Thiruverkadu temple festival

3  டன் காய்கறிகள், பழங்களால் தொங்கும் தோட்டமாக மாறிய திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில். புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு மூன்று நாட்கள் நடைபெறும் நிறைமணி காட்சி.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் நிறை மணி காட்சி நடைபெறும். இந்த ஆண்டும் கோவில் கருவறை மற்றும் முன் பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கட்டி பந்தல் முழுவதும் தொங்க விடப்பட்டிருந்தது.  

இந்த தோரணம் பார்ப்பதற்கு அழகாகவும்,  கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் காட்சி அளித்தது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும்,  உலகில் மழை பெய்து செழிக்கவும்,  ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்றும்  இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும், என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது. சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

மேலும் பக்தர்கள் நிறை மணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் படம் எடுத்து சென்றனர். நிறை மணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காய்கறி பழங்கள்  இருந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *