திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2018-ஆம் ஆண்டிற்கான புதிய நாள்காட்டியை பெற சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. நாள்காட்டிகளை கூரியர் மூலம் பெற தேவஸ்தானம் பக்தர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2018 ம் ஆண்டிற்கான புதிய நாள்காட்டி மற்றும் கையேடுகளை அச்சிட்டு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கையால் வெளியிட்டது. தற்போது இந்த நாள்காட்டி மற்றும் கையேடுகள் திருமலை, திருப்பதி மற்றும் நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் தொடர்பு மையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும்.
இந்நிலையில் தற்போது தங்களில் சொந்த பயன்பாட்டிற்காக நாள்காட்டி மற்றும் கையேடு பெற விரும்பும் பக்தர்கள் கூரியர் மூலம் பெற்றுக் கொள்ளும் புதிய முறையை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.
அதனால் ரூ. 90, ரூ. 15, ரூ. 10 விலையில் உள்ள நாள்காட்டி மற்றும் ரூ.120, ரூ.90 விலையில் உள்ள கையேடுகளை பெற விரும்பும் பக்தர்கள் அதற்குண்டான கட்டணத்தை நிர்வாக அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து தங்கள் முகவரியை இணைத்து அதை எ.இ.ஓ. பிரிண்டிங் பிரஸ், திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வரைவோலை கிடைக்க பெற்றவுடன் சம்பந்தட்டவர்களுக்கு பார்சல் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும். கூரியருக்கு உண்டான கட்டணத்தை அளித்து பக்தர்கள் அதனைப் பெற்று கொள்ளலாம்.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
திருமலை தேவஸ்தான நாள்காட்டி வேண்டுமா?
-
நெல்லையப்பர் தபசுக்காட்சி
நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் தபசுக்காட்சி விமர்சையாக நடந்தது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பிரசித்திபெற்றது. இவ்விழா நவம்பர் 3ம் தேதி காலையில் காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்பாள் சன்னதியிலிருந்து நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். காந்திமதி அம்மன் சன்னதியிலிருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு காலை 5 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலை சென்றடைந்தார். நேற்று பகலில் கம்பா நதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி,அம்பாளை தரிசித்தனர். நேற்று மாலை சுவாமி, அம்பாள் நெல்லை டவுன் நான்கு வீதிகளிலும் வீதி உலா நடந்தது. தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி காலை அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவ விழா நடை பெற்றது. 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் நான்கு ரதவீதிகளிலும் பட்டின பிரவேசம் வீதி உலா நடைபெற்றது. 16ம் தேதி வரை அம்பாள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் விழாவும், 17ம் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் வீதி உலாவும் நடக்கிறது. -
விளக்கேற்றும் மாதங்கள் அதன் சிறப்பு!
தமிழ் மாதங்களில் எந்நெந்த மாதங்களில் விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்.
சித்திரையில் விளக்கேற்றினால் தான்யத்தைப்பெறுவார்.
வைகாசியில் விளக்கேற்றினால் தனத்தைப்பெறுவார்.
ஆனி மதத்தில் விளக்கேற்றினால் கன்னியைப் பெறுவார்.
ஆடியில் விளக்கேற்றினால் ஆயுல் கூடும்.
ஆவணியில் விளக்கேற்றினால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
புரட்டாசியில் விளக்கேற்றினால் பசுவைப்பெறுவார்கள்.
ஐப்பசியில் விளக்கேற்றினால் அன்னத்தைப்பெறுவார்கள்.
கார்த்திகையில் விளக்கேற்றினால் மோட்சம் கிடைக்கும்.
மார்கழியில் விளக்கேற்றினால் பிணி விலகும்.
தையில் விளக்கேற்றினால் வெற்றிகிடைக்கும்.
மாசியில் விளக்கேற்றினால் பாவங்கள் போகும்.
பங்குனியில் விளக்கேற்றினால் தர்மசிந்தனை பெருகும்.
-
கார்த்திகையின் சிறப்புகள்….
வைஷ்ணவக் கோயில்களில், ‘பாஞ்சராத்ர தீபம்’ என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம்.
ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஸ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்… தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்… அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை ‘ஸ்ரீமுகம்’ என்பர்.
கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்… ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.
ஈசனின்… ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை நாளில்தான்!
சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.
தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.திருநெல்வேலி- ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.
குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!
-
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் லட்சம் வில்வார்ச்சனை
காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்சம் வில்வார்ச்சனை மற்றும் குங்குமார்ச்சனை சேவை சிறப்பாக நடைபெறுகிறது. காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இம்மாதம் 8-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை லட்சம் வில்வார்ச்சனை மற்றும் குங்குமார்ச்சனை சேவை நடக்க உள்ளது. தினசரி காலை 6, 7, 10 மற்றும் மாலை 4 மணி என நான்கு முறை கோயில் வளாகத்தில் உள்ள சிவன், அம்மன் அலங்கார மண்டபத்தில் இச்சேவைகள் நடக்க உள்ளன. இதில், ரூ. 200 செலுத்தி இருவர் பங்கு கொள்ளலாம். பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 சிறிய லட்டு, 2 வடை பிரசாதமாக வழங்கப்படும்.
மேலும் பக்தர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசீர்வாத சேவையையும் கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் ரூ. 500 செலுத்தி பங்கு கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு மேல்துண்டு, ஒரு ரவிக்கை, 2 சிறிய லட்டு, 2 வடை பிரசாதமாக வழங்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். -
ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக துவங்கியது. ஆண்டாள் கோயிலில் ஐப்பசி விழா ஏழு நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இரவு 7.00 மணிக்கு ஆண்டாள் சன்னதி தெற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சலில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள்கின்றனர். அப்போது, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவாய்மொழி சேவாகாலம் நடக்கிறது. கடைசி நாளான பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் அவதரித்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்புப் பூஜைகள் நடக்கிறது.
-
பிள்ளையார் சுழி போடுவது ஏன்?
எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையார் சுழிபோட்டும், பிள்ளையார் வழிபாடு செய்தும் தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகம் சிவமயம் என்பதை உணர்த்தும் விதத்தில் பிள்ளையார் சுழி போட்டு அதன் கீழ் எழுதத்தொடங்குவார்கள். எல்லாவற்றையும் பிள்ளையார் கவனித்துக்கொள்வார் என்பது நம்பிக்கை.
ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முருகனையும், உ என்பது பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியை குறிப்பதாகும்.பிள்ளையாரின் யானைமுகம், துதிக்கை, கண்களையும் நோக்கினால் ஓம் என்ற பிரணவம் தெரியும். கோவில் கும்பாபிஷேகம் என்றால் கூட முதலில் கணபதி ஹோமம் வைப்பதுதான் வழக்கம்.
கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும், யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில் பெயராக மலர்ந்தது. பிள்ளையார் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ தேவையில்லை. நம் உள்ளத்தில் ஓர் இடமளித்தால் போதும். மண்ணில் செய்து வைத்தாலும் வருவார். மஞ்சளில் செய்து வைத்தாலும் வருவார்.
-
நவக்கிரகங்களின் தன்மை மற்றும் குணம்!
நவக்கிரகங்களும் அவற்றின் தன்மைகள் மற்றும் குணங்களும்
1.சூரியன்:-
எப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே!சூரியன் ஆத்ம காரகன் என்று சோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.உலகில் அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும்.
2.சந்திரன்:-
‘சந்த்ரமா மனஸோ ஜா’ என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலை கணிக்கபடுகிறது. இது ஒரு நீர்கிரகம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுப பலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே!
3.செவ்வாய்:-
செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக செய்யும்.ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவர் செவ்வாய். செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். சோதிட சாஸ்திரத்தில் சகோதரர்களின் நிலையை அறிய செவ்வாயின் நிலைக்கொண்டே கணிக்கப்படுகிறது. கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவர்.
4.புதன்:-
சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்கள் தொடர்பில் புதனை கொண்டே கணிக்கப்படுகிறது.பேச்சாற்றல், மாமன், அத்தை, மைத்துனர், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை , சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை ,சாஸ்திர ஞானம் , நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.
5.குரு:-
குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். குருவின் நிலை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர் குரு.புத்திரர், அறிவு, மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரகன் வகிக்கிறார்.இவர் பிரஹஸ்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு அமர்ந்த இடம் பொதுவாக நல்ல பலன்களை தருவதில்லை.
6.சுக்கிரன்:-
சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். ஒருவருக்கு சுக்கிரன் நல்ல முறையில் ஜாதகத்தில் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அவர் அனுபவித்துவிடலாம்.அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே.ஆபரணம், இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணமாக சுக்கிரன் விளங்குகிறார்.
7.சனி:-
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவர். நீண்ட ஆயுளுக்கும்,மரணத்திற்கும் அதிபதி சனியே.ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர். வலிமை, ஆயுள், அடிமை, எருமை, எண்ணெய், கஞ்சத்தனம், கள்ளதனம், மது, எள், தானியம், இரும்பு, வாதம், மரணம், மருத்துவமனை, பயந்த கண்கள், மனது வெறுக்ககூடிய செய்கை, இளமையில முதுமை ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.
8.ராகு:-
சாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தார். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தார் பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் புரிந்து கிரக நிலையை அடைந்தார்.ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. தான் இருக்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொள்வார். சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூதாட்டம் இவற்றிற்கெல்லாம் ராகுவே அதிபதி.விஷம், மரணம், பித்தம், பேய் பிசாசு, மது குடித்தல், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, சிறைப்படல், மாந்திரீகம், பிறரை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷ பூச்சிகள் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.
9.கேது:-
ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றார்.கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம் , கொலை, ஆணவம், அகங்காரம் , சிறைப்படல், புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல், மகான்களின் தரிசனம், விநாயகர் வழிபாடு ஆகியவைக்கு காரகமாக கேது பகவான் இருக்கிறார்.இவருக்கும் சொந்த வீடு இல்லை என்பதால் இருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப செயற்படும். விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவர். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். சித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை.
-
ஐயப்பனை மணக்க விரும்பிய மஞ்சள் மாதா!
காலவ மகிஷியின் மகளான லீலாவதி, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரனை ஆதிபாராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். பிரம்மாவும் அவள் முன் தோன்றினார். அவரிடம் மகிஷி மூன்று வரங்களைக் கேட்டாள்.
முதல் வரத்தால் பதினான்கு உலகங்களையும் தன் வசமாக்கிக்கொண்டாள். தன் ரோமங்களிலிருந்து தன்னைப் போன்ற வீராங்கனைகள் தோன்ற வேண்டும் என்பது இரண்டாவது வரம். மூன்றாவது வரம் ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் பிறக்கும் ஒருவரால்தான் தனக்கு மரணம் உண்டாக வேண்டும் என்றும், அவர் 12 ஆண்டு காலம் மனித குலத்தில் வசித்து பிறகு பிரம்மச்சாரிய பலத்தால்தான் தன்னை கொல்ல வேண்டும் என்றும் வரம் கேட்டாள். ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்காது. அப்படியே பிறந்தாலும் அது 12 வயது வரை உயிரோடிராது. அப்படியே இருந்தாலும் பிரம்மச்சாரி விரதத்தை கடைபிடிக்காது. ஆகவே தனக்கு மரணம் என்பது இல்லை என்பது மகிஷியின் எண்ணம்.
ஐய்யப்பன் பூவுலகில் பம்பை நதிக்கரையில் குழந்தையாகப் பிறந்து பந்தள அரசனால் வளர்க்கப்பட்டு புலிப்பாலுக்காகக் காட்டுக்குச் சென்றபோது மகிஷியை சம்ஹரித்தார். அவள் பூத உடல் வளரவே அவள் மீது கல்லை போட்டு அவ்வளர்ச்சியை நிறுத்தினார். சபரிமலை யாத்திரையில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் கன்னி ஐயப்பன்மார் அழுதை நதியில் ஸ்நானம் செய்யும் போது கிடைக்கும் கல்லை இந்த இடத்தில் போடுவது இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.
மகிஷியின் உடல் மீது ஐயப்பன் நடனம் செய்ததால் சாபம் நீங்கி மகிஷி ஒரு சுந்தரவதியாகக் தோன்றினாள். இவள் ஐயப்பனை மணக்க விரும்பினாள். ஐயப்பன் அவள் மீது கருணை கொண்டு உனக்கு இனி மஞ்சள் மாதா எனப் பெயர். நான் பிரம்மசரிய விரதத்தை அனுஷ்டிக்க முடிவு செய்திருப்பவன். இருந்தாலும் மகா உற்சவத்தின் போது இந்த கல்லிடம் குன்றில் என்று கல் விழாமல் இருக்கிறதோ அன்று உன்னை மணந்துக் கொள்கிறேன் என்றாராம். கல் விழாமல் இருப்பதும் இல்லை. சரங்குத்தியில் சரம் இல்லாமல் இருப்பதில்லை. ஆகவே ஐயப்பன் நித்திய பிரம்மசாரியாவே இருந்து வருகிறார்.
-
ஸ்ரீ சீரடி சாயிபாபா பாதுகைகள் தரிசனம் ….
புதுச்சேரிக்கு வந்த சீரடி சாயிபாபாவின் பாதுகையை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஸ்ரீ சீரடி சாயிபாபாவின் 100ஆம் ஆண்டு மகா சமாதி விழா கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி சீரடி சாய் சமஸ்தனத்தில் சார்பில் ஸ்ரீ சாயிபாபாவின் புனித பாதுகைகளை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிள்ளைச்சாவடி ஸ்ரீ சீரடி சாயிபாபா கோயிலுக்கு சீரடி சாயிபாபா பாதுகைகள் கொண்டுவரப்பட்டு, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.