Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • nine-navagraha-hindu-god

     

    கிரக பலன்கள் குறித்த அச்சமும், பரிகார நிமித்தமான கிரக வழிபாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    சூரியன் – சிவன்

    சந்திரன் – பார்வதி

    செவ்வாய் – முருகன்

    புதன் – விஷ்ணு

    வியாழன் – பிரம்மா, தட்ணாமூர்த்தி

    சுக்கிரன் – லட்சுமி, இந்திரன், வருணன்

    சனி – சாஸ்தா (ஐயப்பன்)

    ராகு – காளி, துர்க்கை, மாரியம்மன்

    கேது – விநாயகர், சண்டிகேஸ்வரர்

     

    இந்த தேவதைகளை அந்தந்த கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மை உண்டாகும். ராகுவுக்குரிய தேவதைகளை, ஞாயிறு ராகு காலத்திலும், கேதுவுக்குரிய தேவதைகளை, திங்கள் எமகண்ட நேரத்திலும் தரிசிப்பது சிறப்பைத் தரும்.

     

    கிரகங்கள் ஒன்பது (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது). இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிபதி நியமிக்கப் படுவார். அந்த அதிகாரியே கிரகத்தின் அதி தேவதையாக அறியப் படுகிறார்.

    அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

  • vinayagar-thiruvuruvam

     

     

    இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரின் திருவுருவ விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

     

    இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

    திருவடி :

    ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

    பெருவயிறு :

    ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

    ஐந்துகரங்கள் :

    பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.

    கொம்புகள் :

    மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.

    தாழ்செவி :

    விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.

     

     

  • abiraami-pattar

     

    காவிரி தாயின் கருணையால்  வளம் கொழிக்கும் தஞ்சைமாநகரில்  திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் சுமார் 300ஆண்டுகளுக்கு முன் அவதரித்தார் அபிராமி பட்டர். காலனைச் சிவபெருமான் சம்ஹாரம் செய்த இடமும் இது தான். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டஅபிராமி பட்டர் இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார்.தனது மனதுள்  ஒளிப் பிரவாகமாக அன்னையை ,தாய் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின்  தெய்வீக நிலையை மற்றவர்களால் உணர முடியாமல் ,அவரைப்  பித்தன் என்றும் பைத்தியம் என்றும் வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாகஎண்ணவில்லை.

    அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு மராட்டிய  வம்சத்தைச் சேர்ந்த சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். இறையுணர்வு, மத சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட அவர் , ஒரு தை அமாவாசை நாளில் திருக்கடையூர் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் ஆழ்ந்த  தியானத்திலிருந்தார்.

     மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னருக்கு  வியப்பு.  ஆனால், சுற்றியிருந்தவர்களோ மன்னரிடம், மன்னா!தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர்.எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார்கள். 

    ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பினார் மன்னர்.அவரின் அருகில் சென்ற மன்னர்,“பட்டரே! இன்றுஎன்ன திதி?” என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் நிலவைப் போல்  பிரகாசித்தது. அந்த அருள் பொங்கிய  முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். ஏதோ நினைவில் அப்படி சொல்கிறார் என நினைத்த மன்னர், கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரிய வந்தது.

    தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி  அழுத அவர், அரசர் வரும்வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருள வேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒருஆழமான ஒரு குழியை வெட்டி, விறகை அடுக்கி தீ மூட்டினார். அதற்கு மேல் ஒருவிட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்ட பட்டர்  உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார்.

     ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை.  “அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும்  மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு?”என்ற பொருள்படும் வகையில்,விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள்.

     

                                                                                 

    தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வான வீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது.  அவள் பட்டரிடம், “நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய  சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு” என்றாள்.  பரவசமுற்ற அபிராமிப்பட்டர் அதோடு, தம் அனுபூதி நிலையைவெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு  செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் மனம் மகிழ்ந்தார். மன்னரிடம் பட்டரைப் பற்றி புகார் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர்.

    அற்புதமான தெய்வீக துதி நூலான  அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும்.

  • somawaram-special

    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும்.

      அமாவாசை  சோமவாரம்

    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும். அப்போது சந்திரன், ‘தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். அமாவாசையில் வரும் திங்கட்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது அமாவாசை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.

    கணவனை மீட்டெடுத்த சீமந்தினி

    சித்ரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் மீது மன்னன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான். 

    அந்த ஜோதிடர்களில் ஒருவர், ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்தில் உமையவள். உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்குக் கிடைப்பான்’ என்றார்.

    ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டத்துடன் இருந்தார். அவரைக் கவனித்த மன்னர் அவருடைய கருத்தையும் கேட்டான். அதற்கு அந்த ஜோதிடர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள்’ என்றார். 

    இதைக்கேட்ட மன்னன் வேதனை அடைந்தான். காலம் உருண்டோடியதில், சீமந்தினி மணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருந்தாள். அப்போது அவளது தோழிகள், அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தைக் கூறினார்கள்.

    தன் நிலையை உணர்ந்தவள், யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய மனக் கவலையைக் கூறினாள். 

    சிறந்த பதிவிரதையான மைத்ரேயி, ‘கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. உன்னுடைய துன்பங்கள் விலகும்’ என்றாள்.  

    சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். 

    சில காலத்தில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திர சேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோ‌ஷமாக வாழ்ந்து வந்தனர். 

    ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அவள் விரதத்திற்கான பலன் விரைவிலேயே கிடைத்தது. 

    திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.

    இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். வெகு தூரத்தில் உள்ளவர்கள், தங்கள் இருப்பிடத்தை வந்தடைவர். கணவன்–மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. அப்படியே பிரிந்திருந்தாலும், அவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள். மேலும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும் சிறப்புமிகுந்த விரதம் இதுவாகும். களத்திரதோ‌ஷம், மாங்கல்ய தோ‌ஷம் இருப்பவர்கள், இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.


    விரதம் இருக்கும் முறை

    சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று சோமவார விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கலாம். ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கக்கூடிய விரதங்களில் இதுவும் ஒன்று. சிவபூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

    ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய் உடைத்து, விநாயகரை வழிபட்டு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக் கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகே பூஜையை தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவ நாமங்களை பாராயணம் செய்து, தீபாராதனை காட்ட வேண்டும். 

    பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை, பார்வதி– பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்ய வேண்டும். புதுவேட்டி, ரவிக்கை துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம், தட்சணை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து அவர்களிடம் இருந்து ஆசிபெற்றால் நாளும் சிறப்பு வந்து சேரும்.

    நோய் தீர்க்கும் தீர்த்தக்குளம்

    நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரியநாயகி சமேத கயிலாசநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வரும் திங்கட்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபடுவதோடு, சந்திர பகவானையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வரும் நாட்களிலும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கடக ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணி தீர்த்தக் குளத்தில் நீராடினால் தொழுநோய், சித்தபிரமை போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    சந்திரனுக்கு அடைக்கலம் தந்த சிவன்

    தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவ பெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை– வளர்பிறை உருவானது. 

    சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது ஒரு சோமவார தினத்தில் தான். ‘14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்– மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஆம்.. நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.

     

  • thiruneeru

     

    விபூதி , பஸ்மம், ரக்ஷை, திருநீறு இப்படி எந்த பெயர் வைத்து நாம் வணங்கினாலும் ,திருநீறு என்பது சைவ சமயத்தின் ஒரு ஒப்பற்ற குறியீடாகும். முடியாண்ட மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆவான் என்ற தத்துவத்தை உணர்த்துவதே திருநீற்றின் மகிமையாகும்.  திருநீற்றின் பெருமைதனை தெரிந்துக்கொள்வோம்.

    அரிகேசரி , அரிமர்த்தன பாண்டியனுக்குப் பிறகு மதுரையைச் சிறப்பாக ஆட்சி செய்தவன்.  ‘கூன் பாண்டியன்’ என்றால் இன்னும் பிரசித்தம்.சோழர்குலப் பெண்ணான மங்கையர்க்கரசியை திருமணம் செய்துக் கொண்டான்.

     வைதீக சமயத்தைப் பின்பற்றி வந்த அரிகேசரி, காலப்போக்கில் சமண சமயத்தின் மீது பற்று வரவே சமணத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று மக்களும், மன்னனை பின்பற்றி  பெருமளவில் சமண மதத்தைத் தழுவினர். இதைக் கண்டு அரசிக்கு மிகுந்த வருத்தம். அமைச்சர் குலச்சிறையாருக்கோ அரசனுக்கு எதிரில் விபூதி கூட அணிந்து வர முடியாத நிலை.

    இதனால் அரசியும்அமைச்சரும் மன்னன் மீண்டும் சைவமதத்துக்கே திரும்ப வேண்டி தினந்தோறும் சோமசுந்தரக் கடவுளை மனமுருகி வேண்டி வந்தனர். இந்த நிலையில் அந்தணர் ஒருவர் மூலமாக திருஞானசம்பந்தரின் மேன்மையைப் பற்றி  அறிந்துகொண்டனர். ஏவலர் ஒருவரை அனுப்பி, வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு அவரை அழைத்துவர பணித்தனர்.

     அவரும் திருஞானசம்பந்தரிடம் சென்று மதுரையில் சமணத்தின் எழுச்சியையும், சைவத்தின் வீழ்ச்சியையும் எடுத்துரைக்க ,உடனே திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படத் தயாரானார். ஆனால் அப்பர் அவரைத் தடுத்தார்.

     உடனே திருஞானசம்பந்தரோ “வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்” எனத் தொடங்கும் நவக்கிரகப் பதிகத்தைப் பாடி அப்பரிடம் சம்மதம் பெற்று மதுரைக்குக் கிளம்பினார். மதுரையில் அவருக்கு அரசியும் அமைச்சரும் பலத்த வரவேற்பு அளித்தனர். வந்ததும் நேராக சோமசுந்தரக் கடவுளைச் சந்தித்து வல்லமை வேண்டி திருப்பதிகம் பாடினார். அடியார்களுடன் மடம் ஒன்றில் இரவில் தங்கினார்.

     இதற்கிடையே சம்பந்தர் மதுரை வந்ததை விரும்பாத சிலர் அவர் தங்கியிருக்கும் மடம் தீப்பிடிக்க அபிசார மந்திரம் ஜபித்தனர். மடம் அப்படியே இருக்கவே மடத்துக்குத் தீ வைத்தனர்.

     மடம் தீப்பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தர் சிறிதும் அச்சமில்லாது பதிகம் ஒன்று பாடினார். மடத்தில் தீ அணைந்தது. ஆனால், மன்னன் பாண்டியனை வெப்பு நோய் தாக்கியது. மன்னன் மிகுந்த வேதனை அடைந்தான். வெப்பு தாங்காமல் பதறித் துடித்தான்.

     சமண முனிவர்கள் தங்கள் தவ வலிமையின் மூலமாக மயிற்பீலிகைகளால் மன்னன் உடலை வருடினர். அதுவும் தீயில் வெந்து கருகியது. அப்போது அரசி திருஞானசம்பந்தருக்கு நடந்தது பற்றி மன்னனுக்கு எடுத்துரைத்தார். அவர் வந்தால்தான் இதை தீர்க்க முடியும் என்றும் கூறினார்.

    உடனே மன்னன் “அவர் என் சூலை நோயைப் போக்கினால், நான் சமணத்தை விடுவேன். அவரை அழைத்து வருவீர்” எனக் கட்டளையிட்டான். அடுத்த கணமே அரசி மடத்துக்குச் சென்று, சம்பந்தரை வணங்கி நடந்ததைக் கூற, அவரும் அரண்மனை வந்தார். வந்து `மந்திரமாவது நீறு’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மன்னன் உடலில் திருநீறு பூசினார். மன்னனின் வெப்பு நோய் நீங்கியது. மன்னன் பலமுறை சம்பந்தருக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான்.

     

                                                                                

     பின்பு  சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் இடையே  நடந்த வாத போட்டியிலும்  சம்பந்தர் வென்றார். பின்னர் பாண்டிய மன்னன் சைவ சமயத்தை ஏற்று சிறப்பாக ஆட்சிசெய்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ….?

     

    ஓம் நமசிவாய ……

     

  • krishna-conversation-with-naradhar

     

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

     நாரதர் ஒரு சமயம் கிருஷ்ணரைத் தரிசிக்கச் சென்றார். அவரை கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். இருவரும் உரையாடியபடியே உலாவச் சென்றார்கள்.

    அப்போது நாரதர், “”கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மைதானா? “தேவரிஷி’ என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானியாகிய என்னை
    உங்களுடைய மாயை என்ன செய்யும்? மாயையால் நானும் பாதிக்கப்படுவேனா?” என்று கேட்டார்.

    அதைக் கேட்ட கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, “”நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்…” என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த “மகதி’ என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.

    மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! “தான் நாரதர்’ என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.

    இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

    “நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா?” என்று கேட்டான்.
    நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். 
    அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

     

    இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு
    அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.
    இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது.

    போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள்.

    அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், “”அரசியாரே! போரில் நமது
    அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள்,” என்று கூறினர்.

    நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள்.

    விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது.

    குழந்தையை எடுக்க முடியவில்லை. பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள்.

    காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், “ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்…. நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன!” என்று பலவாறு கூறி கதறி அழுதாள்.

    அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, “அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். 
    நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள்.
    முதியவர் அவளிடம், “அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும்,” என்று தெரிவித்தார்.

    முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. 

    குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக்கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார்.
    நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்த படியே கிருஷ்ணரிடம் சென்று, “”பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க
    வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்,” என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

    தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா!
    மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.

    “முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். ”

  • kovil-ragasiyam

     

    நம்மில் பலரும், சிவன் கோவிலுக்கு சென்றால் ,ஈசனை  தரிசனம் செய்து விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் இருக்கும்  சண்டிகேஸ்வரரை  தவறாமல்  வணங்கி வருவோம். மற்ற சன்னதியில் உள்ள தெய்வங்களை கை கூப்பி வணங்கும் நாம்  சண்டிகேஸ்வரரை மட்டும் ,சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ தான் வணங்குவது வழக்கம்.  

    ஆனால் உண்மையில் அவரை அப்படி வணங்க கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சண்டிகேஸ்வரர் எப்போதும்  சிவ தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்ற இவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை நமது கையைத் தட்டி, வந்தேன்…வந்தேன்…வந்தேன்… சிவனின் தரிசனம் கண்டேன்… கண்டேன்.. கண்டேன்…என கூற வேண்டும். அப்படி வணங்கும் போது  சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்து  உடனே நமது கோரிக்கையை  நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

     

    அதே போல் சிவாலயங்களில் நந்தி காதுகளில் ரகசியம் சொல்வதும் நம்மிடம் உள்ள பழக்கம்.

    சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

    அரசர் ஒருவர்  சித்தர் நெறிகளை உடைய ஒருவரை  தம் கோவிலுக்கு அழைத்து வந்தார்.  32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு ,கருவூரார் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது . மன்னனும் மக்களும்  , வியந்து  அதிசயப் பட்டனர். உயிர் பெற்ற அந்த நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்களும்  பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்திஅருகே இருந்த  வயல் மற்றும்  தோப்புகளில் நுழைந்து பயிர்களை உண்ணத் தொடங்கியது. மக்கள் அச்சம் அடைந்து அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்று வேண்டினார். சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.

    அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்த விளைவு தான் இன்றும் நந்தியின் காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் .

    ஓம் நம சிவாய …..

  • vishnu-sahasranamam

     

    சொல்லுக்கு கலைமகள், வில்லுக்கோர் விஜயனைப் போல . ‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் . அந்த அளவிற்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பெருமை பெற்றது,மகத்துவம் வாய்ந்தது.

    ஒரு முறை ஆதிசங்கரர் ,தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு பாஷ்யம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.

    சிஷ்யரும் ஆச்சாரியாரின் ஆணையை ஏற்று  அங்கிருந்து போனார். சற்று  நேரம் கழித்து அவர்  விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

    ஆச்சாரியாரும் “நான் இதைக் கேட்கலையே…நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…?” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

    அப்போது சங்கரர் சிஷ்யரிடம், “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன…?”என்று கேட்டார்.

    ‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு,இதை எடுத்துண்டு போ’ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்…?” என்றார் சிஷ்யர்.

    அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே இதைப் பற்றி தியானிக்க,அந்த அம்பிகையே இங்கு குழந்தையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..என்று தெரிந்துக் கொண்டார்.

    அதன் பிறகு அன்னையின் கட்டளைப்படி விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார். இப்படி லலிதையே போற்றும்படியானது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

    இவ்வளவு ஏற்றம் பெற்ற இந்த சஹஸ்ரநாமம் முதலில் சொல்லப்பட்டது யாராலே…?

    அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். தர்மபுத்திரரை அவரிடம் அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

    “அணையப் போகும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல இங்கு யாரும் இல்லை, போ!  அவரிடம் தர்மத்தைப் பற்றி கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

    பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். கீதை சொன்ன பகவானே  சஹஸ்ரநாமம் கேட்டார்.

     ‘பகவத் குண தர்ப்பணம்’என்ற விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தை பராசர பட்டர் செய்திருக்கிறார்.

     ‘பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி’ என்று அதற்கு பொருள்.

    விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். அனுதினம் இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். துர்தேவதைகள் நம் இல்லத்தில் பிரவேசிக்காது என்கிறார்கள். கீதைக்குச் சமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை  நாமும் அனுதினமும் பாராயணம் செய்து இறைவனின் திருவடி தொழுவோம்.

    ஓம் நமோ நாராயணாய …..

  • the-fame-of-lord-vinayaga

    ஹோமங்கள் நடைபெறும் பொழுது, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையைத் தொடங்குவர்.

    வீடுகளில் மண்ணில் பிள்ளையார் செய்து, அதில் வண்ணம் தீட்டியும் வழிபாட்டுக்கு வைத்துக்கொள்வர். வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப் பிள்ளையார், வெள்ளருக்குப் பிள்ளையார் என்று பலவகை பிள்ளையார்களை மக்கள் வழிபடுவது வழக்கம். எந்த வகைப் பிள்ளையாருக்கு என்ன பலன் என்பதைப் பற்றியும், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். மண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால் அரச பதவி கிடைக்கும். அரசாங்க வேலை அமையும். புற்றுக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வியாபார விருத்தி ஏற்படும். வேப்பமரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். அரசமரத்தடியின் கீழ் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வாரிசு உருவாகும். கண்திருஷ்டி கணபதியை இல்லத்து முகப்பில் வைத்தால் திருஷ்டி தோஷம் போக்கும்.

    விநாயகருக்கு உகந்த ஆறு விரதங்கள்
    விநாயகர் சதுர்த்தி விரதம், குமாரசஷ்டி விரதம், சித்திவிநாயகர் விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகரை வழிபடக்கூடிய விரதங்கள் ஆகும்.
    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி வரை விநாயகரை மனதில் நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதத்திற்கு விநாயகர் சதுர்த்திவிரதம் எனப்படு கிறது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    வலை போக்கும் கணபதி ஜாதகம்
    தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் ஜாதகங்கள் இருக்கின்றன. அதில் கணபதி ஜாதகத்தைக் கையில் வைத்துக்கொண்டாலோ, பூஜையறையில் வைத்து வழிபட்டாலோ எண்ணிய காரியங்கள் எளிதில் கைகூடும். கணபதிக்கு அருகில் ஜாதகத்தை வைத்து கணபதி காயத்ரியைச் சொல்லி வழிபடுவது நல்லது.

  • eight-types-of-krishna

     

     ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். அந்த 8 வகையான கிருஷ்ணரை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

     

    1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 

    2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 

    3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

    4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5 .ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 

    6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 

    7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன். 

    8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.