kallazhagar

அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இதையொட்டி அழகர்கோவிலில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் திருவிழா தொடங்குகிறது.

மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் கோவிலுக்குள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை மறுநாளும் இதே நிகழ்ச்சி நடைபெற்று, 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் கள்ளழகர் தங்க பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மதுரைக்கு புறப்படுகிறார்.

தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி உள்பட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பின்னர் 29-ந்தேதி அதிகாலை சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் வழியாக செல்லும் கள்ளழகர், பின்னர் காலை 6 மணிக்கு மேல் மூன்றுமாவடியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அப்போது பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து அழகரை வணங்கி வரவேற்கிறார்கள். தொடர்ந்து வழிநெடுக உள்ள மண்டபங்களில் பெருமாள் எழுந்தருளி, அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகிறார். அப்போது சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை பெருமாளுக்கு சாத்தி பக்தர்களுக்கு சேவை சாதித்தல் நடைபெறுகிறது.

30-ந்தேதி காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். அப்போது லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு வண்டியூர் பெருமாள் கோவிலில் சாமி எழுந்தருளுகிறார்.
மே 1-ந்தேதி காலை சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் விமோசனம் தந்தருளும் பெருமாள், அன்று மாலை அனுமார் கோவில் சென்றடைகிறார்.

அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2-ந்தேதி அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் பெருமாள் எழுந்தருள்கிறார். 3-ந்தேதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியானவுடன் திருமாலிருஞ்சோலை நோக்கி வழிநடையாக செல்கிறார்.

4-ந்தேதி அதிகாலை அப்பன் திருப்பதி மண்டபங்களில் காட்சி தரும் பெருமாள், அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கள்ளழகர் தனது இருப்பிடமான அழகர்மலைக்கு வந்து கோவிலில் இருப்பிடம் சேருகிறார். 5-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த வருடம் சுமார் 435 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார்.

திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு செல்லும் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 29 உண்டியல் பெட்டிகள் பெருமாளுடன் செல்கிறது. இதற்காக அவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *