பெரிய பாதையில் செல்லும் பக்தர்கள் கரியிலம்தோட்டை அடுத்து கரிமலை அடிவாரத்தை அடையலாம். இந்த மலையில் ஏறும்போது தங்கள் பிரம்மச்சரிய விரதத்தின் சக்தியை உணரலாம். இதை விட கடினமான மலை உலகில் இல்லையோ என்று எண்ணுமளவுக்கு பெரும் ஏற்றத்தில் பக்தர்கள் ஏறுகிறார்கள். இம்மலையிலுள்ள மண் கருப்பாக இருக்கும். எனவே இம்மலைக்கு “கருமலை’ என்ற பெயர் இருந்து “கரிமலை’ என்று மாறிவிட்டது. கரி என்றால் தமிழில் யானை என்று அர்த்தம். காட்டுயானைகள் நிறைந்த கடினமான மலைப்பகுதி என்றும் கூறுவர். மலை உச்சியில் கரிமலைநாதர் என்ற மூர்த்தியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இங்கு சுவையான தண்ணீருடன் கூடிய சுனை உள்ளது. இதை ஐயப்பன் தனது அம்பினால் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நீரை பக்தர்கள் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். கரிமலையில் மிகவும் கவனமாக நடக்க வேண்டும். ஏனெனில், ஒரு ஒற்றையடிப் பாதையே நம் கண்முன் தென்படும். ஒரு பக்கம் அதலபாதாளம், மறுபக்கம் உரசும் பாறைகள் என இருப்பதால் மிக கவனமாக ஏற வேண்டும். ஏற்றம் இருக்கும் அளவுக்கு இறக்கமும் பக்தர்களைச் சிரமப்படுத்தும். கால்கள் பின்னி தடுமாறும். ஆனாலும், ஐயப்பன் கருணையுடன் இந்த இடத்தைக் கடக்க அருள்செய்வார். மனதிற்குள் சரணம் சொல்லியபடியே பக்தர்கள் மலையேறுவார்கள். இம்மலையில் மூலிகைச் செடிகள் அதிகம் இருக்கிறது என்பதால், இதைக் கடந்தவுடனேயே தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.
Blog
-
2017-11-24-07-48-45
சபரிமலை கோவிலில் சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அன்னதான திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கினால், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்யும் முறை இருந்தது. இந்தநிலையில், திருவனந்தபுரம் நந்தன் கோட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அன்னதான திட்டத்துக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி அளிப்பவர்கள், கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யலாம் என்ற முறை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரசீது வழங்கப்பட்டவர்கள் சிறப்பு தரிசன வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சபரிமலை மற்றும் பம்பையில் தனித்தனியாக உள்ள மெஸ் வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக – ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, கோயில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தபடியே தங்கக் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள 73 அடி உயர தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான நவம்பர் 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. விழாவின் 10-ஆம் நாளான டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையில் மகா தீபமும் ஏற்றப்படும்.
-
pakthargal-kurai-thirkkum-24-thirththangal
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது. இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.
- முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.
- தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
- வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
- லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.
- சித்தர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
- திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.
- காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.
- சாவித்ரி தீர்த்தம் – இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
- சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
- அயிராவத தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.
- வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
- துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
- ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
- சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
- தரும தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானதுது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.
- முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.
- தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
- பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.
- கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.
- கங்கா தீர்த்தம் – இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.
- சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.
- கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
- மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
- தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.
கோவிலுக்குத் தெற்கே 200 கெஜ தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. இதற்குத் கந்தபுஷ்கரணி என்றும் பெயர் வழங்குகிறது. இந்தக் கந்தபுஷ்கரணியில் முழுகுவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்.
-
yezhu-gurukkal-ore-thalaththil-katchi
குருமார்கள் ஏழு பேர் உள்ளனர். அவர்கள் தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞான குரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி. இவர்கள் அனைவரையும், திருச்சி அருகிலுள்ள உத்தமர் கோவிலில் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இங்கு பிரம்மாவிற்கும் சன்னதி உள்ளது. குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபட்டவருக்கு குருதோஷம் நீங்கும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தம் முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும் லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். உலகில் வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக படைப்புக் கடவுள் பிரம்மாவே குரு பகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில், தென்முகமாக அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து, அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி தேவியை தன்னுடன் கொண்டு அருள் வழங்கி வருகிறார். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. வைணவ புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது.
கோயிலில் படைப்புத் தொழில் புரியும் பிரம்மா தனி சன்னதியில் குரு பகவான் ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளி வருகிறார். அவரது இடப்புறம் கல்விக் கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி குடி கொண்டு கல்வி, கலை, ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
காக்கும் கடவுளாகிய திருமால், புருஷோத்தமர் என்ற திருநாமத்துடன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளார். இவரது இடப்புறம் தனி சன்னதியில், பிச்சாடனரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவரது பிச்சைப் பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவு அன்னமிட்ட பூரணவல்லித் தாயார் குடிகொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் நல்கி அழிவில்லாமல் சகல உயிர்களையும் காத்து வருகிறார். அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை புரிந்து வரும் சிவபெருமான் பிச்சாண்டவர் (பிச்சாடனர்) என்ற திருநாமத்துடன் சவுந்தர்யபார்வதியை தென்முகமாகக் கொண்டு விளங்குகிறார். பிச்சாடனராக இத்தலத்தில் அவதரித்த இறைவன், நெறி கெட்டு கர்வத்துடன் இருந்த ரிஷிகளையோ அவர்களது பத்தினிகளையோ அழிக்காமல் அவர்களின் அகம்பாவத்தை மட்டும் அழித்ததால் அவர் உத்தமராக விளங்குகிறார்.
சகல மேன்மைகள் தரும் மும்மூர்த்திகள்
ஆரோக்கியம், தொழில் மேன்மை, வேலைவாய்ப்பு, சுயதொழில், உத்யோக உயர்வு, திருமணம், புத்திரபாக்கியம், உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, மனநலம், வழக்குகளில் வெற்றி, மனநிம்மதி உள்ளிட்ட அனைத்து பிரார்த்தனைகளும் 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்வதனால் பிரம்மாவினால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. பிரார்த்தனை கை கூடிய பிறகு கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அல்லது தயிர் சாதம் தளிகை செய்து அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு ஜாதகத்தில் விஷ்ணு தோஷம் இருந்தால் புதன் கிழமையிலும், சிவன் மற்றும் குரு தோஷம் இருந்தால் வியாழக்கிழமையிலும், நாகதோஷம் மற்றும் சுமங்கலி தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமையிலும் பிரம்மாவிற்கு உகந்த ஆத்தி இலையில் அர்ச்சனை செய்வது நலம். புத்திரபாக்கியம் வேண்டுவோர் ராமபிரானின் தந்தை தசரதமகாராஜா பூஜித்த தசரதலிங்கத்தை வில்வ இலையால் எந்தநாளும் அர்ச்சனை செய்து பலன் பெறலாம். தசரதலிங்கத்திற்கு தொடர்ந்து 48 வாரங்கள் அர்ச்சனை செய்து குழந்தைப் பேறு பலருக்கு கிடைத்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். -
guruvaga-vazhipaduvathu-yen
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார்.
தெட்சிணாமூர்த்தி வழிபாடு
தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.
தெட்சிணம் என்றால் என்ன?
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது.
வியாக்யான தெட்சிணாமூர்த்தி
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தெட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.
குருவின் சின்முத்திரை
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.
பத்து தெட்சிணாமூர்த்திகள்
மிக அழகானது – பழநி பெரிய ஆவுடையார் கோயில்
தலை சாய்த்த கோலம் – திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)
சிற்ப அழகு – ஆலங்குடி
வீராசன நிலை – சென்னை திரிசூலம்
மிருதங்க தெட்சிணாமூர்த்தி – கழுகுமலை (தூத்துக்குடி)
யோகாசன மூர்த்தி – அனந்தபூர் (ஆந்திரா)
வீணா தெட்சிணாமூர்த்தி – நஞ்சன்கூடு (கர்நாடகா)
வியாக்யான தெட்சிணாமூர்த்தி – அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)
நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி – மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
நின்ற நிலையில் வீணையுடன் – திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்.
-
perumal-kovilgalil-yavaru-vazhipada-vendum
பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும். அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றுவார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்திருக்கும். அதனையும் வழிபட வேண்டும்.
பெருமாளை தரிசிக்கும் போது முதலில் பாதத்தைத் தான் பார்க்க வேண்டுமா?
மகாபாரதத்தில் போர் நடக்கும் முன்பு கிருஷ்ணரிடம் போரில் உதவி கேட்டு முதலில் வந்த துரியோதனன், தூக்கத்தில் இருந்த கிருஷ்ணரின் தலையருகில் அமர்ந்தான். ஆனால் அடுத்து வந்த அர்ஜுனனோ பாதத்தின் அருகில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணர் கண் திறந்ததும் முதலில் அவருடைய அருள் பார்வை அர்ஜுனன் மீது விழுந்தது. அப்போதே பாண்டவர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. அர்ஜுனனுக்கு வெற்றி கிடைத்தது போல, பெருமாளின் பாத தரிசனம் எல்லாருக்கும் வெற்றி தரும் என்பதால் தான் பெருமாளை முதலில் பாதத்தை பார்த்து தரிசனம் செய்ய வேண்டும்.
பிறகு லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.
அடுத்து, கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.
கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. இறைவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோவிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும். கோவிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோவிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புபவர். இறைவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடையை தவிர்ப்பது நல்லது.
பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது சுக்கிரனின் சக்தி முழுமையும் கிடைக்க, அங்கு ஸ்தாபித்து இருக்கிற சுக்கிர தன்மையும் அதுக்கு தூண்டுகோலாக இருக்கிற, அங்கு பயன்படுத்துகின்ற பச்சை கற்பு ரம், சந்தனம், சம்பங்கி பு , துளசி தீர்த்தம் போன்றவை உதவும். மேலும் உடம்பில் அசுரத் தன்மையை தூண்டக் கூடிய உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து தெய்வ சிந்தனையுடன் வாழ்வில் ஈடுபட்டு நல்ல வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசியில் பெருமாள் வழிபாடு வலியுறுத்தப்பட்டது.
விஷ்ணு காயத்ரி மந்திரம் :
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் சொல்வதால், ஆபத்துகளில் இருந்து விடுபடலாம். பாவங்கள் அகலும். நல்ல குணமும், அழகும் கொண்ட சந்ததிகள் உருவாகுவார்கள்.
-
2017-11-22-13-35-44
முன்னொரு காலத்தில், மழையே இல்லாமல் மதுரை ஏகத்துக்கும் காய்ந்து போயிருந்தது. நீர்நிலைகள் அனைத்தும் வற்றத் துவங்கின. இங்குள்ள குளம் ஒன்றில் தினமும் இறங்கி, அதில் உள்ள மீன்களைக் கொத்திச் சாப்பிட்டு வாழ்ந்து வந்த ஒரு நாரை, தனக்கு உணவு அளித்த குளம் வறண்டு போனதை அடுத்து, பசியைத் தணிக்க வேறொரு குளத்தைத் தேடிப் போனது.
நாரை தேடிப் போன குளம்தான் – மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் அமைந்துள்ள பொற்றாமரைக் குளம்! பிரமாண்டமான அந்தக் குளத்தை அதிசயத்துடன் பார்த்தது. அப்போது, அந்தக் குளத்தில் மகான்கள் மற்றும் ரிஷிகள் சிலர் நீராடிக் கொண்டிருந்தனர். தனக்கே உரிய பொறுமையுடன் இந்தக் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நாரை. குளத்தில் வசித்து வந்த மீன்கள், நீராடிக் கொண்டிருந்த மகான்கள் மற்றும் ரிஷிகள் மீது மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. இதைக் கண்ட நாரை ‘ஆகா… நன்றாகக் கொழுத்த உடலுடன் மீன்கள் இங்கே ஏராளமாக இருக்கின்றன. இன்றைக்கு நமக்கு நல்ல தீனி கிடைக்கப் போகிறது’ என்று ஒரு கணம் மகிழ்ந்தது. ஆனால், அடுத்த விநாடியே அந்த மகிழ்ச்சி, பரிதாபமாக மாறியது. ‘அடடா… தவறு செய்ய இருந்தோமே… முனிவர்கள் மீது அன்புடன் விளையாடிய மீன்களைச் சாப்பிட்டால் அது மகா பாவமாகி விடுமே!’ என்று யோசித்த நாரை, தனது எண்ணத்தைக் கைவிட்டதுடன், உண்ணா நோன்பையும் மேற்கொண்டது. இதை அறிந்த ரிஷி ஒருவர், மதுரை பொற்றாமரைக் குளத்தின் பெருமைகளை நாரைக்கு எடுத்துரைத்தார். இதைப் பக்தியுடன் கேட்டுக் கொண்ட நாரை, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்து, சிவபெருமானை வணங்கியது. இதில் உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான், நாரையின் முன்னே தோன்றி, ”நாரையே! உன் பக்தியில் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும், கேள்” என்றார். இறைவனை வணங்கிய நாரை, ”சிவனாரே! தங்களுடனேயே எப்போதும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. எனவே, எனக்கு சிவலோகப் பதவி வழங்குங்கள். மேலும், தாங்கள் எனக்குத் தரிசனம் தந்த இந்தப் பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல் செய்ய வேண்டும். ஏனெனில், மீனைச் சாப்பிடத் துடிக்கும் மனிதர்களோ, விலங்கினங்களோ, இந்தக் குளத்தில் இறங்க நேரிட்டால், குளத்தின் புனிதமே கெட்டுவிடும்” என்று சொன்னது. ”அப்படியே ஆகட்டும்” என்று வரம் அளித்தார் சிவபெருமான். மதுரை பொற்றாமரைக் குளத்தில், மீன் இனங்கள் இன்று வரை தோன்றுவதில்லை என்பர். -
2017-11-22-12-51-03
10 நாள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நவம்பர் 23 நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கோயிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதையடுத்து, காலை 9 மணிக்கு வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் வீதியுலா நடைபெறும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் இரவு வரை நடைபெறும். டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். -
azhdha-nadhiyin-kadhai
காடு, மலை ஏறி, இறங்கி மேலும் சுமார் 6 மைல் நடந்து, அழகிய வனத்தில் காளைகட்டி என்ற இடத்தை சென்றடையலாம். மகிஷியை கொன்ற தன் மகன் மணிகண்டனை வாழ்த்துவதற்காக வந்த சிவன், தனது வாகனமான காளையைக் கட்டிய இடம் என்று கருதப்படுவதால், இப்பெயர் ஏற்பட்டது.
இங்கே சிவாலயம் ஒன்று இருக்கிறது.காளைகட்டியிலிருந்து கிழக்கே சுமார் ஒன்றரை மைல் நடந்து அழுதாநதிக் கரையை சென்றடையலாம். மணிகண்டனால் தூக்கி எறியப் பட்ட மகிஷியின் உடல் இந்த நதிக்கரையில் விழுந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இயற்கை அழகும், நெடிய மரங்களும் அவைகளை அணைத்து நிற்கும் பசுங்கொடிகளும், பள்ளத்தாக்கில் ஓடிவரும் அழுதாநதியும் பார்க்க பரவசமடையச் செய்யும்.
அழுதாநதி:
மணிகண்டன் அம்பு மகிஷிமேல் பட்டதும் அவளோட தீய குணம் மாறி நல்ல எண்ணம் வந்தது. அதனால் தன்னை மன்னிக்கும்படி வேண்டி மனம் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர்தான் அழுதா நதியாகப் பெருகி ஓடுகிறதாம்.
அழுதையாற்று நீரில் நீராடி, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கிருந்து சுமார் 2 மைல் நடந்து அழுதைமேடு என்ற குன்றில் ஏறினால் இஞ்சிப்பாறைக்கோட்டை என்னுமிடத்தை அடையலாம்.பின்னர், கல்லிடும் குன்று என்ற இடம் வருகிறது.
மகிஷியை வதம் செய்த ஐயப்பன், அவளது உடலை இங்கு புதைத்துவிட்டு, கனமான கற்களை வை த்துச் சென்றாராம். இதன் அடிப்படையில் அழுதா நதியில் எடுத்து வந்த கற்களை பக்தர்கள் இவ்விடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த இடத்தில் கல்லைப் போடும் பக்தர்கள், தங்கள் பாவம் நிவர்த்தியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வர். மகிஷி பாவத்தின் சின்னம். புதைந்து கிடக்கும் பாவச்சின்னம் மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதால், கல்லைப் போட்டு எழவிடாமல் செய்கின்றனர்.
காவலர் ஐயப்பன் :
அழுதாமலை உச்சியில், “இஞ்சிப்பாறைக்கோட்டை’ இருக்கிறது. இங்குள்ள கோயிலில் “தேவன் வியாக்ரபாதன்’ என்ற பெயரில் ஐயப்பசுவாமி அருளுகிறார். “வியாக்ரம்’ என்றால் “புலி’. ஐயப்பன் புலிகளை தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன்னைக் காணச்செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் காவலராக விளங்குகிறார். ஆன்மிக ரீதியாக, இதை வேறு மாதிரியாக பொருள் காணலாம். மனிதன், இந்த உலக இன்பத்தை பெரிதென நினைக்கிறான். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய இன்பங்களை அடைய ஆசை கொண்டு, பாதகங்களைச் செய்யக் கூட தயாராகி விடுகிறான். இந்த பாதகங்களே மனதை ஆட்டிப்படைக்கும் புலிகளுக்கு ஒப்பிடப்படுகிறது.இந்த கொடிய புலிகளை கட்டிப்போட்டு விட்டால் மனதில் நல்ல சிந்தனைகள் மட்டுமே தங்கும். பக்தி மார்க்கத்திற்குள் மனிதன் வருவான். இந்த ஐயப்பனை வணங்கி விட்டு நடந்தால், முக்குழி என்ற இடம் வரும். இங்கு மாரியம்மன் அருள் செய்கிறாள். அம்பிகையை வணங்கி விட்டு தொடர்ந்து நடந்தால் கரியிலம்தோட்டை அடையலாம். இவ்விடத்தில் மலைப்பாதை சமதளமாக இருக்கும். இங்கு பக்தர்கள் தங்கிச் செல்ல வசதியுள்ளது. அங்கு உணவருந்தி சிறிது ஓய்வெடுத்துப் பின் புதுச்சேரி என்ற ஆற்றை கடக்க வேண்டும்.