Tag: amman koil

  • Thiruverkadu amman koil

    சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறை மணி காட்சி நடைபெறும் இந்த ஆண்டும் கோவில் மூலஸ்தானம் மற்றும் முன் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டது. 

    தேவலோகத்தில் இருப்பது போல் இருக்க வேண்டும் என்பதற்காக பழங்கள், காய்கறிகள் கட்டி தொங்க விடப்பட்டன. பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பது போல் காட்சி அளித்தது. மேலும் நாம் வேண்டியது நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் உலகில் உள்ள ஜீவ ராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்றும் மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்வதாகவும் தெரிவித்தனர். 

    மேலும் 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அந்த பழங்கள், காய்கறிகளை புகைப்படம் எடுத்து சென்றனர்.

  • Aadi Friday Amman Koil Celebration

    ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. 

    இந்த ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். 

    பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். 

    ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அதேபோல ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. 

    இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இப்படி அனைத்து விசேஷங்களையும் கொண்ட ஆடி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

  • Maasani Amman Koil

    தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் மிகவும் புகழ்பெற்ற அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் 'மயான சயனி" என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உரைந்துள்ள இடம் கோவை மாவட்டத்தில், ஆனைமலை என்னும் சிற்றுரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

    ஆனைமலை பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.

    ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த பெண்கள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். 

    இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான்.

    பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு, வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போக்கில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.

    பொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி அளிப்பதை கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமான காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.

    நான்கு கைகளில், இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு, மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

    இந்தக் கோவிலில் ஒரு பிரத்யோகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் சமர்ப்பித்தால் அந்த குறை தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.

    இந்தக் கோவிலின் மிக சுவாரஸ்யமான விஷயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளகாய் போட்டு அரைப்பார்கள். அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழ்ந்த பக்தியுடன் பூசுவார்கள். இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர்.
     

  • Meenatchi amman koil masi thiruvizha

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. 

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் ரிஷப உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது அருள்மிகு மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினார்.
     
    கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்மன் கோயில் 2ம் பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.