Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • வரம் தரும் கார்த்திகை….

    மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் _ கார்த்திகை பௌர்ணமி!
    கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
    கார்த்திகை மாத துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
    கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.
    மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.
    விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

  • தேய்பிறை அஷ்டமி! பைரவர் வழிபாடு!

     

     

    பைரவர் வழிபாடு!

    சூரபத்மனை அழிப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில்இருந்து தோன்றியவர் முருகன். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்தில் இருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர்.
    காவல் தெய்வமான இவரும், சிவனைப் போல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார். திரிசூல பாணியான இவர், நீலநிற மேனியுடன், நிர்வாண கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சிவாலயங்களில் வடகிழக்கு திசையில் இவருக்கு தனி சன்னிதி உண்டு. காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்த சாமபூஜை முடியும் போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்று பொருள். தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, துர்மர்ணம் இவற்றில் இருந்து காப்பவரும் பைரவரே. அந்த அளவிற்கு பைரவர் முக்கியத்துவம் வாய்ந்தவர்.
    பைரவரை தொடர்ந்து வணங்கினால் தீவினைகள் அழியும். எதிரிகள் தொல்லை ஒழியும். யாருக்கும் அடிபணியாத, தலை குனியாத வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்கும். வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும். இழந்த பொருள் செல்வத்தை மீண்டும் பெறலாம். திருமணத்தடை அகலும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். பிதுர் தோஷம் விலகும்.
    பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வரியம், சுகம் அனைத்தையும் அடையலாம். பைரவருக்கு சிறு துணியில் மிளகை கட்டி நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வழிபட்டால், வாழ்க்கையில் வளம் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபட்டால் ஆரோக்கிய வாழ்வு அமையும். சந்தனக்காப்பு செய்து வழிபட்டால், எந்நாளும் இன்ப நாளாக அமையும்.

    பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லம், பாயசம், அவல் பாயசம், உளுந்தவடை, சம்பா அரிசி சாதம், பால், பழ வகைகள் பிடித்தமானவை. அவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.
    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லஎண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

     

    ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்குஎண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.
    ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.
    வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.
    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

     

  • சனி தோஷம் நீங்க செய்ய வேண்டியது!

     

     

    சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, அல்லது எள் விளக்கு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம். முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். 

    இவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும். 

    கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும். 

    விநாயக பெருமானை வழிபடுவதும், ஆஞ்சநேயரை சனிக் கிழமைகளில் துளசி மாலை அல்லது வடை மாலை அணிவித்து, அர்ச்சித்து 27 முறை வலம் வருவதும் அஷ்டமச் சனி தோஷ நிவர்த்தி தரும்.  

    காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.

    சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.

     

     

     

  • முருகனின் மயில் உணர்த்தும் தத்துவம்!

     

    மயில் தோகை விரித்து ஆடுகையில், நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி, உண்மையான நீல நிறம் புலப்படுவதில்லையோ, அதே போல் மனிதன் புற அழகினில் மயங்கி, எல்லையற்றதாகிய, தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணர முடிவதில்லை.  தன்னுடைய உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போல தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம். 

    முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். நாகம் கொல்லப்படுவதில்லை ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் உணர்ந்துவது ஒருவனுடைய ‘அகந்தை’. நாகத்தின் விஷம் நாகத்தினை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம். அதே போல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை. ஆனால் அதையே வெளிக்காட்டினால், அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும்.  விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.

  • பெருமாள் கோவில்களில் மட்டும் சடாரி வைப்பது ஏன்..?

     

    சடாரி வைப்பதன் தத்துவம் !
    சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும் . இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு பெருமாளின் திருவடிகளாக பாவித்து பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது .

    பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள்.

    தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் #ஸ்ரீராமன் . அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான். அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்து அயோத்தியின் சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். ஆனால், பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார்.

    அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. சிக்கலான இந்த நிலைக்கு ஒரு தீர்வாகத்தான், பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலைமீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் திருவடியை வைத்து பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சிசெய்து வந்தான். அந்த தருணத்தில் அனைவருக்கும் இயல்பாக தோன்றும் சந்தேகமானது பரதன் பாதுகைகளை அரியணையின் மீது நேரடியாக வைக்காமல், அவரின் திருமுடியை வைத்து அதன்மேல்தான் திருவடிகளை வைத்தான். இது எப்படிச் சரியாகும்? என்ற கேள்வி எழுவது எல்லோருக்கும் இயல்புதான்.

     

    இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதுபோல்,   ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு சயனம் கொள்வதற்காகச் சென்றார் . எப்போதும் இல்லாத வழக்கமாக, அவர் தன் பாதுகைகளுடனேயே ஆதிசேஷன் மீது சயனம் கொண்டார். அந்தச் சமயம் முனிவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, அவர்களைக் காண தன் பாதுகைகளை ஆதிசேஷன் மீது வைத்துச் சென்றார். அவர் சென்றவுடன் ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும்,சங்கும்,சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின. பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் நான் இருக்கும் இடத்தில் நீ எப்படி இருக்கலாம்? பாதங்களை அலங்கரிக்கும் நீ ஆதிசேஷன் மீது அமர்வதற்கு அருகதை அற்றவன் என்றெல்லாம் கூறினர். இன்னும் கடினமான வார்த்தைகளால் தூற்றவும் தொடங்கின.

     

    எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர். நீங்கள் அவரது கரத்தில் இருந்தாலும் உங்களை யாரும் வணங்குவதில்லை என்று கூறின. ஆனாலும், அவை மூன்றும் விடுவதாக இல்லை. கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது என்று கூறியது. இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும் என்று கூறினார்.

    இதன் பலனாகவே திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் பரத, சத்துருக்ணனாகப் பிறந்தன. பாதுகைகளை இழிவுபடுத்திய அவை, தமது இந்தப் பிறப்பில் பாதுகைகளைத் தம் தலையில் சுமந்துசென்றன. மேலும், அந்தப் பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது. இந்தச் சம்பவத்தை நமக்கு நினைவுபடுத்தவே பெருமாள் கோவில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது.
    இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன் – ஏழை, உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி சடாரி வைக்கப்படுகிறது…

     

    ஓம் நமோ நாராயணா!!

  • அஷ்டமி, நவமியின் சிறப்பு!

     

    சிவபெருமான் பூலோகத்திலிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அடிப்படைச் சக்திகளை, பாகுபாடு இல்லாமல் வழங்கச் சூரியன், சந்திரன் இருவருக்கும் தனிக் காலக்கணக்கை உருவாக்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியைச் செய்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பின்பு சந்திரன் தனது பணியைச் சரியாகச் செய்யாமல் அவ்வப்போது ஏமாற்றத் தொடங்கினார். இதனால் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்கள், சந்திரனிடமிருந்து தங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் துன்பமடைந்தன.

    இதை அறிந்த சிவபெருமான், சந்திரனை அழைத்து பணியை ஒழுங்காகச் செய்யும்படி அறிவுறுத்தினார். சந்திரனோ, ‘இறைவா! என்னுடைய தொடர் பணிக்கு இடையில், அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. ஓய்வு இருந்தால் மட்டுமே தனது பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்றார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

    அதன்பிறகு சந்திரனின் பணிக்காலத்தில் சில மாற்றங்களைச் செய்தார் சிவபெருமான். சந்திரன் பணியின் இடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியதுடன், பணி நேரத்தில் ஏமாற்றாமல் இருக்க, சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காகவும் சிலரை நியமிக்கவும் முடிவு செய்தார். அதற்காக 16 பேரை தோற்றுவித்து, அவர்களுக்கான பணி நேரத்தைத் சமமாகப் பிரித்து புதிய காலக்கணக்கை உருவாக்கினார்.

    அந்தக் கணக்கின்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் எந்தப் பணியும் இல்லாமல் முழு ஓய்வு கொடுக்கப்பட்டது. சந்திரனின் ஓய்வுக்கு யாரும் இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ள ஒருவரை நியமித்து அவருக்கு ‘மறைமதி’ (அமாவாசை) என்று பெயரிட்டார்.

    ஓய்வு நாளுக்குப் பின்பான 14 நாட்கள், சந்திரனின் பணிகளை ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அதிகரித்தார் ஈசன். அந்த 14 நாட்களும், சந்திரனின் பணி நேரத்தை கவனிக்கவும், அவரது ஓய்வு நேரத்தை இடையூறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும் 14 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்று பெயரிட்டார் சிவபெருமான்.

    கடைசியாகச் சந்திரனுக்கு ஒரு நாள் முழுவதும் முழுநேரப் பணியளித்து, அன்றைய தினம் அவருடைய முழுநாள் பணியையும் பார்த்துக் கொள்வதற்குத் தான் தோற்றுவித்தவர்களில் மீதமிருந்த ஒருவரை நியமித்து, அவருக்குப் பூரணை (பவுர்ணமி) என்று பெயரிட்டார்.

    சந்திரனின் முழுநாள் பணிக்குப் பின்பு, ஒவ்வொரு நாளும் அவருக்குச் சிறிது சிறிதாகப் பணி நேரத்தைப் பதினான்கு நாட்களுக்குக் குறைத்துக் கொண்டே வந்தார் சிவபெருமான். இந்த நாட்களுக்கு, முன் பகுதியில் சந்திரன் பணிநேரத்தைப் பெற்ற பதினான்கு பேருக்கும், அதே வரிசையில் சந்திரனின் பணிநேரத்தையே கொடுத்துப் பணி நேரத்தைச் சமன் செய்தார்.

     

    பவுர்ணமி, இறைவன் தனக்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் பணி நேரத்தைக் கொடுத்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டது. அமாவாசை, தனக்குச் சந்திரனைப் பார்வையிடும் பணியைக் கொடுக்காமல், அவரின் ஓய்வுக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ளும் பணியைக் கொடுத்ததை நினைத்து வருந்தியது. மற்றவர்கள், தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலையடைந்தன.

    அவர்களின் கவலையை அறிந்த சிவபெருமான், ‘சந்திரனைப் பார்வையிடும் பணியைப் பெற்ற நீங்கள் அனைவரும், பூலோகத்தில் ‘திதி’ என்னும் பெயரில் அழைக்கப்படுவீர்கள்’ என்றார்.

    சிவபெருமான் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகியோர் இறைவனின் பேச்சை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட இறைவன், அவர்களிடம் தான் சொல்வதைக் கவனிக்கும்படி சொன்னார்.

    பின்னர் தொடர்ந்து, ‘அமாவாசையைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் வரிசைப் பெயரிலான திதியாகவும், அவை அனைத்தும் வளர்பிறைத் திதிகள் (சுக்லபட்சம்) என்றும் அழைக்கப்படும். இதுபோல் பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் பதினான்கு நாட்களும் உங்கள் பெயரில் தேய்பிறைத் திதிகள் (கிருஷ்ணபட்சம்) என்றும் அழைக்கப்படும். பூலோகத்தில் இந்த நாட்களில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களுக்கும் உங்கள் பெயர்களும் பயன்படுத்தப்படும். அதன் மூலம் தங்களுக்குப் பூலோகத்தில் மதிப்பு கிடைக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    அப்போதும் ஈசனின் பேச்சைக் கவனிக்காமல் அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், அவர்களைப் பார்த்து, ‘நான் உங்கள் பணியைப் பற்றியும், பூலோகத்தில் உங்களுக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை எச்சரித்தும், அதைக் கண்டு கொள்ளவில்லை. எனவே மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள்’ என்று சாபமிட்டார். அஷ்டமியும், நவமியும் கவலையடைந்து, ஈசனிடம் சாபத்தைத் திரும்பப் பெற வேண்டினர். ஆனால் இறைவன் மறுத்து விட்டார்.

      

    விமோசனம்

    பூலோக மக்கள், அஷ்டமி, நவமி திதி நாட்களை எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தாமல் விலக்கியே வைத்தனர். பூலோகத்தில் தங்களிருவருக்கும் மதிப்பில்லாமல் போனதை நினைத்து இருவரும் கவலையடைந்தனர்.

    தங்களுக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விடுபட எண்ணிய அவர்கள் இருவரும், தங்களது ஓய்வு நேரத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘அஷ்டமி, நவமி திதிகளே! நான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள், உங்களுக்கு வேறு ஒரு நல்ல பலன் கிடைக்கலாம்’ என்று அருளினார்.

     

    அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்கள் முன்பாக தோன்றிய விஷ்ணு, ‘சிவபெருமான் கொடுத்த சாபத்தில் இருந்து உங்களை விடுவிக்க என்னாலும் முடியாது. அதே வேளையில் பூலோகத்தில் உங்களுக்கும் நல்ல மதிப்பு கிடைக்க என்னால் உதவ முடியும். அதற்கு தாங்கள் இருவரும் பல ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். உங்களால் முடியுமா?’ என்றார்.

    ‘இறைவா!, பூலோகத்தில் எங்களுக்கு இருக்கும் அவப்பெயர் நீங்கி, நல்ல மதிப்பு கிடைத்தால் போதும். அதற்காக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வேண்டுமானாலும் நாங்கள் காத்திருக்கத் தயார்’ என்றனர்.

    அதைக் கேட்ட விஷ்ணு, ‘வரும் காலத்தில் பூலோகத்தில் நிகழவிருக்கும் என்னுடைய இரு அவதாரங் களுக்குப் பின்பு, உங்களிருவருக்கும் ஆண்டுக்கொருமுறை நல்ல மதிப்பு கிடைக்கும். அதுவரைப் பொறுமையுடன் காத்திருங்கள்’ என்று சொல்லி மறைந்தார்.

    சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணு, சித்திரை மாதம், வளர்பிறை நவமி திதியில் ராமனாக அவதாரம் செய்தார். அந்த நவமியில் பிறந்ததால் அவர் பல துன்பங்களை அடைய நேர்ந்தது. என்றாலும் ராமன் பிறந்த திதி என்பதால் பின்னாளில் ‘ராம நவமி’ என்ற பெயரில் நவமி திதிக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது.

    ராம அவதாரத்திற்கு பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆவணி மாதம், தேய்பிறையில் அஷ்டமி திதியில் விஷ்ணு கண்ணனாக அவதாரம் எடுத்தார். பிறந்த உடனேயே பெற்றோரைப் பிரிய நேர்ந்தாலும், அவர் மனித வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்கி கண்ணன் உயர்ந்து நின்றார். கண்ணனின் பிறப்பால் அஷ்டமி திதியும் நன் மதிப்பைப் பெற்றது.

    சிவபெருமானால் கொடுக்கப்பட்ட சாபத்திலிருந்து முழுமையாக விடுபட முடியாவிட்டாலும், விஷ்ணுவின் அவதாரங்களால் தங்களுக்குக் கிடைத்த தனிச்சிறப்பை நினைத்து அஷ்டமி, நவமி திதிகள் மகிழ்ச்சியடைந்தன.

    தங்களை விட மேலான நிலையிலிருப்பவர்கள் அறிவுரை வழங்கும்போது, அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பெரும் துன்பமும், அவமதிப்பும் வந்து சேரும் என்பதையே அஷ்டமி, நவமி திதிகளின் சாப- விமோசனக் கதை நமக்கு எடுத்துரைக்கிறது.

     

  • பள்ளிக்கட்டு சபரிமலைக்கு!

    எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது.

    மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான்.

    அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வது சிறப்பு. கடுமையான மலைப் பாதையில் சிரமம் இல்லாமல் ஏறுவதற்கு இது உதவியாக இருக்கும். சபரிமலைக்கு முதல் முறையாகச் செல்லும் கன்னிசாமிகள், கட்டாயம் 41 நாட்கள் விரதம் இருந்து செல்வதே நன்று.

  • அம்பாளுக்கு உப்பில்லாத சாதம் நிவேதனம்!

     

     

     திருவண்ணாமலை அடுத்த களம்பூர் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சோழர் காலத்தில் கட்டப்பட்டதை நினைவுகூறும் வகையில் மகாமேரு வடிவம்போல அமைந்துள்ளது. பிற்காலத்தில் விஜயநகர பேரரசர்களால் புதுப்பிக்கப்பட்டது. காசி விஸ்வநாதர், மூலஸ்தானத்தில் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவரது திருமேனியில் அம்புபட்ட தழும்பு உள்ளது. இங்கு சுவாமி சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் உள்ளன. காசி, ராமேஸ்வரம் தரிசனம்போல் மேற்கு நோக்கிய தலம் இது. இத்தலத்திற்கு வருகை தந்தால், காசி ராமேஸ்வரத்திற்குச் சென்றுவந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். இக்கோயிலில் வளர்பிறை பிரதோஷத்தின்போது உச்சிகாலத்தில் அம்பாளுக்கு விசேஷ வழிபாடு செய்கிறார்கள். அப்போது குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அரிசி, தேங்காய், பழம் மற்றும் உப்பில்லாத சாதத்தை நிவேதனமாக வைத்து அம்பாளை வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்து பலர் புத்திர பாக்கியம் பெற்றுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம், வில்வமரம். கோயிலில் பிராகார வலம் வரும்போது காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சந்நதிகளையும், கோஷ்ட தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, பிராகார தெய்வங்களாக மகா கணபதி,சுப்பிரமணியர், சண்டீசர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். சோமூதாபுரியை ஆண்ட பாணாசூரன் தனக்கு ஏற்பட்ட சாபம் தீர பல சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அப்போது களம்பூருக்கு வந்து, இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் லிங்கமொன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றான் என்கிறது இத்தல புராணம். மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் தீர்த்தவாரியும், ஒன்பது நாட்கள் பிரமோற்சவமும், மாசி மகாசிவராத்திரியும் இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெறும். திருவண்ணாமலையிலிருந்து போளூர் வழியாக ஆரணி செல்லும் அனைத்து பேருந்துகளும் களம்பூரில் நின்று செல்லும். ஆரணியில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 43 கி.மீ. தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது.

  • தன்வந்திரி பகவான்!

    தன்வந்திரி திரயோதசி மகிமை!
    “ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்பாக வரும் தேய்பிறை திரயோதசி அன்று தன்வந்தரி பகவானைக் குறித்து விரதமிருந்து முறையாக வழிபட்டு பூஜை செய்து வீட்டில் தீபங்கள் ஏற்றிய பின் புனித தீர்த்தங்கள் நீர்நிலைகளுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தீப தானம், வஸ்திர தானம் செய்தாலும் யமனைக் குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டகத் துதி படிப்பதாலும் துர்மரணங்களிலிருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளைப் பெறமுடியும்” என்று யமதர்மராஜா கூறியதாக வரலாறு உண்டு.
    இந்த தன்வந்தரி திரயோதசி விரதத்தை இயலாமையால் கடைப்பிடிக்காமல் விட்டவர்கள் மகாவிஷ்ணுவுக்குரிய சனிக்கிழமையும் திரயோதசி திதியும் சேருகின்ற நாளில் காலை உதய காலத்திலிருந்து இரவு வரை ஒரு பொழுது விரதமிருந்து இரவு பாலும் துளசி தீர்த்தமும் அருந்தி விரத பூஜையைச்செய்து வரலாம்.
    நமது உறுப்புகள் அனைத்திற்கும் களைப்பு தோன்றும்போது உடலுக்குள் உணவு மற்றும் ஆன்மிக சக்தியை ஏற்றுதல் அவசியமான ஒன்று. இதற்கு ஆன்மிக வழியில் உதவுவதே தன்வந்திரி திரயோதசி விரதம். அங்க இயக்கங்கள் முறையில் யோகாசனங்கள் ஓம்கார தியானம் போன்றவை செய்யலாம்.

  • ருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை!!  

     

     

     

    சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி! தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால் என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளையாடுகிறாயா? ஏழரை ஆண்டு அல்ல!ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை நெருங்க முடியாது என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும் சுயரூபம் காட்டிய சிவன், சனீஸ்வரா! தோற்றுப் போனாயா? என்றார். ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித்தார் சனீஸ்வரர். யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலைநாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத்ராட்சம் அணிந்து சிவநாமம் ஜெபிப்போருக்கு சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப்பட்டார்.