Kallazhagar Thiruvizha

பக்தர்கள் கோவிந்தா முழக்கம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். 

மதுரை மாவட்டம் அழகர்கோவில் சுந்தர்ராஜப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடிக்கு வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர். வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்த கள்ளழகர், இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் பக்தர்களுக்கு அவர் காட்சியளித்தார்.

இன்று அதிகாலை, தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவிலில் வெட்டிவேர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின், பக்தர்கள் புடைசூழ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கப் புறப்பட்டார். அவரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்த வீரரராகவ பெருமாள் வரவேற்றார். சரியாக 5.47 மணிக்கு பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபோது, வைகையின் இருபுறமும் கடலென திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *