Author: லிங்கேஷ்

  • Magara Jothi Dharisanam

    சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கண்க்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்துள்ளனர். 

     கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெற்றது. முன்னதாக பந்தளம் பகுதியில் இருந்து திருவாபரண பவனி, மாலை சரங்குத்தி வந்து சேர்ந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. 

    பின்னர் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தந்தது. 

    இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வணங்கினர். மாலை 6.40 மணியளவில் மகர ஜோதி 3 முறை காட்சி தந்தது. 

    பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகரஜோதியை வழிபட்டனர். வரும் 20-ம் தேதி வரை, ஐயப்பன் கோவிலில் படி பூஜைகள் நடைபெறும். 

    இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும். 

  • Thai pongal vaika ugandha neeram

    தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம்!
    உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நேரமாகும்.

    சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்கு கொண்டு வந்து, தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 

    தைப்பொங்கல்

    ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. தை மாதம் பிறப்பதற்கு முன் நெல் அறுவடையாகின்றது. தை மாதத்தின் முதல் நாளன்று, அந்த புதிய அரிசியை மண் பானையில் வைத்து பொங்கல் செய்வர். இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவர். 

    பெரும்பாலும் கிராமங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி பொங்கல் பொங்கியெழும்போது, 'பொங்கலோ பொங்கல்' என்று கூவி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். விவசாயத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

    மாட்டுப்பொங்கல் 

    உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். ஆவினத்திற்கு நன்றி கூறும் இந்நாளாளில், மாட்டு தொழுவத்தினைச் சுத்தம் செய்து, கால்நடைகளைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி வீர நடை’ நடக்க வைப்பார்கள்.

    அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். 'பொங்கலோ பொங்கல்… மாட்டு பொங்கல் பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக..' என்று கூறி, மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். இதன் பின் அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். 

    காணும்பொங்கல் 

    பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது கனு’ பொங்கல். ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு’ என்பது பழமொழி. அதாவது பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும் பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இப்பழமொழியின் விளக்கம். 

    காணும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். 

    அந்தவகையில் நிகழாண்டு வரும் 15-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நேரமாகும். 

    இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் இந்நாளில் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருகிட வாழ்த்துகள்! 

  • Jothi vadivil Kathchi Tharum Iyappan

    பாற்கடலில் அமுதம் கடைந்து அதைத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது, சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலவில்லை. 

    பின்னர் தியானம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அதனால் சிவபெருமானுக்காக விஷ்ணு மோகினியாக மீண்டும் அவதரித்த பொழுது சிவனுக்கும், மோகினிக்கும் பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) – ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு. குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர். அந்தச் சமயத்தில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் மரத்தடியில் தேஜசுடன் இருந்த குழந்தையை கண்டார். அந்தக் குழந்தையை அரண்மனைக்குக் கொண்டு சென்றார். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். 

    பிறகு மணிகண்டனை குருகுலத்தில் சேர்க்க பந்தள மன்னன் முடிவு செய்தார். தெய்வக்குழந்தையான ஐயப்பன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தார். பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை மணிகண்டன் பேசவைத்தார். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும், செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார் என்பதனை அறிய விரும்புவதாகக் கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பதைக் கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினார்.

    இதனால் தான் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் சந்நிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.
     

  • Thiruppavai padal 30

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    பொருள்:

    அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

  • January 14 Rasi Palangal

    ஜனவரி 14
    விளம்பி வருடம் – மார்கழி 30
    போகி பண்டிகை
    14-ஜன-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    8.32
    நட்சத்திரம்    :    ரேவதி    கா    9.23
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   லாபம் 
    ரிஷபம் – அச்சம் 
    மிதுனம் – உதவி 
    கடனம் –  வரவு  
    சிம்மம் – பயம்   
    கன்னி – நன்மை 
    துலாம் –  செலவு  
    விருச்சிகம் – ஆதாயம் 
    தனுசு – சுகம் 
    மகரம் – அசதி 
    கும்பம் – கவலை 
    மீனம் – தாமதம் 

  • Bogi Festival Special

    பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழையபொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.

    பழைய பொருட்களையும், பயனற்றவையும்விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம்.

    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்துதமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழையபொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

    பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான்  பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக  மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.

    போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றைதீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால்வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என நம்பப்படுகிறது. பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலம்போடப்படும்.

    போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவைபடைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

    பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போதுகுழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகிபண்டிகை அமைந்திருக்கும்.
     

  • Worlds biggest Siva Lingam

    கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயரம் கொண்ட சிவலிங்கம், உலகின் உயரமான சிவலிங்கமாக ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 111 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
     

  • Thiruvabaraan pettiyil enna iruuku

    பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தள ராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

    திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் போது பார்த்திருப்போம்… மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது அது.

    1. திருவாபரணப் பெட்டி

    2. வெள்ளிப் பெட்டி

    3. கொடிப் பெட்டி

    இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.

    திருவாபரணப் பெட்டி – பெட்டி 1

    ஐயப்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளன.

    – திருமுகம் – (சாஸ்தாவின் முகக் கவசம்)

    – (மீசையுடன் ராஜ கோலத்தில் காணப்படும் முகம்)

    – ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி-திருவாச்சி)

    – வலிய சுரிகை (பெரிய கத்தி)

    – செறிய சுரிகை (சிறிய கத்தி)

    – யானை – யானை விக்ரஹம் 2

    – கடுவாய் – புலி விக்ரஹம் 1

    – வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு

    – பூர்ணா – புஷ்கலா (நிற்கும் கோலத்தில் தேவியர் உருவம்)

    – பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)

    – நவரத்தின மோதிரம்

    – சரப்பளி மாலை

    – வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)

    – மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)

    – எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

    வெள்ளி பெட்டி (பெட்டி 2)

    வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்,

    தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.

    இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்.

    கொடிப்பெட்டி (பெட்டி 3)

    மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில்,

    யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் உள்ளன.

    கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.

    இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல.

    திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.

    வானில் மாமலை மேலே மகர நக்ஷத்ரம் உதித்து நிற்க, கொடிமரத்தை கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்கள் சந்நிதானத்துக்குள் சென்று, ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் அந்த நொடி, பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிய … மனம், உடல், இடம், காலம் என அனைத்தும் மறக்கும் பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.
     

  • Thiruppavai Paadal 29

    சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை; பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.
     

  • January 13 – Rasi Palangal

    ஜனவரி 13
    விளம்பி வருடம் – மார்கழி 29
    13-ஜன-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    8.00
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    8.06
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஆதரவு 
    ரிஷபம் – சிரமம் 
    மிதுனம் – அசதி
    கடனம் –  லாபம்  
    சிம்மம் – செலவு  
    கன்னி – சுகம் 
    துலாம் –  கவலை 
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – நன்மை
    மகரம் – பயம் 
    கும்பம் – வருத்தம் 
    மீனம் – சிக்கல்