Tamil Newyear namakkal anjaneyar

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி மற்றும் தங்ககவச அலங்காரம்! -ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!

நாமக்கல் நகரில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்குப்பகுதியில், அருள்மிகு நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசுவாமி கோயில் குடவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எதிரில் 18 அடி உயரத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. மேற்கூரை இல்லாமல் நரசிம்மரை வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இங்கு இரவு பகல் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்து வருகிறார்.

உலகபுகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1008 வடைமாலை சாற்றிய பிறகு 5 மணிக்கு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் காப்பு, பஞ்சாமிருதம், நெய், தேன், பழ வகைகள், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் பல் வகை வாசனை மலர்களால் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து. ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் நாமக்கல் கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *