Aaadi amavasai tharpanam

இந்து சமயத்தில் அமாவாசை என்றாலே புனிதமான நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி அமாவாசை மேலும் சிறப்பானதாக, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.

அமாவாசை வானியல் நிகழ்வும் :

இந்தியா வானியல் ஆராய்ச்சி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நம் முன்னோர்கள் செய்துள்ளனர். நவீன அறிவியல் விளக்குவதற்கு முன்னரே கிரகங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.

வானவியல் கணிப்பின் படி சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை ஆகும். சூரியனை ‘பிதிர் காரகன்’ என்றும், சந்திரனை ‘மாதுர் காரகன்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் தான் சூரியன், சந்திரனை பிதா, மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும்.

சூரியன் – சந்திரன் எப்படிப்பட்டவர்கள் :

சூரிய பகவான் ஆளுமை, ஆண்மை, வீரம், ஆற்றல் ஆகியவற்றை தரவல்லவர். அதே போல சந்திரன் மனோகாரகன். மனதிற்கு அதிபதியான இவர் ஒருவருக்கு மகிழ்ச்சி, தெளிவான மன நிலை, அறிவு, இன்பம், உற்சாகத்தை வழங்க வல்லவர். இத்தகைய அற்புத விஷயங்களைத் தரவல்ல இவர்கள் சேர்ந்து இருக்கும் அமாவாசை நாளில் பெற்றோரை இழந்தோர் வழிபாடு செய்வது வழக்கம்.

2021 ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது ஆடி மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை அமாவாசை நீடிக்கிறது.

மூன்று முக்கிய அமாவாசை :

அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு தன் வம்சம், தலைமுறை எப்படி இருக்கிறது என பார்க்க வருவதாக கூறப்படுகிறது.

மகாளய அமாவாசை அன்று பூலோகத்தை பித்ருக்கள் வந்தடைகின்றனர். தை அமாவாசை தினத்தில் மீண்டும் பிதுர் லோகத்திற்கு நம் பித்ருக்கள் கிளம்புவதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? 

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, பின்னர் சிவாலயத்தில் எம்பெருமானை வழிபாடு செய்துவிட்டு, பிதிர் தர்ப்பணம் கொடுப்பது அவசியம். பிறகு அன்னதான செய்தல் ஆகியன இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்களாகும். இந்த அற்புத நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்றிடலாம்.

தர்ப்பணம் எங்கு கொடுக்க வேண்டும்?

ஆடி அமாவாசை தினத்தில் கடல் அல்லது புனித நதி, ஆறு, நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் நம் பாவங்கள் நீங்கி நற்கதி அதாவது விமோசனம் அடைய முடியும் என்பது நம்பிக்கை. நீர் நிலைகள் அருகில் இல்லாவிட்டால் பரவாயில்லை, வீட்டிலேயே ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு, பின்னர் 'ஓம் கங்கா தேவி நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு நாம் நீராடலாம்.

வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள், அதை அருகில் உள்ள நீர் நிலைகளில் சேர்த்துவிடலாம். காகம் நம் சமூகத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது. மற்ற பறவைகளை விட காகம் நம் சமூகத்தோடும், வாழ்க்கையோடு ஒட்டி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

காகத்திற்கு உணவு வைப்பதன் பலன்கள்:

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைப்பதால், நம் வாழ்வில் தீரா கடன் தொல்லைகள் தீரும். புத்திர சந்தான பாக்கியம் உண்டாகும். காகம் நம் முன்னோர்களின் வடிவமாக பார்க்கப்படுகின்றது. அதோடு நம் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் போது முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியோர் கூறுகின்றனர்.

காக்கை சனி பகவானின் வாகனமாகும். காக்கைக்கு உணவளிப்பதால் சனி பகவான் மகிழ்ச்சி கொள்வார். அதோடு சனி பகவானின் சகோதரர் எம தர்ம ராஜன் ஆவார். எம தர்ம ராஜா காக்கை வடிவில் வந்து மனிதர்கள் வாழும் இடங்களில் அவர்களின் நிலையை அறிவாராம்.காக்கை உங்கள் வீட்டை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கை கரைவதை கேட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். காக்கைக்கு உணவு அளிப்பதன் மூலம் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் பெறலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *