Blog

  • ஆசி தரும் அட்சதை

     

    நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியாகட்டும் ,கோவில்களில் நடக்கும் மங்கள விழாவாகட்டும் ‘அட்சதை’ எனும் மங்களப் பொருளுக்கு முதன்மையான  ஒரு இடம் கட்டாயம் இருக்கும். அட்சதை இல்லாத வாழ்த்தே இருக்க முடியாது. இந்த அட்சதையானது மலர்களைவிட ஒரு படி மேலானது என்கிறார்கள் பெரியோர்கள்.

    அட்சதை  இல்லாத இடத்தை நிரப்பத்தான் ,மலர்களும் புனித தீர்த்தமும் உபயோகிக்கப்படுகிறது. இதற்கான பெயர் காரணத்தை ஆராய்ந்துப் பார்க்கும் போது வடமொழியில் ‘க்ஷதம்’ என்றால் இடிப்பது. ‘அக்ஷதம்’ என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். ‘முனை முறியாத அரிசி’யைத்தான் தான் அட்சதை என்று கூறுகிறோம்.

      அரிசியோடு தூய மஞ்சள், பசுநெய் சேர்த்து உருவாக்கப்படுவதே அட்சதை. அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது என்பதால்,அதை தான் அட்சதை தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். அரிசிகென்று உள்ள தனித் தன்மையானது, அது  உணர்வையும் சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. ஆகையால் தான் அரிசியை கை தொட்டு யாரும் கொடுக்க மாட்டார்கள். தும்பைப்பூ போன்ற வெள்ளை அரிசியோடு மங்களகரமான மஞ்சள் நிறம், நெய்யும் சேர்ந்து மினுமினுப்போடு இருக்கும் அட்சதை, தேவதைகளின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

    அட்சதையின்  தாத்பரியமானது, நிலத்தின் அடியில் விளையும் மஞ்சள், நிலத்தின் மேலே தோன்றும் நெல்,இவற்றோடு தூய்மையான நெய் சேரும் போது, அது தெய்வீகத் தன்மை பெறுகிறது. இதை தவிர வேறு ஒரு மகோன்னதமான காரணமும் சொல்லப்படுகிறது. அரிசிக்கு  சந்திரனின் அம்சம் இருப்பதால், குருவின் ஆதிக்கம் கொண்ட மஞ்சள் மற்றும் மகாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய்யுடன்  சேரும்போது அங்கு நல்ல அதிர்வுகள் உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

    திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை எடுத்துக்கொள்ளச் சொல்வதே நல்லது. ஆன்றோர்களின் வாக்கின்படி, அரிசி உடல், மஞ்சள் ஆன்மா, நெய் தெய்வசக்தி. நம்முடைய வாழ்வானது,உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து இருக்கிறது என்பதே அட்சதை நமக்கு சொல்லும் கருத்து. ஹோமங்கள்முதலிய சுப நிகழ்வுகளோ  அல்லது சிரார்த்தமோ நடந்து  முடிந்த பிறகு, அதை நடத்திவைத்தவர்கள் வாழ்த்துக் கூறி இதைத் தூவுவார்கள்.இது தவிர நம் இல்லங்களில் நடைபெறும் பிறந்தநாள், திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பெரியவர்கள் அட்சதையைத் தூவி வாழ்த்துவது நம் மரபு.  

    ஆனால் இன்றைய துரித கதி வாழ்க்கை முறையில் ,திருமணங்களில் கூட , மணமக்களை யாரும் ஒவ்வொருவராகச் சென்று அட்சதை தூவி வாழ்த்த நேரமில்லாமல், எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.  இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம்.  இதை வீசி எறியாமல் ,மணமக்களின்  தலையில் மெள்ளத் தூவுவதே சிறந்தது.

    சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் வழிபாடுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் அட்சதை இருந்து வந்துள்ளதற்கு பல சான்றுகளை பார்க்க முடியும். புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி அட்சதையை  தூவி வாழ்த்துவதால், எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் அடைவார்கள் என்பது நிச்சயம். மங்களங்கள் யாவும் தரும் இதை, தெய்வங்களின் அம்சம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். அட்சதையின் மகத்துவம் உணர்ந்து அதை நல்ல முறையில் பயன்படுத்தி இறை அருள் பெறுவோம்.

     

  • சனி பகவானை மகிழ்விக்க வேண்டுமா ?

    சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்ற சனீஸ்வரன் பெயரைக் கேட்டாலே நம் அனைவருக்கும்  கொஞ்சம் நடுக்கம் தான். கோவிலுக்கு போனால் கூட , சனீஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்படும் பிரசாதங்களையோ, திருநீற்றையோ நம் வீட்டிற்கு எடுத்துவர யோசிப்போம். சூரியபகவானுடைய மகனும்,கறுத்ததேகம் உடையவன் என்று கூறப்படுபவருமான சனி பகவானையே மகிழ செய்து, அவரால் நேரக்கூடிய துன்பத்தை வென்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் யார் எப்படி சனி பகவானிடம் வரத்தைப் பெற்றான் என்பதைப் பற்றி இப்பதிவில்  பார்ப்போம்.

    ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மகா பராக்கிரமசாலி. ஏழு கண்டங்களுக்கும் அதிபதியான அம்மன்னன் ஆட்சி காலத்தில், சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நேரம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமானது, மிகக் கொடிய பஞ்சத்தை தோற்றுவிப்பதும், பன்னிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்க, தனது குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தன் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார்  தசரத சக்கரவர்த்தி. அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகளின் தலையெழுத்து,துன்பப்பட்டே  ஆக வேண்டும்,இதை  பிரம்மவாலும் மாற்ற முடியாது என்றார்.

    இதைக் கேட்டு தசரதனால்  சும்மா இருக்க முடியவில்லை. எப்படியாவது  பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக ,வெண்ணிறமான புரவிகளோடு ஒளிர்ந்த  ரதத்தில் ,ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்றான். தேவர்கள்,அசுரர்கள் ,மனிதர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் .

    சனிபகவான் புன்னைகை புரிந்தபடி, “ ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் . தேவர்,அசுரர்,முதலிய அனைவரும், என் பார்வை பட்டவுடன் சாம்பலாகப் போய்விடுவார்கள் .ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று சனிபகவான் கூறினார்.

     

    தசரதன் சனிபகவானைப் பார்த்து,“ தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்” என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறிய  சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டிய வரம் எதுவாயினும் கேள் என்று கூற

    தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து  பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

    நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச

    நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம

    நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச

    நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே       

    நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம

    நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

    நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே

    நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே

    நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

    சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச

    அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

    நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

    தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய

    நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

    ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ  ஸுநவே

    துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்…

    இதன் விளக்கம் :

     

    கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் . புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக் கூடியவனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தேகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞானக்கண் உடையவனே, கச்யப குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

    சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறான்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளானவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான். ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

    சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , “ஏ ராஜனே , நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு  தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்த பிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புறுத்தமாட்டேன் .கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன்” என்று கூறினார்.

    சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ,நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் பெறுவர்.  

  • சனி பகவானை மகிழ்விக்க வேண்டுமா ?

     

    சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்ற சனீஸ்வரன் பெயரைக் கேட்டாலே நம் அனைவருக்கும்  கொஞ்சம் நடுக்கம் தான். கோவிலுக்கு போனால் கூட , சனீஸ்வரர் சன்னதியில் கொடுக்கப்படும் பிரசாதங்களையோ, திருநீற்றையோ நம் வீட்டிற்கு எடுத்துவர யோசிப்போம். சூரியபகவானுடைய மகனும்,கறுத்ததேகம் உடையவன் என்று கூறப்படுபவருமான சனி பகவானையே மகிழ செய்து, அவரால் நேரக்கூடிய துன்பத்தை வென்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் யார் எப்படி சனி பகவானிடம் வரத்தைப் பெற்றான் என்பதைப் பற்றி இப்பதிவில்  பார்ப்போம்.

    ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மகா பராக்கிரமசாலி. ஏழு கண்டங்களுக்கும் அதிபதியான அம்மன்னன் ஆட்சி காலத்தில், சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நேரம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலமானது, மிகக் கொடிய பஞ்சத்தை தோற்றுவிப்பதும், பன்னிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்க, தனது குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தன் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார்  தசரத சக்கரவர்த்தி. அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகளின் தலையெழுத்து,துன்பப்பட்டே  ஆக வேண்டும்,இதை  பிரம்மவாலும் மாற்ற முடியாது என்றார்.

    இதைக் கேட்டு தசரதனால்  சும்மா இருக்க முடியவில்லை. எப்படியாவது  பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக ,வெண்ணிறமான புரவிகளோடு ஒளிர்ந்த  ரதத்தில் ,ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்றான். தேவர்கள்,அசுரர்கள் ,மனிதர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் .

    சனிபகவான் புன்னைகை புரிந்தபடி, “ ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் . தேவர்,அசுரர்,முதலிய அனைவரும், என் பார்வை பட்டவுடன் சாம்பலாகப் போய்விடுவார்கள் .ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்” என்று சனிபகவான் கூறினார்.

     

    தசரதன் சனிபகவானைப் பார்த்து,“ தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்” என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறிய  சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டிய வரம் எதுவாயினும் கேள் என்று கூற

    தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து  பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

    நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச

    நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம

    நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச

    நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே       

    நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம

    நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

    நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே

    நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே

    நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

    சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச

    அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

    நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

    தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய

    நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம

    ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ  ஸுநவே

    துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்…

    இதன் விளக்கம் :

     

    கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் . புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக் கூடியவனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தேகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞானக்கண் உடையவனே, கச்யப குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

    சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறான்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளானவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான். ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

    சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , “ஏ ராஜனே , நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு  தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்த பிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புறுத்தமாட்டேன் .கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன்” என்று கூறினார்.

    சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ,நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் பெறுவர்.  

  • கஷ்டங்கள் தீர்க்கும் கந்தசாமி

    போக்குவரத்து நெரிசல்மிக்க இன்றைய சென்னையிலும் அமைதி தவழும் சில இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் எனப்படும் கந்தசாமிக் கோயில்.

    பாரிமுனை ராசப்ப செட்டித் தெருவில் அமைந்துள்ள இந்த கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வேலூர் மாரி செட்டியார் என்பவர்தான் இந்த கோயில் உருவாகக் காரணமானவர். கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகராக இருந்த மாரி செட்டியார், ஒரு தீவிர முருக பக்தர். அவர் திருப்போரூரில் உள்ள முருகனை அடிக்கடி சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக கிருத்திகை நாளில் கண்டிப்பாக திருப்போரூரில் இருப்பாராம்.

    அப்படி ஒருமுறை அவர் தனது நண்பர் கந்தப்பா ஆசாரியுடன் திருப்போரூர் சென்றபோது, ஒரு இடத்தில் ஓய்வெடுத்தாராம். அப்போது தெய்வத்தின் அருளால் அவர்களுக்கு அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்குள் இருந்து ஒரு முருகன் சிலை கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அந்த சிலையை எடுத்துவந்து ஏற்கனவே முத்தையால்பேட்டையில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்த சம்பவம் 1673ஆம் ஆண்டு நடைபெற்றதாக ஆங்கிலேயே குறிப்புகளில் காணப்படுகிறது.

    இதனிடையே இந்த கோயில் இங்கு எப்படி வந்தது என்பதற்கு கிட்டத்தட்ட இதேபோல ஒரு தல வரலாறு கூறப்படுகிறது. அதன்படி, இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்து கொண்டிருந்தனர். வழியில் பலத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே,வழியில் ஓர் மடத்தில் தங்கினர். 

    அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள். இதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    சரி, மீண்டும் மாரி செட்டியாரிடம் வருவோம். தான் கொண்டு வந்த சிலையை வைப்பதற்காக மாரி செட்டியார் ஒரு சிறிய கோயிலைக் கட்டினார். இதற்காக அவர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கான இடம் மட்டும் முத்தையாலு நாயக்கரால் கொடுக்கப்பட்டதாம்.

    சுமார் 100 ஆண்டுகள் கடந்த பின்னர் 1780ஆம் ஆண்டில் இந்த கோயில் பதினெண் செட்டியார்களால் திருத்தி அமைக்கப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் கடந்த பிறகு, 1860இல்தான் இந்த கோயில் நன்கு விஸ்தரிக்கப்பட்டு கற்கோயிலாக மாற்றப்பட்டது. அதுவரை ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள், இது சாதாரண செங்கற் கோயிலாகத்தான் இருந்தது. 1869ஆம் ஆண்டு வையாபுரி செட்டியார் என்பவர் இந்த கோயிலுக்கு ரூ66,000 நன்கொடையாக வழங்கினார். அவர் இந்த கோயிலுக்காக ஒரு தேரும் செய்ய வைத்ததாக நரசய்யா தனது மதராசபட்டினம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

    1880ஆம் ஆண்டு அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் என்பவர் நாராயண செட்டியாருடன் இணைந்து கோயிலின் அருகில் இருந்த நிலத்தை கோயிலுக்காக அளித்தார். அந்த நிலத்தில் தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1901ஆம் ஆண்டு காளி ரத்தின செட்டியார் என்பவர் ரூ.50,000 நன்கொடை கொடுத்திருக்கிறார். அந்த காசில்தான் கோயிலின் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இதுமட்டுமின்றி கோயிலுக்காக காளி ரத்தினம் செட்டியார் ஒரு கிண்ணம் நிறைய வைரங்களும், விலை உயர்ந்த கற்களும் கொடுத்தாராம்.

    இந்த கோயிலுக்கும் வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வள்ளலார் சென்னையில் வசித்த போது தமிழ் கற்பதற்காக இந்த கோயிலுக்கு அருகில் உள்ள சபாபதி முதலியார் வீட்டுக்கு வருவார். பல நேரங்களில் தமிழ் கற்கப் போகாமல் முருகனைத் தரிசிக்கக் கோயிலிலேயே தங்கிவிடுவாராம். மன முருகிப் பாடலும் பாடுவார்.

    திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள ‘ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்ற பாடலில் கந்த கோட்ட முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார். ‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ என்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து பாமாலை சூட்டியுள்ளார். வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.

    இந்த கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே மெட்ராசின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்களாம். கந்த சஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரம் போன்றவையும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

    8 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது. இது கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதில் உள்ள நீரின் அளவு கூடாமல், குறையாமல் அப்படியே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த குளத்தில் கை நிறைய பொறியை அள்ளி வீசினால், மீன்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொறியை கவ்விக் கொண்டு மின்னல் வேகத்தில் நீருக்குள் மறைகின்றன. இங்கு ஒவ்வொரு முறை வரும்போதும், அந்தக் கால மெட்ராஸ் பற்றிய எனது நினைவுகளும் இந்த மீன்களைப் போலவே மூளை நியூரான்களில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு ஒரே நேரத்தில் பாயும் பரவசத்தை அனுபவிக்க முடிகிறது

  • பிள்ளையார் சுழி சொல்வது என்ன ?

    தீராத வயிற்று வலி என்று ஒருவன் டாக்டரிடம் போனான். அவரும் பரிசோதித்து பார்த்துவிட்டு மருந்தை சீட்டில் எழுதி கொடுத்தார். அவனும் அதை கடைக்கு எடுத்துச் சென்றான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து டாக்டரிடம் , நீங்க எழுதிக் கொடுத்த எல்லா மாத்திரையும் கிடைத்து விட்டது. ஆனால் சீட்டின் ஆரம்பத்தில் எழுதிய ஒரு மாத்திரை மட்டும் கிடைக்கவில்லை என்றான்.  டாக்டரும் அதை வாங்கிப் பார்க்க ,அது தான் மாத்திரை எழுத ஆரம்பிக்கும் முன் போட்ட பிள்ளையார் சுழி என்று தெரிந்துக் கொண்டார்.

    இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், படித்தவர்,படிக்காதவர் என்று நம் அனைவருக்கும்,எதையாவது  எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு  எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது நம்மில் வழக்கமாக இருக்கிறது.

    இவ்வளவு ஏன்,நம்முடைய  பழைய காலத்து ஏடுகள், கல்வெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால்  இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்திகர்கள் கூட, எழுத துவங்குவதற்கு முன் எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக போட்ட வட்டமும், கோடும் தான், பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது என்று சொல்வார்கள்.

     

    அது அவர்கள் வாதமாக இருக்கட்டும். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது. முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி. இரண்டாவது உரு நேர் கோடு. மூன்றாவது வட்டம். நான்காவது பிறை மதி. ஐந்தாவது பிந்து. இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம்.

    பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்ற, காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

    எது எந்த விதமாக அர்த்தம் புரிந்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு செயலை நாம் துவங்குவதற்கு முன் முழுமுதற் கடவுளை வணங்கி ஆரம்பிக்க அது வெற்றியில் தானே முடியும்?.

     

  • பிள்ளையார் சுழி சொல்வது என்ன ?

     

    தீராத வயிற்று வலி என்று ஒருவன் டாக்டரிடம் போனான். அவரும் பரிசோதித்து பார்த்துவிட்டு மருந்தை சீட்டில் எழுதி கொடுத்தார். அவனும் அதை கடைக்கு எடுத்துச் சென்றான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து டாக்டரிடம் , நீங்க எழுதிக் கொடுத்த எல்லா மாத்திரையும் கிடைத்து விட்டது. ஆனால் சீட்டின் ஆரம்பத்தில் எழுதிய ஒரு மாத்திரை மட்டும் கிடைக்கவில்லை என்றான்.  டாக்டரும் அதை வாங்கிப் பார்க்க ,அது தான் மாத்திரை எழுத ஆரம்பிக்கும் முன் போட்ட பிள்ளையார் சுழி என்று தெரிந்துக் கொண்டார்.

    இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், படித்தவர்,படிக்காதவர் என்று நம் அனைவருக்கும்,எதையாவது  எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு  எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது நம்மில் வழக்கமாக இருக்கிறது.

    இவ்வளவு ஏன்,நம்முடைய  பழைய காலத்து ஏடுகள், கல்வெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால்  இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்திகர்கள் கூட, எழுத துவங்குவதற்கு முன் எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக போட்ட வட்டமும், கோடும் தான், பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது என்று சொல்வார்கள்.

     

    அது அவர்கள் வாதமாக இருக்கட்டும். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது. முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி. இரண்டாவது உரு நேர் கோடு. மூன்றாவது வட்டம். நான்காவது பிறை மதி. ஐந்தாவது பிந்து. இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம்.

    பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்ற, காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

    எது எந்த விதமாக அர்த்தம் புரிந்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு செயலை நாம் துவங்குவதற்கு முன் முழுமுதற் கடவுளை வணங்கி ஆரம்பிக்க அது வெற்றியில் தானே முடியும்?.

     

  • சீரடி பாபாவுக்கான விரதங்கள்

     

    ஆன்மீகத்தோடு ஒன்று கலந்தது பிராத்தனைகளும்,விரதங்களும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான பிரத்தனைகளை, பக்தர்கள் அவர்தம் வசதிக்கேற்ப செலுத்துவதுண்டு. ஆனால் அதனை முறைப்படி பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு,அர்ப்பணிப்போடு செய்யும் போது அதன் பலன்கள் அனேகம்.

    நமது சீரடி மகானிடமும், பக்தர்கள் தங்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பல விதமான விரதங்களை கடைப்பிடிப்பதுண்டு . சீரடி பாபா விரத முறைகளில் எல்லோருக்கும் நன்றாக தெரிந்தது வியாழக்கிழமை விரதம் தான். ஆனால் அது போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில்  சிலவற்றை இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.  

     சாய் சத்யவிரத பூஜையில்,வழக்கமான சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி உள்ளன்புடன் அவரை வணங்க வேண்டும் .

     பாபாவின் வழிபாட்டு முறையில் ,சர்க்கரையில் அக்கறை இல்லா லீலையும் ஒன்று. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருந்தால் ,மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

     பாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாயத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள் என்பது சாய் அடியார்களின்  நம்பிக்கை.

     திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது என்பது பலனடைந்தவர்களின் வாக்குமூலம்.

     கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று,  அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ என்னும் அணையா நெருப்பு முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு படைக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.

     நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம். பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21,  48,  54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். ‘புக்கே’ எனும் தேங்காய் துருவல், அவல், சர்க்கரை கலந்த இனிப்பை நைவேத்தியமாக  படைக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.

     இந்த வழிபாட்டு முறைகளில் யாருக்கு எந்த வேண்டுதல் உண்டோ, அதற்கேற்ப அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை, இன்ன தேதிக்குள் முடிய வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு இல்லாமல், அவர் மீது முழு நம்பிக்கை வைத்து செய்தால் அவர் நமக்கு எல்லா செல்வங்களையும் அருள்வார்.

     சாய் பிராத்தனை   இருளகற்றி நம் வாழ்வில் ஒளியேற்றும் . ஜெய் சாய்ராம் 

     

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (அரிவாட்டாய நாயனார் )

     

    சோழவள நாட்டின் செழிப்பினை வையத்திற்கு எடுத்துக் கூறிய  கணமங்கலம் என்னும் ஊரில்  தாயனார் என்னும் சிவனடியார் வாழ்ந்து வந்தார் . வேளாண் மரபைச் சேர்ந்த இவர்,சிவனடியார்களிடத்துப் பேரன்பு மிக்கவர். அனுதினமும் இறைவனுக்குச் சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும், மாவடுவையும் நிவேதனப் பொருட்களாக  அளிப்பதை தனது கடமையாகக் கொண்டிருந்தார். எக்காரணத்தைக் கொண்டும் இதில் இருந்து தவறியது இல்லை . ஜாடிக்கு ஏற்ற மூடி போல் இவரது மனைவியும் இவரைப் போலவே இறைவனிடம் பக்தி கொண்டிருந்தாள். கணவன் ,மனைவி இருவருக்கும் இந்த  தெய்வப் பணி மட்டுமே வாழ்க்கையில் முக்கியமான அம்சமாக இருந்தது.

    தன் மீது அளவில்லாத அன்பு கொண்ட அடியவர்களின் புகழை உலகறிய செய்வது தானே அந்த ஆடலரசனின் வேலை . தாயனார் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அவரிடமும் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பமானது. இறைவனுக்குத் தவறாமல் பணிபுரியும் அந்த தம்பதியினருக்கு வறுமையை  ஏற்படுத்தினார். ஆனால் வறுமையைக் கண்டு சற்றும் மனம் தளராமல் வழக்கமாக செய்யும் தொண்டினை அந்த தம்பதியினர் செய்து வந்தனர்.

      நாளுக்கு நாள் வறுமை அதிகமான நிலையிலும் அடியார் சற்றும் மனம் தளராமல், கூலிக்கு நெல் அறுக்கும் பணிக்கு தள்ளப்பட்டும்,அதில்  கிடைத்த  நெல்லில் செந்நெல்லைக் கோயில் நைவேத்தியத்துக்கும், கார்நெல்லை தம் உணவிற்கும் வைத்துக் கொள்வார்.

    இங்ஙனம் வறுமையிலும் செம்மையாக  வாழ்ந்து  வந்த அடியாருக்கு செந்நெல்லாகவே கூலியாக கிடைத்ததால், நாயனாருக்கும் அவரின் மனைவிக்கும் அரிசி இல்லாமல், தோட்டத்தில் விளைந்த கீரையைப் பக்குவம் செய்து சாப்பிடத் தொடங்கினார்.

    விடுவாரா ஈசன், நாளடைவில் அந்த கீரைக்கும் பஞ்சம் வந்தது.சோர்ந்து போகாமல்  அந்த சமயத்திலும் அடியார் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டார். ஒருநாள் நாயனார் தன் மனைவியுடன் இறைவனுக்கு திருவமுது படைப்பதற்கான செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஓர் கூடையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டார். பசியால் ஏற்பட்ட சோர்வு அவரை மிகவும் வருத்தியது.

    நாயனார் பசியினால் நிலத்தில் விழப்போக ,அம்மையார் தாங்கிக் கொண்டார். கூடையில் சுமந்து வந்த நிவேதனப் பொருள்கள் கீழே விழுந்து சிதறியதால் , நாயனார் மனம் கலங்கினார்.இதற்கும் மேலும் தான் உயிர் வாழ விரும்பாமல் , தம்மிடம் இருந்த அரிவாளால் கழுத்தை அரிந்துகொள்ள துணிந்தார்.

     

                                                                      

    அவரது பக்தியினைக் கண்ட அம்பலத்தரசன் தொண்டரைத் தடுத்தாட் கொண்டார். திருவமுது சிந்திய நிலவெடிப்பிலிருந்து ருத்திராக்ஷ மாலையும், திருநீறும் அணியப் பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.

    அத்திருக்கரம் நாயனாரின் கையைப் பற்றியது. இறைவனின் ஸ்பரிசத்திலே மெய் உருகி நின்றார் நாயனார். அவர் கையில் இருந்து  அரிவாள் தானாக நழுவியது. நிலத்தில் இருந்து வெடுக் வெடுக் என்று ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட நாயனார் தான் நிலத்தில் கொட்டிய மாவடுவை எம்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அறிகுறியாகத்தான் இந்த ஓசை கேட்கிறது என்று உணர்ந்து அகமகிழ்ந்தார்.

    இறைவனின் திருவருட் கருணையை எண்ணி எண்ணி மனம் உருகிய நாயனாரும் அவர் மனைவியாரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அடியவரை ஆட்கொண்ட இறைவன் சக்தி சமேதராய்த் தம்பதியர்க்குப் பேரானந்த காட்சி அளித்தார். இறைவன் நாயனாருக்கும் அவர் தம் மனைவியாருக்கும் என்றென்றும் தம் அருகிலேயே இருந்து மகிழ்ந்து வாழும் பேரின்பப் பேற்றினை அருளினார்.

     

     

  • எங்கே நிம்மதி ?

     

    பல நேரம் நாம் நிம்மதியையும் , மன அமைதியையும் தேடி எங்கெங்கோ அலைந்துக் கொண்டிருக்கிறோம்.  பல தேவைகளின் பொருட்டு அலைகடலென மனதை ஆர்ப்பரிக்க விட்டு,  அதில் நிம்மதி என்னும் முத்தை எடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறோம்.

    நம் மனதில் தான் உலகின் மொத்த அமைதியும் , நிம்மதியும் குடிக்கொண்டு இருக்கிறது என்பதை உணரும் தருணத்தில் தான் இறைவனை நம்மால் உணர முடியும்.

    இப்படி தான் ,ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று வெகு நாளாக  ஆசை. ஆனால் அவரை எப்படி சந்திப்பது,என்று குழப்பம். அதற்காக நிறைய பேரை கேட்டான். கடவுளைத்தானே பார்க்க வேண்டும். அதிலென்ன சிரமம் கோவிலுக்கு போ என்றார்கள். இவனும் உடனே புறப்பட்டான்.

    போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். முகத்தில் ஏகப்பட்ட குழப்பத்துடன் சென்றுக்கொண்டிருந்த  அவனிடம் அவர்,” எங்கே போகிறாய் ?”என்று கேட்டார்.

    “கடவுளை காண போகிறேன் !”என்றான் நம்மவன்.

    “எங்கே போய் காணப்போகிறாய்” என்றார் ஞானி.

    “வேறு  எங்கே கோவிலில் தான் !”என்றான்.

    “சரி அங்கே போய்  ……..”?

    “அங்கே போய் அவரை வழிபட போகிறேன் ! “

    “ஓ …அப்படியா ?அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?”

    “இல்லை தெரியாது “

    “பிறகு எந்த வகையிலும்  கடவுளை அறியாத நீ , எப்படி அவரை வழிபட முடியும்?”

    “சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே , அப்படியென்றால் “

    “உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் “

    ஞானியின் பதிலால் அவன் ரொம்பவே குழம்பி விட்டான்.

    ஞானி பொறுமையாக அவனுக்கு தெளிவு படுத்தினார்.

    “ஏ, மனிதனே ….. நீ செய்யப்போவது உண்மையான வழிபாடு இல்லை  …. இன்றைக்கு மனிதர்கள் ” பக்தி” என்ற பெயரில் ஆண்டவனிடம்  பண்டமாற்று வியாபாரம் மாதிரி தட்சணை  கொடுத்து தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

     பக்தனோ ,“நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் …”என்றான் விடாப்பிடியாக.  ஞானியும் ,“ நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?”என்றார் . “அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?”. “கடவுளை  நீ சந்திக்க முடியாது . அவரை உணரத் தான் முடியும் !”.

    “அதற்கு என்ன தான் வழி ?”.

    “தியானம் ஒன்றே வழி”

    முன்னிலும் அதிகமாக குழம்பிய பக்தன், ” தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?”என்றான்.

    “இல்லை,தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் .உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் “என்றார் ஞானி.

    அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே  வந்தார் . ஞானியின் முன்னால் பணிவோடு நின்ற அவர் தன்னுடைய தேவையை சொன்னார் :

    ” I WANT PEACE”

    அதற்கு ஞானி ,“முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை சுலபமாக நீ நெருங்கலாம் !” எனக் கூற , வந்தவர் யோசித்தார்.

    ‘ I ‘ . ‘ WANT ‘ இரண்டையும் விட்டு விலகினால் ‘PEACE ‘ நெருங்கி வருகிறது !’ நான் ‘ என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ‘ என்னுடையது ‘ என்கிற ஆசைகளை விலக்குங்கள். ‘ அமைதி ‘ என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் என்றார். வெளிநாட்டுகாரர் விளக்கம் கிடைத்த மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கே வந்தான்.

    “சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !”என்று ஜம்பம் பேசினார்.

    “ எப்படி அது ?என்றார் ஞானி.

     “ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !”என்று சொல்லும் போதே ,அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

    ஞானி கேட்டார்,”அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது ?”

    ” ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !”உற்சாகமாக சொன்னான் .

    “உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?”என்று ஞானி கேட்க

    “இல்லை “. அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !”

    “யார் அவர் “

    “அங்கே இருக்கிற அர்ச்சகர் !”.வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

    ” சரி , சுவாமி . நான் வர்றேன் !”என்று சொல்லிவிட்டு சோர்வோடு நடந்து போனான் .

    இறுதியில் முதலில் வந்த மனிதன் எழுந்தான். ஞானியிடம் விடை பெற்றான். திரும்பி நடந்தான் .ஞானி கேட்டார் :

    “எங்கே போகிறாய் ? ”

    “வீட்டுக்கு !”

    “கோவிலுக்கு போகவில்லையா ?”

    “இல்லை “

    “அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?”

    “ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதையும் , ‘நான் ‘ . ‘என்னிடம் ‘ இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையையும்  தெரிந்து கொண்டேன் “என்றான்.

    ஞானி இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார்.

    “ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் நான்,என்னிடம் என்ற அகந்தையில் இருந்து விலகியிருக்கிறோமோ , அவ்வளவு தூரம் இறைவனிடம் நெருங்கி இருக்கிறோம்  என்பது பொருள் என்றார் ஞானி.

     

    ‘நான்’ , ‘என்னிடம்’ இருந்து விலகி , இறைவனிடம் நெருங்குவோம் நாம்.

  • தெரிந்த பொருட்களும் தெரியாத தத்துவங்களும்

    நாம்  தெரிந்தவர் யாரையாவது பார்க்கப் போகும் போது வெறுங்கையுடன் போவது இல்லை. நம் சக்திக்கு ஏற்றவாறு, எதையாவது வாங்கிக்கொ ண்டு தான் போவோம். அது மரியாதை நிமித்தம் காரணமாகவோ அல்லது நம்முடைய கவுரவத்திற்காகவோ  வெறுங்கையுடன் போவது நம் பண்பாடு இல்லை. சாதாரணமான மனிதர்களுக்கே நாம் இவ்வளவு யோசிக்கும் போது, இவ்வுலகையும், நம்மையும் படைத்துக் காக்கும் இறைவனை பார்க்க கோயிலுக்கு செல்லும்போது, அத்தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவோ, அர்ச்சனை செய்யவோ  பூஜை பொருட்கள் வாங்கிச்செல்வோம். அதற்கான காரண காரியத்தைக் கேட்டால், யாருக்கும் தெரியாது. வழிவழியாக நம் பெரியவர்கள் செய்து வந்ததை நாமும் அர்த்தமும், காரணமும் தெரியாமல் பின்பற்றி கொண்டிருக்கிறோம் .

    சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், அதன் பின் உள்ள தத்துவத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.

     

    தேங்காய்

    பருப்பில்லாத கல்யாணமா ? என்றொரு சொல் வழக்கொன்று உண்டு. அது போல் தேங்காய் இல்லாமல் நம் இந்து மதத்தில் எந்த ஒரு கோவில் கைங்கரியமும், சுப நிகழ்வுகளும் நடக்க முடியாது. கோவில்களுக்கு நாம் தேங்காயை அர்ப்பணிப்பதன் தத்துவமாவது ,தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.

    அதுபோல்  நம் மனதில் குடிகொண்டிருக்கும் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது தான் வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும். அடுத்த முறை நாம் கோவிலுக்கு தேங்காயை எடுத்து  வைக்கும் போது, இந்த தாத்பரியத்தை நினைத்துப் பார்த்து இறைவனிடம் அகந்தை அற்ற மனதை வேண்டுவோம்.

     

    விபூதி (திருநீறு)

    புனிதமான நம் இந்து மத சின்னமான திருநீறு, நாளை ஒரு நாள் நாமும் இது போல் பிடி சாம்பல் ஆகப்போகிறோம் என்பதை நமக்கு உணர்த்துவதாகும். முடியாண்ட மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆக வேண்டும். ஆதலால்  வாழும் போது நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

     

    வாழைப்பழம்

    முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்திற்கும் பூஜை பொருட்களில் முக்கியத்துவம்  கொடுக்கப்படுகிறது. வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும். ஆனால் மற்ற பழங்களின் விதையை போல் அது முளைக்காது. அதைப் போலவே நாமும், எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என இறைவனின் அருள் பெறவே வாழைப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

     

    அகல் விளக்கு  

    எவ்வளவு விஞ்ஞானம் வளர்த்தாலும், மின்சாரத்தினால் ஏற்றப்படக்கூடிய ஒரு  விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஏற்ற முடியாது. ஆனால் மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கினைக் கொண்டு  மற்றொரு அகல் விளக்கை  ஏற்றி இருள் சூழ்ந்த இடத்தை ஒளிர வைக்க முடியும்.

    அதுபோல் நாமும் சுயநலமற்று இருக்க வேண்டும் என்று உணர்த்தவே அகல் விளக்கை ஏற்றுகிறோம். நாம்  வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவது அகல் விளக்கு தத்துவம்.

     

    இறைவன் நம்மிடம் , இதைக்  கொடு , அதை செய் என்று எதிர்பார்ப்பதில்லை. உள்ளார்ந்த பக்தியுடன் ஒரு இலையை கிள்ளிப் போட்டு என்னை பூஜித்தாலே நான் மகிழ்வேன் என்றார் கிருஷ்ணர். ஆகவே நாமும்  இறைவனுக்கு நம்முடைய தூய்மையான பக்தியை பிரதானமாகக் கொண்டு இந்த எளிமையான பூஜை பொருட்கள் மூலம் இறை அருள் பெற முடியும் .