Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருப்பதியில் இனி ஆதார் கட்டாயம்!

    திருப்பதி திருமலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு உலகில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். சுவாமி தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பக்தர்கள் விஐபி டிக்கட் பெற்றுக்கொண்டு ஏழுமலையானை தரிசிக்க செல்வார்கள். இதுவரை விஐபி தரிசன டிக்கெட்டை பெறுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், அல்லது குடும்ப அட்டை இதில் ஏதாவது ஒன்றை காண்பித்தால் போதும். ஆனார் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1 முதல் விஐபி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் கையில் அதார் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் முன் பதிவு செய்பவர்களும் ஆதார் அட்டை பிதிவு செய்தே இனி முன்பதி செய்ய முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • நிவேதனமாகிய நெய் தேங்காய் …

    தனிநெய்யையோ, தேங்காயையோ நிவேதனமாக்காது. நெய் தேங்காயை நிவேதனமாக்கியது ஏன் என்று தெரியுமா?
    முக்கண் கொண்ட தேங்காய் சிவனை உருவகப்படுத்தும். பசு நெய் கோபாலனாகிய மகா விஷ்ணுவை உருவகப்படுத்தும்.
    சிவன் விஷ்ணு இருவருடைய அருள் கதிரொளியின் கூட்டு சக்தியே சாஸ்தாவாகிய ஐயப்பனாதலால் நெய் தேங்காயும் சேர்த்து அவருக்கு நிவேதனப் பொருளாகின்றன. சபரிமலையை நோக்கி புறப்படும் போது இருமுடிக் கட்டி புறப்படுவார்கள்.
    இவற்றுள் ஒரு முடியில் சுவாமிக்குரிய அபிஷேக நிவேதனப் பொருட்கள் இருக்கும். இன்னொன்றில் நம் தேவைக்குரிய உணவுப் பொருட்கள் இருக்கும். நாம் போகப் போக நம் உணவுப் பொருட்கள் குறைந்து கொண்டே போய் இறைவனின் சன்னதியருகே செல்லும்போது நம் உணவுப் பொருட்கள் அடங்கிய முடி குறைந்திருக்கும். சுவாமி முடி மட்டும் அப்படியே மிஞ்சியிருக்கும்.
    இது ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனை அடையும் நிலையை உணர்த்துவது. மானுடராய்ப் பிறந்த நாம் இறைவனைத் தேட ஆரம்பிக்கும் போது இறைவன் மீதுள்ள பக்தி ஒரு முடியாகவும் நம் உலக தேவைகள் ஆகிய லௌகீகம் ஒரு முடியாகவும் இருக்கிறது. இரண்டு அம்சங்களுடனேயே தான் நாம் இறைவனைத் தேடுகிறோம். அந்த தேடலில் மெய்ஞ் ஞானம் கிட்டக் கிட்ட நம் லௌகீகப்பற்று குறைந்து மறைந்து போகிறது. இறைப் பக்தி ஒன்றுதான் மிஞ்சுகிறது. அப்பொழுதான் இறைவனடியும் தரிசனமாகிறது.

  • சபரிமலைக்கு 22-ந் தேதி தங்க அங்கி ஊர்வலம்

    மண்டல பூஜையன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்க தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதியம் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 சவரன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து பூஜை நடத்தப்படுகிறது. இந்த தங்க அங்கி, பத்தினம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி டிசம்பர் 22-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஊர்வலம் 22-ந் தேதி இரவு ஓமல்லூரிலும், 23-ந் தேதி இரவு கோண்ணியிலும், 24-ந் தேதி பெரிநாட்டிலும் தங்குகிறது. 25-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்களின் தலைச்சுமையாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

  • திருச்செந்தூரில் மார்கழி மாத நடைதிறப்பு நேரம் மாற்றம்!

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், மார்கழி மாத நடைத்திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதம், வரும் 16-ம் தேதி தொடங்கி 2018 ஜனவரி 13-ல் நிறைவடைகிறது. மார்கழி மாதத்துக்கான பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்த தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 முதல் 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிக்கால தீபாராதனை, பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, திருக்கோயில் நடை திருக்காப்பிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை 2,09,85,443

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 மற்றும் தங்க நகைகள் 409 கிராம் 1 கிலோ 275 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்தினர்.
    நினைத்தாலே முக்தி தரும் உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கனவார்களும் பவுர்ணமி உள்ளிட்ட கார்த்திகை தீபம் நாட்களில் லட்சக்கணக்கானவர்களும் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
    திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு காணிக்கையாக பணம் மற்றும் தங்க நகைள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம் வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலையர் கோவில் உள்ளிட்ட 85 க்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கபட்டு ஒவ்வொரு மாதம் பவுர்ணமி முடிந்தவுடன் எண்ணுவது வழக்கம்
    அதன்படி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மகா தீபம் 3 ஆம் தேதி மாத பவுர்ணமி முடிவடைந்ததை நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி தொடங்கிய நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. கோவில் இரண்டாம் பிரகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையார் ஜெகன்நாதன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஆன்மீக பக்தர் என 100க்கும் மேற்பட்டவர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கபட்டது.
    உண்டியல் எண்ணிக்கை முடிவில் ரூ 2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 ரூபாய்யாகும், மற்றும் தங்க 409 கிராம். வெள்ளி 1கிலோ 275 கிராம் பக்தர்கள் காணிக்கையான செலுத்தியது கோவில் நிர்வகம் சார்பில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டைவிட ரூ 35 லட்சத்து 51 ஆயிரத்து 190 அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தில் மாற்றம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தை வரும் 23-ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறைகள் வருவதால் விஐபி தரிசனம் ரத்துசெய்யப்படுகிறது என்று திருப்பதி தேவஸ்தான இணைச்செயல் அலுவலர் ஸ்ரீநிவாச ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கு ஏற்ப லட்டு செய்வதற்கு இயந்திரங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனவரி 2018 முதல் ஆதார் இருந்தால் மட்டுமே விஐபி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

  • திருப்பதி லட்டு விலையில் மாற்றமா? அதிகாரிகள் விளக்கம்….

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வரும் மானிய விலை லட்டு பிரசாதத்தில் உயர்வு இல்லை என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் வழங்கும் லட்டு எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பக்தர்களுக்கு லட்டு, வடை வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் கூடுதல் விலையில், லட்டு மற்றும் வடை பிரசாதங்களை பக்தர்களுக்கு தேவைப்படும் அளவில் அளிக்க வேண்டும் என தார்மீக நிறுவனங்கள் தேவஸ்தானத்திடம் வேண்டுகோள் விடுத்தன. அதனை ஏற்று தேவஸ்தானம், பெரிய லட்டு தலா ரூ.200, வடை தலா ரூ.100, சிறிய லட்டு தலா ரூ.50, குட்டி லட்டு தலா ரூ.7 விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் பக்தர்களுக்கு வழங்கும் மானிய விலை லட்டில் எவ்வித மாற்றமும் இல்லை உயர்வும் இல்லை. மேலும் தார்மீக நிறுவனங்கள் அல்லாத தனியார் நிறுவனங்களுக்கு ஏழுமலையான் பிரசாதமான லட்டு, வடை வழங்கபட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம்

    ஐயப்பன் தரிசனம் முடிந்தபின் கன்னிமூலை கணபதியையும் , நாகரையும் தரிசித்துவிட்டு திருமுற்றத்திலிருந்து இறங்க வேண்டும். குருசாமியுடன் இருமுடி கட்டுகளை பூஜித்து, பூஜைப் பொருட்கள் அடங்கிய முடியினை திறந்து நெய் தேங்காயை உடைக்க வேண்டும். அந்த நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுக்க வேண்டும். பின் அபிஷேகம் செய்த நெய்யையும், நெய தேங்காயின் ஒரு முடியையும் சுவாமியின் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்லலாம். இன்னொரு முடியை பதினெட்டுப்படிகளின் முன் உள்ள அங்கினிகுண்டத்தில் எறிந்து விட வேண்டும்.

  • தனியார் ஆன்மீக நிகழ்ச்சிக்கு திருப்பதி லட்டு

    திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு, வடை போன்றவற்றை தனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தனியார் நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு திருப்பதி லட்டு, வடை பிரசாதங்கள் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி ரூ.25க்கான ஒரு லட்டை, 200க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.50 ஆகவும், ரூ.100க்கு விற்பனை செய்யும் கல்யாண உற்சவ லட்டை, 10க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.200 ஆகவும், ரூ.25க்கு விற்கப்படும் வடையை 10க்கு மேல் வாங்கினால் ஒரு வடை ரூ.100 ஆகவும், ரூ.3.50க்கு விற்கப்படும் சிறிய லட்டை 1000க்கு மேல் வாங்கினால் ஒரு லட்டு ரூ.7 ஆகவும் விற்பனை செய்ய வேண்டும். மேலும், தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் மேற்கண்ட விலை உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் சிபாரிசு பேரில் கூடுதல் லட்டு பெறும் பக்தர்களுக்கும் விரைவில் லட்டு, வடை பிரசாத விலை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

    திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக திகழும் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசனம் பெற்றனர். இதையடுத்து, 200 கிலோ செப்பினால் ஆன பிரம்மாண்ட கொப்பரையில் மூன்றரை டன் நெய், ஆயிரம் மீட்டர் துணியில் சுற்றிய திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டன. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலையில் குவிந்தனர். இன்று ஏற்றப்பட்ட மகா தீபமானது 11 நாட்கள் வரை எரியும்.