Palani navarathri starts

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது.  ஒன்பது நாள் திருவிழாவை முன்னிட்டு வரும் அக்.11 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்.12 ம் தேதி விஜயதசமி அம்புபோடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி   மலைக்கோயிலில் உச்சிக்காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  

பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள வினாயகர், மூலவர், உற்சவர், வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர் ஆகியோருக்கும்,  பாரவேல் மண்டபத்தில் உள்ள துவாரபாலகர், கொடிக்கம்பம், மயில்வாகனத்துக்கும் காப்புக் கட்டப்பட்டது.  நவவீரர்கள், பரிவார மூர்த்திகளுக்கும் காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  அக்.11 ம் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையும், அக். 12 ம் தேதி விஜயதசமி அம்புவில் போடுதலும் நடைபெறுகிறது.

விழா நாட்களில் பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. காப்புக்கட்டு விழாவில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *