Thirupathy Bramorchava alangaram

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி, திருமலை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சியளிக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நாளை இரவு அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி திங்கட்கிழமை மாலை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறக்கூடிய  பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி 14 வாகனங்களில் காலையில் எழுந்தருளி காலை 9 மணி முதல் 11 மணி வரையும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை  நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 

பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருடசேவை நான்காம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்திற்காக வரும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க 8  லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக விஐபி தரிசனம் உள்ளிட்ட அனைத்து முன்னுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும் 4200  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 1500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கோவிலின் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல் தெரிவித்துள்ளார். பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி , திருமலை முழுவதும் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *