Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தெய்வீக கதை: கிருஷ்ணர் நாரதர் உரையாடல்

     

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

     நாரதர் ஒரு சமயம் கிருஷ்ணரைத் தரிசிக்கச் சென்றார். அவரை கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். இருவரும் உரையாடியபடியே உலாவச் சென்றார்கள்.

    அப்போது நாரதர், “”கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மைதானா? “தேவரிஷி’ என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானியாகிய என்னை
    உங்களுடைய மாயை என்ன செய்யும்? மாயையால் நானும் பாதிக்கப்படுவேனா?” என்று கேட்டார்.

    அதைக் கேட்ட கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, “”நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்…” என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த “மகதி’ என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.

    மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! “தான் நாரதர்’ என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.

    இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

    “நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா?” என்று கேட்டான்.
    நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். 
    அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.

     

    இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு
    அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.
    இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது.

    போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள்.

    அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், “”அரசியாரே! போரில் நமது
    அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள்,” என்று கூறினர்.

    நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள்.

    விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது.

    குழந்தையை எடுக்க முடியவில்லை. பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள்.

    காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், “ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்…. நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன!” என்று பலவாறு கூறி கதறி அழுதாள்.

    அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, “அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். 
    நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள்.
    முதியவர் அவளிடம், “அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும்,” என்று தெரிவித்தார்.

    முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. 

    குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக்கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார்.
    நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்த படியே கிருஷ்ணரிடம் சென்று, “”பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க
    வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்,” என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.

    வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.

    தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா!
    மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.

    “முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். ”

  • சண்டிகேஸ்வரரும் நந்தியும் – தெரிந்த விஷயம் , தெரியாத உண்மை

     

    நம்மில் பலரும், சிவன் கோவிலுக்கு சென்றால் ,ஈசனை  தரிசனம் செய்து விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் இருக்கும்  சண்டிகேஸ்வரரை  தவறாமல்  வணங்கி வருவோம். மற்ற சன்னதியில் உள்ள தெய்வங்களை கை கூப்பி வணங்கும் நாம்  சண்டிகேஸ்வரரை மட்டும் ,சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ தான் வணங்குவது வழக்கம்.  

    ஆனால் உண்மையில் அவரை அப்படி வணங்க கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். சண்டிகேஸ்வரர் எப்போதும்  சிவ தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்ற இவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை நமது கையைத் தட்டி, வந்தேன்…வந்தேன்…வந்தேன்… சிவனின் தரிசனம் கண்டேன்… கண்டேன்.. கண்டேன்…என கூற வேண்டும். அப்படி வணங்கும் போது  சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்து  உடனே நமது கோரிக்கையை  நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

     

    அதே போல் சிவாலயங்களில் நந்தி காதுகளில் ரகசியம் சொல்வதும் நம்மிடம் உள்ள பழக்கம்.

    சித்தர்கள் மலைகளில், பூமியில் உள்ள வித்தியாசமான பாறைகளை தேர்வு செய்து அவைகளை லிங்கமாக ,நந்தியாக உண்டாக்கி வழிபாடு செய்தனர் என்பது நாம் அறிந்தது .

    அரசர் ஒருவர்  சித்தர் நெறிகளை உடைய ஒருவரை  தம் கோவிலுக்கு அழைத்து வந்தார்.  32 லக்ஷனமும் அருமையாக ஒன்று சேர்ந்த ஒரு நந்தி சிலைக்கு ,கருவூரார் சித்தரை நினைத்து நந்தியின் காதுகளில் அவர் மந்திரம் சொல்ல நந்தி அசைந்து எழுந்தது . மன்னனும் மக்களும்  , வியந்து  அதிசயப் பட்டனர். உயிர் பெற்ற அந்த நந்தி கோவிலை விட்டு வெளியை சென்றது . வேடிக்கை பார்த்த மக்களும்  பரவசம் அடைந்து பின்னே சென்றனர் . பசி எடுத்த நந்திஅருகே இருந்த  வயல் மற்றும்  தோப்புகளில் நுழைந்து பயிர்களை உண்ணத் தொடங்கியது. மக்கள் அச்சம் அடைந்து அரசனிடம் முறையிட்டார்கள். பிரச்னை உணர்த்த அரசன் சித்தரிடம் கல் நந்தியை மீண்டும் கல்லாக்கி விட வேண்டும் என்று வேண்டினார். சித்தர் கல் நந்தியை பிடித்து வர சொல்லி அதன் காதுகளில் மந்திரம் சொல்ல அது மீண்டும் கல்லானது . பிறகு அதன் கால்களின் குழம்பில் ஒரு நகத்தை பேர்த்து எடுத்தார் . 32 லக்ஷணத்தில் 1 குறைந்தபடியால் அது கல்லாகி போனது . நந்தி மீண்டும் உயிர் பெறாது என்று உறுதி கொடுத்து வனம் சென்றார்.

    அவர் நந்தியின் காதுகளில் ஏதோ சொன்னார் , நாமும் அப்படி சொல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்த விளைவு தான் இன்றும் நந்தியின் காதுகளில் அவர்கள் குறைகள் ,தேவைகளை சொல்கிறார்கள் .

    ஓம் நம சிவாய …..

  • லலிதையே போற்றிய விஷ்ணு சஹஸ்ரநாமம்

     

    சொல்லுக்கு கலைமகள், வில்லுக்கோர் விஜயனைப் போல . ‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத் தான் குறிக்கும் . அந்த அளவிற்கு விஷ்ணு சகஸ்ரநாமம் பெருமை பெற்றது,மகத்துவம் வாய்ந்தது.

    ஒரு முறை ஆதிசங்கரர் ,தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு பாஷ்யம் செய்ய வேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.

    சிஷ்யரும் ஆச்சாரியாரின் ஆணையை ஏற்று  அங்கிருந்து போனார். சற்று  நேரம் கழித்து அவர்  விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கொண்டு வந்து கொடுத்தார்.

    ஆச்சாரியாரும் “நான் இதைக் கேட்கலையே…நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..?நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…?” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது!

    அப்போது சங்கரர் சிஷ்யரிடம், “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன…?”என்று கேட்டார்.

    ‘சுவாமி!  நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு,இதை எடுத்துண்டு போ’ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்…?” என்றார் சிஷ்யர்.

    அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே இதைப் பற்றி தியானிக்க,அந்த அம்பிகையே இங்கு குழந்தையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்..என்று தெரிந்துக் கொண்டார்.

    அதன் பிறகு அன்னையின் கட்டளைப்படி விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார். இப்படி லலிதையே போற்றும்படியானது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

    இவ்வளவு ஏற்றம் பெற்ற இந்த சஹஸ்ரநாமம் முதலில் சொல்லப்பட்டது யாராலே…?

    அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். தர்மபுத்திரரை அவரிடம் அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர்.

    “அணையப் போகும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல இங்கு யாரும் இல்லை, போ!  அவரிடம் தர்மத்தைப் பற்றி கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.

    பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். கீதை சொன்ன பகவானே  சஹஸ்ரநாமம் கேட்டார்.

     ‘பகவத் குண தர்ப்பணம்’என்ற விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தை பராசர பட்டர் செய்திருக்கிறார்.

     ‘பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி’ என்று அதற்கு பொருள்.

    விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது இறைவனின் கல்யாண குணங்களை தெரிவிக்கும்படியான திரு நாமாக்கள். அனுதினம் இறைவன் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வந்தால் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். துர்தேவதைகள் நம் இல்லத்தில் பிரவேசிக்காது என்கிறார்கள். கீதைக்குச் சமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை  நாமும் அனுதினமும் பாராயணம் செய்து இறைவனின் திருவடி தொழுவோம்.

    ஓம் நமோ நாராயணாய …..

  • விநாயகரின் பெருமைகள்!

    ஹோமங்கள் நடைபெறும் பொழுது, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையைத் தொடங்குவர்.

    வீடுகளில் மண்ணில் பிள்ளையார் செய்து, அதில் வண்ணம் தீட்டியும் வழிபாட்டுக்கு வைத்துக்கொள்வர். வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப் பிள்ளையார், வெள்ளருக்குப் பிள்ளையார் என்று பலவகை பிள்ளையார்களை மக்கள் வழிபடுவது வழக்கம். எந்த வகைப் பிள்ளையாருக்கு என்ன பலன் என்பதைப் பற்றியும், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். மண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால் அரச பதவி கிடைக்கும். அரசாங்க வேலை அமையும். புற்றுக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வியாபார விருத்தி ஏற்படும். வேப்பமரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். அரசமரத்தடியின் கீழ் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வாரிசு உருவாகும். கண்திருஷ்டி கணபதியை இல்லத்து முகப்பில் வைத்தால் திருஷ்டி தோஷம் போக்கும்.

    விநாயகருக்கு உகந்த ஆறு விரதங்கள்
    விநாயகர் சதுர்த்தி விரதம், குமாரசஷ்டி விரதம், சித்திவிநாயகர் விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகரை வழிபடக்கூடிய விரதங்கள் ஆகும்.
    ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி வரை விநாயகரை மனதில் நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதத்திற்கு விநாயகர் சதுர்த்திவிரதம் எனப்படு கிறது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

    வலை போக்கும் கணபதி ஜாதகம்
    தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் ஜாதகங்கள் இருக்கின்றன. அதில் கணபதி ஜாதகத்தைக் கையில் வைத்துக்கொண்டாலோ, பூஜையறையில் வைத்து வழிபட்டாலோ எண்ணிய காரியங்கள் எளிதில் கைகூடும். கணபதிக்கு அருகில் ஜாதகத்தை வைத்து கணபதி காயத்ரியைச் சொல்லி வழிபடுவது நல்லது.

  • எட்டு வகையான கிருஷ்ணர்கள்

     

     ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். அந்த 8 வகையான கிருஷ்ணரை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

     

    1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 

    2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 

    3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

    4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5 .ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 

    6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 

    7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன். 

    8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

     

     

     

  • ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

     

    பகவான் விஷ்ணுவின் தசாவதாரம் நமக்கு பல செய்திகளை தாங்கியுள்ளது. பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து கட்டியவர்.நரசிம்மர் தன்னை நோக்கி கூப்பிடுபவர் யாராக இருந்தாலும்,எந்த நேரத்திலும்,எங்கிருந்தும் தோன்றக் கூடியவர் என்ற நம்பிக்கையை பக்தர்களின் மனதில் விதைத்தவர். ராம அவதாரமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற மிகப்பெரிய  வாழ்க்கை தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது. இவை எல்லாவற்றையும் விட ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை மனதில் நினைக்கும் போதே குதூகலமும் ,உற்சாகமும் நம்முள் கரைபுரளும். அந்த அளவிற்கு தனது சுட்டித்தனமான லீலைகளாலும், குறும்பான விளையாட்டுக்களாலும்  நம் மனதை கொள்ளைக்கொண்டவன் அந்த கோகுல கண்ணன்.

    அவதார நோக்கம் என்னவோ, கம்சன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காக்க  தான் எனினும் அந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் ஆடிப்பாடி தானும் மகிழ்ந்து இருந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டவன் அந்த கண்ணன்.  அந்த தீராத விளையாட்டுப் பிள்ளை அவதரித்த தினமே ஸ்ரீ  கிருஷ்ண ஜெயந்தி.

    ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ,அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் படமோ அல்லது  சிலையோ  நன்றாக அலங்கரிக்கப்பட்டு . கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களான  வெண்ணெய், அவல் , பால் , திரட்டுப்பால் , பழங்கள், தயிர் , வெல்ல சீடை ,கார சீடை , கார வகைகள் நைவேத்தியம் செய்யப்படுகிறது. குசேலர் அளித்த ஒரு பிடி அவலுக்கு பதிலாக,பகவான் கிருஷ்ணர் செல்வத்தை அள்ளி தந்ததால் இந்தக் கொண்டாட்டத்தில் அவல் முக்கிய இடம் பிடிக்கிறது.கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, பாலக் கண்ணனின் கால் பாதங்களை வரைவார்கள்.

    சந்தான கோபால கிருஷ்ணனாக ,யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் பார்ப்பவர் மனதை கொள்ளைக்கொள்ளும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த சந்தான கோபால கிருஷ்ணனை  வணங்குபவர்களுக்கு, அவனைப் போலவே அழகான  புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆலயங்களில்  மட்டுமின்றி பலரது வீட்டில் பூஜை அறையிலும்  காணப்படும் ,கிருஷ்ணனின் தவழும் கோலமான பாலகிருஷ்ணன் அவரின் அடுத்த கண்கொள்ளா காட்சியாகும்.  வளரும் பருவத்திலேயே காளிங்கன் என்ற நாகத்தின் கர்வத்தை அடக்கி,அதன் மீது நர்த்தனம் புரிந்தவன்  காளிய கிருஷ்ணன். வாலிப பருவத்தில் , கேளிக்கை விளையாட்டுக்கள் இருந்தாலும் ,தன் மக்களை இந்திரன் தண்டிக்க அனுப்பிய, அடாது மழையில் இருந்து அவர்களை காக்க கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி ரட்சித்தான்.ராதா-கிருஷ்ணனாக தன் முன் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் நின்றிருக்கும் முரளீதர திருக்கோலம் தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. அஷ்ட புஜங்களை காட்டி  குழலூதும் மதனகோபாலன் கன்னியரின் தூக்கத்தைக் களைத்தவன்.பார்த்தனுக்கு சாரதியான அந்த  பார்த்தசாரதி,அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்து பார்த்தனுக்கு தத்துவ ஞானியாய் காட்சியளித்தவன்.

    மக்களின் நாயகனாக விளங்கும் அந்த கோபால கிருஷ்ணனின்  ஜென்மாஷ்டமியை கொண்டாடி மகிழ்வோம்.

     

  • மன அழுக்கை நீக்கிய கங்கா மாதா

     

    கங்கைக் கரையில் செருப்பு தைக்கும் ஒரு முதியவர்  தினமும் கங்கா மாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்கி தன் வேலையை ஆரம்பிப்பார். தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்  என்பதால் , அவர் தண்ணீரை   தீண்டினால் புனிதம்  கெட்டு விடும் என்று இந்த வழக்கம்.  

    அதே ஊரில் இருந்த பண்டிதர் ஒருவர் ,  தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே கங்கையில் இறங்கி நீராடி ,அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார்.

    ஒருநாள்  அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை அந்த முதியவரிடம்  கொடுத்து சரி செய்யச் சொல்ல, அவரும்   நன்றாகவே அதை  சரி செய்து கொடுத்தார்.

    அவரை  தொட்டால் தீட்டு என்று , பண்டிதர் ஒரு அணா  காசு விட்டெறிந்தார். அவர் பண்டிதரை  வணங்கி  ”சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன்.  நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும்  வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்” என்றார்.

    அவரோ,உன் காசு எனக்கு வேண்டாம். இதை என்ன செய்வது?  நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்கிறார்.

    ஐயா  இந்த ஏழைக்கு  ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா?   இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும்  வணங்குகிறேன் என்னால்  ஒன்றும் செய்ய இயலவில்லை.  நான் அளித்த காணிக்கையாக  நீங்களே  அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா.?என்று கிழவன் கேட்க ,என்ன சொல்கிறாய். இந்த ஓரணாவை  கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி என்று சொல்லி, பண்டிதர் கங்கையில் இறங்கினார். கங்கா மாதாவை வணங்கி,“ அம்மா கங்கா தேவி, இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள்  என்று சொல்லி வீசி எறிந்தார்.

    பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய  கை  வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக  அன்பாக  பெற்றுக் கொண்டது.  கங்கையின் முகம் தோன்றி, “பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த முதியவரிடம்  கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள்  பதித்து  ஒளி வீசிய    தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதர் ஆச்சர்யத்தில்  நடுங்கினார்.

    அதை தனது மேல் துண்டில் பத்திரமாக  முடிந்து வைத்து கொண்டு ,அந்த முதியவரிடம்  ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் தன் மனைவியிடம் கங்காதேவி தந்த வளையலை தந்தார்  பண்டிதர்.

    பேராசை பிடித்த அவன் மனைவி ,ராஜாவிடம்  அந்த வளையலைக் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வர ஆலோசனை சொன்னாள்.

    பண்டிதரும்  ராஜாவிடம் சென்று கொடுக்க ,  ராஜா  அதை வாங்கி பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை  நிறைய பொற்காசுகள் கொடுத்தார்.ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தார்.  மிகவும் மகிழ்ந்த  அந்த ராணி , ராஜாவிடம் அதன் ஜோடி எங்கே  என்று கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதரை அழைத்து வர செய்தார். 

     இன்னொரு வளையல் எங்கே? அதை ஏன் தரவில்லை? என்று கேட்க,  பண்டிதர் நடந்ததை சொல்ல தயங்கினார். ராஜா அணையிட உயிருக்கு பயந்த பண்டிதர் கங்கைக்கரைக்கு ஓடினார்.

     அந்த முதியவர்  வழக்கம்போல் அதிகாலையில்  கங்கைக் கரைக்கு  தூர நின்று இரு கரம் கூப்பி  கண்களை மூடி கங்கையை வணங்கினார். அருகிலே தேங்கி நின்ற நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டார். அது தான் அவருக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தார்.

     திடீரென்று தன்  முன்னே  பண்டிதர் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவருக்கு  ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.  “சாமி  நீங்க என்ன செய்றீங்க?என்ன ஆச்சு உங்களுக்கு?  நான் தானே  உங்களை எப்போவும் வணங்கறது?”என்று கேட்டார்.

    நடந்த விஷயத்தை சொன்னதும் , அந்த முதியவர் கண்ணை மூடி  தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினார்,  “அம்மா கங்கா  நீ எனக்கு பரிசாக ஒரு வளையல் கொடுத்ததற்கு  நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே.  பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்” என்று  தனது கையை அந்த ஜலத்தில் விட்டதும் ,  மீண்டும்  பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த அழுக்கு பாத்திரத்திலிருந்து தோன்றியது.

     பண்டிதர் அந்த முனிவரின்  கால்களை  கெட்டியாக பிடித்துக்கொண்டு  கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தார். சீடனாக அருகில் அமர்ந்தான். மனதில் இருந்த அழுக்கு நீங்கியது.

     

                                                                                      

     

  • கிருஷ்ண ஜெயந்தி விழா

    கிருஷ்ண ஜெயந்தி விழா

    கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.

     14-8-2017 (கிருஷ்ண ஜெயந்தி)

     ம்சன் என்னும் அரக்கன், தன்னுடைய தங்கைக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தான். இதனால் தங்கை தேவகியையும், அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். மேலும் அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாக கொன்றான்.

     7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் ஜனித்திருந்தார். மகாவிஷ்ணு, மாயாதேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்யச் சொன்னார். மேலும் மாயாதேவியையும், நந்தகோபரின் இன்னொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.

     எட்டாவதாக கிருஷ்ண பகவான் தேவகியின் கருவில் வளர்ந்து வந்தார். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் பிறந்தார். தங்களுக்கு பிறந்த குழந்தையை தேவகியும், வாசுதேவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

     அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘நீங்கள் இருவரும் சுதபா- பிருச்னி தம்பதியராக இருந்தபோது 12 தேவ ஆண்டுகள் என்னை நோக்கி தவம் இருந்தீர்கள். அதன் பயனாக நான் உங்கள் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். நீங்களோ, பரமாத்மாவாகிய நான் உங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் என்று கூறினீர்கள். அதன்படி நான் உங்களுக்கு பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாக பிறந்தேன். மறு பிறவியில் நீங்கள் காஷ்யபர்- அதிதி தம்பதியராக இருந்தபோது உபேந்திரன் என்ற பெயரில் மகனானேன். இப்போது கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்துள்ளேன்.

     இனி உங்களுக்கு பிறப்பு கிடையாது. நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியதுதான். கம்சனிடம் இருந்து உங்களை விடுவிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் குழந்தையாக மாறி விட்டார்.

     கிருஷ்ணர் அவதரித்த நன்னாளை உலகம் முழுவதும் மக்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த புண்ணிய நாளில் கிருஷ்ணரின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். மேலும் அவருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை வைத்து வழிபடுவது சிறப்பு தரும். அதனை கண்ணன் நள்ளிரவில் வந்து ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம். இதற்காகவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டு வாசலில் இருந்து வீட்டுக்குள் பூஜை அறை வரை, கண்ணனின் கால் தடங்களை பதித்து வைப்பார்கள். பகலில் விரதம் இருந்து, இரவில் வழிபாட்டை முடித்தபின் உணவு உண்பது உத்தமம். பின்னர் இரவு முழுவதும் கண்விழித்து பஜனை செய்து விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வின் தேவைகள் பூர்த்தியாகும். எண்ணியவை ஈடேறும். 

     

  • அஷ்டலிங்க வழிபாடு!

     

    நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.
    திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும். கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
    இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான். இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.

    1. இந்திர லிங்கம்:
      கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது. அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    2. அக்னி லிங்கம்:
      கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.
    3. எம லிங்கம்: கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.
    4.  நிருதி லிங்கம்: கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.

    5.வருண லிங்கம்: கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    6.வாயு லிங்கம்: கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.

    7. குபேர லிங்கம்: கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.

    8.ஈசானிய லிங்கம்: கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது. இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.

     

  • அஷ்டலிங்க வழிபாடு!

    அஷ்டலிங்க வழிபாடு

    நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால், அனைத்து பலன்களும் கிடைக்கும். கிரிவலம் செல்வோர் இந்த லிங்கங்களை வழிபடுவது மிகவும் அவசியம். மகான்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்த இந்தப் புண்ணியத் தலத்தில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டுமே என்று நினைப்போரும் உண்டு. இதனால் தான் நாள்தோறும் ஏராளமானோர் இங்கு வருகை தந்து, அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.
    திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் நன்மைகள் சேரும்; தீமைகள் விலகும். கிரிவலப் பாதையில் எண்ணற்ற கோயில்கள், மடங்கள், ஆசிரமங்கள் நிரம்பியுள்ளன. இங்கேயே அஷ்ட லிங்கங்களும் உள்ளன.
    இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என்று 8 லிங்கங்கள் ஒவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள், புண்ணியங்கள் உள்ளிட்டவற்றை எமனிடம் அளிப்பது இந்த அஷ்ட திக் பாலகர்கள் தான். இவர்களே அண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களாக அமைந்திருந்து பூமியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த லிங்கங்கள் மனிதனுடைய ஒவ்வொரு காலகட்டத்தைக் குறிக்கின்றன. இவற்றை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு நன்மைகள் பயக்கும்.

    1. இந்திர லிங்கம்:
      கிரிவலம் வரும் வழியில், கோயிலின் கிழக்கு கோபுரத்துக்கு அருகே கிழக்கு திசையில் இந்திர லிங்கம் உள்ளது. தேவர்களின் தலைவரான இந்திரன் தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்ள திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்துள்ளார். அப்போது கிழக்குத் திசையில் ஒரு இடத்தில் வந்தபோது மின்னத் தொடங்கியுள்ளது. அப்போது அண்ணாமலையாரின் திருஅருள் என்பதை அறிந்த இந்திரன் தனது பதவி நிலைக்க சிவனிடம் வேண்டினார். அப்போது இந்திரனுக்கு சுயம்பு லிங்கமாக சிவன் காட்சியளித்தார். இதுவே இந்திர லிங்கமாகும். இந்திர லிங்கத்தை வழிபட்டால் திருமகளின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணிமாற்றம், பணிப் பாதுகாப்பு உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    2. அக்னி லிங்கம்:
      கிரிவலப் பாதையில் இரண்டாவதாகவும், வலது புறத்தில் உள்ளது அக்னி லிங்கம். தென்கிழக்குத் திசை பஞ்ச பூதங்களில் அக்னி தலமே திருவண்ணாமலை என்பதால், இந்த லிங்கத்துக்கு தனி இடம். வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது. அக்னி லிங்கத்தின் கீழ் திசையில் அக்னி தீர்த்தம் உள்ளது. எதிரில் இருப்பது அக்னி மண்டபம். அக்னி லிங்கத்தின் அருகேயே ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. கிரிவலப் பாதையில் 3 ருத்ர மூர்த்திகள் அங்கப் பிரதட்சிணம் செய்தனர். அவர்களின் திருமேனிகள் ஜோதியாக மாறியது. ஒரு செவ்வாய்க்கிழமை அவர்கள் கிரிவலம் வந்தபோது, குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது பனிமலை போன்ற குளிர்ச்சியை உணர்ந்தனர். அந்த இடமே சுயம்பு லிங்கமான அக்னி லிங்கம் என்கிறது ஆலய வரலாறு. அக்னி லிங்கத்தை வழிபட நோய்கள், பயம் நீங்கும். எதிரிகள் தொல்லை எரிந்து சாம்பலாகும்.
    3. எம லிங்கம்: கிரிவலப் பாதையில் மூன்றாவதாக உள்ளது எம லிங்கம் ஆகும். தெற்கு திசைக்குரியது. தென் திசையில் எம தீர்த்தம் உள்ளது. எமன் திருவண்ணாமலையில் அங்கப் பிரதட்சிணம் செய்தபோது, அவரது பாதம் பட்ட அடிச்சுவடுகள் எல்லாம் தாமரைப் பூக்களாக மாறின. அந்த இடத்தில் செம்பொன் பிரகாசமாக ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எம லிங்கம். பூமியில் உள்ள மனிதர்களின் ஆயுள் முடியும்போது அவர்களின் உயிரை எடுக்கச் செல்லும் எம தூதர்கள் வானுலகில் இருந்து பூமிக்கு வந்து, இங்கு வழிபட்ட பின்னரே உரிய பகுதிக்குப் பயணிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. எமலிங்கத்தை வழிபட்டால் எம பயம் நீங்கும். நீதி நெறி நிலைக்கும். பொருள் வளம் பெருகும்.
    4.  நிருதி லிங்கம்: கிரிவலப் பாதையில் நான்காவதாக நிருதி லிங்கம் உள்ளது. இதன் திசை தென்கிழக்கு. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. மண் என்ற வார்த்தையின் தூய தமிழ்ப் பெயர் நிருதி ஆகும். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான நிருதீஸ்வரர் கிரிவலம் வந்தபோது. குறிப்பிட்ட இடத்தில் குழந்தையின் ஒலியும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அப்போது நிருதீஸ்வரர் அங்கு நின்று, அண்ணாமலையாரை வணங்கினார். அண்ணாமலையார் தோன்றிய இடமே நிருதி லிங்கம். இந்த இடம், சிவன் பார்வதிக்கு காட்சியளித்த இடம். இங்கிருந்து பார்த்தால் அண்ணாமலையின் வடிவம் சுயம்புவான ரிஷபமாகத் தெரியும்! நிருதி லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். மகப்பேறு கிடைக்கும். ஜன்ப சாபம் நீங்கும். புகழ் வந்து நிலைக்கும்.

    5.வருண லிங்கம்: கிரிவலப் பாதையில் ஐந்தாவதாக உள்ளது வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். அஷ்ட திக் பாலகர்களில் ஒருவர், மழைக்கு அதிதேவதையாகிய வருண பகவான். இவர் முட்டிக் கால் போட்டும், ஒற்றைக் காலால் நொண்டியும் கிரிவலம் வந்தார். அப்போது ஓரிடத்தில் வானத்தைத் தொடும் அளவுக்கு நீருற்று எழுந்தது. அந்நீரைத் தெளித்து அண்ணாமலையாரை வணங்கிட, அங்கு வருண லிங்கம் தோன்றியது!. வருண லிங்கத்தை வழிபட்டால் சிறுநீரக நோய்கள், சர்க்கரை நோய், நீர் சார்ந்த சகல நோய்கள், கொடிய நோய்கள் நீங்கும். உடல் நலம் செழிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    6.வாயு லிங்கம்: கிரிவலப் பாதையில் ஆறாவதாக வாயு லிங்கமும் இதன் அருகே வாயு தீர்த்தமும் உள்ளது. வடமேற்கு திசைக்குரியது. வாயு பகவான் சுழிமுனையில் சுவாசத்தை நிலைகொள்ளச் செய்தவாறு கிரிவலம் வந்தார். அப்போது அடி அண்ணாமலையைத் தாண்டியதும், ஓரிடத்தில் நறுமணம் வீசியது. அங்கே பஞ்சகிருத்திகா செடியின் பூக்கள் மலர்ந்த நேரத்தில் சுயம்புவாக வாயு லிங்கம் உருவானதாக வரலாறு. வாயு லிங்கத்தை வழிபட்டால் சுவாசம் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் குணமாகும். பெண்களுக்கு நலமும், மன நிம்மதியும் உண்டாகும். கண்திருஷ்டி நீங்கும்.

    7. குபேர லிங்கம்: கிரிவலப் பாதையில் உள்ள ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். வடதிசைக்குரிய இந்த லிங்கத்தின் அருகே குபேர தீர்த்தம் உள்ளது. குபேரன் கண் மூடி தியானித்து, தலை மீது கரம் குவித்தவாறு குதிகாலால் கிரிவலம் வந்தார். அப்படி பல யுகங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திருமாலும், மகாலட்சுமியும் அண்ணாமலையை சக்கரபாணி கோலத்தில் தரிசனம் செய்வதைக் கண்டார். அந்த இடத்தில் உண்டான லிங்கமே குபேரலிங்கம் என்கின்றனர். முறையற்ற வழியில் பணம் சேர்த்தவருக்கு பிராயசித்த ஸ்தலம் குபேர லிங்கம். குபேர சம்பத்து தரும் இடம் இது. இங்கு வழிபட்டால் செல்வம் சேரும்.

    8.ஈசானிய லிங்கம்: கிரிவலத்தில் எட்டாவது லிங்கமாக இருப்பது ஈசானிய லிங்கம். இது வட கிழக்கு திசைக்குரியது. அதிகார நந்தி எனப்படும் நந்தி பகவான் கிரிவலம் வந்தபோது, அண்ணாமலையின் தரிசனம் இந்த இடத்தில் கிட்டியதாக தெரியவருகிறது. இங்கு வழிபட்டால் சனித் தொல்லையிலிருந்து விடுபடலாம். இங்கு தியானித்தால் நன்மைகள் சேரும். தவம் பலிக்கும். சிவனின் அருள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.