How did Murugan, who was hidden in the tomb, come to Kandakottam?

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்,
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்,
உறவுகல வாமைவேண்டும்.
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும், பொய்மை
பேசா திருக்கவேண்டும்.
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும்.
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை,
மறவா திருக்கவேண்டும்.
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்.

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம்ஓங்கு கந்தவேளே,
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி,
சண்முகத் தெய்வமணியே

என அருள் பிரகாச வள்ளலார் சுவாமிகள் தனது திரு அருட்பாவில் கந்தகோட்டை முருகன் குறித்து இவ்வாறு பாடி பணிந்துள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க கந்தகோட்டை முருகன் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்.

போரூர் அடங்கிய நிலப்பரப்பை பாளையக்காரர்கள் ஆண்டு கொண்டு இருந்தபோது, மராட்டியர்கள் பகை கொண்டு படை எடுத்து வந்தனர். அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட போரில் மராட்டிய படையினர் பெரும் அழிவை ஏற்படுத்தியதோடு, வழிபாட்டு தளங்களையும் விட்டு வைக்காமல் கோவிலுக்குள் புகுந்தும் செல்வங்களையும் அபகரித்தனர். இதனைக் கண்டு மனம் வருந்திய பொன்னம்பல தம்பி பிரான் அடிகள், திருப்போரூர் கோவிலில் இருந்த முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைக்குமாறு கட்டளை இட்டார். அதன்படி மூலவர் திரையிட்டு மூடப்பட்ட நிலையில் உற்சவமூர்த்தி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இறைவனுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதை நினைத்து தம்பி பிரான் அடிகள் மனம் வரைந்தினார். பின் போரூர் கோவிலுக்குள் புகுந்த மராட்டிய படை கலக காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அப்போது மூலவர் முருகப் பெருமான் திரை நீக்கி அங்கிருந்து புற்று ஒன்றில் புகுந்தது மறைந்ததாகவும், முருகப்பெருமானை வேண்டி பக்தர்கள் பக்தியுடன் உருகியதால் மராட்டிய படையினரின் பிடியிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அப்பகுதி மீண்டும் செல்வ செழிப்புடன் மேலோங்கி வளர்ந்ததாகவும் பெருமையுடன் பக்தர்கள் தெரிவித்தனர்.

பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஆடி கிருத்திகை அன்று காவடி எடுத்து பாதயாத்திரை ஆக திருப்போரூர் சென்று முருகனை வழிபட்ட பின்னர், இருப்பிடம் திரும்பி கொண்டு இருந்தபோது, சற்று ஓய்வு எடுப்பதற்காக மரத்தடி ஒன்றில் தங்கினர். அப்போது, பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார்.

புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பிய போது குறிப்பிட்ட ஓரிடத்தில் பாரம் அதிகமானதால் கையில் இருந்த முருகன் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முற்பட்டபோது முடியாததால், அங்கேயே திருக்கோயில் எழுப்பினர். முருகனுக்கு “கந்தசுவாமி” என்ற திருப்பெயரிட்டு வழிபட்டனர். அந்த இடம்தான் பெத்தநாயக்கன்பேட்டை என அழைக்கப்பட்ட, அவ்விடம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்” என தற்போது அழைக்கப்படுகிறது.

இங்குள்ள முருகனை பம்பன் குமாரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாமாலை சூட்டி உள்ளனர். அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம், சென்னை பாரிமுனையில்அமைந்துள்ளது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *