழுதும் வளமளித்து காப்பாற்றுவாயாக!’ – எனக்கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறையும். வாழ்வில் உணவுப் பஞ்சமே இருக்காது.
    6. விஜயலட்சுமி
    விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலட்சுமி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தன் திருக்கரங்களில் வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் தரித்து அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள்.
    ‘தாமரை மலரில் பொலிபவளே, நற்கதியளிப்பவளே, ஞானம் வளர்ப்பவளே, கான மயமானவளே, வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே, அனுதினமும் குங்குமத்தினாலும், மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே, வாத்தியங்கள் முழங்க, சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட, அவருக்கு அருளியதன் மூலம் பெருமையளித்தவளே, மதுசூதனின் மனைவியே, வெற்றித் திருமகளே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ – என பக்தியுடன் கூறி ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றிதான்.
    7. வீரலட்சுமி
    மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலட்சுமி என்ற தைரியலட்சுமி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள்.
    வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குபவள். தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள். எல்லாருக்கும் உறுதியான மனோதிடத்தை அருள்பவள்.
    ‘பிருகு முனிவரின் மகளே, மந்திர ரூபிணியே, மந்திரமயமானவளே, தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே, ஞான மலர்ச்சியுடையவளே, சாத்திரங்கள் போற்றும் புனித மகளே, இவ்வுலகில் ஏற்படும் பயங்களை நீக்குபவளே, பாவத்தைப் போக்குபவளே, மதுசூதனின் மனைவியே, நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகட்டும். தைரிய லட்சுமியே, எனக்கு எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்,’ என்று பக்தியுடன் கூறி வந்தால் மனஉறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும்,
    ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள்.
    8. வித்யாலட்சுமி
    வித்யை என்பதற்குக் கல்வி என்று பொருள். கல்விச் செல்வத்தை வழங்குவதனால் இவளுக்கு வித்யாலட்சுமி என்று பெயர். கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் இவள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருள்பவள். ஸ்ரீஜெயாகிய சம்ஹிதையில் ‘வாகீஸ்வரி’ (நாமகள்) என்று விளக்கப்பட்டுள்ளது. அதிகமான வெண்மை உருவுடையவள். சங்க, பத்ம, வரத, அபய அஸ்தங்களுடன் கூடியவள், நூல்களை இயற்றிக் கொண்டிருக்கும் நாத சொரூபமானவள் என்று குறிப்பிடப்படுகிறது. ‘லக்ஷ்மி தந்திரம்’ என்னும் நூல் சகல ஞான சம்பத்துக்களையும் ஆற்றலையும் அருள்பவள் எனக்கூறுகிறது.
    தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்துடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

     

  • காரைக்கால் அம்மையார் கோவில்( மாங்கனி திருவிழா)

     

     காரைக்கால்  அம்மையார்

    இம்மாத பவுர்ணமியன்று சிவன், பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்கிறார். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர். மறுநாள் காலை 5 மணிக்கு அம்மையார், எலும்பு வடிவில் கைலாயம் சென்ற வைபவம் நடக்கிறது. அப்போது சிவன், கோயிலுக்கு வெளியில் ஓரிடத்தில் இருப்பார். அப்போது இரட்டை மணிமாலை, திருவந்தாதி பாடப்படும்.

    பின்னர் ஊரிலுள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, சிவனுக்கு அருகில் ஒரு தீப்பந்தமும், காரைக்காலம்மையார் கோயிலில் ஒரு தீப்பந்தமும் ஏற்றப்படும்.

    அம்மையார் கோயில் தீப்பந்தத்தை, சிவனருகே உள்ள தீப்பந்தத்தில் கொண்டு சேர்ப்பர். அம்மையார், ஜோதி வடிவில் இறைவனை ஐக்கியமாவதாக இதனை சொல்கிறார்கள்.

    பங்குனியிலும் அம்மையார் ஐக்கிய விழா கொண்டாடப்படுகிறது.

     

     

    காரைக்கால் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் மாங்கனி திருவிழா நடக்கும்.
    இத்திருவிழா கடந்த 6ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.மறுநாள் காரைக்கால் அம்மையார் அன்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணமும், முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல் நடந்தது.

    பரமதத்தர் தனது பணியாளர்களிடம் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல்,சிவபெருமான் காவியுடை,ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதி உலா வரும் போது பக்தர்கள் தன் வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சியில் காரைக்கால் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஒரு மாதம் தொடர்ந்து நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவின் இறுதிநாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.இதற்காக பஞ்சமூர்த்திகளுக்கு விடையாற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது.பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர்,அம்பாள், வள்ளி தெய்வாணை,சமேதராக முருகன்,விநாயகர், சண்டிகேஸ்வரர்,சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது.பின் சந்தனம்,மஞ்சள்,பால்,தேன்,பன்னீர், அண்ணம்,பழரசங்கள்,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     

     

  • துன்பம் போக்கும் அழியா நிலை ஆஞ்சநேயர்

    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலை அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆஞ்சநேயரை வேண்டி வணங்கினால் துன்பம் பறந்தோடும்.

    அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் ஐந்து கி.மீ. தொலைவில் அழியா நிலை என்னும் ஊரில் ஆஞ்சநேயருக்கு ஆலயம் ஒன்று உள்ளது.

    இரண்டு அடிபீடத்தில், ஒன்பது அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இவர். அவருக்கு அருகில் செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அசோக வனத்தில் வேதனையில் தவித்த சீதாப்பிராட்டியின் முன் தோன்றிய ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து ஆறுதல் கூறினார்.

    அதே விஸ்வரூபத்தில் இங்கே எழுந்தருளி இருப்பது இப்பகுதி மக்கள் செய்த தவப்பயன். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு, வெண்ணெய், மலர், பழங்கள், செந்தூரம் மற்றும் பலவிதமான அலங்காரங்கள் செய்யப்படுவதை பக்தர்கள் பார்த்து ஆனந்தம் அடைகின்றனர்.

    ஆலயத்தின் அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதன் முன்பாக 23 அடி உயர கதாயுதம் நிறுவப்பட்டிருக்கிறது. மூலஸ்தானத்திற்கு முன்னால் செல்வவிநாயகர் தனி மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.

    அவரை வணங்கியபின் ஆஞ்சநேயரின் முன் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் அனுமனின் வெற்றிக் கொடிமரத்தைச் சுற்றி விட்டு மூலஸ்தானத்திற்குச் சென்று ஆஞ்சநேயரின் அருள் பெற வேண்டும். ஆஞ்சநேயரின் பேராற்றல் மிக்க கதாயுதத்தை வணங்கிய பின் அதை வலம் வரவேண்டும்.

     

  • நான்கு நிலைகளில் உள்ள பெருமாளைத் தரிசிக்க ஏற்ற திருநீர்மலை பெருமாள்!

     திருநீர்மலை திவ்ய தேசம், சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது. இந்தத்தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன. 

     

    மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன.அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.

     

    சென்னை பல்லாவரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார். இனி ஆலயத்தின் தல வரலாறு பார்ப்போம். 

     

    ராம கதையை எழுதிய வால்மீகி முனிவர் இத்தலத்தில் சயனித்திருந்த அரங்கநாதரையும், இருந்த கோலத்தில் சாந்த ரூபியாக இருகரங்களுடனிருந்த நரசிம்மரையும், நடந்த கோலத்தில் திருவிக்ரமனையும் பார்த்தார். ஆமாம் அவருடைய ராமன் எங்கே? மலையை விட்டுத் துயரத்துடன் இறங்கினார். முனிவரின் துயரைத் துடைக்க இத்தலத்து எம்பிரான்களே வால்மீகியின் சக்கரவர்த்தித் திருமகனாகக் காட்சியளித்தனர். ரங்கநாதரே ராமனாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், லட்சுமிதேவி ஜானகியாகவும் கருடன் அனுமான் என்று ரம்மியமான நீர் வண்ணப் பெருமாள் ரூபத்தில் காட்சி கொடுத்தனர். மூவர் நால்வராயினர். தம்முடைய திருவாலியில் உள்ள உருவத்திலேயே சாந்தமூர்த்தி நரசிம்மரை திருமங்கையாழ்வார் கண்டாராம்

     

     

    நீர்’ பெருமாள்: ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார்.

     

    பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு “நீலவண்ணப்பெருமாள்’ என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.

     

    ஒரே தலத்தில் நான்கு பெருமாள்: இத்தலத்து பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோயில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார்.

    தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகலந்த பெருமாள் என நான்கு கோலங்கள் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், ரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்கின்றனர்.

     

    குழந்தை நரசிம்மர்: நரசிம்மரை உக்கிரமான கோலத்தில் தரிசித்திருப்பீர்கள். அவரை சாந்தமாக, பால ரூபத்தில் இத்தலத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு பிரகலாதன் பயந்தான். எனவே, சுவாமி தன் பக்தனுக்காக உக்கிர கோலத்தை மாற்றி, அவனைப்போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். 

     

    இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.

     

    கோபுரம் ராமருக்கு… கொடிமரம் நீர்வண்ணருக்கு…: கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே உள்ளது. வால்மீகிக்காக ராமராகவும், நீர்வண்ணப்பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறுகின்றனர். எனவே, இவர்களுக்கு முக்கியத்துவம் தரும்விதமாக ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்தலத்தை மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, “அணிமாமலர்மங்கை’ எனக் குறிப்பிட்டு பாசுரம் பாடியுள்ளார். பொதுவாக பெருமாள் கோயில்களில் உற்சவர் சிலையை மூலவர் முன்பு வைப்பது வழக்கம். இக்கோயிலில் மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

     

    இரட்டை திருவிழா: மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. 

    குளம் ஒன்று; தீர்த்தம் நான்கு: கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் 19 தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. 

    நாராயணனின் சிலை வடிவத்தை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று குறிப்பிடுவார்கள். இங்கு, நான்கு நிலைகளிலும் பெருமாளைத் தரிசிக்கலாம்.
     

    நீர்வண்ணன், (நீலமுகில்வண்ணன்), அணிமாமலர் மங்கை – நின்ற திருக்கோலம்.

    சாந்த நரசிம்மன் – வீற்று இருந்த திருக்கோலம்.

    ரங்கநாதன், ஸ்ரீதேவி, பூதேவி – கிடந்த திருக்கோலம்.

    உலகளந்த பெருமாள் (த்ரிவிக்ரமன்) – நடந்த திருக்கோலம்.

     

  • வேலூர் லட்சுமி நாராயணி (தங்கக்கோயில்)

    இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

    வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.

     

    பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா, தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

     கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவை பகலாக்குகின்றன. கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் பச்சைப்பசேல் என்றுகாட்சியளிக்கின்றன

    தென்றல் காற்று இதமாக வீசுகிறது மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது. கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும் தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது.

    அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பிரமாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில் ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம். கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும், புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன. கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள். லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, இத்தகைய சுயம்பு கோலத்தை காண்பது அரிதிலும் அரிது.

    திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு.மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள்.

    தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது

  • ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் !

    ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன.

    கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம். .

    *1, திங்களூர் (சந்திரன்):*
    *தரிசனம் நேரம் :1மணி நேரம்*
    *காலை 6மணி*

    ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும்.

    இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும்.

    பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.

    *2, ஆலங்குடி (குரு)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *காலை 7.30மணி*

    ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

    காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

    *3, திருநாகேஸ்வரம் (ராகு)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *காலை 9.30*

    கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.

    நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

    *4, சூரியனார் கோவில் (சூரியன்)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *மதியம் 11.00மணி*

    . நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

    *5, கஞ்சனூர் (சுக்கிரன்)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *மதியம் 12.15*

    சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும்.

    அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

    *6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்)
    *தரிசனம் நேரம் :1மணி நேரம்*
    *மாலை 4மணி*

    நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும்.

    எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும்.

    பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

    *7, திருவெண்காடு (புதன்)
    *தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
    *மாலை 5.15மணி*

    வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும்.

    பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

    *8, கீழ்பெரும்பள்ளம் (கேது)
    *தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
    *மாலை 6.15மணி*

    திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

    *9, திருநள்ளாறு (சனி)
    *தரிசனம் நேரம்:1மணி நேரம்*
    *இரவு 8.00மணி*

    நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம்.

    கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.

    9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்

    (இது காரில் செல்பவர்களுக்கு எளிதானது.
    பஸ்ஸில் செல்பவர்களுக்கு சிரமமானது..
    காரணம். சரியான கால அளவில் அனைத்து இடங்களிலும் பஸ் கிடைக்க வேண்டும்,)

  • அதிசயத்திலும் அதிசயம் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோவில்கள்  

     

    இந்தியாவில் உள்ள பிரபல எட்டு சிவன் கோவில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டன. இந்த எட்டு கோவில்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த எட்டு கோவில்களும் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தான் ஆச்சரியம்

    இந்தியாவில் உள்ள பிரபல எட்டு சிவன் கோவில்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டன. இந்த எட்டு கோவில்களுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அதாவது இந்த எட்டு கோவில்களும் மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தான் ஆச்சரியம் அளிக்க கூடிய விடயமாகும்.

    ஏன் ஆச்சரியம்? அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை (latitude and longitude) யை அளந்து தான் இப்படி ஒரே மாதிரி இருக்கும் வகையில் வடிவமைக்க முடியும்.

    ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த விதமான அறிவியல் சார்ந்த செயற்கை கோள் தொழில்நுட்பங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை!
    பின்னர் இது எப்படி சாத்தியமானது என்பது மர்மமாகவே உள்ளது.

     இங்குள்ள பாரம்பரிய கலை ச்சின்னங்களை, ஐக்கிய நாடுகள்சபை கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரித்துள்ளது
    அதுவும் இதில் எல்லா கோவில்களும் வேறு வேறு திசையில் அமைந்துள்ளது. எடுத்துகாட்டுக்கு கேதாரிநாத் கோவிலுக்கும், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கும் இடையேயான இடைவெளி 2383 கிலோ மீட்டர் ஆகும்.

    இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் ஒரே மாதிரி நேர்கோட்டில் அமைந்திருப்பது பெரிய ஆச்சரியம் தான்.
    அது மட்டுமா! இந்த கோவில்களில் ஐந்து கோவில்கள் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது. 

    அதாவது, திருவனைகாவலில் இருக்கும் ஜம்புகேஷ்வரா கோவில் நீரையும், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் நெருப்பையும், காலேஷ்வரத்தில் அமைந்துள்ள காலேஷ்வர முக்தீஷ்வர கோவில் காற்றையும்,காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஷ்வரர் கோவிலானது நிலத்தையும், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலானது ஆகாயத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வளவு பெரிய விஷயங்கள் நிச்சயம் எதிர்பாராமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பெரிய சம்பவங்கள் இதன் பின்னர் இருக்கும் என்பது தான் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

  • சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சிறுவாபுரி முருகன்!

    சொந்த வீடு பற்றிய கனவு என்பது எல்லோருக்குமே இருக்கும். ஆனால், எல்லோராலும் அந்தக் கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லைஉங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன். 

     

    ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.

    சென்னை, கல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்தபின் இடது புறமாக பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து  3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி முருகனை தரிசிக்கலாம்.

    சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

    பசுமை கட்டிநிற்கும் நெல்வயல்களைக் கடந்து போனோமென்றால், சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு மூலையில் இருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில். கோயிலின்  உள்ளே கம்பீரமான ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர் மற்றும் அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

    ஐந்து நிலைகளைக்  கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி  நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

     பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது.திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிலம், வீடு, வீட்டு மனை என பூமி சார்ந்த எந்த விஷயம் என்றாலும் இங்கு வந்து வணங்கிச் சென்றால், உடனே அவர்களுக்கு அமைவது நிதர்சனமான உண்மை.