Tag: Thiruchendur

  • Thiruchendur pacchai sathi

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளில் காலை சுவாமி சண்முகப் பெருமான் , பகலில் பச்சை சாத்தி கோலத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

    வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி திருவீதி உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனை நடைபெற்று, காலை 10.30 மணியளவில் பச்சை சாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளியம்மனும் புதன்கிழமை பகலில் தனித்தனி பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை (ஆக. 29)  நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடைகின்றன.

  • Thiruchendur koidiyetram video

     உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்  நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் ஆவணித்திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழா  கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    ஆவணித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், நடைபெற்றது. இதனை தொடர்ந்து  காலை 5.20 மணியளவில் திருக்கோயிலில் உள்ள செப்புக் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  ஆக. 26-ம் தேதியன்று ஏழாம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மூலவர்களில் ஒருவரான சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

    இதனை த்தொடர்ந்து ஆக. 27-ம் தேதி எட்டாம் திருவிழாவில் பகல் 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்து சேர்கிறார்.  திருவிழாவின் சிகர  நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற ஆக. 29-ம் தேதி காலை நடைபெறும்.

  • Thiruchendur Avani Festival

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

     ஆவணி திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. ஆவணி திருவிழாவின் போது சுவாமி தினமும் காலை, மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுகின்றார்.

    திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிகழ்ச்சி நிரல்…..
     ஆகஸ்டு 24 ….
    காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    ஆகஸ்டு 25…..
    6-ம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பந்தல் மண்டபம் மத்தியில் சேர்கிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.

    ஆகஸ்டு 26…..
    7-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 9 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.

    ஆகஸ்டு 27…..
    8-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை நிற கடசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்.

    ஆகஸ்டு 29…..
    10-ம் திருநாள் காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11-ம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

    ஆகஸ்டு 31…. 
    12-ம் திருநாள் மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள். 

  • Thiruchendur Hundiyal Kanikkai

    திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜுலை மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே அறுபத்தொறு லட்சம் ரூபாய்  கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

     உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதத்திற்கான உண்டியல் எண்ணிக்கை கோவிந்தம்மாள் ஆதித்தனார் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. சிவகாசி பதினென்னு சித்தர் மடம் பீடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். 

    இதில்  கோவில் யானை பராமரிப்பு , கோசாலை பராமரிப்பு , அன்னதானம் மற்றும்  நிரந்தர உண்டியல் என அனைத்து உண்டியல்களிலும் ஜூலை மாதத்திற்கான  உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 61லட்சத்து 41 ஆயிரத்து 909 ரூபாய் மொத்தம் கிடைக்கப்பபெற்றுள்ளது.  

    மேலும் 1375 கிராம் தங்கமும்,    20,266 கிராமும் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. மேலும் லண்டன்,  சிங்கப்பூர் , மலேசியா போன்ற   வெளிநாட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 536 அயல்நாட்டு நோட்டுகளும்  காணிக்கையாக கிடைக்கபெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Thiruchendur Prasadham

    உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக  கோவில் பிரசாத விற்பனை நிலையம்  மூலம் குறைந்த விலையில்  பிரசாதங்கள் விற்பனை தொடங்கி இருக்கிறது. 

    இந்து சமய அறநிலையதுறை கோவில்களில் வழங்கப்படும்  பிரசாதங்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஏலம் முறையில்  தனியார்க்கு குத்தகைக்கு விடப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பிரசாத விற்பனையில்  பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும்  பிரசாதங்கள் தரம் குறைவாக இருப்பதாகவும்  புகார்கள்  எழுந்தது. 

    இதனையடுத்து இந்து சமய  அறநிலையத்துறையின்  முதல் நிலை கோவில்களில் பிரசாதம் மற்றும் பஞ்சாமிர்தங்களை நேரடியாக கோவில் விற்பனை நிலையங்கள்  மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து உலகப்புகழ்பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான  திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி கோவிலில் கோவில் பிரசாத விற்பனை நிலையம் மூலம் நேரடி பிரசாத விற்பனையை இணை ஆணையர் குமரதுரை தொடக்கி வைத்தார். 

    இதன்மூலம் ரூ 50 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த லட்டு , புளியோதரை , சர்க்கரை பொங்கல் , தேன்குழல்  மற்றும் பிரசாத பை உள்ளிட்ட பிரசாத பொருட்கள் பக்தர்கள் வசதிக்காக பத்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்கப்படுகிறது. குறைந்த விலையிலான பிரசாதங்களை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 

    கோவில் பிரசாதம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது பக்தர்களிடம் வரவேற்றை பெற்றது. இதனையடுத்து கோவிலில்  விரைவில் பஞ்சாமிர்தம்  விற்பனையும் பக்தர்களின் வசதிக்காக நேரடி விற்பனையில் தொடங்கும் என கோவில் இணை ஆணையர் குமரதுரை  தெரிவித்துள்ளார்.

  • Thiruchendur Senthil Andavar Sirappugal

    சகல வாஸ்து லட்சணங்களுடனும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செந்திலாண்டவன் ஆலயம் திருச்செந்தூரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

    முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

    மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

    செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘புட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.

    ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.

    கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை உணர்த்தவே!

    முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

     இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.

    மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

    மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

    இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.

    உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராக செந்திலாண்டவர் காட்சி தருகிறார்.

    ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
    ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.
     

  • Thiruchendur Murugan Koil Vaigasi thiruvizha

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி வைகாசி திருவிழா தொடங்குகிறது.

    மே 17 –  அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 
    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 
    5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 
    10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 
    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 
    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற உள்ளது.

    மே 18 – அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறப்பு, 
    1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 
    2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 
    10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், 
    சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், 
    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    மே 19 – அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 
    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 
    5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 
    காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 
    மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 
    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் 

    திருவிழாவை கான லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. 

  • Thiruchendur maasi therottam

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் மாசித்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு , கோவில் தக்கார் இரா .கண்னன் ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார்.

     சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

    தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.