shyamala-devi

 

நம் பாரத திருநாட்டில்,நவராத்திரி நான்கு விதமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி நம் எல்லோர்க்கும் தெரியும். அதேப்போல் ராமநவமி சமயத்தில் பிரதமை திதி முதற்கொண்டு , வடநாட்டில்  தேவி உபாசகர்கள் லலிதா நவராத்திரி விழாவை கொண்டாடுவர். ஆடி மாதப் பிரதமை நாள் தொடங்கி வரும் நவராத்திரியை வாராஹி திருவிழாவாகக்  கொண்டாடுவர். இவை தவிர நான்காவதாக கொண்டாடப்படும் ஒரு நவராத்திரி விழாவும் உண்டு. அதுதான் சியாமளா நவராத்திரி. இது மாசி மாதப் பிரதமை நாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான விழாவாகும்.

 ஜெகன் மாதா ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையான சியாமளா தேவி, அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில் தான்,  அறிவு என்னும் அம்பை  கட்டுப்படுத்துகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் அடக்கி , அம்பிகையிடம் நம்மை லயிக்கச் செய்ய முடியும்.

 தனது மந்திரியான சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே அம்பிகை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி எதையும் செய்வாள்.  இதனால் சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்ட சியாமளா தேவி,மன இருளை அகற்றி ஞான ஒளியைத் தருபவள்.

தேவியின்  ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை  உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது.  மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள். 

சியாமளா தேவியை தியானிப்பவர்களுக்கு வாக்கு , இசை, கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி போன்றவை சித்திக்கும்.

மாதங்கியின் பதினாறு பெயர்களைப் பற்றி பார்ப்போம்.

சங்கீத யோகினி, சியாமா, சியாமளா, மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவன வாசினி, சதாமாதா ஆகியவையாகும்.

மாதங்கி தேவி எட்டு கரங்களை உடையவள். அவளுடைய ஒரு திருக்கரத்தில்உள்ள சம்பா கதிர், உலகியல் இன்பங்களையும், மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர், கலை உள்ளத்தையும்,இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்,வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும், இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. மேற்கண்ட வடிவுடைய தேவியையே காளிதாசனின் சியாமளா தண்டகம் கொண்டாடுகிறது. சியாமளா தண்டகத்தை துதிப்பவர்களுக்கு தேவி பேரருள் புரிகிறாள்.

 காஞ்சி காமாட்சி யம்மன் கோவிலில் சியாமளா தேவியின் திருவுருவத்தை காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள் என்பது சான்றோர் நம்பிக்கை. அதனால் தான்  அங்கு எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

சியாமளா தேவிக்கு லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி எனப்படும் மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். அவர்களைப் பற்றி காளிதாசனின் சுலோகங்களையும் அதற்கான விளக்கங்களையும் தெரிந்துக்கொள்வோம்.

 

லகு மாதங்கி

 

“மாணிக்க வீணாம் உபலாலயந்தீம்

 

மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸாம்

 

மஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

 

மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி.’

 

மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.

 

வாக்வாதினி

 

“அமலகமல ஸம்ஸ்தா லேகினி புஸ்தகோத்யத்

 

கரயுகள ஸரோஜா குந்த மந்த்ரகௌரா

 

த்ருதசதா கண்டோல்லாஸி கோட்ரபீடா

 

பவதுபவ பவபயானாம் பங்கின பாரதி ந.’

 

நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்களைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.

 

நகுலி

 

ஞானத்தை அடைந்தால்கூட தவறு செய்வதற்கான சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். விஷம் போன்ற அத்தவறுகளால் நாம் பாதிக்கப்படாமல் காப்பாற்றுபவள் நகுலி. நகுலம் என்றால் கீரிப்பிள்ளை. கீரியைக் கண்டு விஷப் பாம்புகள் அஞ்சி விலகு வதைப்போல நகுலியின் அருளால் தவறுகள் நம்மை விட்டு விலகிச் செல்லும் என்பது உட்கருத்து.

சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன் களைப் பெறலாம்.

 

எனவே இந்த நவராத்திரி நாட்களில் அன்னை சியாமளாவையும், அவளது மறு உருவான  மீனாட்சியம்மனை வணங்கினால் மாணவ மாணவியர் கல்வியில் மேன்மையடைவார்கள்.  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *