Category: சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

  • திருப்பதி குடைகள் ஊர்வலம் புறப்பட்டது.

    சென்னையில் இருந்து திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. திருமலை- திருப்பதிக்கு 150 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் இருந்து ஊர்வலமாக திருக்குடைகள் எடுத்துச் செல்லப்பட்டு பிரமோற்சவ கருட சேவையின் போது சமர்ப்பிக்கப்படும்.

    திருப்பதி கருட சேவையை முன்னிட்டு தமிழக பக்தர்கள் சார்பில் இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
    இதை முன்னிட்டு பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.
    ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் சுவாமி விமுர்த்தானந்தா ஆசியுரை வழங்கி குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி மற்றும் அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என பக்தி கோ‌ஷம் முழங்க, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் யானைகவுனியை தாண்டியது.
    தொடர்ந்து நடராஜா தியேட்டர, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் தாக்கர்சத்திரம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தங்குகிறது.
    ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குகிறது. அக்டோபர் 3-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    4-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப்பெருமாள் கோவில், திருவள்ளூர் சென்றடைந்து இரவு தங்குகிறது.

    5-ந்தேதி மணவாளநகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைந்து 6-ந்தேதி திருமலை செல்கிறது. அங்கு மாட வீதிகளில் வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

  • ஐயப்ப பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவு…..

    சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய 50 ஆண்டுகளாக வரும் பக்தர்களை கவுரவிக்க தேவசம் போர்டு முடிவுசெய்துள்ளது. 50 ஆண்டுகளாக சபரிமலை வருவோர் தங்களை பற்றிய விவரங்களை தேவசம் போர்டுக்கு பதிவு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக் மண்டல பூஜையின் போது தேவசம் போர்டு சார்பில் பொன்னாடை போர்த்தி சபரிமலை ஐயப்பன் உருவச்சிலை வழங்கி கவுரவிக்கப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் பிராயர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு புதிய அஷ்டபந்தனம்….

    சபரிமலை ஐயப்பன் விக்ரகத்துக்கு அக்டோபர் மாதம் 22, 23-ந்தேதிகளில் புதிதாக அஷ்டபந்தனம் சாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு இன்னும் 50 நாட்களே உள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
    ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.
    சமீபத்தில் சபரிமலை கோவிலை புனரமைப்பதற்காக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது சபரிமலை, மாளிகைபுரத்து அம்மன் கோவில்களில் சில பணிகளை செய்ய ஐயப்பனின் உத்தரவு கிடைத்தது.
    சுவாமி ஐயப்பன் விக்ரகம், மாளிகைபுரத்து அம்மன் விக்ரகம் ஆகியவற்றின் பீடத்தில் சாத்தப்பட்டுள்ள அஷ்ட பந்தனம் மூலிகையை மாற்றி புதியதாக அஷ்ட பந்தனம் சாத்த உத்தரவு கிடைத்தது.
    இதை தொடர்ந்து புதிய அஷ்ட பந்தனம் சாத்தும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 22, 23-ந்தேதிகளில் சபரிமலையிலும், மாளிகைபுரத்திலும் நடைபெற உள்ளது.

  • திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் ….

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம்.
    இந்தத் தூய்மைப்பணி வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, உகாதி ஆஸ்தானம், ஆனிவார ஆஸ்தானம் ஆகிய தினங்களை முன்னிட்டு விழா தொடங்கும், முதல் வார செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந்தநிலையில் அக்டோபர் 3–ந்தேதியில் இருந்து 11–ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.

    முன்னதாக அதிகாலை கோவிலில் பூஜைகள் முடிந்ததும், மூலவர் ஏழுமலையான் மற்றும் போக சீனிவாசமூர்த்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்தி விக்ரகங்களை அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரத்தால் போர்த்தினர்.

    அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் வைதீக பூஜைகள், காரிய கர்மங்கள், சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி கண்பிக்கப்பட்டது.

  • திருமலையில் விரைவு தரிசன சேவை ரத்து…..

    திருமலையில், அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
    திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது, அக்டோபர் 7 ஆம் தேதி இரவு, கருடசேவை நடக்க உள்ளது. கருடசேவை உற்சவத்தை காண திருமலைக்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வரை வருவர். அதனால், அக்மடோபர் 7 மற்றும் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான, அக்டோபர் 8 என, இரு நாட்களிலும், 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    மேலும், பிரம்மோற்சவ நாட்களில், குறைந்த அளவே, விரைவு தரிசன டிக்கெட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

  • திருவண்ணாமலையில் நவராத்திரி விழா

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
    அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில், நவராத்திரி விழா தனிச்சிறப்புமிக்கது. அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 1ம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளான 1ம் தேதி இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அதைத்தொடர்ந்து, திருவீதியுலா நடைபெறும்.

    விழாவின் 2ம் நாளன்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3ம் நாளன்று கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4ம் நாளன்று மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாள் ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும், 6ம் நாள் ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம் நாள் சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம் நாள் லிங்கபூஜை அலங்காரத்திலும் 9ம் நாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை, உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 10ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடைபெறும். அதே போல், பிரசித்தி பெற்ற துர்கையம்மன் கோயில், பச்சையம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

  • கொலு வைக்க ரெடியா….

    பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்… அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு…
    இந்த அளவு முக்கியத்துவம் உள்ள கொலுத் திருவிழா, கொலு எப்படி வைக்க வேண்டும்… எப்படியெல்லாம் அலங்காரம் செய்தால் அழகாக இருக்கும்?

    கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம்.
    இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.
    ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.
    புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.
    கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.
    அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.

  • ஸ்ரீசைலம் கோயிலில் தரிசன டிக்கெட் உயர்வு….

    ஸ்ரீசைலத்திலுள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது, ஆந்திரத்திலுள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
    அவர்களுக்காக, காலை முதல் இரவு வரை பல வகையான தரிசன சேவைகளை கோயில் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டணத்தை திடீரென உயர்த்தி கோயில் நிர்வாகம் உத்தவிட்டுள்ளது.
    இனி, வரும் காலங்களில் ஸ்பரிச தரிசனம் காலை 6.30 முதல் 10.30 மணி வரையும், மீண்டும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய நேரங்களில் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும், மற்ற பக்தர்களுடன் சேர்ந்து அலங்கார தரிசனத்தில் மட்டும் சிவனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தரிசன டிக்கெட்டின் கட்டணம் குறைவாக இருப்பதால், கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகம் உள்ளதாகவும், கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்தவும், கோயிலின் மற்ற செலவுகளை சமாளிக்கவும் தரிசன டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. விரைவில், ரூ. 10 ஆயிரத்தில் புதிய தரிசன சேவையை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • திருநின்றவூர் பக்தவச்சல பெருமாளை தரிசிக்கலாம் வாங்க….

    “சீரறிந்து தோழிமீர்! சென்று கொணர்ந்தெனக்குப்
    போரமுலை முகட்டிற் பூட்டுமினோ- தேரவுணர்
    பொன்றவூர்புட் கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
    நின்றவூர் நித்திலத்தை நீர்.’
    108 திவ்விய தேசங்களில் 58-ஆவது திருத்தலமாக விளங்குகிறது திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில்.
    பகவத் ஸ்ரீராமானுஜர் வடமொழியில் மங்களா சாசனம் செய்திருப்பது இந்த கோயிலுக்கு கூடுதல் சிறப்பு.
    திருமங்கையாழ்வார் திருவள்ளூருக்கு வந்து சிலநாள் தங்கியிருந்து, திரு எவ்வுள் கிடந்தான்மீது “பலச்சுருதி’ யுடன் பதினோரு பாசுரங்கள் பாடி னார். பிறகு தென்கிழக்காய் பத்து கல் தொலைவிலுள்ள திருநின்றவூருக்குச் சென்றார்.
    ஆழ்வார் அங்கு வந்தபோது இரவு நேரமானதால், திருக்கோவில் நடையடைக் கப்பட்டு பெருமாள் ஏகாந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எனவே ஆழ்வார் பயணத்தைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்து சேர்ந்தார்.
    திருமங்கையாழ்வார் திருநின்றவூரில் சேவை சாதிக்கும் திருமகளையும் பக்தவத்சலப் பெருமாளையும் சேவிக்காமல்- பாசுரங்கள் செய்யாமல் போனது திருமகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.
    அவள் பெருமாளை உசுப்பி, கடல்மல்லைக்குச் சென்று திருமங்கையாழ்வாரிடம் தங்களுக்கான பாசுரங்களைப் பெற்றுவருமாறு சொல்ல, பிராட்டியின் சொல்தட்ட முடியாத பெருமாள், கடல்மல்லைக்குச் சென்றார். அப்போது, திருமங்கையாழ் வார் தலச்சயனப் பெருமாள் சந்நிதியில் நின்று சேவித்துக் கொண்டிருந்தார். தான் வந்திருப்பதை ஆழ்வாருக்கு குறிப்பால் உணர்த்திய திருநின்றவூர் பெருமாள், தான் வந்த நோக்கத்தை சூசகமாகத் தெரிவித்தார்.
    பெருமாள் வருகையைப் புரிந்துகொண்ட ஆழ்வார் பூரித்துப் போனார். மாமல்ல புரத்திலிருந்து கொண்டே, திருநின்றவூர் பெருமாள்மீது பாசுரம் செய்தார்.

    பாசுரத்துடன் திரும்பிவந்த திருமாலிடம் தாயார், “”எல்லா திவ்விய தேசங்களுக்கும் ஆழ்வார் பத்திற்கு மேற்பட்ட பாசுரங்கள் பாடியவர். நமக்கு மட்டும் ஏன் ஒரு பாசுரத்து டன் நிறுத்திக்கொண்டார்?” என்று கேட்டு, மேலும் பாசுரங்களைப் பெற்று வருமாறு எம்பெருமாளை அனுப்பி வைத்தாள்.

    அதற்குள் திருமங்கையாழ்வார் பல திவ்விய தேசங்களைப் பாடியும், சேவித்துக்கொண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கண்ண மங்கைக்கு வந்துசேர்ந்தார்.

    இங்கே ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், திருக்கண்ணமங்கை பெருமாளின் திருநாமமும் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள்தான். திருநின்றவூர் பெருமாள் திருக்கண்ணமங்கை பெருமாளின் சந்நிதியில் நின்றிருந்த திருமங்கை ஆழ்வாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தோடு, நோக்கத்தையும் உணர்த்தினார். பரவசத்தால் நெகிழ்ந்துபோன மங்கை மன்னன், கீழ்வரும் பாசுரத்தை அருளிச் செய்தார்.
    இருப்பினும் இந்த கோயிலுக்கு தல வரலாற்றிலோ அல்லது புராணங்களிலோ கட்டியவர்களைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
    ஆனாலும் சரித்திரப் பின்னணியும் இத்திருக் கோவிலுக்கு உண்டு. இரண்டு பாசுரங்களைப் பாடிய திருமங்கை ஆழ்வார் 8-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தவர் என்பதும்; கி.பி. 690-728 வரை- அதாவது 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில் இத்திருக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம்.

  • சபரிமலையில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை பணிகள் துவங்கின…

    சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது.
    சபரிமலை ஐயப்பன் கோயில் முன் கொடிமரம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கொடிமரம் வலுவிழந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தினால் ஆன புதிய கொடிமரம் அமைக்க ரான்னி வனப்பகுதியிலிருந்து ஒரு தேக்கு மரம் வெட்டி பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.
    மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும்.

    2017ஆம் வருடம் ஜூன் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.50க்கும் மதியம் 1.40க்கும் இடையே உள்ள நேரத்தில் புதிய தங்க கொடிமரம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.