Thiruchendur soorasamharam

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமா நடைபெற்றது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான  கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. ஆறு நாட்களும் தினமும் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. இன்று சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, இன்று அதிகாலை 1-00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இதனையடுத்து  யாகசாலை மண்டபத்தில் இன்று காலை 6-00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கந்த சஷ்டி மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மதியம் 2 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

மாலை 4-00 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி ஜெயந்திநாதர் யானை முகம் கொண்ட தாரகாசூரனையும், சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த  சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள்  அரோகரா கோசத்துடன் கலந்து கொண்டனர். நாளை இரவு 11 மணிக்குமேல்  சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் வளாக மேலக்கோபுரம் முன்பு உள்ள மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *