Aanmeekamaa, Aanmikamaa… Ethu Correct

 
ஆன்மீகமா, ஆன்மிகமா…எது சரி?

ஆன்மீகமா, ஆன்மிகமா – எது சரி ?' என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. 

இந்த வினாவிற்குத் தெளிவான – சரியான – உண்மையான – இலக்கணச் சுத்தமான விடை "ஆன்மிகம்' என்பதே!

சமயம், மதம், ஆத்திகம் தொடர்புடையவர்களால் வழங்கப்படும் ஒரு சொல் "ஆன்மிகம்'. இச்சொல்லே சரியான சொல்லாகும். பெரும்பாலோர் ஆன்மீகம் என்று தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.

ஆன்ம + இகம் = ஆன்மிகம் ஆயிற்று. அதாவது, ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச் சாரமே ஆன்மிகம் ஆயிற்று. ஒரு முக்கியக் கொள்கையின் பிழிவுச்சாரம் என்பது இகம் – இயம் – இசம் – இயல் எனப் பல பெயர்களில் வழங்கப்படும்.

இகம் – இயம் – இசம் என்னும் சொற்களே சரி – உண்மை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

காரல் மார்க்ஸின் கொள்கைப் பிழிவுச்சாரம் "மார்ச்சியம்' எனப்பட்டது. "மார்க்சீயம்' அன்று. 

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பிழிவுச்சாரம் "அண்ணாயிசம்' என்றும் ("அண்ணாயீசம்' அன்று), லெனினின் கொள்கைப் பிழிவுச்சாரம் "லெனினியம்' என்றும் ("லெனினீயம்' அன்று). 

காந்தியடிகளின் கொள்கைப் பிழிவுச்சாரம் "காந்தியம்' என்றும் ("காந்தீயம்' அன்று), புத்தரின் கொள்கைப் பிழிவுச்சாரம் "புத்திசம்' என்றும், ("புத்தீசம்' அன்று), தேசம் பற்றிய கொள்கைப் பிழிவுச்சாரம் "தேசியம்' என்றும் ("தேசீயம்' அன்று), அம்பேத்கரின் கொள்கைப் பிழிவுச்சாரம் "அம்பேத்கரியம்' என்றும் ("அப்பேத்கரீயம்' அன்று) அழைக்கப்பட்டன – அழைக்கப்படுகின்றன.

இவைதவிர, கண்ணியம், பெண்ணியம், கம்யூனிசம், சோசலிசம், தெய்விகம், ஆத்திகம், நாத்திகம் எனக் கூறிக்கொண்டே செல்லலாம். ஆக, இவை போன்று ஆன்மக் கொள்கைகளின் பிழிவுச்சாரமே "ஆன்மிகம்' ஆயிற்று. எனவே, ஆன்மிகம் என்று எழுதுவதும் பேசுவதுமே சரியான பொருள் பொதிந்த சொல்லாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *