Blog

  • அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள்

     

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

     பிருத்வி தலம் நிலம்

     

    பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூரில் பிறந்தால் முக்தி என்று புகழப்படும் சிறப்பினை உடையது இத்திருத்தலம் .  மிகவும் பிரம்மாண்டமாக  33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  இக்கோயில்,  9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் , 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் கொண்டு புகழ்பெற்று விளங்குகிறது  . ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

     

    நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம் மற்றும்  நட்பின் முக்கியத்தை உணர்த்த , சுந்தரருக்காக , சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம் என ஏகப்பட்ட சிறப்புகளுக்கு சொந்தமான இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. வான்மீகிநாதர் ,மற்றும் தியாகராஜர் என சிவபெருமானுக்கு இரண்டு திருநாமங்கள். மிகவும் பழமையான வான்மீகி நாதர் சந்நிதியில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.

    இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலும் பஞ்ச பூத தலங்களில் நிலத்துக்கான ஒன்றாக கருதப்படுகிறது .

  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு….

    வைகாசி மாத பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது.
    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

    இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர். 5 நாட்களாக நடைபெற்று வந்த வைகாசி மாத பூஜைகள் நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நேற்று லட்ச்சார்ச்சனையும், தொடர்ந்து மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில் களபாபிஷேகமும், களபம் தாங்கிய கலசத்துடன் ஊர்வலமும் நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.
    சபரிமலையில் சாமி விக்ரகம் அமைக்கப்பட்ட தினம் ஜூன் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 3-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 4-ந் தேதி வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும்.
    அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் ஆனி மாத பூஜைக்காக கோவில் நடை ஜூன் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் ஆனி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

  • கல்யாண கட்டாவில் 4-ஆவது தளம்

    திருமலையில் உள்ள கல்யாண கட்டாவில் புதிதாக கட்டப்பட்ட 4-ஆவது தளத்தை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திறந்து வைத்தார்.

    ஏழுமலையானுக்கு முடிகாணிக்கைச் செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் திருமலையில் முடிகாணிக்கைச் செலுத்தும் மையத்தை (கல்யாண கட்டா) ஏற்படுத்தியது. இங்கு பக்தர்கள் இலவசமாக தங்களது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். தினமும் சுமார் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் முடிகாணிக்கைச் செலுத்தி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் சமயத்தில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த பலமணி நேரம் காத்திருக்கின்றனர். இதுவரை 3 தளங்களை மட்டுமே கொண்ட இந்த மையத்தில் தேவஸ்தானம் புதிதாக ரூ. 34 லட்சம் செலவில் 4-ஆவது தளத்தை கட்டி உள்ளது.

  • தாயுமானவர் சாட்சிநாதர் ஆன கதை

     

    திருப்புறம்பியம் – கோயில் சூழ் கும்பகோணம் நகரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவ தலம். பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம்  படித்த வாசகர்கள் நெஞ்சில் நிலைத்துள்ளது  திருபுறம்பியம் பள்ளிப்படைக்கோவில்.

     

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும்  சேர்ந்து பாடிய அபூர்வ கோவில்களில்  ஒன்று திருப்புறம்பியம் சாட்சிநாதசுவாமி கோவில். முற்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு அனைத்து ஊர்களும் அழிந்த காலத்தில் இந்த ஊர் மட்டும் சாட்சியாக நிலைத்துள்ளது.

     

    சுற்றிலும் உள்ள நீரை ஊருக்குள்ளே புகவிடாமல் விநாயகர் தடுத்து புறத்தே நிறுத்தி காத்ததால்  ,இந்த ஊருக்கு ‘திரும்புறம்பயம்’ என்றும், விநாயகருக்கு ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது . வருண பகவானால் நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருட்களால் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது தான் இந்த பிரளயம் காத்தவிநாயகர் .

     

    விநாயகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று நடத்தப்பெறும் தேனாபிஷேகத்தை தவிர, வேறு எந்த நாளிலும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகப்பெருமானின் திருமேனியில் உறிஞ்சப் பெறுவது வேறு ஏங்கும் காணக்கிடைக்காத  அதிசயம் .மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் இரு தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் பிரளயத்தின் ஏழு கடல்களும் வந்து அடங்கி உள்ளதாக  ஐதீகம்.

     

    கோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோவிலில் கருணையே வடிவான குரு பகவான் குடி கொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது ஒன்று தான் என்பது கூடுதல் சிறப்பு .

     

     

     

    இறைவன் சாட்சிநாதர் ஆன கதை

     

     மனிதனின் வாக்கிற்கு மதிப்பு நிலைக்காத நேரத்தில் தன்னை நோக்கி அபாய குரல் எழுப்பிய நங்கைக்கு இறங்கி இறைவனே சாட்சி சொன்னதால் சாட்சிநாதர் ஆனார் .

     

    காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த அரதன குப்தன் என்ற வணிகன் ஒருவன் ,மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தான்.

     

    காவிரிபூம்பட்டினத்தில் அவன் தங்கையும் ,தங்கையின் கணவரும் வசித்து வந்தனர்  . அவர்களுக்கு தங்கள் மகள் ரத்னாவளியை அரதன குப்தனுக்கே மணம் முடித்து வைக்க ஆசை  .ஒரு நாள் எதிர்பாராமல் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக  தகவல் அறிந்த  அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .

     

    இரவானதால் பயணக்களைப்பில் , வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்தில் இருந்த ஒரு புன்னைவனத்தில் தங்கினர் .அங்கே ஒரு வன்னிமரத்தின்  அருகில் ஒரு சிவலிங்கம் , சற்றுத் தள்ளி ஒரு கிணறு இருந்தது . அன்றிரவு இருவரும் அங்கேயே தங்கி விட முடிவு செய்து உறங்கினார்கள் . காலையில் கண் விழித்த ரத்னாவளி,   அரவம் தீண்டி பிணமாக இருந்த அரதன குப்ததைப்  பார்த்து கதறி அழுதாள் .

     

    அப்போது அவ்வழியே வந்த திருஞானசம்பந்தர் , அப்பெண்ணுக்கு மனமிரங்கி ஈசனிடம் முறையிட, இறைவனும் அரதன குப்தனை உயிரோடு எழுப்பினார் . இருவரையும் பற்றி தெரிந்துக்கொண்ட சம்பந்தர்  “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”என்று கூறினார் .

     

    மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும் கல்யாணத்திற்கு சாட்சிகலானார்கள் . இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்டாள்  முதல் மனைவி .  ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே  எவ்வளவோ சொல்ல முயன்றும்  அதை கொஞ்சமும் நம்பாமல் ,  ரத்னாவளி கேவலமாக பழித்துப் பேசினாள்  .

     

    வழக்கு சபைக்கு வந்தது. திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்க “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி.முதல் மனைவி கேலியாக ,“அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” என்று கேட்க கூடி இருந்தவர்களும் சிரித்தார்கள்.

     

    தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி இறைவனிடம் அழுதாள் .  “ஈசனே…இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? என ரத்னாவளி கதறி அழ ,அங்கே அசரீரியாக கேட்டது  ஒரு குரல் ,”நாங்கள் சாட்சி..” கூட்டத்தினர் அனைவரும் திகைத்துப் பார்க்க….ஈசன் அங்கே எழுந்தருளி“ ஆம்…இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தார் திருவிளையாடலின்  நாயகன்  ஈஸ்வரன்.

     

    இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில் வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவற்றைக் காண  முடியும் .

     

    அன்று ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்காக தாயுமானவராக மாறிய ஈசன் , ரத்னாவளிக்காக சாட்சிநாதர் ஆனார். இறைவனை  நம்பினோர் என்றைக்கும் கைவிடப்படார். ஓம் நமச்சிவாய….

  • ஜீவகாருண்ய சாயி

     

    உலகில்  உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார்  . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த கருணாமூர்த்தி , மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்.

    பாபாவின் பார்வையில் அனைத்து உயிரினமும் ஒன்றே என்று நிலைநாட்டியதன் நோக்கம்  , நாம் இவ்வுலகில் காணப்படும் உயிர் அனைத்திடமும்  கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே . பிற உயிரிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை என்பதை தனது  பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .

    சீரடியில்  பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை, மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். மும்முரமாக சமையல் செயத்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில்  விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய் பசியால் தான் குரைக்கிறது என்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. தன் கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்.

    காய்ந்த ரொட்டித் துண்டைப் மிகுந்த பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை ஆவலுடன் உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்து  வாலை ஆட்டியது . சந்தோஷத்தில் அதன் கண்கள் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன. நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவை தரிசிக்க  மசூதிக்குச் சென்றார்.

     

    தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள்.இப்படியே தொடர்ந்து நடப்பாயாக. என் பசிக்கு உணவிட மறந்துவிடாதே! தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவே இல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம் கேட்டாள்:  சுவாமி! நான் இன்று உங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே?

    நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்து போனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான் தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்கு உணவளித்தாலும், அது என்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது! இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். பாபா  எங்கும் நிறை ஞானப் பிரம்மம் என்பதை திருமதி தர்கட்டும் , அங்கிருந்த பக்தர்களும் உணர்ந்து கொண்டனர்.

     

    உயிரினங்கள்  மட்டுமின்றி பாபாவின்  சொல்லுக்கு பஞ்ச பூதங்களும் கட்டப்பட்டன என்பதை  குறிக்கும் சம்பவங்களை இப்போது பார்க்கலாம் . இருள் கவியத் தொடங்கியிருந்த ஒருநாள் மாலை நேரத்தில் , திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் சீரடியை தாக்கியது . அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளக் காடானது . தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் வேகமாய்ப் புகுந்தது.

    மக்கள்  வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள்  புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள்  செய்வதறியாது பரிதவிப்போடு தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

    இப்போது என்ன செய்யப் போகிறோம் ,  இந்தப் புயலிலிருந்தும் மழையிலிருந்தும் எப்படித் தப்பிப்பது? என்று சீரடி மக்கள் கலங்கி நின்றார்கள் . ஆடுமாடுகளோ  கூட்டம் கூட்டமாக தங்கள் நாயகன் பாபாவின் மசூதி நோக்கி ஓடோடிச் சென்றன. அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்ற  அற்புதக் காட்சியைப் பார்த்த மக்களுக்கு  அப்போது தான்  புத்தி  எட்டியது . என்ன தான் இருந்தாலும் ஆறறிவு இல்லையா ? .

     

    அந்த பசுக்கூட்டங்களுக்கு இருந்த தற்காப்பு உணர்வும் , தங்களைக் காக்க பாபா இருக்கிறார் என்ற எண்ணமும் இல்லாதது நினைத்து வருந்தினர் . ஆடு மாடுகளைப் பின்பற்றி  தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும்  கூக்குரல் இட்டு பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள். தன்னிடம் சரண் புகுந்த  மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் பாபா . பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்து ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.

     

    இடியும் மின்னலும் பேய்க்காற்றும் சீரடியையே  புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தன . அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. நிறுத்து! போதும் உன் சீற்றம்! என்று வானை நோக்கி உறுமினார் பாபா . எங்கு வந்து யாரிடம்ஆட்டம் போடுகிறாய்? சீரடியில் உள்ள ஆடுமாடுகள்,தாவரங்கள் உள்படஇங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா?ஜாக்கிரதை என்ற பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். இடி சத்தத்தையும்  மீறி  ஒலித்தது பாபாவின் குரல் .

    அடுத்த கணம் ஆகாயத்தில் பெருத்த மாற்றம் தோன்றியது . சட்டென்று மழை நின்றது. புயல் குளிர்ந்த தென்றலாய் மாறியது  , தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது .  மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்து தங்கள் இல்லம் சென்றார்கள்.

     

    தன்னை சுற்றி நின்ற ஆடுமாடுகளைத்  ஆதுரியத்துடன்  தடவிக் கொடுத்தார் பாபா. பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்ற மக்களையும் , ஆடு மாடுகளையும் ,  இல்லம்திரும்பும் வரை கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் தோன்றிய முழு நிலவு அந்த சூழலை மட்டும் இன்றி மக்களின் உள்ளங்களையும் குளிர்வித்தது .

    மழையை மட்டுமல்ல,நெருப்பையும்  தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள் மசூதியில் மக்கள் கூடியிருந்த நேரம் .  மசூதியில் எப்போதும் துனி என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் . திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்ற மக்கள் பதைபதைத்தார்கள்.

    பாபா, தம் கையில் எப்போதும் பயன்படுத்தும்சட்கா என்ற கம்பை எடுத்து , அருகே இருந்த  தூணின் மீது ஓங்கி அடித்தார்  . ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன். உடனடியாய்க் கீழே இறங்கிவிடு! என்று உரக்க முழங்கினார். தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின் எந்த ஆவேசமும் இல்லாமல்,சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அதுவரை பீதியில் உறைந்து நின்ற அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள்.

     

    தன்னை சரணடைந்த சீரடி மக்களுக்காக புயலையும் மழையையும் கட்டுப்படுத்திய  நம் சாயி , இப்போது மழையில்லாமல் தண்ணீருக்காக தவிக்கும் தன் பக்தர்களுக்காக கருணை காட்டாமல் போய் விடுவாரா என்ன ? தன் குழந்தைகளின் தாகம் தீர்க்க தன் கருணை மழையோடு அந்த வான் மழையை நமக்கு தந்தருள மாட்டாரா ? நாம் அனைவரும் அவர் பாத கமலங்களை சரண் புகுந்து வான் மழைக்கு பிராத்திப்போம். பாபா மனம் இறங்கினால் அந்த வான் இறங்கும் . வறட்சி நீங்கி பசுமை பூக்கட்டும் .

    ஸ்ரீ சச்சிதானந்த சத் குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் …..

     

    சாயி சரிதம்  தொடரும்  

  • பகலில் கோபுரத்தின் நிழலை காண முடியாத பூரி ஜெகன்நாதர் கோவில்

     

    வைணவத் திருக்கோயில்களில் ஒன்றான பூரி ஜெகன்நாதர் கோவில் 12ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்க குல அரசன் ஆனந்தவர்மனால் கட்டப்பட்டது .  ஒடிசா மாநிலத்தில், பூரி கடற்கரை நகரத்தில் அமைந்தள்ள இக்கோவிலின் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றதாகும் .  ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில்,  இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.

    தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

    ஆண்டுதோறும் ,45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர், திருவிழாவிற்காக மரத்தால் கட்டப்படுகிறது.

    பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

    இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்துள்ளது .  மரத்தால் ஆன இத் தெய்வத் திருமேனிகள் , 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

     

    இதற்கான  புராண கதையும் சுவாரசியமானது

     

    பூரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, பூரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதைக் கொண்டு காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகன்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.

     

    பூரி ஆலயம் ,தேரோட்டத்திற்கு மட்டுமன்றி வேறு சில அதிசயங்களையும் பெருமைகளாகக் கொண்டது .

    பூரி ஜெகன்நாதர் ஆலய கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

    கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில் , எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் , கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும் அமைப்பைக் கொண்டது .

    பொதுவாக கடற்கரை நகரங்களில்  காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் , காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும்  மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும் அதிசயத்தை காணலாம் . 

    இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் காண முடியாது .

    இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறக்காதது ஆச்சரியமான ஒன்றாகும் .

     

    இவை எல்லாவற்றையும் விட ,  இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி , இருபது லட்சமானாலும் சரி இதுவரை அங்கு சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணானதுமில்லை.

    இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு , விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.

    சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உற்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது , கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் , அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிபுறமாக நுழையும் போது ,கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இவ்வாலயத்தின் சிறப்பு . 

  • ஸ்ரீகிருஷ்ணர் ஏன் இப்படி செய்தார் ?

    மகாபாரத கதைகளில்  நாம் அதிகம் அறிந்து கொள்ள படாத பாத்திரங்களில் விதுரரும் ஒருவர் .  விதுரர் தர்மத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்.., தர்மராஜர்…, அப்பழுக்கில்லாதவர்…

    ‘பெண்கள் –  தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்’ என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

    திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய் திறக்காமல் மெளனமாக இருந்த காரணத்திற்கான  தண்டனை தான்… விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைந்தார்கள் .  கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்த ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை.

    ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது. எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது. ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும்  வீழ்த்தவே முடியாது… விதுரர் ‘வில்’ எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது…

    யுத்தம் என்று வந்தால்… மற்ற பெரியவர்கள் – பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.

    மஹாபாரதப் போரின் முடிவு திசை மாறியிருக்கும்.

    அதனால்…தான் எல்லோரையும் விட மிக முக்கியமான நபராக  கிருஷ்ணனால் குறிக்கப்பட்டவர் விதுரர் . அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது.

    மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது.

    விதுரரை போரிடாமல் எப்படி தடுக்க  ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார். அதன்படி, பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.  ‘கிருஷ்ணர் வருகிறார் ‘ என்று தெரிந்ததும்… திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.

    துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, ‘ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?’ என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.  ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்… என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன்.

    இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்கிறேன்…” என்றார்.  விதுரருக்கு மகா சந்தோஷம்… தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

    விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்… மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக  வாதாடினார். துரியோதனன், “ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது…” என்று சொல்லி கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான்.

    கிருஷ்ணரும், “யுத்தம் நிச்சயம்…” என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.  வழியில்… கிருஷ்ணருடைய சாரதி, “சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க முடிவு செய்தீர்கள் ?” என்றான்.

    கிருஷ்ணா் சொன்னார், “அனைத்தும் நல்லதுக்கே… இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது…” என்று சொல்லி சிரித்தார்.

    அதேபோன்று… அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, ‘கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்…’ என்று வாதாடினார்கள்.  அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது…

    பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து  உபசாரம் செய்தது… என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது…

    இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு. இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும், துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது… என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான்.

    குறிப்பாக, அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான். இதனால்,விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்… ஆவேசமடைந்த விதுரர், சபையோர்கள் நடுங்க சபதமிட்டார்.

    “உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது துரியோதனா!… இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன்… அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்… எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை…” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டு சபையிலிருந்து வெளியேறினார்.

    யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை…

    ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில்  தங்காமல் இருந்தால்…விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருக்க மாட்டார் . துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் . விதுரர் வைத்திருந்த ‘வில்’தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில்…

    ‘கோதண்டம்’ எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.  அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. ‘காண்டீபம்’ என்பது அதன் பெயர். போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!

    தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற தர்மம் உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி…!

     புத்தியுள்ளவன் பலவான்…. ஸ்ரீ கிருஷ்ணார்ப்பனம்

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. கும்பகோணம் நல்லம் ஆலயம்

     

    கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

  • அழகர்மலைக்கு திரும்பிய கள்ளழகர்….

    பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்காக மதுரை சென்ற கள்ளழகர், நேற்று அழகர்மலைக்கு திரும்பி இருப்பிடம் சென்றடைந்தார். திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும், 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதுமான மதுரையை அடுத்து உள்ள அழகர்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த மே 6-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து மே8-ந்தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார். மறுநாள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்று, 10-ந்தேதி சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். மறுநாள் வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலிலிருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு, கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி சாபம் தீர்த்து அருள்பாலித்தார். தொடர்ந்து 13-ந்தேதி நள்ளிரவுக்கு பின்பு பூப்பல்லக்கு விழா நடந்து, தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் முன்பு வையாழியாகி, கள்ளழகர் வந்த வழியாக மலைக்கு திரும்பினார். மே14 ஆம் தேதி அதிகாலை அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பல மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு காலை 10.30 மணிக்கு அழகர்கோவில் கோட்டை வாசலை சாமி வந்தடைந்தார். தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு விசேஷ பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கு வையாழியாகி கோவில் உள்பிரகாரத்திற்குள் கள்ளழகர் சென்றார். தொடர்ந்து உற்சவ சாந்தியுடன் சித்திரை பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.

  • ரங்கநாதர் கோயிலில் பலிபீட திருமஞ்சன பூஜை

    உலக நன்மை, மழை வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பலிபீட திருமஞ்சன பூஜை நடந்தது. உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தங்க கொடி மரம் அருகே பலிபீட திருமஞ்சன பூஜை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 2012ல் நடந்தது. அந்த பூஜை நடந்து முடிந்த பின் அப்போது மழை பெய்தது. அதேபோல் இந்தாண்டும் இந்த பலிபீட திருமஞ்சன பூஜை நேற்று காலை நடந்தது. முன்னதாக காவிரியாற்றிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு தங்க கொடி மரத்திற்கும், பலி பீடத்திற்கும் பால், தயிர், இளநீர் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பலிபீடம் மற்றும் ெகாடிமரத்திற்கு புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. இந்த பலிபீட பூஜையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் பட்டர்கள் உள்பட கோயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.