Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • குருப் பெயர்ச்சி 2017 -பொதுப் பலன்கள்

     

    குரு காயத்ரீ மந்திரம்

     

    ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

     

    குரு ஸ்லோகம்

     

    தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

     

    பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

     

    இவர் தான் குரு பகவான்

    சொந்த வீடு – தனுசு, மீனம்

    உச்சராசி – கடகம்

    நீச்சராசி – மகரம்

    திசை – வடக்கு

    அதிதேவதை – பிரம்மா

    நிறம் – மஞ்சள்

    வாகனம் – யானை

    தானியம் – கொண்டைக்கடலை

    மலர் – வெண்முல்லை

    வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை

    ரத்தினம் – புஷ்பராகம்

    நிவேதனம் – கடலைப்பொடி சாதம்

    உலோகம் – தங்கம்

    இனம் – ஆண்

    உறுப்பு – தசை

    நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்

    பகைகிரகம் – புதன், சுக்கிரன்

    மனைவி – தாரை

    பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்

    பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்

     

     சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி நவக்கிரகங்களில் முழு சுப கிரகமாக திகழ்பவர் . நம்முடைய  வாழ்வில் எல்லா  விதமான செல்வங்களையும் வியாழ பகவான்  என்ற குரு பகவான் வழங்கிறார். வாழ்க்கையில் பணம், குழந்தை செல்வம் ஆகிய  முக்கியமான இரண்டு செல்வங்களை  அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்றவர் குரு பகவான்..

     

    குரு பார்வை கோடி நன்மை

     

    ஒருவர்  வாழ்வில் திருமணம் மிக  முக்கியமானது. அந்த திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக திகழ்பவர் குரு பகவான். குரு பார்வை அமைந்து விட்டால் திருமணத்துக்கு உரிய காலம் அமைந்து விட்டது என்று கருதலாம். குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவின் ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

     இந்தாண்டு  இன்று செப்டெம்பர் இரண்டாம் தேதி குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு ஸ்ரீ ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ம் தேதி – 04.09.2018 – வியாழக்கிழமையன்று மாறுகிறார். துலா ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கும்ப ராசியையும் – ஏழாம் பார்வையால் மேஷ ராசியையும் – ஒன்பதாம் பார்வையால் மிதுன ராசியையும் பார்க்கிறார்.

    :

    2017 குரு பெயர்ச்சியினால் நன்மை பெறும் ராசிகள்: மேஷம் – மிதுனம் – கும்பம்

    2017 குரு பெயர்ச்சியினால் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கடகம் – கன்னி – துலாம் – தனுசு – மகரம்

    2017 குரு பெயர்ச்சியில் பரிகாரத்தின் மூலம் பயன்பெறக்ககூடிய  ராசிகள்: ரிஷபம் – சிம்மம் – விருச்சிகம் – மீனம்

     

    பொது பலன்கள்:

    கன்னி ராசியிலிருந்து  துலா ராசிக்கு இடம் பெயர்கிறார் குரு பகவான் . துலாம் என்பது வியாபாரம் சம்பந்தபட்ட ராசியா. இந்த ராசிக்கு அதிபதி அசுர குருவாகிய சுக்கிரன் ஆவார். சுக்கிரன் அழகு – கவர்ச்சி – ஆடம்பரம் – பொருள் – பணம் – வசதி – வெண்மை ஆகிய விஷயங்களுக்கு அதிபதியாவார். இந்த சுக்கிரனுடன்  அசுர குருவாக இருந்தாலும் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது அற்புதமான  பலன்களை அள்ளித் தருவார். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை,  அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும்.

     

    குருவை வணங்கி வாழ்வை மேம்படுத்தி உயர்வோம்

     

    ஓம் குருவே நமஹ ….

  • அரசருக்கு அறிவுறுத்திய விநாயகர்

     

    அரசர்  ஒருவர்  அளவுக்கு மீறிய  மிகுந்த அகந்தையும், ஆணவமும் கொண்டராக  இருந்தார். ஒரு சமயம் நாரதர் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவரை அலட்சியம் செய்தார் அரசர். இருந்த போதிலும்  நாரதர் அரசரிடம், “”மன்னா! பகவான் திருவருளால் உன் நாடு செழிப்பதாக!” என்று வாழ்த்தினார். அதைக் கேட்டு சிரித்த அரசர், “”என்ன சொல்கிறீர் நாரதரே! பகவான் அருளால் என் நாடு செழிக்க வேண்டுமா? நான் நல்ல முறையில் நிர்வாகம் செய்கிறேன். என்னால் தான் எல்லாம் நடக்கிறது. இதில் பகவானுக்கு என்ன வேலை?” என்று ஏளனமாக சொன்னார் . அரசரது  பேச்சில் ஆணவம் இருந்ததைக் கண்ட நாரதர், அவருக்கு  புத்திமதி சொல்லிவிட்டு, கவுண்டின்ய மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்றார். அங்கு மகரிஷி நடத்திய விநாயகர் பூஜையில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பினார்.  

     

    வழியில் விநாயகரைக் கண்டார் நாரதர். அவரது முகக்குறிப்பை அறிந்த விநாயகர், “”நாரதரே! உம் முகத்தைப் பார்த்தால் என் உதவி தேவைப்படுவது போலத் தெரிகிறதே!” என்றார்.நாரதர் அரண்மனையில் நடந்ததைச் சொன்னார். அரசருக்கு புத்தி புகட்ட விநாயகர் அந்தணனாக உருவெடுத்து, அரண்மனைக்குச் சென்றார். தனக்கு மிகவும் பசிப்பதாகச் சொல்லி உணவு கேட்டார். அரசர் அவரிடம், “”அந்தணனே! அன்ன சாலைக்குச் சென்று வயிறார சாப்பிட்டு விட்டுப் போ,” என்றான். அங்கு அவருக்கு சமையற்காரர்கள் விதவிதமான உணவுகளைப் பரிமாறினர். அவை அனைத்தையும் ஒரு பிடிபிடித்தவர், 

     

    “உம்… இன்னும் என்ன இருக்கிறது? கொண்டு வாருங்கள்! எனக்கு இன்னும் பசி தீரவில்லை,” என்றார். அவர்கள் சமைத்து வைத்திருந்த உணவு முழுவதையும் அவருக்கு பரிமாறினர். ஊஹும்… அவர் கொஞ்சமும் பசியாறியதாகத் தெரியவில்லை. மேலும் சமைக்க வைத்திருந்த அரிசி, தானியங்களையும், அங்கு தோட்டத்தில் விளைந்த காய், பழங்களையும் சாப்பிடக்கொடுத்தனர். அதை சாப்பிட்டும் அவரது பசி நீங்கவில்லை. மிரண்டு போன சமையற்காரர்கள், பயத்தில் ஓட்டம் பிடித்தனர். நடந்ததை அறிந்த அரசர் அன்னம் பரிமாறும் இடத்திற்கு வந்தான். அவரிடம் அந்தணர், “என்ன மகாராஜா, யானைப்பசிக்கு சோளப்பொரியா? நீ பரிமாறிய உணவு எனக்கு போதவில்லையே!’”என்றார்.

     

    அரசர் ஆத்திரத்தில்,“அந்தணனே, இங்கு மேலும் உனக்கு உணவு தர முடியாது. உன் பசி தீர்க்கும் இடம் பார்த்து நீ செல்லலாம்!” என்று கத்தினான். “நல்லாட்சி நடக்கிறது. என் நிர்வாகத்தில் மக்களுக்கு ஒருகுறையும் இல்லை. என்னால் எல்லாம் முடியும் என்று வீண் தம்பட்டம் பேசுகிறாயே! உன்னால் என் பசியைக் கூட போக்கமுடியவில்லையே” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து  கிளம்பியவர், தன் பக்தன் திரிசுரன் வீட்டிற்குச் சென்றார்.  அங்கு திரிசுரனும், அவன் மனைவி விரோசனையும் விநாயகர் பூஜையில் இருந்தனர். 

     

    அவனது வீட்டு வாசலில் நின்றவர், “ஐயா! எனக்குப் பசிக்கிறது. சிறிது உணவிருந்தால் போடுங்கள்!” என்று யாசகம் கேட்டார். அவரிடம், “ஐயா! தங்களுக்கு கொடுப்பதற்கு தற்போது எங்களிடம் ஏதுமில்லை. இனிமேல்தான் சமையல் செய்யப்போகிறேன்,” என்றாள் விரோசனை.ஆனால், திரிசுரனுக்கு வந்தவரை வெறும் கையாக அனுப்ப மனமில்லை. தன் கையில் விநாயகர் பூஜைக்காக வைத்திருந்த அருகம்புல்லை கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட அந்தணர், வாயில் போட்டுக் கொண்டார். அந்த கணமே அவரது வயிறு நிறைந்தது.இவ்வேளையில் அரண்மனைக்கு அந்தணனாக வந்தது யார் என அறிய, அவரைத்தேடி திரிசுரன் வீட்டிற்கு வந்தான் அரசர். அங்கு இருவருக்கும் விநாயகர் சுயரூபம் காட்டினார். “”திரிசுரனின் உண்மையான பக்திக்கு கட்டுப்பட்டு சாதாரண அருகம்புல் கூட விநாயகரின் பசியைப் போக்கிவிட்டதே! என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று ஆணவத்தால் அறிவை இழந்து விட்டேனே!” என விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார் அரசர்.

     

  • சிரிக்கும் பெருமாள்… வியர்க்கும் திருமுகம்!

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்திருக்கிறது  நாம மலை. இந்த மலையின் மீது ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அழகுறக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், ஸ்ரீநிவாசப் பெருமாள்.

    ராமாயண காலத்தில் இலங்கையில் இருந்து வான் மார்க்கமாக ராமர், சீதை மற்றும் விபிஷணன் ஆகியோர் அயோத்தி செல்லும் போது, அவர்கள் சென்ற ரதத்தின் நிழல் விழுந்த இடங்களில் ஒன்றுதான், ஸ்ரீநிவாசப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம் என்கிறார்கள்.  இதன் மகிமையை உணர்ந்த கிருஷ்ண தேவராயர், 16-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தக் கோயிலை நிர்மாணித்தாராம்.

    மூலிகைக் கற்களைக் கொண்டு, திருப்பதியில் பெருமாள் காட்சி தரும் அதே திருக் கோலத்திலேயே இங்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருளாட்சி செய்வது, கண்கொள்ளா காட்சி! மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பூஜையின்போது மூலவர் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பதைக் காணலாம் என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொள்ளும்  பக்தர்கள், ‘‘தரிசிக்கும் தருணத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு  ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் ஸ்வாமி இவர். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்… நமது வேண்டுதல் நியாயமானதா இல்லையா என்பதை!’’ என்று பரவசம் பொங்கச் சொல்கிறார்கள். 

    நாம மலையில் மிகப்பெரிய அளவில் பாறைகளால் ஆன குளம் போன்ற ‘பாலி’ ஒன்று காணப்படுகிறது. இந்த பாலியின் தீர்த்த நீர் அதிகளவு அடர்த்திகொண்டதாம். இதில், ராமனும் சீதையும் நீராடியதாக நம்பிக்கை. அதேபோல் அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.

    ஒருமுறை இந்தக் கோயிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை’’ என்றாராம். அந்தக் குறையைக் களையும் விதம், ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர், பக்தர்கள். வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டு தலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்துபோனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.

    இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர். துளசி, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றையும் தனித்தனி சீட்டுகளில் பொதிந்து சந்நிதியில் வைத்து, குழந்தைகள் மூலம் சீட்டுகளை எடுத்து பார்க்கின்றனர். அதில் துளசிச் சீட்டு வந்தால் நினைத்தது உடனே நிறைவேறும்; மஞ்சள் வந்தால் காரியத்தில் சற்று நிதானம் வேண்டும் என்று அர்த்தமாம்.
    வாழ்நாளில் ஒரு முறையாவது  திருப்பதி சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் பொருளாதாரம், வயது முதிர்வு போன்ற காரணங்களால் திருப்பதி சென்று பெருமாளை வணங்காமல் தவித்து மருகும் அன்பர்களும் உண்டு. அப்படியான பக்தர்களுக்கு, திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணிய பலனை தந்தருளும் நாமமலை ஸ்ரீநிவாசப் பெருமாளை நீங்களும் ஒருமுறைத் தரிசித்து வாருங்களேன்; உங்கள் வருங்காலம் சிறக்கும், வாழ்க்கைச் செழிக்கும்!

     

  • ஐவ்வகை நந்திகள்!

    ஐவ்வகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர். ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம்பெற்றிருக்கின்றன.

    நந்திகளின் வகை

    கைலாச நந்தி

    கைலாச நந்தி என்பவர் சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் ஒருவராவர். இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப்பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்து.

    அவதார நந்தி

    அவதார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

    அதிகார நந்தி

    அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

    சாதாரண நந்தி

    சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

    பெரிய நந்தி

    தஞ்சை பிரகதீஸ்வர் கோவிலில் உள்ள பெரிய நந்தி

    பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

     

     

  • பதினாறு சம்பத்துக்களையும் அள்ளித்தரும் கோ பூஜை

     

     

    நமது இந்து மதத்தில் கோமதாவாகிய பசுவை வணங்குவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

     பசுவின் உடல் முழுவதும் தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேவர்கள் வசிக்கின்றனர். அதனால் தான் பசுவை வலம் வந்து வணங்கினால் முப்பது முக்கோடி தேவர்களை வணங்கின புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள்.

    பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக  ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்.

    கோ பூஜை செய்யும் போதும், பசுவின் முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும். அதிகாலையில் பசுஞ்சாணத்தை கொண்டு வீட்டு வாசலை மெழுகி ,கோலம் இட்டால் , மகாலட்சுமி நம் வீடு தேடி வருவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன என்று புராணங்கள் கூறுகிறது. பசுவின் கோமயம் எனப்படுகின்ற சாணம்,கோமியம் எனப்படுகிற மூத்திரம்,  பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு செய்யப்படுகிற  பஞ்சகவ்ய அபிஷேகம்  மிகவும் விசேஷமானது. திருமகள் வாசம் செய்யும் இதன் பின்பாகத்தை  தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

    கோமாதாவின்  உடற் பகுதியில் உறையும் தெய்வங்களைப் பற்றியும், தேவகணங்களைப்  பற்றியும் நமக்கு தெரிந்த சில ,தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொள்வோம்.

    கோமாதாவின்  முகம் மத்தியில்  -சிவன்

     வலக் கண் – சூரியன்

    இடக் கண் – சந்திரன்

    மூக்கு வலப்புறம் – ஆறுமுகக் கடவுள் முருகன்

    மூக்கு இடப்புறம் – முழு முதற்கடவுள் விநாயகர்

    காதுகள் – அஸ்வினி குமாரர்

    கழுத்து மேல்புறம்  – ராகு

    கழுத்து கீழ்புறம்  -கேது

    கொண்டைப்பகுதி –நான்முகன்  பிரம்மா                    

     முன்கால்கள் மேல்புறம் – கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்

     முன்வலக்கால் –  பைரவர்      

    முன் இடக்கால் –  சல்லின் செல்வர் ஹனுமார்

     பின்னங்கால்கள் –  பராசரர், விஷ்வாமித்திரர்

     பின்னகால் மேல்பகுதி – நாரதர், வசிஷ்டர்

    பிட்டம் கீழ்ப்புறம் –  கங்கை

    பிட்டம் மேல்புறம் – திருமகளான லக்ஷ்மி

    முதுகுப்புறம் – பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி  

    வயிற்றுப்பகுதி – ஜனககுமாரர்கள் பூமாதேவி

    வால் மேல் பகுதி – நாகராஜர்

    வால் கீழ்ப்பகுதி – ஸ்ரீமானார்

    வலக்கொம்பு – வீமன்

    இடக்கொம்பு – இந்திரன்

    முன்வலக்குளம்பு – விந்தியமலை

    முன்இடக்குளம்பு – இமயமலை

    பின் வலக்குளம்பு – மந்திரமலை

    பின் இடக்குளம்பு -த்ரோணமலை

    பால்மடி – அமுதக்கடல்

     

     முப்பத்துமுக்கோடிதேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் ஆட்சி செய்யும் பசுவை காலையில் எழுந்ததும் தொழுவத்தில் காண்பது சுபசகுனமாக கருதப்படுகிறது.

    கோபூஜையை செய்வதால் சகல சம்பத்துக்களும், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதால் கோமாதாவை வணங்கி பதினாறு செல்வத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.

  • முருகன் அழித்த ஆறு பகைகள் எது ?

     

    சரவணப் பொய்கையில் உதித்தவன் ஆகையால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான். மயிலில் சஞ்சரிப்பவன் என்பதால்  முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.

    சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய நாட்கள் முருகப் பெருமானுக்கு  உகந்த நாட்கள் ஆகும். முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். முருகனின் மூலமந்திரம் ஓம்சரவணபவாய நம என்பதாகும்.

    நம் அனைவரின் மனதிலும் நீங்கா புகழ்ப் பெற்ற கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

    பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகனுக்கு உள்ளது. அது பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில்முருகனை மட்டுமே காண முடியும்.

    ஆறு முகனான முருகன் அழித்த ஆறு பகைவர்கள் வேறு எங்கோ இல்லை. நம் மனதில் உறைந்திருக்கும் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் தான்.

     முக்கண்ணன் மகன் ஆறுமுகன் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். அவை ,சூரபத்மனை வதம் செய்த திருச்செந்தூர், தாரகாசுரனை வதம் செய்த திருப்பரங்குன்றம், சிங்க முகாசுரனை வதம்செய்த போரூர் ஆகும்.

    சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் ஏற்பட்ட பள்ளம்,இன்றும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் இருப்பதைக் காண முடியும்.

    ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகத்தை  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஓதினால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    முருகப்பெருமானின் வலப்புற ஆறு கரங்களில் அபயகரம்,கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புற ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் காணப்படுகிறது.

     ஈரோடு அருகே வெண்ணைமலையில்  முருகன் தன்னந்தனியனாகத்  தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார்.

    கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்த முருகனின் பெருமைகளை பாராட்டி  இறைபணிச் செய்தவர்கள்  அகத்தியர், அருணகிரி நாதர், ஒளவையார், பாம்பன் சுவாமிகள், அப்பர் அடிகளார், நக்கீரர், முசுகுந்தர்,சிகண்டி முனிவர், குணசீலர், முருகம்மையார்,திருமுருக கிருபானந்த வாரியார், வள்ளிமலைச் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார் ஆவார்கள்.

    திருப்பங்குன்றத்தில் உள்ள பிரம்மகூபம் என்ற சந்தியாசிக் கிணற்று நீரைத்தான் முருகப் பெருமானின்  அபிஷேகத்திற்காகப் பயன்படுகிறது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

    திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பது சிறப்பாகும்.

     கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

    முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர் என்கிறது புராணம்.

    கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை,சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம் ஆகியவை தமிழகத்தில் முருகனுக்குக்கான குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் ஆகும்.

    மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ள பத்துமலை என்ற பெரியமலை மீது உள்ள முருகன் கோயில் மிக விசேஷம்.

     

                                                                                  

    முருகப் பெருமானுக்காக முதலாம் ஆதித்த சோழன் கட்டிய திருக்கோவில் புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூரில் உள்ளது. இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

    நான்முகனுக்குப் பதில் முருகன் சிறிது காலம் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார் என்பதை  உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

    சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ள  சிறுவாபுரி முருகனுக்கு ,புதுமனை புகுவோர் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

    வேறு எங்கும் இல்லாதபடிக்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தரும் முருகன் பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு கோவிலில் காட்சி தருகிறார்.

    வேலுண்டு வினையில்லை …

    மயிலுண்டு பயமில்லை…

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள்( காரைக்கால் அம்மையார்)

     

     

    ஈசன் ‘அம்மையே’ என்று அழைக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார்

     

    சிவமே மூச்சாக வாழ்ந்த நாயன்மார்களில் முதன்மையானவரான  காரைக்கால் அம்மையார், மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். இவர் புனிதவதி என்ற இயற் பெயர் கொண்டவர்.

    சோழமண்டலத்தில் அமைந்த காரைக்காலில் வைசியர் குலத்திலே, தனதத்தன் என்பவரின் மகளாக பிறந்த  புனிதவதியார் , சிறுவயது முதல் சிவபக்தியில் தன்னை கரைத்துக் கொண்டார்.

    பருவமடைந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து ,நாகப்பட்டணத்தில், நிதிபதி என்பவருடைய மகனான பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தார் தனதத்தன். பரமதத்தனும், புனிதவதி அம்மையாரும் சிறப்புற இல்லறம் நடத்தி வந்தனர்.

    ஒருநாள் பரமதத்தனிடம் வணிகம் செய்ய வந்த  சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கள் கொடுக்க , அவன் அவைகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான்.

    சிவனடியார் ஒருவர்  உணவு நேரத்தில் புனிதவதியார் வீட்டிற்கு சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு,அமுது படைத்து அச்சிவனடியாருக்கு கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை படைத்தார்.உணவு உண்டு ,அம்மையாரை வாழ்த்திச் சென்றார் அவ்வடியார்.

    பின், பரமதத்தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ணும் பொழுது,அம்மையார்  எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருப்தியடையாமல் மனைவியாரை நோக்கி, “மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை” என்றான்.

    இன்னொரு மாங்கனியை சிவனடியாருக்கு படைத்துவிட்ட நிலையில், புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், ஒரு மாங்கனி அவர் கையில் விழுந்தது. அதைக் கொண்டுவந்து, கணவனுக்குப்  படைக்க,அவன் அதை உண்டு, “இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்” என்றான்.

     

                                                                                

    புனிதவதியார் அதைக்கேட்டு, கணவனிடம் உண்மையை மறைப்பது அறம் ஆகாது என்று எண்ணி,”நீர் தந்த கனிகளில் ஒன்றை சிவனடியார் ஒருவருக்கு கொடுத்து விட்டமையால், , பரமசிவனைத் தியானித்து,அவருடைய திருவருளினால் இந்தக் கனி கிடைத்தது” என்றார்.

    இதை பரமதத்தன்  நம்பாததினால் அம்மையார் பரமசிவனைத் துதிக்க , ஈசன் திருவருளினாலே ஒரு மாங்கனி அவர் கையில் வந்து விழுந்தது.இதனால் அவன் மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று அவரை விட்டு நீங்கினான். 

    பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒரு வைசியனுடைய மகளை திருமணம் செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான்.

    தன் கணவன் மீண்டும் வருவார் என காத்திருந்த புனிதவதியார், உறவினர்கள் மூலம் இந்த தகவலைத் தெரிந்துக் கொண்டார். கணவனுடன் வாழ முடியாத தனக்கு இனி இளமையும் அழகும் வேண்டாம் என்றும் ,ஈசனைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை தந்தருளல்வேண்டும் என்றும் இறைவனை  பிரார்த்தித்தார்.

     அந்தக்கணமே  அக்கடவுளுடைய திருவருளினாலே, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள்.

     ஈசன் அருளால் பேய் வடிவை பெற்ற புனிதவதியார், ஈசனை நினைத்து ஆலயம் பல சென்று பாடல் பாடி துதித்தார். புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத் திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போக விரும்பினார்.

    திருக்கைலாசகிரியை அடைந்த அவர் , அங்கே காலினால் நடத்தல் கூடாது என்று எண்ணி , தலையினாலே கைகள் கொண்டு நடந்துபோய், மலையிலேறினார். புனிதவதியாருடைய பக்தியைக் கண்டு உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தார். நந்தி தேவரும்  புனிதவதியாரின் சிவ பக்தி கண்டு வியந்து வணங்கி வரவேற்றார்.

     

    புனிதவதியாரைக் கண்ட சிவ பெருமான் ,அவரை நோக்கி, “அம்மையே வருக” என்று அழைத்தார். புனிதவதியாரும்  “அப்பா” என்று சொல்லிக் கொண்டு பரமேஸ்வரன் திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, “உனக்கு என்ன வரம் வேண்டும் ” என்று கேட்டார்.

    புனிதவதியார் வணங்கி நின்று, “சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்.” என்ற வரம் கேட்டார்.

     

    சுவாமி அவரை நோக்கித் “தென் திசையில் உள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு” என்று அருளிச்செய்தார். காரைக்கால் அம்மையார் ,சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்.

     

    திருச்சிற்றம்பலம் …..

     

  • அல்லல் தீர்க்கும் விநாயகரை வணங்குவோம்

     

    நாம் எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் விக்கினங்கள் இல்லாமல் இருக்க அந்த விக்னேஸ்வரனை வணங்கி வழிபட்டால் , எடுத்த காரியம் யாவிலும் வெற்றி தான்.

    கணக்கெடுத்துப் பார்த்தால், நம் ஊரில் விநாயகருக்கு இருப்பது போல் கோவில்கள் வேற எந்த தெய்வத்திற்கும் இல்லை எனலாம். கணபதிக்கு கோவில் எழுப்ப பெரிய நிலபுலங்கள் தேவையில்லை. தெரு முக்கு மற்றும் அரச மர நிழலாக இருந்தாலும்,தன்னை  உண்மையான அன்போடு கூப்பிடும் பக்தருக்காக எழுந்தருளக்கூடியவர்.

     விண்ணுலகும், கீழான  பாதாள லோகமும், நாம் இருக்கும் இந்த பூவுலகு என மூவுலகிற்கும் கணபதி தான்  முழுமுதற் கடவுள். உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் அவரை போற்றிப் பாடுகின்றன  பக்தி நூல்கள்.

     

    முழுமுதற் கடவுள்  பற்றிய முத்தான தகவல்கள் :

     

    ஆலயங்களில் மகா கணபதியாகவும். மலை உச்சியிலும் உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகராகவும் போற்றப்படுகிறார். 

     

    திருச்சியில் மலையின் உச்சியில் ஸ்ரீஉச்சிப்பிள்ளையாரைப் போல கும்பகோணத்திலும் கட்டுமலை போன்ற அமைப்பு ஒன்றை உண்டாக்கி அதன் மீது விநாயகர் ஆலயத்தை அமைத்துள்ளனர். இவருக்கும் உச்சிப்பிள்ளையார் என்று தான்பெயர்.  

     

    மண்ணின் கீழே பாதாளத்தில் வீற்றிருக்கும்  விநாயகரை பூமி மட்டத்திலிருந்து பல படிகள் இறங்கிப் போய் அவரை ஆழத்துப் பிள்ளையார் மற்றும்  பாதாள பிள்ளையாராக  பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

     

    காளஹஸ்தி மற்றும்  விருத்தாசலம் திருக்கோயிலில் ஆழத்துப் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன.

     

    எங்கும் இல்லாதபடி,சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் விநாயகரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.

     

    தன் தந்தை கயிலாச நாதரின் மலையில், ஆனைமுகனின் உறைவிடம் கரும்புக்காடுகள் சூழ்த்த ஆனந்தபுவனம்.

     

    தன் தாய் மாமனான  திருமால், பாற்கடலில் உறைவது போல, கணபதியின் உறைவது கருப்பஞ்சாற்று  கடல்.

     

    திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னதியில் தான் கணேசபஞ்சரத்தை ஆதிசங்கரர் எழுதினர்.

     

    எத்தனையோ விசித்திரமான பெயர்கள் விநாயகருக்கு இருந்தாலும் ,கோவையிலுள்ள ஒரு விநாயகரின் விசித்ரமான பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.

     

    உலகம் போற்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

     

    மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர். இதிலிருந்து ஆதி தெய்வமான விநாயகரின் தொன்மை நமக்கு புரிபடும்.

     

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.

     

    விநாயகருக்கு அனைத்து இலைகள் மற்றும் மலர்கள் பூஜைக்கு உகந்தது என்றாலும், துளசியால் சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை பூஜிக்கலாம்.

     

    27நட்சத்திரங்களில் உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி.

     

    ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.

     

    ஐந்துகரப் பண்டிதன் என அருணகிரிநாதர் விநாயகரைக் குறிப்பிட்டுள்ளார்.

     

    திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்றும் காணப்படுகிறது.

     

    மதுரை முக்குறுணி விநாயகருக்கு24 படி அரிசியால் மோதகம் செய்யப்படுகிறது.

    வேறு எங்கும் இல்லாதபடி ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில்

     

    புல்லாங்குழலுடன் காணப்படுகிறார்.திருப்பரங்குன்றத்தில்   கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.

     

    `ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

    இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை

    நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை

    புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”

     

    ஐந்து கரங்களை கொண்டவர், யானை போன்ற முகத்தைக் கொண்டிருப்பவர். இளம்பிறை போன்ற வயிற்றைக் கொண்டிருப்பவர். நந்தி தேவரின் மகனாகப் பட்டவரை, ஞானமாகிய மிகச் சிறந்த அறிவு படைத்தவரை,புந்தியில் – நம் மனத்தில் என்றும் நினைத்து வணங்குவோமாக!

    கவலைகள் அகல கணபதி பாதம் தொழுவோம் …..

     

  • விநாயகர் பற்றிய 80 அற்புத உண்மைகள்…

    விநாயகர் பற்றிய 80 அற்புத உண்மைகள்…
    தெரிந்து கொள்வோம்!
    1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.
    2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.
    3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.
    4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.
    5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.
    6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.
    7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.
    8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.
    9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.
    10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
    11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
    12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
    13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
    14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.
    15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.
    16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
    17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
    18. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.
    19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.
    20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
    21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
    22. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
    23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.
    24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
    25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

     

    26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.
    27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.
    28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்பபடும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
    29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.
    30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.
    31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.
    32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.
    33. சாதூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவிலில் தீப்பெட்டி செய்வோர் ஒவ்வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை.நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ்செயலில் உங்களுக்குத்துணையாக இந்தக்கணபதி விளங்குவார்.
    34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
    35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.
    36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
    37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
    38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.
    39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
    40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.
    41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.
    42. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.
    43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
    44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
    45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.
    46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
    47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.
    48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
    49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
    50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.


    51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.
    52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
    53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.
    54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.
    55. மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.
    56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
    59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.
    60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.
    61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.
    62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.
    63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.
    64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.
    65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.
    66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
    67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.
    68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.
    69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.
    70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.
    71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.
    72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.
    73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.
    74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.
    75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.
    76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.
    77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.
    78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.
    79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.
    80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  • விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?

     

    அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.

    அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

    பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

    பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

    அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.

    அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.

    உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

    (விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)

    பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

    பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

    இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.

    பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

    வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.

    இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.