திருவள்ளூர் மாவட்டம் காக்களுரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி உடனுறை ஸ்ரீ காரணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு சஞ்சீவி மலையுடன் வந்து அனுமான் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இதன் சிறப்பை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
ராமாயண காலத்தில் ராவண படையுடன் சீதையை மீட்க போராடிய தனது சகோதரன் ஸ்ரீராமனுக்காக லக்ஷ்மணனும் போர் புரிந்தான். அப்போது இராவணப்படை வீரர்கள் தாக்கியதில் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமணனை காப்பாற்ற எண்ணிய ஸ்ரீ ராமன் சிகிச்சை அளிக்க மருத்துவம் குணம் கொண்ட குறிப்பிட்ட மூலிகையை கொண்டு வருமாறு அனுமானை கிஷ்கிந்தா அனுப்பி வைத்தார். சஞ்சீவி மலை சென்று அடைந்த அனுமான் ராமன் குறிப்பிட்ட அந்த மூலிகை எதுவென்று தெரியாததால்' சஞ்சீவி மலையே பெயர்த்து எடுத்து தனது கையில் ஏந்தியவாறு வானில் பறந்து கொண்டு இருந்தார்.
இந்த தகவலை அறிந்த இலங்கை மன்னன் இராவணன் தனது நண்பனான காக்காசூரன் என்ற அசுரனிடம், மூலிகையை கொண்டு செல்ல விடாமல் அனுமானை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தான். நண்பனுக்கு உதவி புரிய எண்ணிய காக்காசூரன் ஏற்கனவே அனுமானின் பலத்தை அறிந்திருந்த காரணத்தால், நேரடியாக சண்டையிடுவதை தவிர்த்து, தந்திரமாக அனுமானை மூலிகையை உரிய நேரத்தில் கொண்டு செல்ல விடாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே 108 சிவலிங்கங்களை தனது தவ வலிமையால் பிரதிஷ்டை செய்தான். ராம பக்தனான அனுமான் ஆகாயத்தில் பறந்தபடியே பூமியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, சஞ்சீவி மலையுடன் கீழே வந்து கையில் இருந்த சஞ்சீவி மலையை இறக்கி பூமியில் வைத்து விட்டு, இரு கரம் கூப்பி சிவபெருமானிடம் உயிருக்கு போராடும் லட்சுமணன் பூரண நலம் பெற்று நீண்ட காலம் வாழவும், இலங்கையில் சிறைப்பட்டுள்ள சீதாப்பிராட்டியாருக்கு எவ்வித தீங்கும் நேர்ந்து விடாமல் காக்குமாறும், போரில் ஸ்ரீ ராமன் வெற்றி பெற வேண்டும் என பக்தியுடன் வழிபட்ட அனுமான் மீண்டும் சஞ்சீவி மலையை அங்கிருந்து எடுக்க முற்பட்டபோது.
மலையை அங்கிருந்து நகற்ற முடியாமல் தடுமாறி நின்றான். அப்போது லிங்கத்துள் மறைந்திருந்த ஈசன் இது இராவணனின் சூழ்ச்சி"என்பதையும் தன் வடிவத்தை வைத்து உயிர் காக்கும் மூலிகைகளை கொண்டு செல்ல விடாமல் நடத்தப்பட்ட நாடகம் என்பதை அனுமானுக்கு, உணர்த்தியதோடு'அனுமானின் கையில் சென்று அமருமாறு சஞ்சீவி மலைக்கு கட்டளை இட்டதாகவும் அதன்படி உரிய நேரத்தில் சஞ்சீவி மலையை கொண்டு சென்று அனுமான் லக்ஷ்மணனின் உயிரை ஸ்ரீ ராமன் மூலம் காப்பாற்றியதாக இக்கோவில் புராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே' முற்காலத்தில் இப்பகுதி காக்கா சூரண பட்டணம், என அழைக்கப்பட்டு, லட்சுமணனின் உயிரை காக்க சிவபெருமான் அனுமானுக்கு உதவியதால் காக்களூர் என தற்போது அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன். அருள்மிகு ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயரிலும், அன்னை அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி எனவும் அழைக்கப்படுகிறாள். ஸ்ரீ அனுமான் வழிபட்ட இறைவனை நாமும் வணங்க சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலம் சென்று திருவள்ளூரில் இறங்கி அங்கிருந்து' காக்களுரை அடையலாம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்