Navarathiri ambikai Arul pera

சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.

நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *