Category: சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

  • சுவாமிமலை கோயிலில் நவம்பர் 5ஆம் தேதி சூரசம்ஹாரம்

    ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயிலில் அக்டோபர் 30 ஆம் தேதி சஷ்டி விழா தொடங்கவுள்ளது.

    அக். 30 ஆம் தேதி மாலை 7 மணியளவில் பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    அக்டோபர் 31-ம் தேதி காலை 9 மணியளவில் சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்திற்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

    அன்று முதல் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நவம்பர் 5-ம் தேதி காலை 8 மணிக்கு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலாவும், 10.30 மணிக்கு சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனை ஆராதனையும் நடைபெறுகிறது. அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அன்று சூரசம்ஹாரம் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தலும், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

    நவ. 6-ம் தேதி காலை சண்முகசுவாமி புறப்பாடு நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இரவு 7 மணியளவில் தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நவ. 7,8 தேதிகளில் இரவு 8 மணிக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெறுகிறது. நவ. 9-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு திருவீதியுலாவும், 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சண்முக சுவாமி யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • சபரி மலை தரிசனத்திற்கு இலவச முன்பதிவு செய்ய….

    மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன்களில் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். சில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். அப்போது பக்தர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் நெரிசல் மூலம் விபத்துகளும் ஏற்படுவது உண்டு. இந்த சமயங்களில் பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் வெகு தொலைவிலிருந்து சபரிமலை வரும் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைகின்றனர். இதை தவிர்ப்பதற்காக கேரள காவல் துறையின் சார்பில் கடந்த 2011ம் ஆண்டு முதல் தரிசனத்திற்கு இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இந்த திட்டத்திற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் மட்டும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த வருடமும் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் கூப்பனை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். தரிசனத்திற்கு செல்லும்போது அந்த கூப்பனை பம்பையிலுள்ள போலீஸ் தகவல் மையத்தில் காண்பித்து டோக்கன் பெறவேண்டும். இந்த டோக்கனை காண்பித்து சன்னிதானத்தில் தனி வரிசையில் நின்று எளிதில் தரிசனம் செய்யலாம்.

  • கோயில்களில் தேங்காய் உடைக்கும் வழக்கம் வந்தது ஏன்?

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.
    அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

  • ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை ….

    அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம்.
    முருகனுக்குரிய முக்கிய விரதங்களாக கருதப்படுவது, வெள்ளிக்கிழமை வார விரதம், கார்த்திகை நட்சத்திரம் விரதம் மற்றும் கந்த சஷ்டி விரதம்.
    அதில் வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.
    சஷ்டி விரதம் எப்போது தொடங்குகிறது?
    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.
    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் ஒப்பரும் விரதம் என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.
    அத்துடன்; விரத முடிவு தினமான சூரன்போரில் முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் செய்யும் காட்சியை தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அதாவது ஆணவம், கன்மம், மாயை என்ற அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

  • அத்தனை காரியங்களும் வெற்றியில் முடிய….

    தமிழகம் முழுவதிலும் விஜயதசமி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக தொழில் தொடங்க விஜயதசமி தினம் மிகவும் உகந்த தினம் என்பதால், புதிய தொழில் தொடங்க விரும்புவோர், பூஜைகள் செய்து தொழிலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.

    விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகை.

  • சரஸ்வதி பூஜைக்கு… சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம்

    கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும். வித்தை உள்ள இடங்களிலும், கல்விச் சாலைகளிலும், இசை அரங்குகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதிதேவி வாசம் செய்கிறாள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையில், இந்த அன்னையை வேண்டி நாம் வழிபாடு செய்கிறோம்.
    சரஸ்வதிதேவியை வழிபடும் வேளைகளில் சரஸ்வதிக்கு உரிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நன்மைகள் பல மடங்காக கிடைக்கும்.

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
    பீதவர்ணாயை தீமஹி தன்னோ
    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    சரஸ்வதிதேவியை பூஜை செய்து வழிபடும்போது, அன்னையின் பல்வேறு மந்திரங்களின் கூட, மேற்கண்ட சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை நான்முகன் தேவி நமக்கு தந்தருள்வாள். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், கல்வியில் சிறந்து விளங்கலாம். வித்தைகள் வளரும். தொழில் சிறக்கும். லாபம் உண்டாகும். உயர் பதவிகள் தேடி வரும். வாக்கு வன்மை சிறக்கும். ஞானம் கிட்டும்.

  • சகல காரிய விருத்திக்கு விஜயதசமி….

    நவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது.
    சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள். இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நாள். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும்.

    இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.

  • தடைகள் நீங்கி நலங்கள் பெருக ‘ஆயுத பூஜை’

    நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன.
    இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

  • சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு குலுக்கல்….

    சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு வரும் 17-ம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.
    கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்காக கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 15 பேரும், மாளிகைபுரத்தமன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 11 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். வரும் 17-ம் தேதி காலை இத்தேர்வு நடைபெற உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கண்டரரு ராஜீவரரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதி சென்றது

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளில் அணிவிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அனுப்புவது வழக்கம்.
    இதற்காக ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் தக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் தலையில் பட்டர்கள் ஏற்றி வைத்தனர். அதைத் தொடர்ந்து அவை, மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தனி காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.