Thirumana thadai neekum Tuesday

செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன. 

செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும். 41 செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். விரதநாள் அன்று அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். 

விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.

செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். 

செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *