Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • 2017-09-18-14-52-41

    மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கின்றனர். சரி மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

  • sadaari

     

    வைணவக் கோயில்களில் பெருமாளை  சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி?. பெருமாளை சேவிக்கிறோம், துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, சடாரி வைத்துக் கொள்கிறோம். அதன் பின்னணியை பற்றி அறிந்துக் கொள்வோம்.

    ஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன், வழக்கத்துக்கு மாறாக  தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால், அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, “கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?” என்று கேட்டன. “இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்” என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன்,  “நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்” என்று பதிலுக்கு வாதிட்டன.

    கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி காத்து நின்றன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. “இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தர்மத்தை நிலைநாட்ட ,ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது” என்றார் பகவான்.

     

                                                                           

     

    பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய  ‘நான்’ என்ற  ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்,என்பதே  சடாரி சாதித்தலின்  பின்னணியில் உள்ள தாத்பரியம்.

    இனி நாம் கோவிலுக்கு செல்லும் போது,இதை நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.நம் இந்து மதத்தின் சம்பிரதாயங்களுக்குப் பின் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துப் போற்ற வேண்டும்.

  • 2017-09-17-13-03-07

    புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.
    பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது. ஆகவேதான் புரட்டாசி சனிக்கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

  • 2017-09-17-12-13-27

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

  • 2017-09-17-11-52-27

    புரட்டாசி மாத பிறப்பான இன்று காவிரி மகாபுஷ்கரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ விழா ஆகும். இந்த விழாவின்போது பக்தர்கள் காவிரி நதியில் புனித நீராடினால் கங்கையில் குளித்த பயனை அடைவர் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் நேற்று திருக்கணித பஞ்சாங்கப்படி துலா ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இதனால் துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி, 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் திரண்டனர். காவிரி தாய்க்கு ஆரத்தி எடுக்கும் விதமாக வெற்றிலையில் பூஜை பொருள்களை வைத்து கற்பூரம் ஏற்றி ஆற்று நீரில் மிதக்க விட்டனர். புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி நீரில் நீராடினர்.

  • 2017-09-15-13-39-01

    சென்னையில் இருந்து செப்டம்பர் 21ஆம் தேதியன்று திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது என்று ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது தமிழகத்தில் இரண்டு மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, கிளி, வஸ்திரம். இவற்றை சூடிக்கொண்டுதான் பக்தர்களுக்கு காட்சி தருவார் ஏழுமலையான். மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக பாரம்பரியமிக்க திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆண்டும் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது. சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் வருகிற 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. திருக்குடை ஊர்வலமானது 26ஆம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

  • 23

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவை ஒட்டி அக்டோபர் 1ந் தேதி வரை 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வருகிறார். திருப்பதி ஏழுமலையான்கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி செப்டம்பர் 19-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 22-ந் தேதி அங்குரார்ப்பணமும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் மொத்தம் 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் உலா வருகிறார். 23-ந் தேதி மாலை துவாஜரோகணம் எனும் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரியசே‌ஷ வாகன வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 9 மணிக்கு சின்னசே‌ஷ வாகனத்திலும், இரவு 9 மணிக்கு அம்ச வாகனத்திலும், 25-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 26-ந் தேதி காலை 9 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு 9 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. 27-ந் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவு 7.30 மணிக்கு கருடவாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா வருகிறார். 28-ந் தேதி காலை அனுமந்த வாகனத்திலும், மாலை 5 மணிக்கு ஸ்வர்ண ரதோட்சவத்திலும், இரவு 9 மணிக்கு கஜவாகன வீதி உலாவும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 9 மணிக்கு சூரியபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. அக்டோபர் 1-ந் தேதி காலை 6 மணிக்கு சக்ரஸ்நானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு துவாஜரோகனம் நடக்கிறது.

  • 16

    புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப்டம்மபர் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. 21 வரை நடை திறந்திருக்கும். 16-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 5.30 முதல் 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை போன்ற பூஜைகளுடன் களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடைபெறும். 17 முதல் 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு 7.00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

  • 2017-09-14-07-04-12

    திருப்பதி ஏழுமலையான் சிலையில் பல சுவாரசியங்களும், ரகசியங்களும் அடங்கி உள்ளன. திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும். 3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்குமாம். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது. பொதுவாக பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.

  • 2017-09-13-16-04-43

    மகாவிஷ்ணுவின் முதல் பக்தனாக இருப்பவர் கருட பகவான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக தேர்ந்தெடுத்ததால், பிரம்மோற்சவத்தின் போது மற்ற வாகனங்களைவிட கருட வாகனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருடசேவையின் போது தமிழ்நாட்டின் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து வரும் துளசி மாலை மூலவருக்கு அணிவிக்கப்படும். இந்த மாலையுடன் மூல விக்ரக மூர்த்தி அணிந்து இருக்கும் தங்கச்சங்கலி, மகரகண்டி, லட்சுமிஹரம் போன்ற நகைகளை கருடசேவையின் போது மட்டும் உற்சவமூர்த்தியான மலையப்பசாமிக்கு அணிவித்து அலங்கரிப்பார்கள். இந்த நகைகள் அணிந்து வரும் மலையப்பசாமியை தரிசனம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். ஏழுமலையானையும், கருடனையும் ஒரு சேர வணங்குவதாக நினைத்து, கருடச்சேவையை காண லட்சக்கணக்கிலான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.