Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • பூனைக்கு கோவிலா!

    பூனை குறுக்கே வந்தால், அபசகுனமாக கருதப்படும் நிலையில், கர்நாடக மாநிலம், மாண்டியாவில் உள்ள ஒரு கிராமத்தில், பூனைக்கு கோவில் கட்டி பூஜை செய்யப்படுகிறது.இங்கு, மாண்டியா மாவட்டத்தில், பெக்காலாலே கிராம மக்கள், பூனையை கடவுளாக வழிபடுகின்றனர்.  கன்னடத்தில், ‘பெக்கூ’ என்பதற்கு, பூனை என, பொருள். அதன்படி, இந்த கிராமத்தின் பெயரும் அமைந்துள்ளது.மாண்டியாவில் இருந்து, 35 கி.மீ., தொலைவில் உள்ள இந்த கிராமத்தில், பூனையை வழிபடும் வழக்கம், 1,000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியதாக கூறப்படுகிறது. பெண் கடவுளான, தேவி மங்கம்மா, பூனையின் உருவில் கிராமத்திற்கு வந்ததாகவும், தீய சக்திகளை விரட்டி மக்களை காத்ததாகவும், கிராம மக்கள் நம்புகின்றனர்.

    கோவில் பூசாரி கூறியது:  எங்கள் முன்னோர் எதிரே, தேவி மங்கம்மா, பூனை வடிவத்தில் தோன்றி, தன்னுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தி மறைந்தார். அந்த இடத்தில், ஒரு புற்று தோன்றியது. அதன்பின், பூனை வடிவில், தேவியை வணங்கும் வழக்கம் துவங்கியது. கிராமவாசிகள் யாரும் பூனையை துன்புறுத்தக் கூடாது. மீறினால், அவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். பூனை இறந்து கிடப்பதை பார்த்தால், அதை அடக்கம் செய்யாமல் அங்கிருந்து செல்வதில்லை. மேலும், மங்கம்மா தேவிக்கு திருவிழாவும் நடத்தப்படுகிறது.

  • பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது ஏன்?

     

    தகுதியில்லாதவர்களின் காலில் விழுந்தால் என்ன ஆகும். அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரியார், பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர். மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்களின், பூதவுடல் நம் கண்ணில் படவில்லை என்றாலும், இன்னும் இந்தப் பூமியில் உலவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    இந்த சிரஞ்சீவிகளில் ஒரு பிரபலம் மார்கண்டேயன். பின்னே.. இவனைக் காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமானே காலனை காலால் உதைத்தார்? எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன், சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், அவர் காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் அநேகருக்கு தெரிந்திருக்கும். மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா?

    மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும், அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும். ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்றுக் கொள்” என்று சொல்லியிருந்தார்.

    மார்க்கண்டேயனும், தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் எல்லாம் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான். ஒருமுறை அத்திரி, வசிஷ்டர், கவுதமர், கஷ்யபர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்தரிஷிகள் மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர்.

    அவர்களின் பாதங்களில், மார்கண்டேயன் பணிந்தான். அப்போது அவர்கள், “தீர்க்கா யுஷ்மான் பவ” (தீர்க்காயுளுடன் வாழ்க) என்று வாழ்த்தி விட்டார்கள். பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா? இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் சொல்வதற்காக செல்கிறார்கள். மார்க்கண்டேயனும் அவர்களுடன் செல்கிறான். போனவன், பிரம்மாவின் காலிலும் விழுந்து ஆசி பெற்று விட்டான். விதியை எழுதிய அவரும், அவனுக்கு ‘தீர்க்காயுஷ்மான் பவ’ என்று வாழ்த்தி விட்டார். இப்படி பார்க்கும் பெரியவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.

    பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமை. ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 வயதாக, அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரம் தருகிறார். பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.

    எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியைப் பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றிவிடும். அதேநேரம், ஆதாயத்துக்காக தகுதியற்றவர்களின் கால்களில் விழாதீர்கள். அப்படி செய்தால் அவர்களின் பாவங்களையும் நீங்கள் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்.

     

  • சூரியனை பார்த்தால் சூப்பர் சக்தி கிடைக்கும் -நாசா தகவல்..!

     

    அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது இந்தியாவில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் யோகக் கலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் சூரியனை பார்க்கும் வழக்கமானது, பண்டைய மாயன் நாகரீகம், எகிப்து, திபெத் ஆகிய நாடுகளில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சூரியனை பார்த்தால் டெலிபதி போன்ற ‘Super Human Abilities’ எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாசா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

    பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது.எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் அறியப்படுகிறது. ஆனால் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளது நாசா.

    சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும். இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம். பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக்குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

    தன்னை ’சூரியக்கதிர்களை உண்பவன்’ என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த ”ஹிரா ரத்தன் மானக்” என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு நாசா விஞ்ஞானிகளை அணுகினார். நாசாவினால் நிதியுதவி பெறக்கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது, பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர்.

    100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர்வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். முதல் மூன்று மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று ’ஹைபோதாலமஸ் பாதை ’என்ற அங்கத்தில் தனது சக்தியை சேர்க்கிறது. கண்களில் உள்ள ரெட்டினாவுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையே ’ஹைபோதாலமஸ் ’ என அழைக்கப்படுகிறது.

    இதன் பின்னர் இந்த பாதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது. அதன் பின்னர் மன அழுத்தம், பசி ஆகியவை சிறிது, சிறிதாக குறையத் தொடங்குமாம். மேலும் மனிதனிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் மறைந்து போகுமாம்.

    சூரியனை பார்த்தல் செயல்முறையை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்குள், உடல் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம். இதற்கு காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வண்ணங்கள், நம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவதுதான்.

    வண்ண மருத்துவம் எனப்படும் துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும், இதயத்திற்கு மஞ்சள், சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றனவாம். இப்படி வானவில்லில் இருக்கக் கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை போக்குகிறதாம். வண்ண மருத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ் தான் பல வண்ணங்களில் இருக்கக் கூடிய சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாது என கூறப்படுகிறதாம்.

    சூரியனை பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள், உடலுக்கு தேவை உணவு இல்லை எனவும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல்தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர். அந்த ஆற்றலானது சூரிய ஒளி மூலமே கிடைத்துவிடுவதால், உணவு தேவைப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சூரியக்கதிர்களை நேரடியாக பார்ப்பது கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் சரியான நேரத்தில், சரியான வழிமுறையில் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். சூரியனை பார்ப்பதை பல ஆண்டுகளாக செய்து வருபவர்களின் கண்களை சோதித்த போது, அவர்களின் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது

     

  • ஒரே ஆலயம் ஒன்பது நரசிம்மர்!

     

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் சுமார் 25 கிமீ தொலைவில் இருக்கிறது ஆவணியாபுரம். இங்கு சிறு குன்றின் மேல்,  நவ நரசிம்மர் ஆலயம் குடைவரைக் கோயிலாகக் காணப்படுகிறது.

    சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணிநாராயணபுரம் என்பதே இவ்வூரின் திருப்பெயர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மையமாக பாய்ந்தோடும் செய்யாற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது இந்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். திருப்பதியில் வெங்கடாஜலபதி, திருவரங்கத்தில் அரங்கநாதர், காஞ்சிபுரத்தில் வரதராஜபெருமாள், சோளிங்கரில் யோக நரசிம்மர், ஆவணியாபுரத்தில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த நகரங்கள் பஞ்ச திருப்பதிகள் என பக்தர்களால் போற்றப்படுகிறது. பஞ்ச திருப்பதிக்கும் நேரில் சென்று சேவித்த பேரின்பத்தை, ஆன்ம நிறைவை, அகத்தின் மகிழ்வை ஓரிடத்தில் ஒருங்கே பெற முடியும் என்றால் விந்தையாக  தான் இருக்கும்.

     

    அறுபது வருடங்களுக்கு ஒரு முறை, சர்வதாரி வருஷத்தில், தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து உற்சவம் நடக்கிறது. இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்கிறார்கள். அவ்வாறே அறுபது வருடங்களுக்கு ஒரு முறை ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

      

    ஆவணியாபுரத்து மலை உச்சியில் ஸ்ரீரங்கநாதரும், ஸ்ரீவெங்கடாஜலபதியும், ஸ்ரீவரதராஜபெருமாளும், யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழ்மலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். பஞ்ச திருப்பதியின் நாயகர்களும் ஓரிடத்தில் எழுந்தருளிய புண்ணிய பூமியாக, ஆவணியாபுரம் திகழ்கிறது. ஆவணியாபுரத்து மலைமீது அமைந்துள்ள கோயில் கருவறையில் அமர்ந்த நிலையில் எழுந்தருளும் நரசிம்மருக்கு மட்டுமல்ல, அவரது இடபாகம் எழுந்தருளி திருமுகம் காட்டும் தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவரும் நின்றதொரு திருக்கோலத்தில் சிம்ம முகம். சன்னதியின் எதிரில் எழுந்தருளும் கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக்கிடைக்காத பெரும் பேறு. இத்திருதலத்துக்கு மேலும் பல சிறப்புண்டு. நவ நரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமி நரசிம்மர் கருவறையில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மருமாக 9 நரசிம்மர் இக்கோயிலில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.

    இரண்டு அடுக்காக திருக்கோயில்கள் அமைந்துள்ளன. முதலில் சுமார் எழுபது படி ஏறியதும், யோக நரசிம்மர் தரிசனம் பெறலாம். பின்னர், மேலும் நூறு படிகள் கடந்தால், ஸ்ரீனிவாச பெருமாளை நின்ற திருக்கோலத்தில் தரிசிக்கலாம். தாயாரின் திவ்யநாமம் அலர்மேல் மங்கை என்பதாகும். தாயாரை மலையடிவாரத்தில் சேவிக்கலாம்.  இவற்றைத் தவிர, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் சந்நதியும் அமைந்துள்ளது.

    தாயாருக்கும், கருடாழ்வாருக்கும் சிங்க முகம் தரித்துச் சேவை செய்வது இந்த ஒரு கோயிலில்தான் என்று கூறுகிறார்கள். இக்கோயிலில் வழிபடுவது பல நன்மைகளைப் பயக்கும் என்பது நம்பிக்கை. திருமண பிராப்தி, புத்திர பாக்கியம், கடன் தொல்லையிலிருந்து விடுபடுதல் போன்ற பலவற்றிற்கும் இங்கு வந்து நரசிம்மருக்கும், கருடாழ்வாருக்கும் நிவேதனம் செய்து வழிபடுதல் வழக்கமாக உள்ளது. இதற்கான சடங்குகளை கோயில் அர்ச்சகர்களிடமிருந்து அறியலாம்.  ஒன்பது நரசிம்மர்களைக் கொண்ட தஷிண அகோபிலம் என்றும் இது அறியப்படுகிறது.

    ஓம் நமோ நாராயணா!

  • பெண்கள் மஞ்சள் பூச வேண்டியது அவசியமா?

     

    கந்தகச் சத்து மிகுந்த மஞ்சளை ஒரு பெண் பூசுவதால் தன் கணவனை அன்யோன்யப்படுத்திட முடியும். நெற்றிப்பொட்டில் மஞ்சள் பொடியை இடும் பெண்களுக்கு ஆக்ஞா சக்கரம் மெதுவாகத் திறக்கப்பட்டு ஆன்மிகச் சக்தி பெருக் கெடுக்கிறது. கர்ப்ப காலத்திலும் மஞ்சளைப் பெண்கள் பூசுவதாலும் அருகில்  வைத்துக் கொள்வதாலும்,தீயசக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.மஞ்சளில் விரளி,கஸ்தூரி,காஞ்சிரை என்ற மூன்று வகை உண்டு. காஞ்சிரை மஞ்சளை  மனநிலை சரியில்லாதோர் துர்சக்தி பாதிப்படைந்தோர் பயன்படுத்த, பூரண குணம் அடையலாம். மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த  கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது  அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள்  வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. லலிதா பரமேஸ்வரிக்கு ‘ஹரித்ரான்னைக ரஸிகா’ என்ற பெயர் உண்டு.மஞ்சள் சாதத்தை அதிகம் விரும்புபவள் என்ற பொருள். பெண்கள் ஹரித்ரா பயன்படுத்தினால் தரித்திரம் போய்விடும்.

  • செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது என்பது ஏன்?

     

    செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பதற்கான அர்த்தம் …

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.

    இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

    இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

    எனவே முடிந்தளவு, அதற்க்கு முந்தைய நாளோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ செலவை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணப்பற்றாக்குறையினை தவிர்க்கலாம் என்பது நம்பிக்கை.

  • அஷ்டமி பைரவரின் சிறப்பு!

     

    சிவலாயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. இவர் நாயை வாகனமாகக் கொண்டவர்.சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது பைரவர் என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் பயம் என்று பொருள்.பயம் தரக்கூடியவர்,எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர்.

     இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.

    அஷ்டமி சிறப்பு!

    நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

     

    நவக்கிரக பைரவர்!

    பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

    அஷ்டமி செவ்வாய்!

    தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்கியங்கள் கூடிவரும்.

    இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.அன்றைய தினம்  பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

     

     

  • அதிசய கோவில்: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கும்!

     

    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலின்  கொடி மரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன்,சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஈசனுடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறான்.இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப், போல அம்பாளை முன்னிறுத்தும் ஆலயமாகும்.

    இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல்வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

    கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டமின்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.

    கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் ஹாசன் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். அத்துடன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட வெளிமாநில பக்தர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தார்கள்.

    இந்த ஒன்பது நாட்கள்  மட்டும் திறக்கப்படும் கோவிலுள்ள அம்பாளை வழிபாடு செய்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

  • மண்டல பூஜைக்கு தயாராகும் சபரிமலை …

    சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக தலங்களில் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலும் ஒன்று. இங்கு நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 15-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. 40 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையில் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை பிரசாதமான அப்பம், அரவணை தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

  • திருப்பதியில் பக்தர்களுக்கு சுடுதண்ணீர்….

    திருப்பதியில் திருப்பதியில் பக்தர்களுக்கு சுடுநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலில் இருந்து மோகாலிமிட்டா வரை நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு வாகனங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏழுமலையான் கோவில் உள்ளே மகா துவாரத்தில் இருந்து தங்கக்கொடி மரம் வரை பக்தர்களுக்கு மழை, வெயிலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும். அலிபிரி மலைப்பாதைகளில் மண், கற்கள், பாறைகள் சரிந்து விழுவதை தடுக்க ஐ.ஐ.டி.நிபுணர்களை வரவழைத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருமலையில் வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து மின் கம்பங்களிலும் எல்.இ.டி. பல்புகளை பொருத்த வேண்டும். கோவிலில் வழக்கம்போல் மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும். கோவிலில் உள்ளே சீனிவாச கல்யாண உருவப்படங்கள், விமானப் பிரகாரம், கல்யாண மண்டபம், வண்டிகாகிலி ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். அன்னப்பிரசாதம் கொடுக்கும் இடத்தில் தரை வழுக்குவதாக பக்தர்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். அந்த இடத்தில் தரையை சுத்தம் செய்ய வேண்டும். கைக்கழுவும் இடத்தில் பக்தர்களுக்கு சுடுநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தரிசனத்துக்காக வரும் பக்தர்களையும், அவர்களின் பைகளையும் தீவிர பரிசோதனை செய்ய வேண்டும். திருமலையில் ஜனவரி மாதத்துக்குள் மின்வயர் பொருத்தும் பணியை முடிக்க வேண்டும். ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்களை தேவஸ்தான அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.