Category: old…

old…

  • திருநின்றவூர் பக்தவச்சல பெருமாளை தரிசிக்கலாம் வாங்க….

    “சீரறிந்து தோழிமீர்! சென்று கொணர்ந்தெனக்குப்
    போரமுலை முகட்டிற் பூட்டுமினோ- தேரவுணர்
    பொன்றவூர்புட் கழுத்திற் பொன்னை மாணிக்கத்தை
    நின்றவூர் நித்திலத்தை நீர்.’
    108 திவ்விய தேசங்களில் 58-ஆவது திருத்தலமாக விளங்குகிறது திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில்.
    பகவத் ஸ்ரீராமானுஜர் வடமொழியில் மங்களா சாசனம் செய்திருப்பது இந்த கோயிலுக்கு கூடுதல் சிறப்பு.
    திருமங்கையாழ்வார் திருவள்ளூருக்கு வந்து சிலநாள் தங்கியிருந்து, திரு எவ்வுள் கிடந்தான்மீது “பலச்சுருதி’ யுடன் பதினோரு பாசுரங்கள் பாடி னார். பிறகு தென்கிழக்காய் பத்து கல் தொலைவிலுள்ள திருநின்றவூருக்குச் சென்றார்.
    ஆழ்வார் அங்கு வந்தபோது இரவு நேரமானதால், திருக்கோவில் நடையடைக் கப்பட்டு பெருமாள் ஏகாந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். எனவே ஆழ்வார் பயணத்தைத் தொடர்ந்து மாமல்லபுரம் வந்து சேர்ந்தார்.
    திருமங்கையாழ்வார் திருநின்றவூரில் சேவை சாதிக்கும் திருமகளையும் பக்தவத்சலப் பெருமாளையும் சேவிக்காமல்- பாசுரங்கள் செய்யாமல் போனது திருமகளுக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது.
    அவள் பெருமாளை உசுப்பி, கடல்மல்லைக்குச் சென்று திருமங்கையாழ்வாரிடம் தங்களுக்கான பாசுரங்களைப் பெற்றுவருமாறு சொல்ல, பிராட்டியின் சொல்தட்ட முடியாத பெருமாள், கடல்மல்லைக்குச் சென்றார். அப்போது, திருமங்கையாழ் வார் தலச்சயனப் பெருமாள் சந்நிதியில் நின்று சேவித்துக் கொண்டிருந்தார். தான் வந்திருப்பதை ஆழ்வாருக்கு குறிப்பால் உணர்த்திய திருநின்றவூர் பெருமாள், தான் வந்த நோக்கத்தை சூசகமாகத் தெரிவித்தார்.
    பெருமாள் வருகையைப் புரிந்துகொண்ட ஆழ்வார் பூரித்துப் போனார். மாமல்ல புரத்திலிருந்து கொண்டே, திருநின்றவூர் பெருமாள்மீது பாசுரம் செய்தார்.

    பாசுரத்துடன் திரும்பிவந்த திருமாலிடம் தாயார், “”எல்லா திவ்விய தேசங்களுக்கும் ஆழ்வார் பத்திற்கு மேற்பட்ட பாசுரங்கள் பாடியவர். நமக்கு மட்டும் ஏன் ஒரு பாசுரத்து டன் நிறுத்திக்கொண்டார்?” என்று கேட்டு, மேலும் பாசுரங்களைப் பெற்று வருமாறு எம்பெருமாளை அனுப்பி வைத்தாள்.

    அதற்குள் திருமங்கையாழ்வார் பல திவ்விய தேசங்களைப் பாடியும், சேவித்துக்கொண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கண்ண மங்கைக்கு வந்துசேர்ந்தார்.

    இங்கே ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால், திருக்கண்ணமங்கை பெருமாளின் திருநாமமும் ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாள்தான். திருநின்றவூர் பெருமாள் திருக்கண்ணமங்கை பெருமாளின் சந்நிதியில் நின்றிருந்த திருமங்கை ஆழ்வாரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தோடு, நோக்கத்தையும் உணர்த்தினார். பரவசத்தால் நெகிழ்ந்துபோன மங்கை மன்னன், கீழ்வரும் பாசுரத்தை அருளிச் செய்தார்.
    இருப்பினும் இந்த கோயிலுக்கு தல வரலாற்றிலோ அல்லது புராணங்களிலோ கட்டியவர்களைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.
    ஆனாலும் சரித்திரப் பின்னணியும் இத்திருக் கோவிலுக்கு உண்டு. இரண்டு பாசுரங்களைப் பாடிய திருமங்கை ஆழ்வார் 8-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்தவர் என்பதும்; கி.பி. 690-728 வரை- அதாவது 38 ஆண்டுகள் அரசாட்சி செய்த பல்லவ மன்னன் இராஜசிம்மன் காலத்தில் இத்திருக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதையும் அறிகிறோம்.

  • சபரிமலையில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை பணிகள் துவங்கின…

    சபரிமலையில், புதிய கொடிமரம் அமைப்பதற்காக, பம்பையில் மரம் செதுக்கும் பணி துவங்கியது.
    சபரிமலை ஐயப்பன் கோயில் முன் கொடிமரம் உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த கொடிமரம் வலுவிழந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தினால் ஆன புதிய கொடிமரம் அமைக்க ரான்னி வனப்பகுதியிலிருந்து ஒரு தேக்கு மரம் வெட்டி பம்பைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த மரத்தை செதுக்குவதற்கான பணிகள் துவங்கின. மரத்தை உருட்டி செதுக்கி முடிந்த பின், பச்சிலை மருந்துகள் கலந்த எண்ணெயில் ஊற வைக்கப்படும். இதற்காக, 42 அடி நீளமும், 2 அடி அகலத்திலும் எண்ணெய் தோணி தயாராகிறது.
    மரத் தின் நீளம், 40 அடி. எண்ணெயில், 32 வகை பச்சிலை மருந்து சேர்க்கப் படும். அக்., 20-ல், தோணியில் மரம் போடப்படும்.

    2017ஆம் வருடம் ஜூன் 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.50க்கும் மதியம் 1.40க்கும் இடையே உள்ள நேரத்தில் புதிய தங்க கொடிமரம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் உயர்வு….

    கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக கோயில்களில் சேவை புரிந்துவரும் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி, அவர்களின் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த 5 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 3 ஆயிரத்தி 700 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    மேலும் நாகை எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.95 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்படும். அதன் பின்னர் கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி காணொளிக் கடசிகளுடன் காண சிறப்பு இணையதளம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோயில் சிற்பிகள், அர்ச்சகர்கள், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ. 5கோடியில் திட்டமும், மேலும் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சேவர்த்திகள் மண்டபம், பாதுகாப்பு அறை கட்டப்படும்.

    தேனி மாவட்டம் குச்சனுர் கோயிலில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபம் கட்டப்படும்.மேலும் 241 கோயில்களில் ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

  • திருப்பதி திருக்குடை ஊர்வலம் …..

    இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

    திருப்பதி திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விசுவ இந்து பரிஷத் சார்பில் திருக்குடை ஊர்வலம் ஆண்டுதோறும் சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்கு பிரமோற்சவத்தன்று சென்றடையும்.
    இதன்படி இந்தாண்டு செப்டம்பர் 26ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று 21 திருக்குடைகளுடன் ஊர்வலம் தொடங்குகிறது.
    திருக்குடை ஊர்வலம் சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை, பைராகி மடம் பெருமாள் கோயில்-வால்டாக்ஸ் சாலை வழியாக மாலை 4 மணிக்கு குடைகள் யானைக்கவுனியை கடக்கிறது. அன்று இரவு அயனாவரம் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் தங்குகிறது.
    செப்டம்பர் 27ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஏகாங்கிபுரம் துளசிவணமால ஸ்ரீ பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பூஜை முடிந்து திருக்குடை ஊர்வலம் புறப்படும். அன்றைய தினம் இரவு ஆவடி ஸ்ரீ கல்யாணராமர் கோயிலில் தங்குகிறது.
    செப்டம்பர் 28ம் தேதி காலை ஆவடி சிவா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு பூஜையுடன் திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. அன்றைய தினம் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயில் திருவள்ளூர் வீரராகவர் கோயில் சென்று இரவு புத்தூர் தர்மராஜா கோயிலில் தங்குகிறது. 29ம் தேதி காலை 7 மணிக்கு தர்மராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் அலமேலு மங்காபுரம் வழியாக திருப்பதிக்கு சென்றடைந்து பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கப்படுகிறது. 30ம் தேதி திருப்பதி கோயிலில் உற்சவம் நடைபெறுகிறது.

  • புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது எப்படி?

    புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று ஏழுமலையானை வணங்கலாம்.

    இல்லையேல் 108 திவ்ய தேசங்களில் ஏதேனும் ஒன்றில் சென்று பெருமாளை வணங்கலாம். அல்லது, வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

    மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

  • ஆன்மீக வழிபாடுகள் நிறைந்த புரட்டாசி மாதம்…

    புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறலாம்.
    இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்., மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர்.
    பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது.

  • நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?

    புரட்டாசி மாதம் என்றாலே வீடுகளில் சனிக்கிழமைகளில் பெருமாளை கும்பிடுவது தான் ஞாபகத்திற்கு வரும். பெருமாளுக்கு சிறப்பு நெற்றியில் பளிச்சென இடப்படும் நாமம். இந்த நாமக்கட்டிகள் தயாரிக்கப்படுவது எப்படி?
    நாமக்கட்டி தயாரிப்பில் புகழ் பெற்று விளங்குவது ஜடேரி கிராமம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ளது இந்த கிராமம்.. நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண், தென்பூண்டிப்பட்டு என்ற கிராமத்தில் கிடைக்கிறது. அதை வெட்டி எடுத்து வந்து உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றுகின்றனர். அதன் பிறகு, அதனை தண்ணீரில் கரைத்து, ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்த உடன், மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டி யில் ஊற்றுகின்றனர். அவ்வாறு செய்யும்போது, நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்துவிடுகிறது. அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வருகின்றனர். அதன்பிறகு மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும்போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு மூட்டை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர்.
    இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி உட்பட நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடு களுக்கும் வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

  • திருப்பதியில் நன்கொடை வழங்குபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு….

    நன்கொடை தருவோருக்கு, இரு நாட்களில், டிஜிட்டல் பாஸ்புக் வழங்கும் சேவையை, திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது.
    நன்கொடை வழங்கும் பக்தர்களிடம் இருந்து டிடி அல்லது செக் மூலம் நன்கொடை பெறவேண்டும். வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நன்கொடை பெற அதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும்.

    நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 48 மணி நேரத்தில் இ-பாஸ் புத்தகம் வழங்கவேண்டும். அவர்களுக்கு நன்கொடை பிரிவு அலுவலகத்தில் சலுகைகளை பெற வழிகாட்டவேண்டும். என கடந்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நன்கொடை தருவோருக்கு, இரு நாட்களில், டிஜிட்டல் பாஸ்புக் வழங்கும் சேவையை, திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது. திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலம், நன்கொடை வழங்குவோரின் விபரங்களை பதிவு செய்து, உடனே ரசீது வழங்கி, அவர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவையை, தேவஸ்தானம் துவக்கி உள்ளது. நன்கொடை பெறப்பட்ட, 48 மணி நேரத்திற்குள், நன்கொடையாளர்களுக்கு, ‘டிஜிட்டல் பாஸ்புக்’ வழங்கப்படும். ‘பாஸ்புக்’ பெற்ற பின், ஏழுமலையான் தரிசனம், வாடகை அறை, கூடுதல் லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை, வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம்’ என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு 700 சிறப்பு பேருந்துகள்….

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதிவரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    எனவே அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பணியாற்றி வரும் மெக்கானிக்குகள் ஆகியோரை திருப்பதி மண்டல போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு வரவழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
    தற்போது திருப்பதி-திருமலை, திருமலை-திருப்பதிக்கு மொத்தம் 500 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரம்மோற்சவ விழா நேரத்தில் திருப்பதி-திருமலை, திருமலை-திருப்பதி மற்றும் திருப்பதி, திருமலையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக 200 அரசு பஸ்கள் வீதம் மொத்தம் 700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    திருப்பதியில் சீனிவாசம், விஷ்ணு நிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், பாலாஜி, ஏழுகொண்டலு பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், அலிபிரி, லீலா மகால் ஜங்‌ஷன் ஆகிய இடங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருமலையில் ஆங்காங்கே நிறுத்தி பக்தர்களை ஏற்றிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு….

    மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறதுஓணம் பண்டிகை. சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் அத்தப்பூ கோலத்துடன் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்களுக்கு கேரளாவில் ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை பிறந்த வரலாறு:
    புராண காலத்தில் மகாபலி சக்ரவர்த்தி மலையாள தேசத்தை ஆண்டு வந்தான். அவன் பிறப்பால் அசுர குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும், தன் நாட்டு மக்களிடம் பேரன்பு காட்டினான். ஏராளமான தான, தர்மங்களை செய்தான். இதனால் மகாபலி சக்ரவர்த்தியை மக்கள் போற்றி புகழ்ந்தனர். மூவுலகையும் ஆளும் எண்ணம் மகாபலி சக்ரவர்த்தியின் மனதில் பேராசையாக எழுந்தது. தங்கள் குலகுருவான சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டான். சிவபெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும் என்று சுக்ராச்சாரியார் கூறினார். யாகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மகாபலி மேற்கொண்டான்.
    இந்நிலையில், மகாபலியின் யாகம் குறித்து கவலையடைந்த தேவர்கள், இந்திரனிடம் முறையிட்டனர்.
    இதைக் கேட்டதும், மகாபலி இந்த யாகத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டால், அசுர குலத்தை சேர்ந்த மகாபலிக்கு இந்திர பதவி கிடைத்து விடும். அதனால் மூவுலகும் பாதிக்கும் என்று இந்திரன் கலக்கமடைந்தான். உடனே, பிரம்மாவிடம் சென்று ஆலோசனை கேட்டான். இதற்கு மகாவிஷ்ணு மட்டுமே தீர்வு காண முடியும் என்று பிரம்மா கூறி, இந்திரனையும், தேவர்களையும் மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்றார். அவர்களின் மனக்குமுறல்களை கேட்ட மகாவிஷ்ணு, ‘நான் பூலோகத்தில் வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் யாகத்தை தடுத்து நிறுத்துகிறேன்’ என்றார். அதன்படியே, மகாவிஷ்ணு மூன்று அடி உயரமுள்ள வாமன அவதாரம் எடுத்து, பூலோகத்தில் மகாபலி சக்ரவர்த்தி யாகம் செய்யும் இடத்துக்கு சென்றார்.

    யாகசாலையின் வாசலில் மகாபலியிடம் ஏராளமானவர்கள் தானம் பெற்று கொண்டிருந்தனர். மூன்று அடி உயர வாமனர், ஒரு கையில் ஓலை குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தையும் ஏந்தியபடி வரிசையில் நின்றார். அவரது முறை வருவதற்கு முன்பே தானம் நிறைவுற்றது. யாகசாலை வாசலில் குடை பிடித்தபடி அந்தணர் உருவில் நின்ற வாமனரைப் பார்த்ததும் மகாபலி எழுந்து வந்தான். ‘நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டான். வாமனரும் எனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்ட மகாபலி, வாமனரின் கையில் இருந்த கமண்டல நீரை எடுத்து தானம் அளிக்க முன்வந்தான்.
    அப்போது, சுக்ராச்சாரியார் அவனை தடுத்து, ‘வந்திருப்பது மகாவிஷ்ணுவாக இருக்கும், எதையும் யோசித்து செய்’ என்று எச்சரித்தார். ஆனால், மகாபலி, ‘என் தானத்தின் அருமை அறிந்து மகாவிஷ்ணுவே தானம் பெற வந்திருக்கிறார். அவருக்கு தானம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றான். உடனே, சுக்ராச்சாரியார் கருவண்டாக உருமாறி, கமண்டல நீரின் வழியை அடைத்தார். வாமனர், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணை குத்தினார். பின்பு, வாமனரிடம் இருந்து கமண்டல நீரை எடுத்து, நிலத்தில் விட்டு மகாபலி தானமாக வழங்குவதாக கூறினான். உடனே, வாமனர் விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந் தார். ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே’ என்று மகாபலியிடம் கேட்டார். இதை பார்த்து பரவசப்பட்ட மகாபலி, மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலி சக்ரவர்த்தியை பாதாள உலகுக்கு அனுப்பினார்.
    பாதாள உலகத்துக்கு தள்ளிய மகாவிஷ்ணுவிடம், ‘கடவுளே, நான் இதுவரை என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். எனவே, வருடத்துக்கு ஒருமுறை என் நாட்டு மக்களை காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்’ என்று மகாபலி வேண்டுகோள் விடுத்தான். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்தருளினார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளையே கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.