Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • 12 ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

     

    ஜாதக ரீதியாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள் மூலம் நிவர்த்திகள் செய்துக்கொள்ளலாம். ஆனால் எந்த ராசிகாரர்கள்  எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம். இந்தப் பதிவின் மூலம் அந்தந்த ராசிகளுக்கான தெய்வங்களும், அவர்களுக்கான சுலோகங்களையும் பார்ப்போம்.

    ‪‎மேஷம் :

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகனுக்கான  சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூற துன்பங்கள் நீங்கும்

     

    ஷண்முகம் பார்வதீ புத்ரம்

    க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்

    தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்

    வந்தே ஸிவாத் மஜம்

     

    ரிஷபம் :

     ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்தும் கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

     

    ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை

    ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

     

    மிதுனம் :

     மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

     

    ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

     

    கடகம் :

    கடக ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு  பவுர்ணமிக்கும்  அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

     

    ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

     

    சிம்மம் :

     

     சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

     

    ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

     

    கன்னி :

     

    கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

    ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

    ‪‎

    துலாம் :

     

    துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

    ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

     

    விருச்சிகம் :

     

    விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

    தரணி கர்ப்ப ஸம்பூதம்

    வித்யுத் காந்தி ஸமப்ரதம்

    குமாரம் சக்தி ஹஸ்தம்ச

    மங்களம் ப்ரணமாம்யஹம்.

     

    தனுசு :

     

    தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

    ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

     

    மகரம் :

     

    மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

     

    கும்பம் : 

    கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

     

    மீனம் :

    மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

    ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

     

    நம்முடைய ராசிக்குரிய சுலோகங்களை, தினமும் பாராயணம் செய்து நம்முடைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவோம்.

     

  • கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி!

     

    கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு. ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்; நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும். வேண்டியது வேண்டியபடி நிறைவேறும்.
    நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு, நாம் இருக்கும்- புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே… தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.

    அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும். வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும். ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும். வேப்ப மரத்தடி விநாயகரை வழி படுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும். ஆலயங்களின் கோஷ்டத்தில் அமர்ந்திருக்கும் விநாயக ரூபத்தை வழிபட்டால், சகல தெய்வங்களின் திருவருளும் ஒருங்கே கிடைக் கும் என்கின்றன புராணங்கள். இந்த வரிசையில், ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், ‘ருணம்’ எனும் கடன் தீரும்!
    யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?!
    சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

    சக்தி மேகல்வாசம் சகல கல்யாண மூர்த்திம்
    அங்குச பாச ஹஸ்தம் கிரீட மகுட தாத்ரீம்
    அஷ்ட லக்ஷ்மீ சகிதம் தோரண கோபுர நேத்ரம்
    ருணமோசன கணேசம் நௌமி ஸதா ப்ரசன்னம்!
    மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

    தோரண கணபதியை வழிபடும்முறை:
    மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
    செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம். இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்… குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். 

    ஸ்ரீதோரண கணபதி மந்திரம்:
    ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

     

    அத்துடன் கணபதியின் மேகலை – பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.

  • திருமண தடை நீக்கும் 10 டிப்ஸ்…

    1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.
    2. ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
    3. சென்னை – திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது.
      பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.
    4. வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.
    5. காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமைமற்றும்பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.
    6. தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.
    7. திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    8. வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.
    9. புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
    10. ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.

  • ஆடிபெருக்கு விழாவின் சிலமுக்கியத்துவங்கள்;

    பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று சுமங்கலிபூஜை நடத்துவர்.

    திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டியும், சுமங்கலி பெண்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற வேண்டியும், ஆடிப் பெருக்கன்று ஆற்றங்கரைக்கு சென்று கங்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு செய்து சுமங்கலிபூஜை நடத்துவர். இந்த மங்கல திருவிழா வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

     

    தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சிறப்பித்து கூறுவர்.

    ஆடிச்செவ்வாய் தேடிக்குளி’ என்பது பழமொழி. பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தால் திருமண யோகம் கூடிவரும்.

    இவை தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்ற பல முக்கிய விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடி மாதத்தின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடப்படுகிறது.

    “ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவிரி
    வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
    எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக”

    என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

     

    ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி, காவிரிப்பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலகரமான விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் அன்று அதிகாலையிலேயே காவிரி ஆற்றங்கரைக்கு வந்து, நீராடி காவிரியை வணங்கி சுமங்கலி பூஜையும் நடத்துகின்றனர்.

     

    பெண்கள் குளித்து முடித்துவிட்டு ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்கின்றனர். ஒரு இடத்தில் வாழை இலையை போட்டு அதில் பிள்ளையார்சிலை வைத்து அதன்முன் அகல் விளக்கு ஏற்றுகின்றனர். மங்கல பொருட்களான புதுமஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், புதுத்துணி, பனைஓலையில் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, படையல் அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வைத்து காவிரி அன்னையை வழிபட்டு பூஜைசெய்வர். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார்கள். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கருகமணி, காப்பரிசி வைத்து வணங்கி சிறப்பு பூஜை செய்து கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்வார்கள்.

     

    ஈரோடு பவானி கூடுதுறை, திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். செல்வ செழிப்பை தரும் வரலட்சுமி விரதம்:வரலட்சுமி விரதம் ஆடிமாதம் சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமையில் வரும். இந்த ஆண்டு வருகிற (வெள்ளிக்கிழமை) வருகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என பெயர் பெற்றது.
    திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்யவேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்ம நோய்கள் நீங்கும், திருமணத்தடை அகலும்.

  • ராகு கேது பெயர்ச்சி; கோவில்களில் பக்தர்கள் பரிகாரம்

    தஞ்சாவூர்: ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருபாம்புரம் ஆகிய பரிகார தலங்களில் பக்தர்கள் தங்களின் ராசி நட்சத்திரத்தைக் கூறி பரிகாரம் செய்தனர். இன்று வியாழக் கிழமை ஜூலை 27,2017 ல் வாக்கியப் பஞ்சாங்கப்படி சுக்லபட்சம் பஞ்சமி திதி, உத்திரம் நட்சத்திரம், சனி ஹோரையில், பகல் 12.39 மணிக்கு சிம்மம் ராசியில் இருந்து கடக ராசியில் ராகு பகவான் இடப்பெயர்ச்சியாகிறார்.

    கும்பராசியில் இருந்து மகர ராசிக்கு கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், ராகு பகவான் மங்கள ராகுவாக எழுந்தருளி, தோஷங்களை நீக்கி, அருள்பாலிக்கிறார்.ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, ராகு பகவானுக்கு, 21 முதல் 24ம் தேதி வரை, முதல் கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை, இரண்டாம் கட்ட லட்சார்ச்சனையும் நடக்கிறது.

     

    திருநாகேஸ்வரம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த நாகநாதர் கோயில் இங்கு உள்ளது. இங்கு தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அமர்ந்துள்ளார். பரிகாரம் அர்ச்சனை திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் பித்ரு தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். நாகநாதர் கோவிலில், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    கீழப்பெரும்பள்ளம் நாகை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில், சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. கேது தலமான இக்கோவிலில், கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இது 1900 ஆண்டு பழமையான கோயிலாகும். கேது பகவானை வழிபட்டால் குழந்தைப்பேறு, திருமணத் தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ரு தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கும்.

    மகரராசியில் கேது கேது பகவான், கும்ப ராசியில் இருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு நேற்று மாலை விநாயகர் பூஜையுடன் கேது பெயர்ச்சி வழிபாடு தொடங்கியது. முதல் கால யாக பூஜை, மகாபூர்ணாஹூதி நடக்கிறது.

    சிறப்பு அபிஷேகம் இன்று காலை 2ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு கேது பகவானுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சரியாக 12.48 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. திருபாம்புரம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோவில் ராகு, கேது ஸ்தலமாகும் கருவறையில் பாம்புடன் கூடிய லிங்க வடிவாய் இறைவன் எழுந்தருள்கிறார். ஏக சரீரமாகி, ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும், கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. இங்கு நடைபெற்ற லட்சார்ச்சணையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  • நிலம், வீடு, தோப்பு என வசதிகள் பெருக ஆறுமுக பெருமாளின் தயவு வேண்டும்.

     

    நம்மையும்,இந்தப் பிரபஞ்சத்தையும் ஆள்வது நவக்கோள்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஜாதக ரீதியாக கிரக தோஷம் உள்ளவர்கள் அந்த தாக்கத்தில் இருந்து தப்பிக்க பல விரதங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள் கடைபிடிப்பது வழக்கம்.  இதை முறையாக செய்வதன் மூலம் பிரச்னைகளின் தாக்கம் குறைவதுடன் உடலும், உள்ளமும்  இறைவன் மீது செலுத்த வாழ்வில் அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. அவரவர் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷ நிவர்த்திக்கு நவக்கிரக வழிபாடு மிகவும் அவசியமானது.

     நவ கோள்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக ஆற்றலிலும்,பராக்கிரமத்திலும் , மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகம் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

     ஒரு சமயம், சிவபெருமான் தனியாக யோகத்தில் அமர்ந்திருந்த நேரம், அவரது நெற்றிக் கண்ணில் இருந்து, ஒரு நீர்த்துளி பூமியில் விழ,  அதில் இருந்து மங்களன், ஒரு குழந்தை வடிவாகத் தோன்றினார். பூமாதேவியால் எடுத்து வளர்க்கப்பட்ட மங்களன், சிவபெருமானை நோக்கிக் செய்த கடும் தவத்தின் காரணமாக, நவகிரகங்களில் ஒருவராக  இருந்து அங்காரகன் என்னும் பெயரையும் பெற்றார்.

     நெருப்புக்கு அதிபதியாக விளங்கும் இவர், வீர தீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல்,ஆளுமைத் திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை,உயர் பதவி, தலைமை பொறுப்பு போன்ற இத்தனையையும்  ஒருவருக்கு அள்ளித் தரக்கூடிய வல்லமை பெற்றவர். 

     ஒருவருக்கு,தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர் அங்காரகன். நம் உடலில் ரத்தத்துக்கு காரகமாக செவ்வாய் இருப்பதால், ஒருவருக்கு செவ்வாய் பலம் குறையும் போது, உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற அமைப்பும் உள்ளதால் ,இவரது பார்வை பட்டால் தான்  நிலம், வீடு, தோப்பு துரவு போன்ற அசையா சொத்துக்களை வாங்க முடியும்.

    செவ்வாய்க்குரிய கடவுள் ஆறுமுகப்பெருமாள்.ஆதலால்  முருகன் குடிகொண்டுள்ள எல்லா ஸ்தலங்களுக்கும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். ஒருவருக்கு செவ்வாய் கிரகத்தால் தோஷம் இருப்பின் அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப் பெருமானை வணங்குவதால், நிவர்த்தி ஆகும். இதில் பழநியில் கோவில் கொண்டுள்ள தண்டாயுதபாணி சாட்சாத் செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலும், செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலங்களில் முக்கியமானதாக விளங்குகிறது.

     தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், மற்றும் முருகன் துதி பாடல்களை மனமுருகப் பாடுவதன் மூலம் ,முருகன் மற்றும் செவ்வாய் எனப்படும் அங்காரகனின்  அருளை பெற முடியும். மேலும் புத்திர யோகமும் பூமி பாக்யம் உள்ளிட்ட சகல யோகங்களும் நம்மை தேடி வரும்.

    ஓம் முருகா ! ஓம் முருகா!! ஓம் முருகா !!!

     

  • தினந்தோறும் திருமணம் செய்த பெருமாள்..

    வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப் பார் என்பார்கள். இந்த இரண்டு விஷயங்களும் அவ்வளவு கடினமான வேலைகள் என்பதுதான் இதற்கு அர்த்தம். வாழ்க்கையில் ஒரு கல்யாணம் நடத்தவே நாமெல்லாம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும்போது, தினம் தினம் ஒருவர் திருமணம் செய்து கொண்டே இருந்தார் என்று கேள்விப்பட்டால் எப்படி இருக்கும்? அவரை நேரில் பார்த்து எப்படிப்பா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது என்று கேட்கத் தோன்றும் இல்லையா? அப்படி தோன்றினால் நீங்கள் நேரில் சென்று அவரிடம் கேட்கலாம். அவர் நம்ம சென்னைக்கு அருகில் தான் இருக்கிறார். அவர் தான் திருவிடந்தையில் வீற்றிருக்கும் நித்ய கல்யாணப் பெருமாள்.

    சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் கடற்கரைச் சாலையை ஒட்டியே இருக்கிறது திருவிடந்தை. இங்குள்ள அற்புதமான பெருமாள் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்யாண வரம் தரும் தலமாகப் போற்றப்படுகிறது, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் ஆலயம்.

    அசுர வம்சத்தில் பிறந்த பலி என்ற மன்னன் மிகுந்த நீதிமான். சிறப்பான முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். ஆனாலும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்குவதற்காகவும் தோஷம் களைவதற்காகவும் இத்தலத்துக்கு வந்து, வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.

    அதேபோல, இங்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பெருமாளே பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தி எனும் விகிதத்தில் திருமணம் புரிந்து அருளினாராம்! கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கத் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இந்த உலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளினார் எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். 

    இப்படி தினம் ஒரு திருமணம் என பெருமாள் நிகழ்த்திய திருத்தலம் என்பதால் பெருமாளுக்கு (உற்ஸவர்) நித்ய கல்யாணப் பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு ஸ்ரீஅகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் அமைந்தது. 

    திருமணத் தடையால் வருந்துவோர், இந்தத் தலத்துக்கு வந்து கல்யாண தீர்த்தத்தில் குளித்துவிட்டு, தேங்காய், பழம், கஸ்தூரி மாலைகள் இரண்டு மற்றும் வெற்றிலைப் பாக்குடன் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 
    பின்னர், சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு பிராகாரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். அதையடுத்து, கொடிமரம் அருகில் வடக்கு நோக்கி நமஸ்கரித்துவிட்டு, மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைக்க வேண்டும். 

    பிறகு, திருமாலின் திருவருளால், விரைவில் திருமண கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடுகின்றார்கள் பக்தர்கள். 

    பெருமாளுக்கு உரிய நாளில், வணங்குவது இன்னும் சிறப்பு சேர்க்கும் என்பதால் சனிக்கிழமைகளில், ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாளை தரிசித்து, வேண்டிக் கொள்கின்றனர்.     

  • நவ கிரகங்களுக்கான காயத்ரி மந்திரம்

     

    இந்த பிரபஞ்சம் நவ கோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக  நம்பப்படுகிறது . நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின்  ஆதிக்கமும் முக்கிய காரணிகளாக  நம் முன்னோர் கருதுகின்றனர் . அதனால் தான் அவரவர் ஜாதகத்தில்  ஏற்படக்கூடிய  பலாபலன்களுக்கு ஏற்ப நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கு  சென்று வழிப்பட  அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

    ஆதித்யன் (சூரியன்)

     

    (கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

     

     ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    பாசஹஸ்தாய தீமஹி

    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

     

     சந்திரன்

     

    (ஞானம் வளர)

     

     ஓம் பத்மத்வஜாய வித்மஹே

    ஹேமரூபாய தீமஹி

    தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

     

     

    அங்காரகன்

     

    (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

     

     ஓம் வீரத்வஜாய வித்மஹே

    விக்ன ஹஸ்தாய தீமஹி

    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

     

     புதன்

     

    (படிப்பும், அறிவும் பெற)

     

     ஓம் கஜத்வஜாய வித்மஹே

    சுகஹஸ்தாய தீமஹி

    தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

     

     குரு

     

    (நல்ல மனைவி அமைய)

     

     ஓம் குருதேவாய வித்மஹே

    பரப்ரஹ்மாய தீமஹி

    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

     

    சுக்கிரன்

     

    (தடைபட்ட திருமணம் நடக்க)

     

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

    தனு ஹஸ்தாய தீமஹி

    தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

     

     சனி பகவான்

     

    (வீடு, மனை வாங்க)

     

     ஓம் காகத்வஜாய வித்மஹே

    கட்கஹஸ்தாய தீமஹி

    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

     

     ராகு

     

    (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

     

     ஓம் நகத்வஜாய வித்மஹே

    பத்மஹஸ்தாய தீமஹி

    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

     

    கேது

     

    (துஷ்ட சக்திகளை விரட்டிட)

     

    ஓம் அம்வத்வஜாய வித்மஹே

    சூலஹஸ்தாய தீமஹி

    தன்னோ கேது ப்ரசோதயாத்

     

    நமக்கு வரும் வினைகளை முற்றிலும்  தவிர்க்க இயலாத போதிலும் , அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும்  . நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜபிப்பதினால் நற் பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு .

  • மந்திரங்களின் தாயான காயத்ரி

     

    மந்திரங்களின் தாயான காயத்ரி

     

    மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா கூறியிருப்பதன் மூலம் நம்மால் காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்துகொள்ள முடிகிறது . மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்குவது காயத்ரி மந்திரம் . மகரிஷி விசுவாமித்திரரால் மக்களுக்கு சொல்லப்பட்டது தான் மகிமை வாய்ந்த இந்த காயத்ரி மந்திரம் .

     

    காயத்ரி மந்திரம்:

     

    ஓம் பூர் புவஸ்ஸூவ

    தத் சவிதுர்வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    தியோ யோ ந: ப்ரசோதயாத்|

     

    காயத்ரி மந்திரத்தின் விளக்கம்:

     

    பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

     

    24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரதை  தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும் என்றும் ஜபிப்பவர்களுக்கு அளவற்ற சக்தியையும்  , வைராக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை .

     

     சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்களால் போற்றப்படும் காயத்ரி மந்திரம் ,காலையில்  காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டிலும்  காயத்ரிக்குத் தான் முதல் இடம்.

     

    ஒரு முறை பிரம்மா புஷ்கரம் என்ற புண்ணிய சேக்திரத்தில் ஒரு யாகத்தை தொடங்கினார் . அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி வராததால் , பிரம்மா தனத்து சக்தியின் பயனால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.காயத்ரி தேவியை நாமகளின் அம்சமாக கொண்டு நான்முகன் தனத்து யாகத்தை நிறைவு செய்தார்  என்கிறது புராணம் .  செந்தாமரையில் எழுந்தருளிய அன்னை ஐந்து திருமுகங்களும் பத்து கரங்களும் கொண்டு அழகே உருவாக திகழ்கிறாள் .

     

    சில முக்கிய காயத்ரி மந்திரங்கள்

     

    காயத்ரி தேவி மந்திரம்

     

     

    ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ கணபதி

     

    ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி

    தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ விஷ்ணு

     

     

    ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி

    தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ சிவா

     

     

    ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி

    தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ பிரம்மா

     

     

    ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய

    தீமஹி

    தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ லட்சுமி

     

     

    ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி

    தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்

     

     

    ஸ்ரீ சரஸ்வதி

     

     

    ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி

    தந்நோ வாணி ப்ரயோதயாத்.

     

    ஸ்ரீராமர்

     

    ஓம் தாசரதாய விதமஹே

    சீதா வல்லபாய தீமஹி

    தந்நோ ராமஹ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீசீதா

     

    ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே

    பூமிஜாயை ச தீமஹி

    தன்னோ சீதா ப்ரசோதயாத்

     

     

     ஸ்ரீ ஆதிசேஷன்

    (நாக தோஷம் நீங்கிட ஜபிக்கவும்)

     

    ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே

    விஷ்ணு தல்பாய தீமஹி

    தந்நோ நாக ப்ரசோதயாத்

     

     

    ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு

    (கல்வி வளர)

     

    ஓம் வாகீச்வராய வித்மஹே

    ஹயக்ரீவாய தீமஹி

    தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீகருடன்

    (சர்ப்ப தோஷம் நீங்கிட)

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    ஸீவர்ண பட்சாய தீமஹி

    தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீசரபேஸ்வரர்

    (செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க )

    ஓம் ஸாலுவே சாய வித்மஹே

    பட்சி ராஜாய தீமஹி

    தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

     

     

    ஸ்ரீஅன்னபூரணி

    ( என்றும் உணவு கிடைக்க)

     

    ஓம் பகவத்யை வித்மஹே

    மாஹேச்வர்யை தீமஹி

    தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

     

    குபேரன்

    (செல்வம் பெருக )

     

    ஓம் யட்சராஜாய வித்மஹே

    வைச்ரவணாய தீமஹி

    தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

     

    அனுமான்

     (புத்தி, பலம், தைரியம் பெருக)

     

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

    வாயுபுத்ராய தீமஹி

    தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

     

    நந்தீஸ்வரர்

    (சிவபெருமான் அருள் கிடைக்க)

     

     

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    சக்ரதுண்டாய தீமஹி

    தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்

     

    தன்வந்திரி

     

    (சகல நோய்களும் குணமடைய)

    ஓம் தன்வந்தராய வித்மஹே

    அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி

    தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

                                                            

    எமன்

     

    (துர் மரணம் நிகழாமல் இருக்க)

     

     

    ஓம் வைவஸ்வதாய வித்மஹே

    தண்டஹ்ஸ்தாய தீமஹி

    தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

     

    காயத்ரி என்றால் தன்னை ஸ்மரிப்பவர்களை காப்பாற்றுபவள்  என்று பொருள். காயத்ரி மந்திரம் ஜபித்தால் எடுத்த இந்த பிறவியில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அனுதினமும் நமது இஷ்ட தெய்வதிற்கான  காயத்ரி மந்திரத்தை தூய மனதோடு ஜபித்து சகல சம்பத்துக்களையும் அடைவோம் .

  • குலதெய்வ பூஜை அவசியம் என்ன?

    குலதெய்வ பூஜை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அல்லது பங்காளிகள் ஒன்று கூடி நடத்துவது ஆகும்.  இது குடும்ப ஒற்றுமைக்கும் மிக பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த பூஜை ஒரு சில குடும்பங்களில் பகலில் நடத்துகிறார்கள் ஒரு சில குடும்பங்களில் இரவு முழுவதும் நடத்துகிறார்கள். அது அந்த குலதெய்வத்தின் வழக்கபடி அமைகிறது. இந்த பூஜையின் அவசியம் என்ன என்றால் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் குலதெய்வம்.அதனை நாம் வணங்காமல் இருக்கலாமா. நீங்கள் சோதிடர்களிடம் சென்றால் குலதெய்வத்தை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகும் என்று கூறுவார்கள். நீங்கள் என்ன என்னமோ பரிகாரம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் பரிகாரம் எடுபடாது.

    எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது. ஒரு சில இடங்களில் குலதெய்வத்தை ஒருமுறை மட்டும் தான் கும்பிடுவார்கள் அதற்கு பிறகு அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் குலதெய்வத்தை ஒரு முறை தான் கும்பிட வேண்டும் என்று இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டு கும்பிடமாட்டார்கள் அவ்வாறு ஒன்றும் கிடையாது. தாராளமாக கும்பிடலாம்.  உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் ஒரு முறை சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீங்கள் வெளியூரில் இருந்தால் மாதம் ஒரு முறை சென்று வாருங்கள் அவ்வாறு சென்று வரமுடியவில்லை என்றால் அந்த கோவிலுக்கு ஒரு குறிபிட்ட தொகை அனுப்பி அங்கு உள்ளவர்களை சாமி கும்பிட்டு பிரசாதத்தை உங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள்.  குலதெய்வ வழிபாடு உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் கும்பிடலாம் அவ்வாறு இல்லை என்றால் பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று செய்யலாம். நாம் மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம் ஆனால் குலதெய்வத்திற்க்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும்.  நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் உங்கள் வீட்டு குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு எந்த தோஷம் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள் அது அனைத்து தோஷத்தையும் போக்க கூடியது. குலதெய்வ வழிபாடு தான் முதலில் அடுத்த பரிகாரங்கள் எல்லாம் பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள்.