Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • somawaram-special

    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும்.

      அமாவாசை  சோமவாரம்

    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும். அப்போது சந்திரன், ‘தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும்’ என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும். அமாவாசையில் வரும் திங்கட்கிழமை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது அமாவாசை சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.

    கணவனை மீட்டெடுத்த சீமந்தினி

    சித்ரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி. அவள் மீது மன்னன் அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான். 

    அந்த ஜோதிடர்களில் ஒருவர், ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்தில் உமையவள். உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்குக் கிடைப்பான்’ என்றார்.

    ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டத்துடன் இருந்தார். அவரைக் கவனித்த மன்னர் அவருடைய கருத்தையும் கேட்டான். அதற்கு அந்த ஜோதிடர் சொன்ன பதில் மன்னரை அதிர்ச்சி அடைய செய்தது. ‘மன்னா! உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள்’ என்றார். 

    இதைக்கேட்ட மன்னன் வேதனை அடைந்தான். காலம் உருண்டோடியதில், சீமந்தினி மணம் முடிக்கும் பருவத்தை எட்டியிருந்தாள். அப்போது அவளது தோழிகள், அவளுக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தைக் கூறினார்கள்.

    தன் நிலையை உணர்ந்தவள், யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய மனக் கவலையைக் கூறினாள். 

    சிறந்த பதிவிரதையான மைத்ரேயி, ‘கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. உன்னுடைய துன்பங்கள் விலகும்’ என்றாள்.  

    சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். 

    சில காலத்தில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திர சேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோ‌ஷமாக வாழ்ந்து வந்தனர். 

    ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அவள் விரதத்திற்கான பலன் விரைவிலேயே கிடைத்தது. 

    திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.

    இந்த சோமவார விரதத்தை திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். வெகு தூரத்தில் உள்ளவர்கள், தங்கள் இருப்பிடத்தை வந்தடைவர். கணவன்–மனைவிக்கு இடையே பிரிவு இருக்காது. அப்படியே பிரிந்திருந்தாலும், அவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள். மேலும் சகல செல்வங்களையும் பெற்றுத்தரும் சிறப்புமிகுந்த விரதம் இதுவாகும். களத்திரதோ‌ஷம், மாங்கல்ய தோ‌ஷம் இருப்பவர்கள், இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.


    விரதம் இருக்கும் முறை

    சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை அன்று சோமவார விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கலாம். ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கக்கூடிய விரதங்களில் இதுவும் ஒன்று. சிவபூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப்பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப்பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்தரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்து), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

    ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய் உடைத்து, விநாயகரை வழிபட்டு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக் கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகே பூஜையை தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவ நாமங்களை பாராயணம் செய்து, தீபாராதனை காட்ட வேண்டும். 

    பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை, பார்வதி– பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்ய வேண்டும். புதுவேட்டி, ரவிக்கை துணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம், தட்சணை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து அவர்களிடம் இருந்து ஆசிபெற்றால் நாளும் சிறப்பு வந்து சேரும்.

    நோய் தீர்க்கும் தீர்த்தக்குளம்

    நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய கோவில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு பெரியநாயகி சமேத கயிலாசநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வரும் திங்கட்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபடுவதோடு, சந்திர பகவானையும் வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்கள் திங்கட்கிழமைகளில் வரும் நாட்களிலும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. கடக ராசிக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது. இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணி தீர்த்தக் குளத்தில் நீராடினால் தொழுநோய், சித்தபிரமை போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    சந்திரனுக்கு அடைக்கலம் தந்த சிவன்

    தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவ பெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை– வளர்பிறை உருவானது. 

    சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது ஒரு சோமவார தினத்தில் தான். ‘14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்– மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஆம்.. நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.

     

  • thiruneeru

     

    விபூதி , பஸ்மம், ரக்ஷை, திருநீறு இப்படி எந்த பெயர் வைத்து நாம் வணங்கினாலும் ,திருநீறு என்பது சைவ சமயத்தின் ஒரு ஒப்பற்ற குறியீடாகும். முடியாண்ட மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆவான் என்ற தத்துவத்தை உணர்த்துவதே திருநீற்றின் மகிமையாகும்.  திருநீற்றின் பெருமைதனை தெரிந்துக்கொள்வோம்.

    அரிகேசரி , அரிமர்த்தன பாண்டியனுக்குப் பிறகு மதுரையைச் சிறப்பாக ஆட்சி செய்தவன்.  ‘கூன் பாண்டியன்’ என்றால் இன்னும் பிரசித்தம்.சோழர்குலப் பெண்ணான மங்கையர்க்கரசியை திருமணம் செய்துக் கொண்டான்.

     வைதீக சமயத்தைப் பின்பற்றி வந்த அரிகேசரி, காலப்போக்கில் சமண சமயத்தின் மீது பற்று வரவே சமணத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று மக்களும், மன்னனை பின்பற்றி  பெருமளவில் சமண மதத்தைத் தழுவினர். இதைக் கண்டு அரசிக்கு மிகுந்த வருத்தம். அமைச்சர் குலச்சிறையாருக்கோ அரசனுக்கு எதிரில் விபூதி கூட அணிந்து வர முடியாத நிலை.

    இதனால் அரசியும்அமைச்சரும் மன்னன் மீண்டும் சைவமதத்துக்கே திரும்ப வேண்டி தினந்தோறும் சோமசுந்தரக் கடவுளை மனமுருகி வேண்டி வந்தனர். இந்த நிலையில் அந்தணர் ஒருவர் மூலமாக திருஞானசம்பந்தரின் மேன்மையைப் பற்றி  அறிந்துகொண்டனர். ஏவலர் ஒருவரை அனுப்பி, வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு அவரை அழைத்துவர பணித்தனர்.

     அவரும் திருஞானசம்பந்தரிடம் சென்று மதுரையில் சமணத்தின் எழுச்சியையும், சைவத்தின் வீழ்ச்சியையும் எடுத்துரைக்க ,உடனே திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படத் தயாரானார். ஆனால் அப்பர் அவரைத் தடுத்தார்.

     உடனே திருஞானசம்பந்தரோ “வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்” எனத் தொடங்கும் நவக்கிரகப் பதிகத்தைப் பாடி அப்பரிடம் சம்மதம் பெற்று மதுரைக்குக் கிளம்பினார். மதுரையில் அவருக்கு அரசியும் அமைச்சரும் பலத்த வரவேற்பு அளித்தனர். வந்ததும் நேராக சோமசுந்தரக் கடவுளைச் சந்தித்து வல்லமை வேண்டி திருப்பதிகம் பாடினார். அடியார்களுடன் மடம் ஒன்றில் இரவில் தங்கினார்.

     இதற்கிடையே சம்பந்தர் மதுரை வந்ததை விரும்பாத சிலர் அவர் தங்கியிருக்கும் மடம் தீப்பிடிக்க அபிசார மந்திரம் ஜபித்தனர். மடம் அப்படியே இருக்கவே மடத்துக்குத் தீ வைத்தனர்.

     மடம் தீப்பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தர் சிறிதும் அச்சமில்லாது பதிகம் ஒன்று பாடினார். மடத்தில் தீ அணைந்தது. ஆனால், மன்னன் பாண்டியனை வெப்பு நோய் தாக்கியது. மன்னன் மிகுந்த வேதனை அடைந்தான். வெப்பு தாங்காமல் பதறித் துடித்தான்.

     சமண முனிவர்கள் தங்கள் தவ வலிமையின் மூலமாக மயிற்பீலிகைகளால் மன்னன் உடலை வருடினர். அதுவும் தீயில் வெந்து கருகியது. அப்போது அரசி திருஞானசம்பந்தருக்கு நடந்தது பற்றி மன்னனுக்கு எடுத்துரைத்தார். அவர் வந்தால்தான் இதை தீர்க்க முடியும் என்றும் கூறினார்.

    உடனே மன்னன் “அவர் என் சூலை நோயைப் போக்கினால், நான் சமணத்தை விடுவேன். அவரை அழைத்து வருவீர்” எனக் கட்டளையிட்டான். அடுத்த கணமே அரசி மடத்துக்குச் சென்று, சம்பந்தரை வணங்கி நடந்ததைக் கூற, அவரும் அரண்மனை வந்தார். வந்து `மந்திரமாவது நீறு’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். மன்னன் உடலில் திருநீறு பூசினார். மன்னனின் வெப்பு நோய் நீங்கியது. மன்னன் பலமுறை சம்பந்தருக்குத் தன் நன்றியைத் தெரிவித்தான்.

     

                                                                                

     பின்பு  சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் இடையே  நடந்த வாத போட்டியிலும்  சம்பந்தர் வென்றார். பின்னர் பாண்டிய மன்னன் சைவ சமயத்தை ஏற்று சிறப்பாக ஆட்சிசெய்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ….?

     

    ஓம் நமசிவாய ……

     

  • krishna-conversation-with-naradhar

     

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

     நாரதர் ஒரு சமயம் கிருஷ்ணரைத் தரிசிக்கச் சென்றார். அவரை கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். இருவரும் உரையாடியபடியே உலாவச் சென்றார்கள்.

    அப்போது நாரதர், “”கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மைதானா? “தேவரிஷி’ என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானியாகிய என்னை
    உங்களுடைய மாயை என்ன செய்யும்? மாயையால் நானும் பாதிக்கப்படுவேனா?” என்று கேட்டார்.

    அதைக் கேட்ட கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, “”நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்…” என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த “மகதி’ என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.

    மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! “தான் நாரதர்’ என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.

    இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

    “நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா?” என்று கேட்டான்.
    நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். 
    அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

     

    இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு
    அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.
    இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது.

    போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள்.

    அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், “”அரசியாரே! போரில் நமது
    அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள்,” என்று கூறினர்.

    நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள்.

    விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது.

    குழந்தையை எடுக்க முடியவில்லை. பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள்.

    காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், “ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்…. நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன!” என்று பலவாறு கூறி கதறி அழுதாள்.

    அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, “அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். 
    நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள்.
    முதியவர் அவளிடம், “அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும்,” என்று தெரிவித்தார்.

    முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. 

    குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக்கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார்.
    நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்த படியே கிருஷ்ணரிடம் சென்று, “”பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க
    வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்,” என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

    தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா!
    மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.

    “முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். ”

  • kovil-ragasiyam

     

    நம்மில் பலரும், சிவன் கோவிலுக்கு சென்றால் ,ஈசனை  தரிசனம் செய்து விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் இருக்கும்  சண்டிகேஸ்வரரை  தவறாமல்  வணங்கி வருவோம். மற்ற சன்னதியில் உள்ள தெய்வங்களை கை கூப்பி வணங்கும் நாம்  சண்டிகேஸ்வரரை மட்டும் ,சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ தான் வணங்குவது வழக்கம்.  

    ஆனால் உண்மையில் அவரை அப்படி வணங்க கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சண்டிகேஸ்வரர் எப்போதும்  சிவ தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்ற இவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை நமது கையைத் தட்டி, வந்தேன்…வந்தேன்…வந்தேன்… சிவனின் தரிசனம் கண்டேன்… கண்டேன்.. கண்டேன்…என கூற வேண்டும். அப்படி வணங்கும் போது  சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்து  உடனே நமது கோரிக்கையை  நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

     

    அதே போல் சிவாலயங்களில் நந்தி காதுகளில் ரகசியம் சொல்வதும் நம்மிடம் உள்ள பழக்கம்.

    சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

    அரசர் ஒருவர்  சித்தர் நெறிகளை உடைய ஒருவரை  தம் கோவிலுக்கு அழைத்து வந்தார்.  32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு ,கருவூரார் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது . மன்னனும் மக்களும்  , வியந்து  அதிசயப் பட்டனர். உயிர் பெற்ற அந்த நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்களும்  பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்திஅருகே இருந்த  வயல் மற்றும்  தோப்புகளில் நுழைந்து பயிர்களை உண்ணத் தொடங்கியது. மக்கள் அச்சம் அடைந்து அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்று வேண்டினார். சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.

    அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்த விளைவு தான் இன்றும் நந்தியின் காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் .

    ஓம் நம சிவாய …..

  • vishnu-sahasranamam

     

    சொல்லுக்கு கலைமகள், வில்லுக்கோர் விஜயனைப் போல . ‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் . அந்த அளவிற்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பெருமை பெற்றது,மகத்துவம் வாய்ந்தது.

    ஒரு முறை ஆதிசங்கரர் ,தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு பாஷ்யம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.

    சிஷ்யரும் ஆச்சாரியாரின் ஆணையை ஏற்று  அங்கிருந்து போனார். சற்று  நேரம் கழித்து அவர்  விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

    ஆச்சாரியாரும் “நான் இதைக் கேட்கலையே…நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…?” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

    அப்போது சங்கரர் சிஷ்யரிடம், “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன…?”என்று கேட்டார்.

    ‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு,இதை எடுத்துண்டு போ’ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்…?” என்றார் சிஷ்யர்.

    அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே இதைப் பற்றி தியானிக்க,அந்த அம்பிகையே இங்கு குழந்தையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..என்று தெரிந்துக் கொண்டார்.

    அதன் பிறகு அன்னையின் கட்டளைப்படி விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார். இப்படி லலிதையே போற்றும்படியானது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

    இவ்வளவு ஏற்றம் பெற்ற இந்த சஹஸ்ரநாமம் முதலில் சொல்லப்பட்டது யாராலே…?

    அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். தர்மபுத்திரரை அவரிடம் அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

    “அணையப் போகும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல இங்கு யாரும் இல்லை, போ!  அவரிடம் தர்மத்தைப் பற்றி கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

    பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். கீதை சொன்ன பகவானே  சஹஸ்ரநாமம் கேட்டார்.

     ‘பகவத் குண தர்ப்பணம்’என்ற விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தை பராசர பட்டர் செய்திருக்கிறார்.

     ‘பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி’ என்று அதற்கு பொருள்.

    விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். அனுதினம் இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். துர்தேவதைகள் நம் இல்லத்தில் பிரவேசிக்காது என்கிறார்கள். கீதைக்குச் சமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை  நாமும் அனுதினமும் பாராயணம் செய்து இறைவனின் திருவடி தொழுவோம்.

    ஓம் நமோ நாராயணாய …..

  • the-fame-of-lord-vinayaga

    ஹோமங்கள் நடைபெறும் பொழுது, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையைத் தொடங்குவர்.

    வீடுகளில் மண்ணில் பிள்ளையார் செய்து, அதில் வண்ணம் தீட்டியும் வழிபாட்டுக்கு வைத்துக்கொள்வர். வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப் பிள்ளையார், வெள்ளருக்குப் பிள்ளையார் என்று பலவகை பிள்ளையார்களை மக்கள் வழிபடுவது வழக்கம். எந்த வகைப் பிள்ளையாருக்கு என்ன பலன் என்பதைப் பற்றியும், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். மண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால் அரச பதவி கிடைக்கும். அரசாங்க வேலை அமையும். புற்றுக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வியாபார விருத்தி ஏற்படும். வேப்பமரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். அரசமரத்தடியின் கீழ் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வாரிசு உருவாகும். கண்திருஷ்டி கணபதியை இல்லத்து முகப்பில் வைத்தால் திருஷ்டி தோஷம் போக்கும்.

    விநாயகருக்கு உகந்த ஆறு விரதங்கள்
    விநாயகர் சதுர்த்தி விரதம், குமாரசஷ்டி விரதம், சித்திவிநாயகர் விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகரை வழிபடக்கூடிய விரதங்கள் ஆகும்.
    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி வரை விநாயகரை மனதில் நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதத்திற்கு விநாயகர் சதுர்த்திவிரதம் எனப்படு கிறது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    வலை போக்கும் கணபதி ஜாதகம்
    தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் ஜாதகங்கள் இருக்கின்றன. அதில் கணபதி ஜாதகத்தைக் கையில் வைத்துக்கொண்டாலோ, பூஜையறையில் வைத்து வழிபட்டாலோ எண்ணிய காரியங்கள் எளிதில் கைகூடும். கணபதிக்கு அருகில் ஜாதகத்தை வைத்து கணபதி காயத்ரியைச் சொல்லி வழிபடுவது நல்லது.

  • eight-types-of-krishna

     

     ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். அந்த 8 வகையான கிருஷ்ணரை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

     

    1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 

    2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 

    3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

    4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5 .ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 

    6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 

    7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன். 

    8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

     

     

     

  • sri-krishna-jayanthi

     

    பகவான் விஷ்ணுவின் தசாவதாரம் நமக்கு பல செய்திகளை தாங்கியுள்ளது. பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து கட்டியவர்.நரசிம்மர் தன்னை நோக்கி கூப்பிடுபவர் யாராக இருந்தாலும்,எந்த நேரத்திலும்,எங்கிருந்தும் தோன்றக் கூடியவர் என்ற நம்பிக்கையை பக்தர்களின் மனதில் விதைத்தவர். ராம அவதாரமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற மிகப்பெரிய  வாழ்க்கை தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது. இவை எல்லாவற்றையும் விட ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை மனதில் நினைக்கும் போதே குதூகலமும் ,உற்சாகமும் நம்முள் கரைபுரளும். அந்த அளவிற்கு தனது சுட்டித்தனமான லீலைகளாலும், குறும்பான விளையாட்டுக்களாலும்  நம் மனதை கொள்ளைக்கொண்டவன் அந்த கோகுல கண்ணன்.

    அவதார நோக்கம் என்னவோ, கம்சன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காக்க  தான் எனினும் அந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் ஆடிப்பாடி தானும் மகிழ்ந்து இருந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டவன் அந்த கண்ணன்.  அந்த தீராத விளையாட்டுப் பிள்ளை அவதரித்த தினமே ஸ்ரீ  கிருஷ்ண ஜெயந்தி.

    ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ,அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் படமோ அல்லது  சிலையோ  நன்றாக அலங்கரிக்கப்பட்டு . கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களான  வெண்ணெய், அவல் , பால் , திரட்டுப்பால் , பழங்கள், தயிர் , வெல்ல சீடை ,கார சீடை , கார வகைகள் நைவேத்தியம் செய்யப்படுகிறது. குசேலர் அளித்த ஒரு பிடி அவலுக்கு பதிலாக,பகவான் கிருஷ்ணர் செல்வத்தை அள்ளி தந்ததால் இந்தக் கொண்டாட்டத்தில் அவல் முக்கிய இடம் பிடிக்கிறது.கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, பாலக் கண்ணனின் கால் பாதங்களை வரைவார்கள்.

    சந்தான கோபால கிருஷ்ணனாக ,யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் பார்ப்பவர் மனதை கொள்ளைக்கொள்ளும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த சந்தான கோபால கிருஷ்ணனை  வணங்குபவர்களுக்கு, அவனைப் போலவே அழகான  புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆலயங்களில்  மட்டுமின்றி பலரது வீட்டில் பூஜை அறையிலும்  காணப்படும் ,கிருஷ்ணனின் தவழும் கோலமான பாலகிருஷ்ணன் அவரின் அடுத்த கண்கொள்ளா காட்சியாகும்.  வளரும் பருவத்திலேயே காளிங்கன் என்ற நாகத்தின் கர்வத்தை அடக்கி,அதன் மீது நர்த்தனம் புரிந்தவன்  காளிய கிருஷ்ணன். வாலிப பருவத்தில் , கேளிக்கை விளையாட்டுக்கள் இருந்தாலும் ,தன் மக்களை இந்திரன் தண்டிக்க அனுப்பிய, அடாது மழையில் இருந்து அவர்களை காக்க கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி ரட்சித்தான்.ராதா-கிருஷ்ணனாக தன் முன் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் நின்றிருக்கும் முரளீதர திருக்கோலம் தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. அஷ்ட புஜங்களை காட்டி  குழலூதும் மதனகோபாலன் கன்னியரின் தூக்கத்தைக் களைத்தவன்.பார்த்தனுக்கு சாரதியான அந்த  பார்த்தசாரதி,அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்து பார்த்தனுக்கு தத்துவ ஞானியாய் காட்சியளித்தவன்.

    மக்களின் நாயகனாக விளங்கும் அந்த கோபால கிருஷ்ணனின்  ஜென்மாஷ்டமியை கொண்டாடி மகிழ்வோம்.

     

  • ganga-maa

     

    கங்கைக் கரையில் செருப்பு தைக்கும் ஒரு முதியவர்  தினமும் கங்கா மாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்கி தன் வேலையை ஆரம்பிப்பார். தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்  என்பதால் , அவர் தண்ணீரை   தீண்டினால் புனிதம்  கெட்டு விடும் என்று இந்த வழக்கம்.  

    அதே ஊரில் இருந்த பண்டிதர் ஒருவர் ,  தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே கங்கையில் இறங்கி நீராடி ,அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார்.

    ஒருநாள்  அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை அந்த முதியவரிடம்  கொடுத்து சரி செய்யச் சொல்ல, அவரும்   நன்றாகவே அதை  சரி செய்து கொடுத்தார்.

    அவரை  தொட்டால் தீட்டு என்று , பண்டிதர் ஒரு அணா  காசு விட்டெறிந்தார். அவர் பண்டிதரை  வணங்கி  ”சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன்.  நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும்  வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்” என்றார்.

    அவரோ,உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது?  நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார்.

    ஐயா  இந்த ஏழைக்கு  ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா?   இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும்  வணங்குகிறேன் என்னால்  ஒன்றும் செய்ய இயலவில்லை.  நான் அளித்த காணிக்கையாக  நீங்களே  அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?என்று கிழவன் கேட்க ,என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை  கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி என்று சொல்லி, பண்டிதர் கங்கையில் இறங்கினார். கங்கா மாதாவை வணங்கி,“ அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள்  என்று சொல்லி வீசி எறிந்தார்.

    பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய  கை  வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக  அன்பாக  பெற்றுக் கொண்டது.  கங்கையின் முகம் தோன்றி, “பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த முதியவரிடம்  கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள்  பதித்து  ஒளி வீசிய    தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதர் ஆச்சர்யத்தில்  நடுங்கினார்.

    அதை தனது மேல் துண்டில் பத்திரமாக  முடிந்து வைத்து கொண்டு ,அந்த முதியவரிடம்  ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் தன் மனைவியிடம் கங்காதேவி தந்த வளையலை தந்தார்  பண்டிதர்.

    பேராசை பிடித்த அவன் மனைவி ,ராஜாவிடம்  அந்த வளையலைக் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வர ஆலோசனை சொன்னாள்.

    பண்டிதரும்  ராஜாவிடம் சென்று கொடுக்க ,  ராஜா  அதை வாங்கி பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை  நிறைய பொற்காசுகள் கொடுத்தார்.ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தார்.  மிகவும் மகிழ்ந்த  அந்த ராணி , ராஜாவிடம் அதன் ஜோடி எங்கே  என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதரை அழைத்து வர செய்தார். 

     இன்னொரு வளையல் எங்கே? அதை ஏன் தரவில்லை? என்று கேட்க,  பண்டிதர் நடந்ததை சொல்ல தயங்கினார். ராஜா அணையிட உயிருக்கு பயந்த பண்டிதர் கங்கைக்கரைக்கு ஓடினார்.

     அந்த முதியவர்  வழக்கம்போல் அதிகாலையில்  கங்கைக் கரைக்கு  தூர நின்று இரு கரம் கூப்பி  கண்களை மூடி கங்கையை வணங்கினார். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டார். அது தான் அவருக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

     திடீரென்று தன்  முன்னே  பண்டிதர் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவருக்கு  ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.  “சாமி  நீங்க என்ன செய்றீங்க?என்ன ஆச்சு உங்களுக்கு?  நான் தானே  உங்களை எப்போவும் வணங்கறது?”என்று கேட்டார்.

    நடந்த விஷயத்தை சொன்னதும் , அந்த முதியவர் கண்ணை மூடி  தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினார்,  “அம்மா கங்கா  நீ எனக்கு பரிசாக ஒரு வளையல் கொடுத்ததற்கு  நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே.  பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்” என்று  தனது கையை அந்த ஜலத்தில் விட்டதும் ,  மீண்டும்  பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.

     பண்டிதர் அந்த முனிவரின்  கால்களை  கெட்டியாக பிடித்துக்கொண்டு  கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தார். சீடனாக அருகில் அமர்ந்தான். மனதில் இருந்த அழுக்கு நீங்கியது.

     

                                                                                      

     

  • krishna-jayanthi-vizha

    கிருஷ்ண ஜெயந்தி விழா

    கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.

     14-8-2017 (கிருஷ்ண ஜெயந்தி)

     ம்சன் என்னும் அரக்கன், தன்னுடைய தங்கைக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தான். இதனால் தங்கை தேவகியையும், அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். மேலும் அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாக கொன்றான்.

     7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் ஜனித்திருந்தார். மகாவிஷ்ணு, மாயாதேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்யச் சொன்னார். மேலும் மாயாதேவியையும், நந்தகோபரின் இன்னொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.

     எட்டாவதாக கிருஷ்ண பகவான் தேவகியின் கருவில் வளர்ந்து வந்தார். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வாசுதேவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

     அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது 12 தேவ ஆண்டுகள் என்னை நோக்கி தவம் இருந்தீர்கள். அதன் பயனாக நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நீங்களோ, பரமாத்மாவாகிய நான் உங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று கூறினீர்கள். அதன்படி நான் உங்களுக்கு பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்தபோது உபேந்திரன் என்ற பெயரில் மகனானேன். இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்துள்ளேன்.

     இனி உங்களுக்கு பிறப்பு கிடையாது. நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியதுதான். கம்சனிடம் இருந்து உங்களை விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறி விட்டார்.

     கிருஷ்ணர் அவதரித்த நன்னாளை உலகம் முழுவதும் மக்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த புண்ணிய நாளில் கிருஷ்ணரின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். மேலும் அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை வைத்து வழிபடுவது சிறப்பு தரும். அதனை கண்ணன் நள்ளிரவில் வந்து ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம். இதற்காகவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்குள் பூஜை அறை வரை, கண்ணனின் கால் தடங்களை பதித்து வைப்பார்கள். பகலில் விரதம் இருந்து, இரவில் வழிபாட்டை முடித்தபின் உணவு உண்பது உத்தமம். பின்னர் இரவு முழுவதும் கண்விழித்து பஜனை செய்து விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். எண்ணியவை ஈடேறும்.