Blog

  • பிரதோஷம் பிறந்த கதை..

    சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். 

    இந்த பிரதோஷம் எப்போது எப்படி ஏற்பட்டது என்பதற்கு ஒரு புராண கதை இருக்கிறது. அது இதுதான்..

    பன்னெடுங் காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஒரு அதிபயங்கர போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமானோர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர். அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.

    பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது. அவர்களை சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.

    தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், ஆயிரம் நாக்குடைய வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு, வால்பக்கம் தேவர்களும் தலைப்புறத்தை அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர்.

    இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ‘காளம்’ என்று நீல விஷமும், பாற்கடலில் பிறந்த ‘ஆலம்’ என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.


    தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர்.

    நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய ‘சுந்தரர்’ என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி “அவ்விஷத்தை இவ்விடம் கொண்டுவா!” என்று பணிந்தார்.

    சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.

    எல்லோரும் அதிசயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் ‘விஷாபகரணமூர்த்தி’ என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். ‘கண்டத்தில்’ விஷத்தை நிறுத்தியதால் ‘நீலகண்டர்’ ஆனார். விஷம் கொண்டுவந்த ‘சுந்தரர்’ ‘ஆலால சுந்தரர்’ என்று அழைக்கப்பட்டார்.

    கயிலையில் ஈசன் விஷம் உண்ட பிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரை போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.

    ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து ‘சந்தியா நிருத்தம்’ எனும் நடனம் ஆடினார்.

    இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் ‘ஹரஹர’ என்று துதித்தனர்.

    அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்த்தி வருகிறார். இவ் கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரமன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதங்கணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.

    பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள். 

  • “வாழ்க்கை போதித்தது என்ன?” – காஞ்சி மஹாப்பெரியவா

    மகாப்பெரியவா என்று மக்களால் பெரிதும் போற்றப்படும் காஞ்சி மகானைப் பற்றிய செய்திகள், சம்பவங்கள் படிக்க படிக்கத் திகட்டாதவை. மகாப்பெரியவா பற்றி  ஏராளமான முத்துக்கள், நவரத்தினங்கள் இணையத்தில் பரவியுள்ளன. அப்படிப்பட்ட நவரத்ன கட்டுரை ஒன்றை சக்திஆன்லைன் வாசகர்களுக்காக சமர்பிக்கின்றோம். முகமறியாத மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றியுடன்.

    பாரத கலாச்சாரத்தைப் போற்றி வணங்கிய ஏராளமானவர்களில் குலபதி கே.எம்.முன்ஷி ஒருவர். போற்றியதோடு நில்லாமல் அதைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அப்படியே தர வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவராய் அவர் இருந்தார். ‘பாரதீய வித்யா பவன்‘ என்ற நிறுவனத்தை நிறுவியதோடு பாரம்பரியச் செல்வ ரகசியத்தை அனைவருக்கும் அள்ளித் தர ‘பவன்ஸ் ஜர்னல்‘ என்ற பத்திரிகையையும் ஆரம்பித்தார். அந்த பவன்ஸ் ஜர்னலுக்கு  காஞ்சி பரமாச்சார்யாள் (ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்) அருளிய ‘வாழ்க்கை எனக்குப் போதித்தது என்ன?‘ என்ற அற்புதமான கட்டுரையை வெளியிடும் பெரும்பேறு  கிடைத்தது. பொதுவாக, பெரும் அருளாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதுவும் காஞ்சிப் பெரியவர், லோக க்ஷேமம் எனப்படும் உலக நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அதைப் பற்றி மட்டுமே பேசுபவர். அவரே மிகுந்த வினயத்துடன் மிக அரிதான ஒரு கட்டுரையை அருளி, அதில் தன் வாழ்க்கையின் அர்த்தத்தை இறுதி வாக்கியத்தில் கூறியிருப்பது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

    மரநாயும் பொன்னுச்சாமி எடுத்த தங்க வளையலும்

    அவரது மூன்றாம் வயதிலோ அல்லது நான்காம் வயதிலோ நடந்த இரு சம்பவங்களுடன் கட்டுரை ஆரம்பிக்கிறது. மரநாய் ஒன்று, வெல்லம் இருந்த ஜாடியில் தலையை விட்டுக் கொண்டு அதை மீண்டும் எடுக்க முடியாமல் தவித்துக் கூக்குரலிட்டதைக் கேட்டுத் திருடன்தான் வந்து விட்டானோ என்று எண்ணிய அண்டை அயலார் கம்பு தடிகளுடன் வர, நாய் பிடிபட்டது. அதை ஒரு கம்பத்தில் கட்டி ஒருவாறாக ஜாடியைப் பிரித்தனர். பேராசை தந்த பெருங்கேட்டை ஆச்சார்யாள் விளங்கிக் கொண்டாராம்.

    அடுத்த சம்பவம் அவரது தங்க வளையலைப் பற்றியது. தனியாக இருந்த குழந்தையைப் பார்த்த திருடன் ஒருவன் தங்க வளையலைக் குறி வைத்து வீட்டின் உள்ளே வர, அவரே அதைக் கழட்டும் விதத்தைச் சொல்லி அதை ரிப்பேர் செய்து எடுத்து வரக் கூறுகிறார். மிக்க மகிழ்ச்சியுடன் பொன்னுசாமி (அப்படித்தான் வந்தவன் தன் பெயரைக் கூறி இருந்தான் – தங்கத்திற்குச் சாமி!) தன் வளையலை ரிப்பேர் செய்து எடுத்து வரப்போகும் செய்தியைத் தன் வீட்டாருக்குக் குழந்தை கூறியது.

    அவசரம் அவசரமாக வெளியில் வந்த குழந்தையின் வீட்டாருக்குப் பொன்னுசாமி தென்படவே இல்லை. கவர்ச்சி, திருடு, பேராசை, ஏமாற்றுதல், புலம்பல் ஆகிய அனைத்தையும் இந்த இரு சம்பவங்களும் ஆச்சார்யாளுக்கு விளக்கி விட்டன! ஆனால் வயதாக ஆக, சில ஆத்மாக்கள் பிறருக்காகவே அறநெறியின் அடிப்படையில் வேரூன்றி வாழ்கின்றனர் என்ற பேருண்மையை அவர் உணர்ந்தார்.

    பீடம் ஏறிய வரலாறு

    அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராச்சார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சிபுரம் செல்கிறார் பரமாச்சார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்தச் சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது. சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சக்கட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும், ஆகையால் அவரையே அடுத்த சங்கராச்சாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாச்சார்யாள்!

    இப்படியாகத்தான், சிறு வயதில் திடீரென்று நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் பீடமேறினார் சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி என்னும் திருநாமம் கொண்ட பரமாச்சார்யாள். அவருக்கு சாஸ்திர பாடமும் பயிற்சிகளும் ஆரம்பமாயின.

    இரு நிகழ்ச்சிகள்

    1923ஆம் ஆண்டு திருச்சியில் முகாம் இட்டிருந்தபோது 12 வயதுச் சிறுமி ஒருத்தி தன் சகோதரனைப் பொய் சொன்னதற்காகக் கண்டித்ததைப் பார்த்து வியந்தார் ஆச்சார்யாள். அந்தச் சம்பவத்தை அவரால் மறக்கவே முடியவில்லை.

    இன்னொரு சம்பவம் கேரளாவில் நடந்தது. அவர் முகாமிட்டிருந்த இடத்தில் பக்கத்து அறையில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவரது கவனத்தைக் கவர்ந்தது. பக்கத்து அறையில் பூஜை செய்யப் போன ஒரு நம்பூதிரி அங்கிருந்தவர்களுடன் அரட்டையில் பங்கு கொண்டார். சிறிது நேரத்தில் அவர் தன் தவற்றை உணர்ந்து கொண்டார். பூஜையில் அவர் மனம் செல்லவில்லை. தன் தவற்றைப் பகிரங்கமாகக் கூறி, மனம் பூஜை செய்யும் லயத்தில் இல்லை என்று அவர் கூறியதையும் ஆச்சார்யாள் கேட்டார். அவரது குறிக்கோளில் இருந்த நேர்மை ஆச்சார்யாளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    நேசித்துப் போற்றியோர்

    அடுத்து ஆசார்யாள், தன்னை மிகவும் அன்பு பாராட்டி மதித்து நேசித்தவர்கள் எப்படித் தன்னைப் போற்றினர் என்பதை எடுத்துக் கூறுகிறார், இறுதியில் கட்டுரையை “கடவுள், சிலரைப் பிறருக்காகவே வாழப் படைத்திருக்கிறார்” என்ற வரியுடன் முடிக்கிறார்.

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

    – கோமதி சுரேஷ்

  • யாதுமாகி நின்று அருளும் சிறுவாச்சூர் மதுர காளி

    யாதுமாகி நின்றாய் காளி

    எங்கும் நீ நிறைந்தாய்

    தீது நன்மை எல்லாம் – நிந்தன்

    செயல்கள் அன்றி இல்லை.

     – மகாகவி பாரதி

     

    ஆதிபராசக்தியே க்ரியாசக்தி (துர்கை), இச்சாசக்தி (லக்ஷ்மி), ஞானசக்தியாய் (சரஸ்வதி) தன் பிள்ளைகளுக்கு தாயாக அருள் பாலிக்கிறாள்.துர்கா தேவி அம்பா, காத்யாயினி, பார்வதி என எண்ணற்ற வடிவங்கள் கொண்டவளாய் நம்மை ஆட்கொள்கிறாள் . அதில் ஒரு அம்சம்.  தான் காளி. இவளின் புறத்தோற்றம் அச்சம் தரக் கூடியதாக இருந்தாலும் அரவணைக்கும் தாயவள் .அண்டசராசரங்களையே ஆடையாய் அணிந்திருக்கும் இவள், ‘திகம்பரி ஆவாள் . சக்தி வழிபாட்டு முறையில் வந்தவர்களுக்கு காளி குலதெய்வமாக இருக்கிறாள் . 

    ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், போர் மூண்டபோது, துர்கை தனது அதீத சக்தியான காளிகாதேவிக்கு உயிர் கொடுத்ததாய் சொல்லப்படுகிறது. காளிகாதேவி, அசுர வடிவங்களை சம்ஹாரம் செய்து,மாலையாக்கி கோர தாண்டவம் புரிகிறாள். பிரளயத்தில் ஒரு யுகமே முடிந்த அறிகுறியுடன், கோர தாண்டவம் ஆடுகிறாள். தன் பணி முடிந்ததும் தெரியாமல் அவள் அழிவில் மூழ்கியிருக்கும் போது, சிவன் ஒரு குழந்தை உரு கொண்டு மயானத்தில் தோன்றுகிறார். குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் அவள் வெறியும் கோபமும் அடங்கி, இறப்பின் நடுவில் பிறப்பின் தத்துவத்தை உணர்த்துபவளாய் அதைத் தன் மார்போடு அணைத்துப் பாலூட்டுவதாய் புராணம் கூறுகிறது.

    காளியே பின்பு ‘பத்ரகாளி’யாக சாந்த உருப்பெற்று அருள்பாலிக்கிறாள்.’பத்ர’ என்றால் சௌபாக்யம் அருள்பவள் என்று பொருள். கோப வடிவமாக இருக்கும் அன்னையை சாந்தம்  செய்தால் உடனே இளகி அருள்பாலிப்பாள் .

    கல்கத்தா  நகரில் உள்ள காளிக் கோயிலை போலவே  தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஒரு காளி கோவில் இருக்கிறது. திருச்சியைத் தாண்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற ஸ்தலத்தில்,மதுரகாளியம்மன்  கோவில் இன்றும் பல பக்தர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு ஸ்தலமாக சிறந்து விளங்குகிறது.

    பல பக்தர்களுக்கு குலதெய்வமாய் விளங்கும் அன்னையின் திருக்கோவில்,திங்கள்  மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கிறது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள  கிணற்றடியில் குளித்து, அங்கேயே மாவிளக்கு இடித்து அம்மனுக்குப் படைக்கிறார்கள். குளிக்க, மாவிடிக்க என எல்லாவற்றிற்கும் வசதி கோவிலிலேயே இருக்கிறது. தற்போது இன்னும் விஸ்தாரமாய் உடை மாற்ற சுற்று மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.. உடுக்கை ஒலிக்க அம்மனை பூஜை செய்து அழைக்கும் பொழுது சிலிர்ப்பு உண்டாவதை உணர முடியும் .

    ஸ்தல வரலாறு 

    ஆதியிலே சிறுவாச்சூரிலே செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம்  ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அந்த அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு பயன் படுத்தி வந்தான் அவன். மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களைக் காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான், தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை சாதாரண மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து அவனை வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் மதுர காளியம்மன் .

    செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே எப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை காட்டும் போது முதலில் மலை நோக்கி தீபாரதனைக் காட்டப்பட்டு பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

    இத்தலத்தின் மற்றொரு ஐதீகம், அம்பிகை சிலப்பதிகார நாயகி மதுரை கண்ணகி என்றும், கற்புடை தெய்வம் கண்ணகி தன்னுடைய கணவருக்கு பாண்டியன் நெடுஞ்செழியனால் இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க முடியாது கோபம் கொண்டு மதுரையை எரித்த பின் மன அமைதியின்றி அலைந்த போது இத்தலம் வந்ததாகவும் அந்த மதுரை காளியம்மனே மதுர காளியானாள் என்பது செவிவழிச் செய்தி.மதுரை காளியம்மன் என்ற திருநாமமே பின்னாட்களில் மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் நம்பப்படுகின்றது. சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு எல்லாவித இனிய நிகழ்வுகளையும் அருளுவதால் மதுர காளியம்மன் (மதுரம் – இனிமை) என்ற திருநாமம் கொண்டாள்.

     

    கோவில் திறக்கும் நேரம் 

    சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பின்பு தங்கக் கவசம் சார்த்தப்படுகின்றது. இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக் காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது.

     

    சிறப்பு அம்சம்

    மதுரகாளி  மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் .ஒரு முறை அம்மனை தரிசனம் செய்தவர்களை மறுபடியும் மறுபடியும் தன்னிடம் ஈர்க்கின்றாள் அன்னை. எழிலார்ந்த ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் வடக்கு நோக்கிய சன்னதி. பூசை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர் அன்னையை அழைக்கின்றனர், அப்போதுதான் மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

    சதாசிவ பிரம்மேந்திராள் இத்தலத்திற்கு எழுந்தருளி அன்னை சன்னதியில் ஸ்ரீ சக்ரம் ஸ்தாபித்ததாக கூறுகின்றார்கள்.

    பலனளிக்கும் பிராத்தனைகள்

    செல்லி அம்மனிடம்  குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ,  குழந்தை பிறந்தால் “பால் முடி” கொடுப்பதாக வேண்டிக்கொண்டு தங்களால் இயன்ற காசினை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தால் அவர்களின் குறையை அன்னை தீர்த்து வைக்கிறாள் என்று நம்பப்படுகிறது.அவ்வாறு அன்னையின் கருணையால் பலன் பெற்றவர்கள் குழந்தைக்கு மூன்று மாதம் முடிவடையும் முன்  சென்று முடி காணிக்கை செலுத்துகிறனர்

    அங்க பிரதக்ஷணம் அம்மனுக்கு ஒரு சிறந்த பிரார்த்தனை. மற்றுமொறு சிறந்த பிரார்த்தனை மாவிளக்கு. வெளியில் எங்கும் மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள்ளாவே அரிசி கொணர்ந்து ஊற வைத்து மாவு தயாரித்து நெய் விளக்கிடுகின்றனர் பக்தர்கள்.

    பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி,சூனியம் போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து அன்னையை வழிபட விலகி சென்று விடுகின்றன. ஊமை, செவிடு போன்ற குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிட கரைந்து காணாமற் போய் விடுகின்றன

    தன்னை நாடி வரும் அடியாருக்கு தன் கருணைத் திறத்தால் நல்லன நல்கி நலமான வாழ்வமைத்து தரும் மதுர காளியம்மனை மனமுருகி வழிபட்டு நன்மை அடைவோமாக.

    மதுரகாளியம்மன் ஆலயத்தின் அதிகார பூர்வ இணையதளம் :

    http://siruvachurmadhurakaliamman.tnhrce.in/index.html

    – ப .கோமதி சுரேஷ்

  • புற்றில் இருந்து வந்த புன்னைநல்லூர் மாரியம்மன்

    ஒரு முறை தஞ்சையை ஆண்டுவந்த துளஜா என்னும் மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய

    மன்னன் சமயபுரம் மாரியம்மனின் பக்தன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, “ உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க சமயபுரம் தேடி போவானேன்”, என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

    தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் “என்னுடைய இருப்பிடம் இங்குதான்” என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொன்னான்.

    அந்த மகான் எழுந்து அந்த புற்றை அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் மஹான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர். அந்த மஹான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

    அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.

    இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்

  • கந்தசஷ்டி கவசம் ஏன் சொல்ல வேண்டும்?

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

    இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

    நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
    முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,
    இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
    நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

    சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்

  • கந்தசஷ்டி கவசம் ஏன் சொல்ல வேண்டும்?

    கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

    இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

    நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.
    முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,
    இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.
    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
    அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.
    நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.
    சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்

  • புற்றில் இருந்து வந்த புன்னைநல்லூர் மாரியம்மன்

    ஒரு முறை தஞ்சையை ஆண்டுவந்த துளஜா என்னும் மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

     

     

    மன்னன் சமயபுரம் மாரியம்மனின் பக்தன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, “ உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க சமயபுரம் தேடி போவானேன்”, என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

    தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் “என்னுடைய இருப்பிடம் இங்குதான்” என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொன்னான்.

    அந்த மகான் எழுந்து அந்த புற்றை அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் மஹான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர். அந்த மஹான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

    அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.

    இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்

  • உலகின் மிகப்பெரிய ஆலயம்

    உலகின் ஆகப் பெரிய இந்துக் கோயில் இந்தியாவில் இல்லை.இந்த ஒரு வரி, எல்லா இந்துக்களையுமே கொஞ்சம் ஆச்சர்யப்பட வைக்கும். திடுக்கிடக் கூடச் செய்யும். ஆனால் அதுதான் உண்மை. அது கம்போடியாவில் இருக்கிறது. சியெம் ரீப் என்னும் அழகான ஊருக்குள் இருக்கிறது அந்த ஆலயம். நாலாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில்,ஒரு கோட்டோவியமாக அங்கோர் வாட் என்னும் அந்த ஆலயத்தின் அறிமுகம் கிடைத்ததாக நினைவு.
    அதைக் காண வேண்டுமென்ற ஆவல், நினைவு தெரிந்த நாளிலேயே தொடங்கிவிட்டது எனலாம். எனக்குக் கொஞ்சம் வரலாற்றுப் பைத்தியம் உண்டு.கோயில், சிற்பம், சிலை, அரும்பொருளகம் என்றால், ஐயாவுக்கு சோறு தண்ணி வேண்டாம்.
        
    ஆகவே, எந்தத் திசையில் இருக்கிறது என்ற ஞானம் கூட இல்லாத வயதிலேயே அங்கோர் வாட் மீதான பிரேமை கனிந்து விட்டது. 1995-ல் சிங்கப்பூர் வந்ததும், அந்த ஆசை கிடுகிடுவென புது HDB வீட்டுக் கட்டுமானம் மாதிரி வளர ஆரம்பித்தது. “பக்கத்துலதான் மகாலிங்கம், மூணு நாள் போதும், 800-வெள்ளி எடுத்து வைச்சுக்க, போயிட்டுப் பார்த்துட்டு வந்துர்லாம்” என்று உள்ளூர் நண்பர்கள் அவ்வப்போது ஆசை காட்ட, அது காடாய் வளர்ந்தது. 
     
    நந்தனார், சிதம்பரம் போய் நடராஜர் தரிசனம் செய்ய, நாளைப் போவோம் நாளைப் போவோம் என்பாராம். அதனால் அவருக்கு திருநாளைப் போவார் என்றே ஒரு பெயருண்டு அல்லவா ? அதுமாதிரிதான் நானும். இப்ப போவோம், பிறகு போவோம் என்று நாளைக் கடத்திக் கொண்டே வந்தேன்.
     
    என் நெருக்கமான நண்பர்களுக்கு இதுபற்றி நன்றாகவே தெரியும். அங்கோர் வாட் பற்றி நான் வருணித்த வருணிப்பில், என் நண்பர்கள் சிலரே அதைக் குடும்பத்தோடு சென்றுபார்த்துவிட்டு வந்து என்னிடம் வருணித்த அனுபவமும் எனக்கு உண்டு. போகலாம் என்று யோசிக்கும்போது ஏதாவது வந்துவிடும். அல்லது துணைக்கு ஆள் கிடைக்காது. புள்ளையும் குட்டியுமாய் அலைய என் பாகம்பிரியாளுக்கு ஒப்புதல் இல்லை. நீங்க வேணாப் போயிப் பார்த்துட்டுவந்து சொல்லுங்க.  இப்போதைக்கு என்னை ஆளைவிடுங்க என்று சொல்லி விடுவார்.
     
    இந்தக் கதையை நண்பர் பரணியிடம் ஒரு நாள் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே அவர். “அண்ணா, அடுத்த பள்ளி விடுமுறைக்குக் கிளம்புறோம். நான் வரத் தயார் ! நீங்க தயாரா ?” என்று கேட்டு என்னை உசுப்பேற்றினார். சரி. கிடைத்து வாய்ப்பு. வசமா ஒரு ஆளு சிக்கியிருக்கு என்று நினைத்துக்  கொண்டேன். அப்புறம் ஒரு நாள், நண்பர் ராஜகோபால் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரிடமும் இதுபற்றிச் சொன்னேன். சோழர்கள் பற்றியும் அவர்கள் எடுப்பிச்ச கற்றளிகள் பற்றியும், புள்ளிவிவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் நடமாடும் கலைக் களஞ்சியமான குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள், ராஜூவின் சொந்தச் சித்தப்பா. அந்த வகையில், ஒரு முறை சித்தப்பாவை சிங்கப்பூருக்கு வரவழைச்சு அப்படியே கம்போடியாவுக்கு அள்ளிக்கிட்டுப் போயிடுவோம் மகா என்று அவரும் எனக்குத் தூபம் போட்டார்.
     
    ராஜூவின் சித்தி பையன் நவீன், என்னைப்போல் ஒரு வரலாற்றுப் பிரியர் என்றும் தெரியவந்தது. ஆனால், ஆசைப்படுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வப்போது ஒரு பையைத் தூக்கிக் கொண்டு, கம்போடியா, பாலி, போராபுதூர், பிரம்பனான் என்று கிளம்பிவிடும் செயல்வீரர். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். ஒரு பொது விடுமுறையோடு கூடிய வார இறுதியில் கிளம்பி விடுவோம் என்றார் ராஜூ. சரி. வேளை வந்துவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டேன். அவரிடம் பேசி ஆசையை வளர்த்துக் கொண்டேன்.
     
    இப்படியாகத்தான் ஒரு சுபயோக சுபதினத்தில், கம்போடியா புறப்படலாம் என்று முடிவானது. நோன்புப் பெருநாளை ஒட்டிய வார இறுதி தோதாக உள்ளது. போகவர ரெண்டு நாள் தவிர, அங்க மூணுநாள். ஓகேயா என்றார் ராஜூ. உடனே உம் கொட்டிவிட்டேன். அப்புறம் நடந்ததெல்லாம் வேகம் வேகம் வேகம்தான்.
     
    சியெம் ரீப்புக்கு நேரடி விமானம் குறைச்சல்தான். துட்டும் கொஞ்சம் கூட… ஆனால், புனோம் பென்னுக்கு அப்படியில்லை. சியெம் ரீப்புக்கு சில்க்ஏர் நேரடியாகப் போகிறது. ஆனால், இருவழி விமானச் சீட்டு வெறும்         620 வெள்ளிதான் பிரதர் என்றார் ராஜூ. வாலட் இருந்த ஜூன்ஸ் பாக்கெட் பொசுங்கும் வாடை வந்தது. சியெம் ரீப்புக்கு எம்புட்டு தோழரே என்று கேட்டுக் கொண்டு இணையத்தில் தேடத் தொடங்கின விரல்கள்..     அடடே.. பேஷ் பேஷ்.. ரொம்ப சகாயமா இருக்கே என்று நினைப்பதற்குள், பாஸ்போர்ட் முதல் பக்கத்தை வாட்ஸ்அப் பண்ணுங்க அப்பு என்று     ராஜூ கூறி(வி)னார். நவீன் மூலம் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு      மறுநாள் மத்தியானம் மூவருக்கும் டிக்கெட் தயார். மூணு பேருக்கும்  போக வர 750 வெள்ளிதான். வாழ்க டைகர் ஏர்வேஸ் !
     
    பேருந்தில் அமர்ந்தவாறு டிக்கெட்டில் என் பெயரைப் பார்த்ததும், கண்ணில் ஆனந்தபாஷ்பம் துளிர்க்க, உடனே பரணியை அழைத்தேன். தம்பி, இப்படிக்கா இப்படி.. பய புள்ளைக உடனே டிக்கெட்டை எடுத்துப்புட்டாய்ங்க. அங்க எப்படின்னு கேட்டேன். அவரு அலுவலகத்துல லீவு சொல்லிட்டு அப்புறமா டிக்கெட் போட்டுர்றேன்னுட்டு போனை வைச்சுட்டாரு. அடுத்தநாள் ராஜூவின் மற்றொரு நண்பர் மகாதேவன், தலைவா நானும் வர்றேன் போலாம் என்று இணைந்து கொள்ள, இப்போது எண்ணிக்கை மூன்றிலிருந்து நாலானது. நான்கு பிரம்மச்சாரிகள் சேர்ந்ததும், பரணி வீட்டுக்காரம்மா ஜகா வாங்கிவிட்டார். நீங்க நல்லாப் போயிட்டு வாங்க. இந்தக் கூட்டத்துல என்னாலயும் பிள்ளைகளாலயும் முடியாது சாமின்னு சொல்லி, நல்ல மனசோடு வீட்டுக்காரரை நாலுநாள் தனியாகச் சென்று வர அனுமதித்து விட்டார். பரணி நின்னொடு இப்போது ஐவரானோம் என்று நினைத்துக் கொண்டேன். அவரும் அடுத்தநாளே டிக்கெட் போட்டார்.
     
    நேரே புனோம்பென் போய், அங்கிருந்து ஒரு வேனில், ஐந்து மணி நேரம் பயணம் செய்து, சியெம் ரீப்பைச் சென்றடைவது என்று ஏற்பாடானது. பதினைந்து நாட்களுக்கு முன்னரே டிக்கெட் போட்டு விட்டதால், நாளொற்றித் தேய்ந்தன விரல்கள். ஒருவழியாக அந்த நாளும் வந்தது. ராஜூ வீட்டிலிருந்து நால்வர் புறப்பட்டோம். பரணி நேரே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். ஜமா சேர்ந்ததுமே, உற்சாகம் ஊற்றெடுக்கத் தொடங்கி விட்டது. ஐவருக்கும் கைப்பெட்டிதான். சரக்குப் பெட்டி ஏதுமில்லை. பயணிகள் முகப்பில் சென்று பதிந்துஇருக்கை உறுதிச் சீட்டு வாங்கிக் கொண்டு ஆனந்தபவனில் மதிய உணவை முடித்தோம். அங்கேயே ரெண்டு மூணு செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிந்து உலகுக்கு எங்கள் பயணத்தைப் பறைசாற்றினோம்.
     
    ரெண்டே மணி நேரம்தான். எடுத்தது கண்டனர். இற்றது கேட்டனர் என்று கம்பன் பாடியது போல, ஏறினோம்இறங்கிவிட்டோம். பிற்பகல் ஒன்றே காலுக்குப் புறப்பட்டு மூன்று மணிக்கு இறங்கிவிட்டோம். மேலே இருந்து பார்க்கும்போதே கம்போடியா பச்சைப் பசேல் என்று மரகதப் போர்வை போல இருந்தது. பகல் பயணத்துக்குக்கிடைத்த பரிசு அது.  
     
     
     
    எங்கு பார்த்தாலும் பாம்புபோல் ஆறுகள் ஓடின. வெயிலில், ஆற்றின் நீர்ப்பரப்பு ஜொலித்தது. நல்ல மழை பெய்து, விமான நிலையம் துடைத்து வைத்தது போலிருந்தது. எங்களோடு விமானத்தில் வந்தது, கிட்டத்தட்ட எல்லாருமே சுற்றுலாப் பயணிகள்தான். முகத்திலேயே அந்தக் களை தெரிந்தது. எங்கள் குழுவில் இருவர் சிங்கப்பூரர்கள். ஆகவே அவர்களுக்கு விசா தேவையில்லை. சும்மா ஒரு ச்சாப். அம்புட்டுத்தான். மற்ற மூவருக்கும் 20 அமெரிக்க டாலர் கொடுத்து விசா பெற்று வெளிவந்தோம். (20 டாலர் மீது கம்போடிய அரசுக்கு என்ன மோகமோ தெரியவில்லை. எல்லா இடங்களிலும், வெளிநாட்டவர் அனுமதிக்கு 20 டாலர் கட்டணம்தான். தாஜ்மகாலுக்குக் கூட இந்தியாவில்,வெளிநாட்டவருக்கு, பத்து டாலர்தான் கட்டணம்..) இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு, விமான நிலையத்திலேயே விசா கொடுக்கிறார்கள். புண்ணியமாகப் போயிற்று. இல்லாவிட்டால், இதற்குவேறு இரண்டு நாட்கள் அலைய வேண்டும்.
     
    ராஜூ, மகாதேவன், நவீன், பரணி, மகா என்று ஐவர் குழாம் அட்டகாசமாக புனோம் பென் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தது. எங்களுக்காக உள்ளூர் சாரதி ரா காத்திருந்தார். ஆமாங்க,      முழுப் பெயரே ரா மட்டும்தான். நாங்க சுருக்கலை. அவரைப் போல், ஆங்கிலம் பேசத் தெரிந்த வாகன ஓட்டுநர்கள் கம்போடியாவில் அரிது. வழிகாட்டிகளும் ஆங்கிலத்தில் கிடைப்பது சற்று சிரமம். ஆனால்சியெம் ரீப்பில் அதிகமானோருக்கு அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. தலைநகர் புனோம் பென்னும், சியெம் ரீப்பும்தான் கம்போடியாவின் அந்நியச் செலாவணியின் மிக முக்கிய ஆதாரங்கள். ஆகவே இரண்டு நகரங்களும் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன. 1997-ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போரில் சின்னாபின்னமாகிக் கிடந்த நாடு என்பதற்கான எந்தத் தடயமும் இந்த இரண்டு ஊர்களில் இல்லை.
                
    பொன்னிற மாலை ஒளியில், புனோம் பென் தகதகவென ஜொலித்தது. கிட்டத்தட்ட சென்னை போலத்தான் இருந்தது. ஆனால், சுத்தமாக இருந்தது சாலை. இந்த நாட்டில், வலப்புற வாகனமோட்டும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அது தொடக்கத்தில் வித்தியாசமாக இருந்தது. இரண்டு நாளில் பழகி விட்டது. ஒரு கடையில் நுழைந்து பயணத்துக்குத் தேவையான நொறுக்குத் தீனிப் பொட்டலங்கள், தண்ணீர், குளிர்பானம் வாங்கிக் கொண்டோம்.
        
    புனோம் பென்னிலிருந்து சாதாரணமாக சியெம் ரீப் செல்ல, ஐந்து மணி நேரம் போதும். ஆனால், நாங்கள் போயிருந்தபோது, சாலை செப்பனிடப்பட்டுக் கொண்டிருந்தது. உலக வங்கி உதவியோடு சாலை அகலப்படுத்தப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால், ஒன்பது மணி நேரத்துக்கு மேல் பயணம். முதுகு ஒடிந்து விட்டது. இந்தப் பயணத்தின் ஒரே வில்லன் இந்தப் பயணம்தான். பாதிவரை சாலை பரவாயில்லை. அப்புறம் நாலு மணி நேரம் நரகம்தான். முதலிலேயே ஓட்டுநர் இதுபற்றிச் சொல்லி இலவச உடல் பிடிப்புக்குத் தயாராகிக் கொள்ளுங்கள் என்று எச்சரித்து விட்டார்.
        
    புனோம் பென் நகருக்குள் மிகப் பெரிய மீகோங் நதி ஓடுகிறது. மழைக் காலத்தில் அந்த நதியில் போகும் விரைவுப் படகிலேயே சியெம் ரீப் போக முடியுமாம். ஆனந்தமான பயணமாக இருக்க வேண்டும் அது. எங்களுக்கு அது லபிக்கவில்லை. ஒரு சுற்று வந்தோம் ஊரை. போகும் வழியில்தான் அரண்மனை வளாகம். அண்மையில்தான் அதைத் தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்.
                     
    கம்போடிய மன்னர் இறந்து அவருடைய அஸ்தியை, வெள்ளி மாடத்தில் வைக்கும் சடங்குக்காக, அந்த இடத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை, ஊர்வலம் எல்லாம் நினைவுக்கு வந்தது. நான்தான் அந்தச் செய்தியைச் செய்தேன். இவ்வளவு விரைவில் அந்த இடத்தை நேரில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லைதான். மீகோங் நதியை நேரில் பார்த்தது பரவசமாக இருந்தது. ஓரிடத்தில் கூட நதியில் பிளாஸ்டிக் பையைப் பார்க்கவில்லை. சுத்தமாக இருந்தது. எங்கும் சாக்கடை கலக்கவில்லை.
        
    இப்படித்தானே இருந்திருக்க வேண்டும் நம்ம சென்னைக் கூவமும். ஒரு நகருக்குள் நதி வருவது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்.        அதைப் பேணிப் பாதுகாக்கும் கம்போடியர்களைப் பாராட்ட வேண்டும். மாலை ஐந்து மணிக்கு மேல், நகர் நீங்கு படலம் தொடங்கியது.      சின்னச் சின்ன வேன்களுக்குள் ஆட்களை நெருக்கமாக  நிற்க வைத்து, அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். பொதுப் பேருந்து வசதி இருப்பது போல் தெரியவில்லை. எல்லாமே தனியார் வாகனங்கள்தான். மக்கள் முகத்தில் ஒரு அறியாமையும் அந்நியோன்னியமும் தெரிந்தது.
        
    நம்மைக் கண்ணுக்குக் கண் பார்த்து சிரிக்கிறார்கள். பெண்கள் பெரிதாக வெட்கப்படுவதுபோல் தெரியவில்லை. சிநேகமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், வறுமை முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. புனோம் பென்னை விட்டு அகன்றதும், வீடுகள் மறையத் தொடங்கின. ஒரே அத்துவானமாக இருந்தது. சாலை விளக்குகள் இல்லை. எப்போதாவது ஒரு பெரிய கண்டெயினர் லாரி கடந்து போகும். பயணிகள் பேருந்துகள் எல்லாமே பாதுகாப்புக் காரணங்களுக்காகக் காலையிலேயே சியெம் ரீப்புக்குப் புறப்பட்டு விடுமாம். இருவழிகளிலுமே, மாலையில் பேருந்துச் சேவை கிடையாது.
              
    விமானத்தில் வந்த களைப்புத் தீர எல்லாருமே சற்று நேரம் கண்ணயர்ந்து விட்டோம். பின்னர் ஜமா களைகட்டத் தொடங்கியது. பரணியின் சொந்தப் பாடல் தொகுப்பு ஒலிக்கத் தொடங்கியதும், வேனுக்குள் உற்சாக அலை ஓடியது. பரணி தேர்ந்த இசைப்ரியர் என்பது எனக்குத் தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு பாடல் ஓய்ந்து,அடுத்தபாடல் தொடங்கியதும், ஆஹாகாரம் எழும். எல்லாமே இளையராஜா பாடல்கள்.. கேட்க வேண்டுமா ?
        
    ராஜூ தன்னிலை மறந்து விட்டார். எனக்கு இப்பவே இது ஒரு காப்பி போட்டுக் கொடுங்க பரணி என்று ஆர்டர் கொடுத்து விட்டார். ஒவ்வொரு பாடலும் அவரவர் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்க வேண்டும். சாலையின் இருமருங்கும் இருள் கப்பியிருந்தது. அந்த அந்தகாரம், பாடல்களுக்கு போதையேற்றியது. கிட்டத்தட்ட நவீனையும் ஓட்டுநரையும் தவிர, நாங்கள் நால்வருமே, பாடல்களை வாய்விட்டுப் பாடினோம். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்த பாடல் வரிகூட மெல்ல மெல்ல நினைவின் ஆழத்திலிருந்து எழுந்து வந்தது.
        
    ஆனந்தக்கும்மியில் வரும் ஓ வெண்ணிலாவே பாடல் வரி அட்சர சுத்தமாய் நினைவுக்கு வந்தது. அடேயப்பா.. மனித மூளைதான் எவ்வளவு பெரிய அதிசயம். நாம் விரும்பிய பாடலை, உயிருள்ளவரை நம்மால் மறக்க முடியாது போலும். ஒன்றன்பின் ஒன்றாகப் பாடல்கள் வழிந்து, பயணத்தை ரம்மியமாக்கின. இது ஒரு அற்புதக்கணம். இதுபோல் இனி அமைய நெடுநாட்களாகும் என்ற எண்ணம் எல்லாருக்குமே வந்திருக்க வேண்டும்.  சட்டென எல்லா மன இறுக்கமும் தளர்ந்து விட்டு விடுதலையான உணர்வு..
        
    பரணியோடு திடீரென மற்ற மூவரும் நெருக்கமானதுபோல் எனக்கு ஓர் உணர்வு.  சில மணி நேரத்துக்கு முன்னர்தான் அறிமுகமானோம் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு, ஒரு சகஜம் வந்துவிட்டிருந்தது அதற்குள்.. ஒருவரையொருவர் சிலேடையாகக் கிண்டல் செய்வதும், பாராட்டுவதும் அதை உறுதி செய்தது.
        
    பயணங்கள் எவ்வளவு மகத்தானவை என்பதை மீண்டும் நான் உறுதி செய்து கொண்டேன். போகும் வழியில் எங்கே அடுத்த ஊர் வருகிறது என்றே தெரியவில்லை. ஆங்காங்கே ஒரு டியூப்லைட் வைத்துக் கீழே வலை மாதிரி ஏதோ விரிக்கப்பட்டிருந்ததை வழி நெடுகக் கண்டோம். என்னவென்று விசாரித்தபோதுஎல்லாம் ஈசல் பிடிக்கும் வலைகள் என்று தெரியவந்தது.
        
    ஒரு பெரிய ஊர் வரும் அங்கே இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்றார் ஓட்டுநர். ஆனால், அங்கு செல்லும்போது மணி பதினொன்றைத் தாண்டி விட்டதால் கடை மூடிவிட்டது. அருகிலிருந்த கடைகளில் பழமும் உருளைக் கிழங்கு வறுவலும் வாங்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் நிறுத்தி நிறுத்தி, காற்றாட, இயற்கை உபாதையைத் தணித்துக் கொண்டோம். 1980-களில், தஞ்சை மாவட்டம் இப்படித்தான்இருக்கும். எங்கு பார்த்தாலும் தண்ணீர். பசுமை. சிள்வண்டின் சுகமான ரீங்காரம். பழைய நினைவுகள் கிளர்ந்து எழுந்தன அனைவருக்கும். அவரவர் அனுபவம் பகிரப்பட்டுக் கொண்டே வந்தது.
        
    ராஜூவின் ஐஃபோன், நாங்கள் இருக்கும் இடத்தை ஒளிர்ந்து ஒளிர்ந்து காட்டியது. திசையைப் பார்த்துச் சொல்வார். இன்னும் இவ்வளவு நேரம்இருக்கு என்று. பின்னிரவு 2 மணியளவில் சியெம் ரீப் வந்து சேர்ந்தோம். அந்த நேரத்தில் அங்கு அவ்வளவு ஆரவாரத்தை எதிர்பார்க்கவில்லை. இரவுக் கேளிக்கைக் கூடங்களில் இசை பீறிட்டுக் கொண்டிருந்தது. ஒரு பழைமையான ஆலயம் உள்ள ஊரில், அந்த இசையும், கொண்டாட்டமும் பொருத்தமாக இல்லை. அனைத்துலகப் பயணிகளை வரவேற்று உபசரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கேளிக்கைகள். காலத்தின் கட்டாயம். ஒன்றும் சொல்வதற்கில்லை.
        
    இரவு உணவுக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். ஓட்டுநர் எங்களை விடுதியில் விட்டுவிடுவதாகச் சொன்னார். உணவு தயாராக அரை மணி நேரம் பிடிக்கும். அருகில்தான் விடுதி என்பதால் முதலில் அங்கே போகலாம் என்றார். அதுவும் சரிதான் என்று போய் கால் கை கழுவி ஓய்வெடுத்தோம். ஓட்டுநரே சற்று நேரத்தில் உணவை வாங்கி வந்துவிட்டார். அற்புதமான உணவு. ஐந்து அமெரிக்க டாலருக்கு, ஒரு நுரைப்பஞ்சுப் பெட்டியில், நிறையக் காய்கறியோடு கூடிய சுத்தமான அரிசிச் சோறு. பசிக்கு ருசியாக இருந்தது. காய்கறிகளில் கஞ்சத்தனம் காட்டவில்லை கடைக்காரர்கள். பலவிதமான காய்கறிகள், அழகியல் உணர்வோடு நறுக்கி அரை வேக்காட்டில் இருந்தன.
       
    உணவு உள்ளே போனதும், தூக்கம்வந்தது. காலையில் எழும்போது எழுவோம் என்று படுத்துவிட்டோம். அதிகாலையில் எழுந்து அங்கோர் வாட்டை உதயவேளையில் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால்,    3 மணிக்குப் படுத்து 5 மணிக்கு அங்கே போக முடியாது என்பதால், இன்று அங்கு வேண்டாம் என்று முடிவானது. காலையில் சீக்கிரம் எழ வேண்டாம் என்ற இன்ப நினைவோடு தூங்கிப் போனோம்.. ( தொடரும்…)
     
    பொன். மகாலிங்கம், சிங்கப்பூர்
     
    ————————————————————————————————————————————————————————–
     
    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
     
  • தீபம் ஏற்றும் முறை

    எத்தகைய மேன்மை பொருந்திய , திருமகளின் அம்சமான திரு விளக்கை ஏற்றுவதற்கு முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருகின்றன .விளக்கு ஏற்றும் முன்  வீட்டின் முன்கதவைத் திறந்து வைத்து பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். பிரம்ம முகூர்தமான அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு  ஏற்ற வேண்டும் .  மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் எல்லா வளமும், நலனும் நமக்கு கிட்டும் .  விளக்கை குளிர்விக்கும் போது,  பூவால் குளிர்விக்கலாம் அல்லது  தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.. விளக்கின் ஒளி நம் வீட்டினை எப்படி பிரகாசமாக மாற்றுகிறதோ அதன் பலன் நம் மன இருளையும் அகற்றி ஒளி பெறச் செய்யும் .

  • சரபேஸ்வரர் வழிப்பாடு

    இந்த உலகமும் மானுடமும் மேன்மை அடைய சிவா பெருமான் எடுத்து வந்த அவதாரங்கள் எண்ணில் அடங்காது. அவற்றில் குறிப்பாக சரபேஸ்வரராக எடுத்த வடிவம் வெகு சிறப்பு மற்றும் சக்தி வாய்ந்தது. தான் என்ற அகந்தை கொண்டு திரிந்த ஹிரண்ய கசிபுவின் செய்த தெய்வ நிந்தனையை தாங்காது பிரகலாதன் வேண்டியபடி , தூணைப் பிளந்து உக்கிரமாக வெளிவந்தார் எம்பெருமான் நரசிம்மர்.

     ஹிரண்ய கசிபுவின் நெஞ்சைப் பிளந்து, குடலை உருவி மாலையாக அணிந்து அவன் உடலில் இருந்து வழிந்த உதிரம் குடித்து, அவன் கதை முடித்தும்,உக்கிரம் தணியாமல் , கோபம் கொப்பளிக்க அவன் அழிவு சக்தியாக ஆர்ப்பரித்து எழுகையில், தேவர்களும் முனிவர்களும் செய்வது அறியாமல் சிவபெருமான் திருவடியில் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான்,பறவையும், மனித உடலும், மிருகமும் கலந்த ஒரு மகா பயங்கர வடிவெடுக்கிறார் .

    அவரே சரபேஸ்வரர் என போற்றப்படுகிறார் . சரப திருவுருவின் நிழல் பட்ட உடனே ஆக்ரோஷம் மேலிட வந்து கொண்டிருக்கும் நரசிம்மரின் உக்கிரம் தணிகிறது . உக்கிர நரசிம்மரின் அவதாரத்தினை, சாந்த நரசிம்மராய் , லட்சுமி நரசிம்மராய் வெளிப் பட்ட கோபத்தை தன்னுள்ளே ஐக்கியப் படுத்திக் கொண்டு சாந்த ரூபமாக, விளங்கும் ஸ்ரீ சரபேஸ்வரன் சகல சத்ரு விநாசராகவும் பிறவிப் பிணியை நீக்குபவராகவும், கஷ்டங்களை போக்குபவராகவும் அருள் பாலிக்கிறார் .

    பிரதோஷ நேரத்தில் தான் ஜோதி பிழம்பான சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷதினை தணித்தார். எனவே, பிரதோஷ காலத்தின் போது ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அதி அற்புத பலன்களைப் நமக்கு தருகிறது.