முதல் முறையாக சபரிமலைக்கு மலைக்கு மாலை அணியும் ஐயப்ப பக்தர்களுக்கு!

கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சந்நதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

எவ்வாறு மாலை அணிய வேண்டும்?

கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள், கிழமை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்க வேண்டும். விரதத்தைத் தொடங்குவதற்கு முன், 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலையை ஏதேனும் ஒரு கோவிலில், குரு சுவாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும்.

குரு சுவாமி இல்லாத பட்சத்தில் கோவிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

மாலை அணிந்தபின் என்ன செய்ய வேண்டும்?

மாலை அணிந்தபின் கடுமையான பிரம்மசர்ய விரதத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம், விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம். அதனால் தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது ஐயப்பன் பாடல்களை பாடலாம். நாள்தோறும் ஆலயம் சென்று இறைவனை தொழுது, பஜனை வழிபாடு செய்ய வேண்டும். ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.