Srinivasa Perumal Thirukalyanam

பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவேங்கடபுரம் தசரத நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக் கல்யாண வைபோகம் தசரத நகரில் நடைபெற்றது.  

முன்னதாக திருக்கல்யாணத்திற்கான இருபது வகையான சீர்வரிசையை பொன்னியம்மன் கோவிலிலிருந்து கிராம மக்கள் ஊர்வலமாக மணப்பந்தலுக்கு கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து உய்யாளிசேவையும், மாலை மாற்றும் சடங்கும், பூப்பந்து எறிதல் சடங்கும் நடந்தேறியது. பாரம்பரிய சம்பிரதாயங்கள் நடத்தப்பட்டதை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் யாகம் வளர்க்கப்பட்டு கெட்டிமேளம் முழங்க வானவேடிக்கையுடன் ஸ்ரீதேவி பூதேவியர்க்கு மங்கலநாண் சூட்டப்பட்டது. 

திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் தீப தூப ஆராதனைகள் செய்வித்து நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மங்கலநாண் மற்றும் மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது. பொன்னேரி, திருவேங்கடபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *