Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • indraya-rasi-palan

    டிசம்பர் 18
    விளம்பி வருடம் – மார்கழி 3
    வைகுண்ட ஏகாதசி, குற்றாலம் சிவன் தேர்
    18-டிச-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி அ.கா 4.57
    நட்சத்திரம் : அசுவினி இ 2.27
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தாமதம்
    ரிஷபம் – சுகம்
    மிதுனம் – வரவு
    கடனம் – சிக்கல்
    சிம்மம் – முயற்சி
    கன்னி – எதிர்ப்பு
    துலாம் – வெற்றி
    விருச்சிகம் – கவலை
    தனுசு – பயம்
    மகரம் – நட்பு
    கும்பம் – தடங்கல்
    மீனம் – களிப்பு

  • vaikunda-egadasi-virdha-murai

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

    துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை’ என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

    அனுஷ்டிப்பது எப்படி?

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

  • vaikunda-ekadasi-varalaru

    ஒரு காலத்தில் அம்பரீஷன் என்ற சக்கரவர்த்தி, ஏகாதசி விரதத்தை தவறாது கடைப்பிடித்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசியன்று, யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரை சந்தித்தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான்.

    யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சென்ற துர்வாச முனிவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அங்கிருந்த மற்ற ரிஷிகள், ‘அம்பரீஷா! துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு சாப்பிட்டால்தான் தவறு. தீர்த்தம் அருந்துவதில் தவறில்லை” என்று கூறினர்.

    தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்த்தம் உண்டதைக் கேட்டு துர்வாசர் கோபம் கொண்டார். அம்பரீஷன் மீது சடைமுடி ஒன்றை ஏவிவிட்டார். அது பூதமாக உருமாறி அம்பரீஷனைத் துரத்தியது இதை அறிந்ததும் பக்தனை காப்பதற்காக, அந்தப் பூதத்தின் மீது மகாவிஷ்ணு சுதர்சனச் சக்கரத்தை எறிந்தார். அச்சக்கரம் பூதத்தையும் துர்வாசரையும் துரத்தியது. பாற்கடலுக்கு ஓடி, மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டினார்.

    ‘துர்வாசரே! ஏகாதசி நாளில் என்னைக் குறித்து யாரொருவர் பக்தியோடு விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்’ என்றார் மகாவிஷ்ணு.

    அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டியதோடு, அவனுக்குப் பல்வேறு வரங்களையும் தந்து அருளினார். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

  • thirupathy-devasthanam-nadathum-arakattalai

    ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
    ‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964-ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவைசிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை.
    இந்த அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பானவற்றுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது.

    ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக்கட்டளை
    இந்த அறக்கட்டளை, கோயில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
    2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாசாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
    வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.

    பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
    திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
    புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
    சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளவை முழுமையான அறப்பணிகள் அல்ல. முக்கியமான அறப்பணிகள் அவ்வளவே.

  • thiruppavai-padal-2

    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
    செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத்துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

     

    பொருள்:

    திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

    விளக்கம்:

    ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 17
    விளம்பி வருடம் – மார்கழி 2
    17-டிச-2018 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி அ.கா 4.53
    நட்சத்திரம் : ரேவதி இ 1.47
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – செலவு
    கடனம் – வெற்றி
    சிம்மம் – கவலை
    கன்னி – வரவு
    துலாம் – தாமதம்
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – ஆதரவு
    மகரம் – பக்தி
    கும்பம் – தெளிவு
    மீனம் – பாசம்

  • thiruppavai-margazhi

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
    கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
    நாரா யணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    மார்கழி மாதம் பிறந்து விட்டது முழு நிலவு ஒளிவீசுகிறது. செல்ல வளம் நிறைந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய மங்கையர்களே! அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! எழுந்திருங்கள். இன்று நாம் அதிகாலையில் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், தாமரை மலரைப் போன்ற சிவந்த கண்களை உடையவனும், சூரிய, சந்திரர்களைப் போல பிரகாசிக்கும் திருமுகத்தையுடையவனும், நாராயணனே கண்ணனாக அவதரித்து நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று கூறி தோழியரை நோன்பு நோக்க அழைக்கிறாள் ஆண்டாள்.

  • margazhi-rasi-palangal

    டிசம்பர் 16
    விளம்பி வருடம் – மார்கழி 1
    மார்கழி பூஜை ஆரம்பம்
    16-டிச-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி அ.கா 4.16
    நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 12.35
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆதாயம்
    ரிஷபம் – சுகம்
    மிதுனம் – நோய்
    கடனம் – கவலை
    சிம்மம் – தாமதம்
    கன்னி – லாபம்
    துலாம் – அச்சம்
    விருச்சிகம் – பகை
    தனுசு – வரவு
    மகரம் – பயம்
    கும்பம் – நன்மை
    மீனம் – செலவு

  • vaikunda-egadasikku-thirupathy-pogathittama

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கருட சேவை தினத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. அன்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 16-ந்தேதி நள்ளிரவு 12.30 முதல் வைகுண்டம் காத்திருப்பு அறை 1 மற்றும் 2-ல் அனுமதிக்கப்படுவார்கள்.

    அந்த அறைகள் நிரம்பியதும் ஆழ்வார் குளம் தரிசன வரிசை, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள நிழற்பந்தலில் காத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவை நிரம்பியவுடன் மேதரமிட்டா அருகில் உள்ள எண்.1 கதவு வழியாக மாடவீதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலிலும், அது நிறைந்தவுடன் வெளிவட்டச் சாலையில் உள்ள தரிசன வரிசைகள் என ஒவ்வொரு பகுதியாக பக்தர்கள் காத்திருக்க அனுமதிக்கப் படுவார்கள். சரியாக 28 மணி நேரம் காத்திருப்பை அடுத்து 18-ந்தேதி காலை 5.30 மணிக்கு தர்ம தரிசனம் தொடங்கும்.

    அதன்பின் தரிசன வரிசை நகர தொடங்கும். 19-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் வைகுந்த வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வருகைக்கு ஏற்றவாறு குடிநீர், சாப்பாடு பானங்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • srivilliputhur-thiruppavai-thiruvizha

    ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    அதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது. அதன் பிறகு காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவை.

    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். எப்படி இந்த நோன்பு ஆரம்பித்தது? ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் ‘பாவை நோன்பு’ என்றும் கூறப்படுகின்றது.

    கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) ‘திருப்பாவை’ யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய ‘திருவெம்பாவை’யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.