Pazhamuthir solai soorasamharam

முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹாரம்: கொட்டும் மழையில் வெள்ளி வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வை திரளான பக்தர்கள் "அரோகரா, வெற்றிவேல் வீரவேல்" என்ற கோஷத்துடன் கண்டும்  சுவாமியை மலர்தூவி வரவேற்று தரிசனம் செய்து திரளான பக்தர்கள் வழிபாடு..:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் மலைமேல் ஆறாவது படை வீடாக போற்றப்படக் கூடிய பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் ஐப்பசி மாதம் 7 நாட்கள் கொண்டாக்கூடிய கந்தசஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் சமேதராக வீற்றிருக்கும் சோலைமலை உற்சவ மூர்த்திக்கு பால், பன்னீர், திரவியம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் தொடர்ந்து அலங்கார மகா தீபாரதனையும் நடைபெற்று வருகின்றது.

தொடர்ந்து, சஷ்டி விழாவின் முதல் நாளில் முருக பெருமான் அன்னவாகனத்திலும், இரண்டாவது நாள் விழாவில், காமதேனு வாகனத்திலும், மூன்றாவது நாளில் யானை வாகனத்திலும், நான்காம் நாள் ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், ஜந்தாவது நாளான நேற்று முருகபெருமான் சமேதராக
சப்பர வாகனத்தில் புறப்பாடு திருக்கோவிலில் உள்ள மண்டபத்தை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனையடுத்து சஷ்டி விழாவின் முக்கிய நாளான இன்று, ஆறாவது நாள் விழாவாக காலை யாகசாலை பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு  பால், பன்னீர். இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் முருகன் பெருமான் புறப்பாடு நடைபெற்று வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, மாலை வெள்ளி மயில் வானத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோயிலின் அருகேயுள்ள நாவல் மரத்தடி ஈசான திக்கில் "வெள்ளி வேல் கொண்டு"  கஜமுகாசூரனையும், அக்னி திக்கில் சிங்கமுகாசூரனையும், சம்ஹாரம் செய்து, தொடர்ந்து பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பரவலாக மழை பெய்த நிலையிலும், கூடியிருந்த திரளான பக்தர்களின் "அரோகரா கோஷமும், வெற்றிவேல் வீரவேல் கோஷமும்" விண்னை பிளந்தது. மேலும் இந்த சூரசம்ஹாரம் முடிந்து திருக்கோயிலுக்கு திரும்பிய சுவாமியை கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சஷ்டி மண்டபத்தில் சாந்த அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, நாளை ஏழாவது நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது. நடைபெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *