Sanibagavan rasi

கிரக பெயர்ச்சிகளில் அதிகம் கவனிக்கப்படும் கிரகமாக சனி பெயர்ச்சி உள்ளது. சனி ,ஒரு ராசிக்கு வரும் பொழுது, உங்களின்  ராசிக்கு ,எந்த இடத்தில் சனி அமர்கிறார் என்பதைப் பொறுத்து பலன்கள் அமைகிறது. பலன்கள் உறுதியாக நடைபெறும். அதில் மாற்றமில்லை. 

அவர்களின் சுய ஜாதக அமைப்பில் சனி இருக்கும் நிலையை பொருத்தும்,அப்போது நடைமுறையில் இருக்கும் ,சுப,அசுப தசையை பொருத்தும், சனி தரும் பலன்கள் நல்ல பலன்களாகவோ அல்லது கெடுதலான பலனாகவோ அமையும்.

ஒன்றாம் இடம் என்னும் ராசியில் சனி இருக்கும் பொழுது, அதை ஜென்ம சனி என்கிறோம். ஏழரைச் சனியில் ஜென்ம சனி என்பது  மிகக்கடுமையான காலகட்டம். அதிலும் உங்கள் சுய நட்சத்திரத்தில் சனி செல்லும் காலகட்டங்களில்  தாங்க முடியாத அளவு பிரச்சினைகள் இருக்கும். திசா புக்திகள் சாதகமாக இருந்தால் ஓரளவு சமாளிக்க முடியும். இருந்தாலும் ,ஏழரைச் சனியில் ஜென்ம சனி என்பது, ஏதாவது ஒரு மன அழுத்தத்தை கொடுக்கவே செய்யும்.

2. இரண்டாம் இடம் எனும் குடும்ப ஸ்தானத்தில் சனி 
71/2 யில் பாத சனி)பகவான் வரும் பொழுது, குடும்ப உறவில் விரிசல் ஏற்படும். பொருளாதாரப் பற்றாக்குறை இருக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்க நேரிடும்.

3. மூன்றாமிடத்தில் சனி வரும்பொழுது சுப பலன்கள் ஏற்படும். காரிய ஜெயம் உண்டு.

4. நாலாம் இடத்தில் சனி அமரும்பொழுது அதற்குப் பெயர் அர்தாஷ்டம சனி.  நாலாம் இடம் என்பது சுக ஸ்தானம் என்பதால் உடல் நலம் பாதிக்கப்படும். சம சப்தம பார்வையாக தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் டல்லடிக்கும். வீடு, வண்டி வாகனங்களுக்கு  செலவு வைக்கும். சிலருக்கு தாயாரின் உடல் நலமும் பாதிக்கப்படும்.

5. ஐந்தாமிடத்தில் சனி அமரும்பொழுது அதற்கு பஞ்சம சனி என்று பெயர். ஐந்தாமிடம் என்பது புத்திர ஸ்தானம் என்பதால் இங்கு சனி அமரக்கூடிய காலகட்டங்களில் குழந்தைகள் சார்ந்த அமைப்பில் பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளால் கவலை கொள்ள நேரிடும்.பூர்வீக சொத்தில் சிலருக்கு  வில்லங்கங்கள் ஏற்படும்.

6. ஆறாம் இடத்தில் சனி அமரும்பொழுது கடன்கள் கட்டுப்படும். கவலைகள் பறந்தோடும் எதிரிகள் மட்டுபடுவர்.

 7.ஏழாம் இடத்தில் சனி அமரும் பொழுது கண்டக சனி என அழைக்கப்படுவார்.  பொதுவாக 7மிடம் பொது மாரக ஸ்தானம் என்பதால், ஏழாமிடத்தில் அமரும்பொழுது சிலருக்கு மட்டும் கண்டங்களை கொடுக்கும். ஏழாம் இடத்தில் சனி திக்பலம் பெறும்பொழுது, சிலருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.

8. எட்டாமிடத்தில் சனி அமர்ந்து அஷ்டம சனியாக அழைக்கப்படுவார். ஒருவரை வைச்சு செய்வதற்காகவே சனி அமரும் இடம் 8ஆம் இடம். ஏழரைக்கு வருடத்தில்  கொடுக்கக்கூடிய கெடு பலன் அனைத்தையும் இரண்டரை வருடத்தில் கொடுத்துவிடும்.  மிகமிகப் பொல்லாத இடம். அஷ்டமச் சனியில் கண்ணீர் சிந்தாத ஆட்களே இருக்க முடியாது.

9. ஒன்பதாமிடத்தில் சனி அமரும்பொழுது பூர்வீக சொத்துக்களில் வில்லங்கம் ஏற்படும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். சிலருக்கு நாத்திக எண்ணங்கள் தோன்றும். ஏனென்றால் அஷ்டமச் சனியில் எந்த கடவுளை வணங்கியிருந்தாலும், நல்ல பலன்கள் ஏற்பட்டிருக்காது. 9-ஆம் இடம் என்பது ஆன்மீக எண்ணத்தை குறிக்கும் இடம்.

10. பத்தாமிடத்தில் சனி அமரும்பொழுது அதற்கு கர்ம சனி என்று பெயர். பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம் என்பதால், சிலருக்கு வேலை இருக்காது. வேலை இருந்தாலும் கடுமையாக உழைக்க கூடிய அமைப்பை கொடுக்கும், சொந்தத் தொழில் செய்தால் வியாபாரம் டல்லடிக்கும்.  வாடிக்கையாளர்கள் வாசல் வரை வந்துவிட்டு, வேறு கடைகளுக்குச் சென்று விடுவர். வேலைக்கு  செய்பவர்களுக்கு, நிர்வாகத்தால் அழுத்தம், உடன் பணிபுரிபவர்களால் தொல்லை இருக்கும்.  ஒரு சிலருக்கு கருமம் பண்ணும் அமைப்பையும் கொடுக்கும்.

11. பதினொன்றாம்ம் இடமாகிய லாப ஸ்தானத்தில் சனி வரும்பொழுது எல்லாவித நல்ல பலன்களும் உண்டாகும்.

12. பனிரெண்டாம் இடமெனும் என்னும் ஏழரைச்சனியில் விரைய  சனியாக வரும் பொழுது விரையத்தை கொடுக்கும். பணவிரயம், மன விரயம் ,பொருள் விரயம் என ஏதாவது ஒரு விரையத்தை கொடுக்கும். இந்த காலகட்டங்களில் கையில் உள்ள காசை சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. சிலருக்கு  கருத்து வேறுபாட்டால் திருமணத்தில்  மனக்கசப்பு இருந்தால், மன விரயம் எனும் மன முறிவை கொடுக்கும். உங்கள் சுய ஜாதக அமைப்பை பொறுத்து எதில் விரையம் ஏற்படப் போகிறது என்பதை தெளிவாக அறிய முடியும்.

 12 இடங்களில் சனி எந்த ராசிக்கு வந்தாலும் தன்னுடைய தடத்தை பதித்து செல்வார். ஏற்கனவே சொல்லியது போல் உங்கள் சுய ஜாதக அமைப்பை பொருத்தும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் அமைப்பை பொருத்தும் பலன்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *