suriya-bagavan-patri-evarumariyatha-arputha-thagavalgal

 

 

சூரிய பகவான் குறித்து உங்கள் மெய்சிலிர்க்க வைக்கும், எவருமறியாத அற்புதத் தகவல்கள்!

சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதன் சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள்.

சிவபெருமானைநோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன் , ‘கிரகபதம்’ என்னும்பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரெண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்கு பெயர்கள் வழங்கப்படுகின்றன. சூரியன் ஒருவராக இருந்தாலும் 12ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்.

சூரியன் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாக மும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயத்தை குறிக்கிறது சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’ ஆகும். இது சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரதசப்தமி என்று அழைக்கிறார்கள். சப்தம் என்றால் 7 என பொருள். அமாவாசைக்கு பிறகான 7- வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமானதை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரதசப்தமி என்று போற்றப்படுகிறது.

அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராடவேண்டும். 7 எருக்கம் இலைகள், மஞ்சள்பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்குமேலே வைத்துக் கொண்டு நீராடுவது நல்லது.

 

இந்த 7 எருக்கம் இலைகளையும், கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டைகளில் 2, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், 7எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி விரதத் தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரதசப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரியரதம் வரையவேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் படைக்கலாம். சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *