Madurai Chitirai Festival

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேத மந்திரங்கள் முழங்க சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும், சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 

முன்னதாக கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16ம் தேதி திக்விஜயமும், மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 17ம் தேதியும் , வரும் 18ம் தேதியன்று காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19 ம் தேதி நடை பெறுகிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *