The temple is one, the Trinity is three, and the Brahmotsavam witnessed by the Thirukakshi Nambis is three!

வெங்கடேச பெருமாள் மீது பெரும் பக்தி கொண்ட ராமானுஜ சுவாமிகள் குருவான திருக்கச்சி நம்பிகள், பெருமாளிடம் தன்னால் இயன்ற ஏதேனும் கைங்கரியம் செய்ய எண்ணினார். அதன்படி கையில் விசிறியுடன் திருவரங்கம் சென்று விசிறி சேவை புரிய அனுமதித்தருமாறு பெருமாளிடம் வேண்டியபோது, அவர் காவிரி கரையில் இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்து சேவையை ஏற்க மறுத்தார்.

பின்பு திருக்கச்சி நம்பிகள், அங்கிருந்து நேராக திருமலை சென்று வெங்கடேச பெருமாளிடம் தான் வந்த நோக்கம் குறித்து தெரிவித்த போது, ஏற்கனவே மழையின் மீது இருப்பதால் அதிக அளவில் குளிர் காற்று வீசும் காரணத்தால் தன்னை சுற்றி குளிர்ச்சியான சூழலில் நிலவுவதை எடுத்துரைத்து சேவையை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் காஞ்சி மாநகரை வந்த திருக்கச்சி நம்பிகள் அங்கு உக்கிரமாக இருந்த ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு தனது விசிறி சேவையை புரிந்து பூரிப்படைந்தார்.

பூவிருந்தவல்லி வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள், நாள்தோறும் காஞ்சி மாநகரில் சென்று தனது கைங்கரியத்தை செய்து வந்த நிலையில், நாளடைவில் வயது முதிர்வு அடைந்தும், விடாமல் பெருமாளுக்கு கைங்கரியம் செய்வதை தனது வாழ்நாள் கடமையாக எண்ணி சேவையை தொடர்ந்தார். அவரது பக்தியில் உருகிய வரதராஜ பெருமாள், பூவிருந்தவல்லி தோன்றி, திருக்கச்சி நம்பிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று காட்சியளித்து அவரை ஆட்கொண்டார். அவர் காட்சி அளித்த அந்த இடத்தில்தான் ஆலயம் எழிலோடு காட்சி அளிக்கிறது.

இங்கு திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் சேவை புரிகிறார். மூலவரான ஸ்ரீ வரதராஜப் பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் சிரத்தில் சூரியனுடன் இருப்பதால் இது சூரிய தலமாகவும் போற்றப்படுகிறது. மேலும், திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள், திருவரங்கம் ஸ்ரீ அரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி இருப்பதும், மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுவது தனி சிறப்பு.

அப்போது ஒரே பரம்பொருளான எம் பெருமான் மூவராக கருட வாகனத்தில் திருக்கச்சி நம்பிக்கு காட்சி தரும் அழகை காண கண் கோடி போராது. தாயார், மல்லிகை மலர் தோட்டத்தில் அவதரித்ததால் அருள்மிகு ஸ்ரீ 'புஷ்பவல்லி' என்று அழைக்கப்படுகிறாள். அன்னை பூவில் இருந்து வந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்று அழைக்கப்பட்டு தற்போது, அதுவே மருவி 'திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி' என அழைக்கப்படுகிறது.

  • பொன்.கோ.முத்து, திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *