Lemon bid

முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட 9 எலுமிச்சம் பழம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 க்கு ஏலம் போனது

 விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இங்கு இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வேல் மட்டுமே உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 

தினமும் சுவாமி வீதியுலாவும், 18 ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 20 ம் தேதி தேரோட்டமும், 21 ம் தேதி காவடி பூஜையுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. 11 ம் நாளான நேற்று (22.03.2019 வெள்ளி) நள்ளிரவு 11 மணிக்கு இடும்பன் பூஜை நடந்தது. இந்த பூஜையில் திருவிழா காலங்களில்  கருவறையில் உள்ள வேலில் சொருகப்படும் எலுமிச்சம் பழங்கள் ஏலம் விடப்பட்டன.  

மொத்தம் 9 பழங்கள் 12 ம் தேதி முதல் 20 ம் தேதி வரையிலான 9 நாள் பழங்கள் வரிசையாக ஏலம் விடப்பட்டது. நள்ளிரவு 11 மணிக்கு துவங்கிய ஏலத்தில் முதல்நாள் பழம் ரூ.41 ஆயிரத்திற்கு ஏலம் போனது. 2 ம் நாள் பழம் ரூ. 22 ஆயிரத்திற்கும், 3 ம் நாள் பழம் ரூ.19 ஆயிரத்திற்கும், 4 ம் நாள் பழம் ரூ. 8 ஆயிரத்து 100 க்கும், 5 ம் நாள் பழம் ரூ.16 ஆயிரத்திற்கும், 6 ம் நாள் பழம் ரூ.10 ஆயிரத்திற்கும், 7 ம் நாள் பழம் ரூ.21 ஆயிரத்திற்கும், 8 ம் நாள் பழம் ரூ. 9 ஆயிரத்திற்கும், 9 ம் நாள் பழம் ரூ. 9 ஆயிரத்திற்கும் ஆக மொத்தம் ரூ. 1 லட்சத்து 55 ஆயிரத்து 100 க்கு 9 பழங்களும் ஏலம் போனது

கடந்த ஆண்டு 9 பழங்களும் ரூ. 1 லட்சத்து 02 ஆயிரத்து 900 க்கு ஏலம் போனது. பழத்தை ஏலம் எடுக்க  உள்ளூர் காரர்களுக்கே உரிமை என்பதால் அவர்களை உடன் வைத்துக்கொண்டே ஏலம் கேட்கப்பட்டது. வெளியூர்காரர்களுக்கு ஏலம் கேட்க உரிமை இல்லை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பழத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பதால் போட்டிபோட்டுக்கொண்டு பழத்தை ஏலம் எடுத்தனர். பழத்தை ஏலம் எடுத்த தம்பதியர்,  குளித்துவிட்டு ஜோடியாக ஈரத்துணியுடன் சாமி முன்னால் மண்டியிட்டு பழத்தை வாங்கிச்சென்றனர்.. 

பின்னர் அவர்களுக்கு *இடும்பனுக்கு வைத்து படைக்கப்பட்ட கருவாட்டு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏலம் முடிந்தவுடன்  கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும் கருவாட்டு சாதம் வழங்கப்பட்டது ஏலத்தை நாட்டாமை பாலகிருஷ்ணன் ஆணி தைத்த செருப்பின் மீது ஏறி நின்று  நடத்தினார். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *