Vijayaragava perumal car festival

காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் 7 நாளான இன்று திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா என பக்தி கர கோஷமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று  திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே  சென்னை பெங்களூர்  நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான  ஸ்ரீ மரகதவல்லி சமேத ஸ்ரீ விஜயராக பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு  மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று  திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அதையொட்டிவிஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து திருவாபரணங்கள்,மலர் மாலைகள், அணிவித்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து, மாவிலை தோரணங்கள் பூமாலைகள் வாழைமரம் கட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர,கோவிந்தா கோவிந்தா என பக்தி கர கோஷமிட்டவாரு பக்தர்கள் திருத்தேரின் வடத்தினை பிடித்து இழுத்து செல்ல  விஜயராகவ பெருமாள் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருத்தேர் உற்சவத்தில் ஏராளமான பஜனை கோஷ்டிகள் கலந்துக்கொண்டு பஜனை பாடல்களை மனம் உருக பாடியபடி சென்றனர்.

வழிநெடுங்கிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து திருத்தேரில்  எழுந்தருளி வந்த விஜயராகவ பெருமாளுக்கு கோவிந்தா கோவிந்தா என பக்தி கர கோஷத்துடன் கற்பூர ஆரத்தி சமர்பித்து மனமுருகி வேண்டி விரும்பி  சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

திருத்தேர் உற்சவத்தில் காஞ்சிபுரம், திருப்புட்குழி, பாலு செட்டி சத்திரம்,சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு  சுவாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *