Category: old…

old…

  • செந்தூர் முருகனுக்கு திருக்கல்யாணம்…

    திருச்செந்தூர் கோயிலில் நவம்பர் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சனிக்கிழமை மாலை கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருக்கோவில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடக்கிறது.

    தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளத்தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு சேர்கிறார். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு வந்து, தெற்குரதவீதி-மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நள்ளிரவு திருக்கோவிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

  • சூரசம்ஹாரம் இல்லாத முருகன் தலம்….

    முருகனின் அறுபடை வீடுகளுள் ஐந்தாம் வீடாக விளங்குவது திருத்தணி. இக்கோயிலின் சிறப்பம்சம் சரவணபொய்கை ஏரி. முருகன் கார்த்திகேயனாக அவதாரம் எடுத்ததும் இந்த ஏரியில்தான் என்ற வரலாறும் உண்டு.
    ஆண்டுதோறும் முருகன் தலங்களில் கந்தசஷ்டி தினத்தன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறும்.
    ஆனால், முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் செய்யவதில்லை.
    அன்றைய தினம் முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படும். அப்போது 1000 கிலோ எடையுள்ள பூக்கள் பயன்படுத்தப்படும்.
    இக்கோயிலில் சந்தனக்காப்புக்கு சாதாரண சந்தனம் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, இந்திரனே காணிக்கையாக செலுத்தியதாக கருதப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்பட்ட சந்தனத்தால்தான் இங்கு சந்தனக்காப்பு செய்யப்படும்.

  • பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ அட்டவணை

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்துக்கான அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    அதன்படி பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
    டிசம்பர் 4-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையையும், சுவரொட்டியையும் தேவஸ்தான அதிகாரிகள் திருமலையில் வெளியிட்டனர்.

    பிரம்மோற்சவ அட்டவணை:
    நவம்பர் 26 –
    காலை – கொடியேற்றம், இரவு – சின்னசேஷ வாகனம்,
    நவம்பர் 27-
    காலை பெரியசேஷ வாகனம், இரவு – அன்னப் பறவை வாகனம்
    நவம்பர் 28 –
    காலை முத்துப் பந்தல் வாகனம், இரவு – சிம்ம வாகனம்
    நவம்பர் 29 –
    காலை – கல்ப விருட்ச வாகனம், இரவு – அனுமந்த வாகனம்
    நவம்பர் 30 –
    காலை – பல்லக்கு உற்சவம், மாலை – வசந்தோற்சவம், இரவு – யானை வாகனம்,
    டிசம்பர் 1-
    காலை – சர்வபூபால வாகனம், மாலை – தங்க ரதம், இரவு – கருட வாகனம்,
    டிசம்பர் 2 –
    காலை – சூரிய பிரபை வாகனம், இரவு – சந்திர பிரபை வாகனம்
    டிசம்பர் 3 –
    காலை – ரத உற்சவம், இரவு – குதிரை வாகனம்,
    டிசம்பர் 4 –
    காலை – பஞ்சமி தீர்த்தம், மாலை – கொடியிறக்கம், இரவு – தங்கப் பல்லக்கு வாகன சேவை ஆகியவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • ஏழுமலையானை தரிசிக்க சென்னை அஞ்சலகங்களில் டிக்கெட்….

    திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன நுழைவுச்சீட்டுகள், சென்னையில் உள்ள இரு அஞ்சலகங்களில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…
    திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை சென்னை தியாகராய நகர், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி செவ்வாய்க் கிழமை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்த சேவையை வழங்குவதாகவும், இதன் படி, ரூ.300 செலுத்தி சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை இந்த இரு அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
    அஞ்சல் மூலம் நுழைவுச்சீட்டு பெற விரும்புவோர் அதற்காக 56 நாட்கள் முன்னதாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஒரு நுழைவுச்சீட்டில் அதிகபட்சம் 6 பேரை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதன்படி பயணிகள் குழுவைச் சேர்ந்தவர் களில் யாரேனும் ஒரு நபர் நேரில் வந்து, நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். புகைப்படங் களை தரவேற்றம் செய்து அவர் களுக்கு பார்கோடு பதியப்பட்ட நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
    ஒரு பக்தருக்கு 2 லட்டுகள் வழங்கப்படும். கூடுதல் லட்டு தேவைப்படுவோர், ஒரு லட்டுக்கு ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ள லாம்.
    காலை 10, 11, நண்பகல் 12, பகல் 1 மணி ஆகிய நேரங் களில் தரிசனம் செய்ய வசதியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் வலம் வருவது எப்படி?

    பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமைவிலகும்,நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றிகிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம்.
    பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.
    சிவாலயங்களை பிரதோஷ காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது
    நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.

     

  • திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
    தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
    இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தங்கதேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    முதலாம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் தினமும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    2-ம் திருநாளில் இருந்து 5-ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

    1-ம் திருநாளில் இருந்து 6-ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும்.

    6-ம் திருநாளான வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும். பின்னர் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்.

    மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.

    7-ம் திருநாளான 6-ந் தேதி கந்த சஷ்டி விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  • நவம்பர் மாதத்தில் இரண்டு சனி மஹா பிரதோஷம்

    சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன.

    ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.

    கார்த்திகை மாதம் தமிழர்களிடத்தே மிகவும் சிறப்புவாய்ந்த ஒன்றாகும். கார்த்திகையில் திங்கள்கிழமை சோமவார விரதமாக சிவாலயங்களில் கொண்டாடப்படும். இந்தமாத பவுர்ணமியில் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி செவ்வாய்க்கிழமைகள் துர்க்கை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரும் சனிப்பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என்று வழங்குவது மிகவும் சிறப்பாகும்.

    ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்.
    அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் இரண்டு பிரதான சனி மஹா பிரதோஷம் வர உள்ளது.

    அதாவது நவம்பர் 12 ஆம் தேதி (ஐப்பசி 27) துலாமாதத்தில் சுக்லபட்சத்தில் ரேவதி நட்சத்திமத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம்.
    அதேபோல நவம்பர் 26 ஆம் தேதி (கார்த்திகை 11) விருகஷிக மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் சித்திரை / ஸ்வாதி நட்சத்திரத்துடன் கூடிய சனி மஹா பிரதோஷம் ஆகும்.

    பிரதோஷ காலத்தில் எல்லா தேவர்களும் சிவாலயத்தில் கூடுவதால் பிற சன்னதிகளில் தரிசனம் கிடையாது. சிவாலய தரிசனம் எல்லா தெய்வங்களை வணங்கிய பலன் கொடுக்கும். அதுவும் சனி மஹாப்பிரதோஷங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது 140 பிரதோஷத்திற்கு சென்று வழிபட்டதற்கு சமம்.

    தென்நாடுடைய சிவனே போற்றி,

    எந்நாடவர்க்கும் இறைவா போற்றி. …. போற்றி

    ஓம் நமசிவாய!

  • இருள் நீக்கும் தீப ஒளி….

    வாழ்க்கையில் துன்பமயமான இருள் அகன்று ஒளிமயமான நல்ல எதிர்காலம் உதயமாகவேண்டும் என்பதற்கு பொருத்தமான நாளாக அமைந்துள்ளது தீபாவளித் திருநாள்.
    வரிசையாக தீபங்களை ஏற்றிக்கொண்டாடுவதே தீபாவளிப் பண்டிகையின் சிறப்பாகும். புற ஒளி ஏற்றி உள் ஒளி பெறுவதே தீபாவளியின் மகத்துவமாகும்.
    புற இருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மட்டுமன்றி பிறபொருள்களையும் மறைத்து நின்று பெரும் துன்பத்தைச் செய்யும் இதனை மனதிற்கொண்டு தீபாவளியன்று ஆலயங்களில் ஒளி விளக்கேற்றியும், இதயங்களில் ஞான விளக்கேற்றியும் அருட்பெரும் ஜோதியான ஆண்டவனை வழிபடுவதன் மூலம் ஆணவ இருள் அகலும் இருள் நிலவிய இடத்தில் இன்பம் விளையும்” என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.
    தீபாவளி நன்னாளிலே செய்யப்படுகின்ற இறைவழிபாடும் பிரார்த்தனையும் அனைவரினதும் வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என நம்பிக்கை வைப்போம்!

  • சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார்

    சபரிமலை நடை திறப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.
    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்கு செல்லும் பெருவழி பாதை உள்பட 17 சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

  • திருப்பதியில் கார்த்திகை ஹோமங்கள்….

    தெலுங்கு பஞ்சாங்கத்தின்படி, கார்த்திகை மாதம் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி, மாதம் முழுவதும் திருப்பதியிலுள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கோயிலில் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    ஹோமங்கள் சிறப்பாக நடைபெற, அக்டோபர் 31-ம் தேதி முளைவிடுதல் உற்சவம் நடைபெற உள்ளது.
    தொடர்ந்து நவம்பர் 1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை கணபதி ஹோமம் நடைபெறுகிறது.
    4, 5 தேதிகளில் சுப்பிரமணிய சுவாமி ஹோமம், 6-ம் தேதி நவகிரக ஹோமம், 7-ம் தேதி தட்சிணாமூர்த்தி ஹோமம், 8-ம் தேதி முதல் 16 ம் தேதி வரை காமாட்சி அம்மன் ஹோமம் எனப்படும் சண்டி யாகம் நடைபெறுகிறது.
    தொடர்ந்து 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கபிலேஸ்வர சுவாமி ஹோமம், 28-ம் தேதி காலபைரவ சுவாமி ஹோமம், 29-ம் தேதி சண்டிகேஸ்வர ஹோமம் என கோயிலில் உள்ள மூர்த்திகள் அனைவருக்கும் ஹோமங்கள் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.